இலங்கையில் நடந்து முடிந்த போர் குறித்த விடயங்களை ஆராய்வதற்கு சுயாதீனமான சர்வதேச மட்டத்திலான ஒரு விசாரணையே தேவை. அதுவே தகுந்த, சிறப்பான பலனைத்தரும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு விசாரணையின் மூலமே நீதியும், நீண்டகால நல்லிணக்கமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 14வது அமர்வில் திங்களன்று உரையாற்றிய நவநீதம்பிள்ளை உலகளவில் மனித உரிமைகள் நிலைவரங்கள் குறித்த அறிக்கை ஒன்றையும் அங்கு சமர்ப்பித்தார்.
இலங்கையில், போர்க்காலத்தில் நிகழ்ந்த சில விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள, படிப்பினைகள் மற்றும் நல்லிணக் கத்துக்கான ஆணைக் குழு குறித்தும் குறிப்பிட்ட நவநீதம்பிள்ளை இருந்த போதிலும், முந்தைய அனுபவங்கள் மற்றும் புதிய தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கின்ற போது, இந்த விடயம் குறித்து விசாரிக்க ஒரு சர்வதேச சுயாதீன ஏற்பாடே சிறப்பானது என்றும் அத்தகைய சர்வதேச ஏற்பாட்டுக்கே, இலங்கையிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் மக்களின் நம்பக்கை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மனித உரிமை நிலைவரங்களை பொறுத்தவரை சர்வதேச மட்டத்திலான சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை அதில் முதலாவதாக இலங்கை நிலைவரம் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.