திரைப் படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான சந்திரன் ரட்ணம் நேற்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
நுகேகொடையிலுள்ள அவரது வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். மீட்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் அனுமதியுடன் கொண்டு வரப்பட்டவை என உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அவரை கங்கொடவில மஜிஸ்திரேட் நீதவான் அநுரகுமார ஹேரத் விடுதலை செய்தார்.
4 கிலோ 955 கிராம் எடையுள்ள வெடிபொருட்களும் 7 டெடனேட்டர்களும் இவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. திரைப்படத் தயாரிப்பாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி களான காலிங்க இந்த திஸ்ஸ, ஹேமந்த கமகே ஆகியோர் நேற்று நீதிமன்றில் ஆஜரானார்கள். சந்திரன் ரட்ணம் வெடி பொருட்கள் சட்டத்தின் கீழ் எந்த ஒரு குற்றத்தையும் செய்யவில்லை என்றும் அவர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.