போர்க்குற்றம் புரிந்தமைக்கான ஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள்: கோத்தபாய சவால்!

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்களுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சர்வதேச உரிமைகள் குழுக்களுக்கு சவால் விடுத்திருக்கிறார்.

இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச ஊடகங்களுடன் கதைப்பதற்குப் பதிலாகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரத்தை இலங்கை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் இருந்தால் இலங்கையின் நீதி முறைமையின் கவனத்திற்கு அதனைக் கொண்டுவர முடியும். வழக்கறிஞர்களூடாகச் செல்ல முடியும். அத்துடன்,பொலிஸாருக்கும் அறிவிக்க முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆதாரத்தைச் சமர்ப்பிக்குமாறு நான் அவர்களுக்குச் சவால் விடுக்கிறேன். ஊடகங்களுக்கு புகைப்படங்களையும் ஒளிநாடாக்களையும் கொடுப்பதில் அர்த்தமில்லை. எம்மிடம் சட்ட முறைமை உண்டு. அதனைப் பயன்படுத்துங்கள் என்று கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் அரசியல் விவகாரத்திற்குப் பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ, ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி ஆகியோர் வருகைதரும் நிலையில், அதற்கு முன்னராக பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து இக்கருத்து வெளிவந்திருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது. இன நல்லிணக்கத்தை துரிதமாக முன்னெடுக்குமாறு இரு தூதுவர்களும் இலங்கையை வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *