கிளிநொச்சி மாவட்டத்தில் ஐயாயிரம் குடும்பங்கள் இம்மாதம் மீள்குடியமர்வு

House_Without_Roofஇடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இம்மாதம் (ஜூன் மாதம்) கிளிநொச்சி மாவட்டத்தில் 5,000 குடும்பங்களை மீள்குடியேற்றத் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியுடன், இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முடிவடைந்துள்ள மே மாதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசங்களில் 3,000 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இம்மாதத்தில் 5,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவ தாகத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக அவரிடம் நேற்று வினவியபோதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களின் சில கிராமங்களில் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதுடன் அவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளன. கரச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேசங்களில் ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள குடும்பங்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடியகற்றப்பட்டு வரும் பிரதேசங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றன. கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுறும்போது சகல மக்களும் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *