2010

2010

கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களுக்கான இலவச மருத்தவ முகாம் நாளை நடைபெறுகிறது!

கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (17-06-2010) நடைபெறவுள்ளது. கிளிநொச்சி கனகபரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை இம்மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது. 

கண். பல். காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மகப்பேறு, பெண்களுக்கான நோய்கள், இதயநோய், புற்று நோய் உட்பட அனைத்து நோய்களுக்கான  மருத்துவ சேவைகளும் நடைபெறும் என கிளிநொச்சி பிராந்தி சகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.தேவநேசன் தெரிவித்துள்ளார். 

மேற்படி நோய்களுக்கான வைத்திய நிபுணர்கள், நவீன உபகரணங்களுடன் சமுகமளித்து சிகிச்சையளிக்கவுள்ளதாகவும், கிளிநொச்சி நகரிலிருந்து கனகபரம் பாடசாலை வரை நோயாளிகளுக்கான வாகன வசதிகளும்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் ரி.ஜே.பிரபாகரன் இடமாற்றம்!

சாவகச்சேரி நீதவானாக பணியாற்றய ரி.ஜே.பிரபாகரன் அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சாவகச்சேரி நீதிவானாக எஸ். அப்துல்லா பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணம் வவனியா நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (June 21 2010) முதல் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சாவகச்சேரி நீதவான் அக்கரைப்பற்றுக்கும், வவனியா நீதவான் அலெக்ஸ்ராஜா கொழும்பு பிரதம் நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சாவகச்சேரி நீதவான் ரி.ஜே.பிரபாகரன்  நீதி விசாரணைகளை மிகவும் கடுமையாக மேற்கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இருபது வருடங்களின் பின்னர் முல்லை. அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட துரித அபிவிருத்திக்கு 6 குழுக்கள் நியமனம்

cha.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தலா ஐவர் அடங்கிய ஆறு முக்கிய குழுக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை, செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுக்கவுள்ள அடுத்த போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளவும், 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் வன்னி மாவட்ட எம்.பி.யும், கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் 20 வருடங்களுக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., வட மாகாண பிரதம செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மேலும் தகவல் தருகையில், திட்டமிடல், வீடமைப்பு, மீன்பிடி, உள்ளூராட்சி, நீர், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் உள்ளடங்கலாகவே ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இது தவிர, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பனை அபிவிருத்தி மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கியதாக மாவட்ட திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

துரிதமாக மீளப்பெறல் திட்டம், நீண்டகால அவிவிருத்தி திட்டம், வருடாந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 5000 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள என்றார்.

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்ய தலா பத்தாயிரம் ரூபா வீதம் அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளதுடன், தலா ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மூன்று புசல் நெல்கதிர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 35 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டு வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு 3277 வீடுகள் அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2100 வீடுகள் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

முல்லை மாவட்டத்திலுள்ள அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 60 வீதமான மாணவர்களின் வருகையும், 80 வீதமான ஆசிரியர்களின் வருகையும் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

பராக் ஒபாமாவின் விசேட தூதுவர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் சந்திப்பு

samantha_mahinda.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட தூதுவர் சமந்தா பவர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது போருக்குப் பின்னரான இலங்கையின் நிலைவரம் குறித்து கலந்துரையாடியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒபாமாவின் விசேட ஆலோசகரான சமந்தாபவர், அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் பல்தரப்பு விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான பவரின் சந்திப்பின்போது அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் போர்க் குற்ற விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டேவிட் பிரஸ்மன், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸ்,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பரஸ்பர நலன்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை இருதரப்பும் நடத்தியதாகவும் சந்திப்பு சுமுகமாகவும் நட்புறவுடனும் இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக குறிப்பாக டார்பர் மோதல் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டவர் என்ற வகையில் சமந்தா பவர் நன்கறியப்பட்டவராகும்.

பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டும் – மேர்வின் சில்வா

தேசத் துரோகியான சரத் பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டுமெனத் தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, சிங்கள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ராஜத் துரோகிகளுக்கு இவ்வாறுதான் தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

மாத்தளை மாவட்ட அபிவிருத்தி ஒன்றிணைப்புக் குழுக்களின் கூட்டம் புதிய தலைவரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் வசந்த பெரேரா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது அங்கு திடீரென வருகை தந்து உரையாற்றுகையிலேயே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு பேசுகையில் மேலும் கூறியதாவது;

பிரபாகரனை எவ்வாறாயினும் கொன்றொழிக்க வேண்டும் என முதலில் கூறியவன் நான். அதேபோல் சரத் பொன்சேகாவின் பிரசாரக் கூட்டம் களனியில் நடைபெற்றபோது கூக்குரல் இட்டவனும் நானே.தேசத் துரோகியான சரத் பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டும்.

