கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பங்குபற்றுவதாயின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளர், தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்:- பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகா எம்.பியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அது அவருக்குரிய வரப்பிரசாதமாகும்.
எனினும், பொன்சேகா பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்படாது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபராவார். அந்த அடிப்படையில் அவர் நீதிமன்ற அங்கீகாரம் பெற்றே செல்ல முடியும் என்றார்.
பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்கு அமைய அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டாலும் நாட்டின் சட்ட விதிமுறைகளை ஒருபோதும் மீற முடியாது. அவ்வாறு செல்ல தேவையாயின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.