பிரித்தானிய அரசாங்கம் இலங்கை இராணுவம் தொடர்பாக விவாதம் ஒன்று நடத்த வேண்டுமென்று கோரியுள்ளது. இதற்குக் காரணகர்த்தா யார்? சரத் பொன்சேகாதான். நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும். எமது நாட்டிலிருப்பது ஐந்து நட்சத்திர ஜனநாயகம். சரத் பொன்சேகாவை சுட்டுக் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அலவாங்கில் ஏற்றிக் கொல்ல வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுகிறேன்.

ராஜத் துரோகிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைதான் இது.சிங்கள மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வாறுதான் மரணதண்டனைகள் வழங்கப்பட்டன.

காலை வாரிவிடுவது, சதிநாசம் செய்வது, நாட்டைக் காட்டிக் கொடுப்பது என்பது மிகவும் மோசமான துரோகமாகும். இத்தகையோருக்கும் உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை வெற்றிகரமாக அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.

நமது நாட்டை ஆட்சி செய்த வலகம்பா அரசன் உட்பட மகா பராக்கிரம பாகு அரசர்கள் உள்ளிட்ட பல சிங்கள அரசர்கள் இவ்வாறு உரிய தண்டனைகள் விதித்துத்தான் நட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றமையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத் தொடர்: சரத் பொன்சேகா பங்குபற்ற சட்டரீதியான அங்கீகாரம் வேண்டும்

sa-pon.jpgகென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பங்குபற்றுவதாயின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளர், தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்:- பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகா எம்.பியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அது அவருக்குரிய வரப்பிரசாதமாகும்.

எனினும், பொன்சேகா பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்படாது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபராவார். அந்த அடிப்படையில் அவர் நீதிமன்ற அங்கீகாரம் பெற்றே செல்ல முடியும் என்றார்.

பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்கு அமைய அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டாலும் நாட்டின் சட்ட விதிமுறைகளை ஒருபோதும் மீற முடியாது. அவ்வாறு செல்ல தேவையாயின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.

போர்க்குற்றம் புரிந்தமைக்கான ஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள்: கோத்தபாய சவால்!

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்களுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சர்வதேச உரிமைகள் குழுக்களுக்கு சவால் விடுத்திருக்கிறார்.

இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச ஊடகங்களுடன் கதைப்பதற்குப் பதிலாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரத்தை இலங்கை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் இருந்தால் இலங்கையின் நீதி முறைமையின் கவனத்திற்கு அதனைக் கொண்டுவர முடியும். வழக்கறிஞர்களூடாகச் செல்ல முடியும். அத்துடன்,பொலிஸாருக்கும் அறிவிக்க முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆதாரத்தைச் சமர்ப்பிக்குமாறு நான் அவர்களுக்குச் சவால் விடுக்கிறேன். ஊடகங்களுக்கு புகைப்படங்களையும் ஒளிநாடாக்களையும் கொடுப்பதில் அர்த்தமில்லை. எம்மிடம் சட்ட முறைமை உண்டு. அதனைப் பயன்படுத்துங்கள் என்று கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் அரசியல் விவகாரத்திற்குப் பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ, ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி ஆகியோர் வருகைதரும் நிலையில், அதற்கு முன்னராக பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து இக்கருத்து வெளிவந்திருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது. இன நல்லிணக்கத்தை துரிதமாக முன்னெடுக்குமாறு இரு தூதுவர்களும் இலங்கையை வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுலோவாகியாவை சமநிலை செய்தது நியூஸீலாந்து

ftfa.jpgஐரோப்பி யாவின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுலோவாகியாவிற்கு நிகராக சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி, இறுதி நேரத்தில் பதில் கோல் அடித்து தன்னாலும் முடியும் என நியுசிலாந்து போட்டியை சமன் செய்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றுவரும் 2010 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில், ருஸ்டன்பர்க்கில் நடைபெற்ற எப் பிரிவு இரண்டாவது ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே நியூ ஸீலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது.

தன்னாலும் முடியும் என விளையாடிய நியுசிலாந்து அணியின் வேகத்தை கண்டு சற்று அதிர்ச்சியுற்ற சுலோவாகியா அணி, அதற்குப் பிறகு சிறப்பாக விளையாடத் துவங்கியது.  போட்டி ஆரம்பமானதை தொடர்ந்து 5ஆவது நிமிடத்தில் சுலோவாகியாவின் செஸ்டெக் டிக்கு வெளியேயிருந்துத் தூக்கி அடித்தப் பந்தை மிக அழகாக தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் விட்டேக்.

போட்டி நேரம் முடிவடைந்து, இறுதிநேரம் ஒடிக்கொண்டிருந்தபோது பெரு முயற்சியில் ஈடுபட்ட நியுநிலாந்து அணிக்கு வெற்றி கிடைத்தது. ஸ்மெல்ட்ஸ் அடித்து மேலெழும்பி வந்த பந்தை அதற்கெனவே காத்திருந்த வின்ஸ்டன் ரீட் தலையால் முட்டி கோலிற்குள் தள்ள போட்டி நிறைவு பெற்றது.  இந்நிலையில் தன்னாலும் முடியும் என நியுசிலாந்து போட்டியை சமன் செய்தது.

தன்னிச்சையாக அரசியலமைப்பில் மாற்றத்தை திணிக்க அரசு முயற்சி ; ரணில் கண்டனம்

ranil.jpgஜனநாயக நடைமுறைக்கு மாற்றமாக தன்னிச்சையாக அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளி அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்கு அரசு முனைப்புக்காட்டி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்திலும் வெளியேயும் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெறஸ் இல்லத்தில் ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்தவும் நீடித்துக் கொள்வதற்குமாகவே அரசியலமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அமைச்சர்களுக்கோ, ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்காமல் இரகசியமான முறையில் அரசியலமைப்பைத் திருத்தி அதனை மக்கள் மீது திணிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த பிரேரணை முற்று முழுதாக நடைமுறைக்குப் புறம்பானதொன்றாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

லசித் மாலிங்கவின் அபார பந்து வீச்சில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி

srilanka-cricket.jpgஆசியக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று இலங்கையில் ஆரம்பமானது. நேற்றைய முதல் நாள் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இரவு பகல் ஆட்டமாக தம்புள்ளை ரன்கிரிய விளையாட்டரங்கில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்தார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது.

கடந்த முத்தொடர் போட்டியின் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்சான் மற்றும் தரங்க ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியிலும் சிறப்பாக பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தரங்க 11 ஓட்டங்களுடன் அக்தரின் பந்து வீச்சில் சல்மான்பட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து டில்சானும் 18 ஓட்டங்களுடன் முஹமட் அசிப் பந்து வீச்சில் உமர் ஹமினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜெயவர்த்தன மற்றும் சங்ககார ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை வழுப்படுத்தினர். இதில் சங்ககார 42 ஓட்டங்களுடன் அப்ரிடியின் பந்து வீச்சியில் உமர் ஹக்மாலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ஜெயவர்த்தன 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தன் மூலம் தனது 53 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

சகல துறை ஆட்டகாரரான ஏஞ்சலோ மெத்யூஸ் தொடர்ந்து தனது சிறப்பான துடுப்பாட்ட மூலம் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களை பெற்று தனது 5ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தானின் பந்து வீச்சில் நீண்டகாலத்துக்கு பிறகு அணியில் இணைந்த சொயிப் அக்தர் 3 விக்கெட்டுகளை கைப்ப்ற்றிருந்தார்.

243 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று 16 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஆரம்பமே மிகவும் மோசமான நிலையை கண்டது. இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவின் அதிரடியான பந்து வீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் கண்டு போனார்கள். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹசேன் 11 ஓட்டங்களுடனும்இ சல்மான் பட் ஓட்டம் எதுவும் பெறாது மாலிங்க பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அணியின் மோசமான நிலையை அறிந்து தொடர்து களமிறங்கிய அணி தலைவர் சையிட் அப்ரிடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7 ஆறு ஓட்டம் 08 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 109 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அப்ரிடியின் சதம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க சிறப்பாக பந்து வீசி 05 விக்கெட்டுகளை கைப்பற்றிருந்தார்.

இப் போட்டியில் ஆட்டநாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தலைவர் சையிட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார். போட்டி முடிவினையடுத்து இலங்கை அணி 02 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.