அண்மைக்காலமாக கேபி யும் அவரைச் சந்திக்கச் சென்ற குழுவினதும் இலங்கைப் பயணம் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதன் அரசியல் ஆழ அகலங்களை அறிய ஈழமாறன் கேபி உடன் ஒரு வேட்ச்சுவல் இன்ரவியூ – virtual interview ஒன்றை எடுக்கின்றார். தேசம்நெற் வாசகர்களுக்காக கேபி உடன் அந்த virtual interview…..
ஈழமாறன்: வணக்கம் திரு கேபி…..
கேபி: வணக்கம் மாறன்.
ஈழமாறன்: நல்ல வசதியான வீடுதான் தந்திருக்கிறாங்கள் போல….
கேபி: ஓமோம்.. நாங்கள் கொழும்புக்கு வாறதுக்கு முதல் சில நிபந்தனைகளை விதித்திருந்தோம். அதிலே முக்கியமானது இதுதான். மாறன் நான் வன்னியிலை இருந்த சனம்மாதிரி அல்லது சாதாரண போராளிகள் மாதிரி கேடு கெட்டுத் திரியேல்லை. தாய்லாந்திலை கப்பல் மாதிரி வீடு. மலேசியாவிலை நான் இருந்த வீட்டை வந்து பாத்தியள் எண்டா.. வாயடைச்சுப் போடுவியள்.. இதெல்லாம் ஒரு ஜூஜூபி.
பெரிய வீடு தனிய நான் தங்கிறதுக்கு இல்லை. வெளிநாடுகளிலை இருந்து குழுக்கள் எண்டு சொல்லி நிறையப் பேர் வருவினம் எல்லோ. அவையள் எல்லாம் வசதியா இருந்து பானம் அருந்திட்டு போறதுக்கு, கொஞ்சம் பெரிய வீடு வசதியா இருக்கும் எண்டு, கோத்தபாய நாங்கள் மலேசியாவிலை இருக்கும் போதே எல்லா வசதிகளும் நீங்கள் எதிர்பாக்கிற மாதிரி இருக்கும் என்று வாக்குறுதி வேறை தந்தவர்.
ஈழமாறன்: உங்கட பதிலில் இருந்து மூண்டு கேள்விகள் கேட்கவேணும். ஒன்று நாங்கள் எண்டா யார் யார்? இரண்டு இலங்கைக்கு வருவதற்கு முன் என்று சொன்னீர்கள். அப்பிடியெண்டா.. இலங்கை அரசாங்கம் உங்களைக் கெட்டித்தனமா புடிச்சுக் கொண்டு வந்திட்டம் எண்டு சொன்னது?மூண்டாவது வேலை வெட்டியில்லாமல் பொண்டாட்டி புள்ளையளோட சுத்தித் திரிஞ்ச உங்களுக்கு நாட்டுக் கொரு வீடு வாங்க காசு எங்காலை?
கேபி: முதலாவது கேள்விக்கு என்னால சிரிக்கிறதைத் தவிர வேறை பதில் சொல்ல முடியேல்லை.
இரண்டாவது கேள்விக்கு பதில் 30 வருசம் புடிக்க முடியாமப் போன ஸ்ரீலங்கா அரசு முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு புடிச்சிட்டம் எண்டு கதை விடேக்குள்ள விளங்கேல்லையோ… கதை எங்கை, எப்பிடிப் போகுதெண்டு.…கட்டுநாயக்கா எயாப் போட்டில வந்திறங்கினபோது வந்து பாத்திருக்க வேணும் எங்களுக்கு கிடைச்ச வரவேற்பை. மகிந்தவுக்கு கூட அப்பிடிக் கிடைச்சதில்லை.
மூண்டாவது கேள்வவிக்கு பதில் புலன்பெயர் மக்கள்தான். ரெலோவைச் சுட்டு தள்ளேக்கை நல்லூர் கோயிலுக்கு முன்னுக்கு போட்டு உயிரோடை எரிக்கேக்கை…பூரிச்சுப் போய் தாலிக்கொடி தொட்டு டொலராய், பவுண்டாய், பிராங்காய் குடுத்த நன்கொடையிலைதான் தாய்லாந்திலை வீடு வாங்கினனான்.
பிறகு, என்ன இயக்கம் அது? அவன் கரிகாலன் எல்லா இயக்கத்தையும் போட்டு தள்ளினதாலை அந்த இயக்கத்தின்ரை பேர் வருகுதில்லை.
ஈழமாறன்: ஈபிஆர்எல்எவ்……?
கேபி: ஆ….. ஈபி. அந்த இயக்கத்திலை இருந்தும் கொஞ்சப் பேரை பிடிச்சு வைச்சிருந்தவங்கள் தானை.. அவன்…. ஆரது..அதுதான் மாறன்…கள்ளக் காதலியோடை சல்லாபம் ஆடப் போன இடத்திலை குண்டு எறிஞ்சு கால் முறிச்சாங்களே. எறிஞ்சு முறிச்சதும் தாங்கள்தான் எண்டு…கனடாவிலையும் ஒருவர் பதினெட்டோ பத்தொம்பதோ எண்டு இயக்கம் தொடங்கினவர், மற்றாக்களுக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை நாங்கள் தான் போட்டனாங்கள், எண்டு சொல்லித் திரியிறாரே. அவனைத்தான் சொல்லிறன்.
ஈழமாறன்: கிட்டு…..
கேபி: அவன்தான்.. அதுக்காக அந்த ஈபி பெடியள் எல்லாரையும் போட்டுத் தள்ளினபோது… புலம்பெயர்ந்தவை புள்ளையும் பெத்து கனக்க காசும் அள்ளிக் குடுத்தவை. யாழ்ப்பாணத்தார் கொக்கோ கோலா குடுத்தவைதான்.. அதை விடுங்கோ. அந்தப் பணத்திலை வாங்கின வீடுதான் மலேசியா மாளிகை.
ஈழமாறன்: அப்பிடியெண்டா காசு சேத்தது? ஆயுதம் வாங்கி அடிபட எண்டெல்லோ புலன்பெயர் மாக்கள் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தினம்?
கேபி: அப்பிடி அடி முட்டாள்கள் மாதிரி அவை இருக்காட்டி 30 வருசம் வண்டி ஓட்டியிருக்க முடியுமோ?
ஈழமாறன்: அப்ப தமிழீழம் எடுத்திருக்கவே முடியாதா?
கேபி: மாறன்! நீர் என்ன தேசியத் தலைவரை விட மொக்கனா இருக்கிறீர். எங்கையும் உமி விதைச்சு வெள்ளாமை வெட்டினதா கேள்விப் பட்டிருக்கிறியளே?
ஈழமாறன்: அப்படியென்றால் அண்மையில் சாள்ஸ் என்பவர் தேசம்நெற் இணையத்திற்கு வழங்கிய பேட்டியில் நீங்கள் ஒரு பென்னாம் பெரிய ஜனநாயக வாதியெனக் குறிப்பிட்டுள்ளார். ஆனா நீங்களோ ரெலோவைச் சுட்டுத்தள்ளும் போதும் இயக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். பின்னர் ஈபிஆர் எல் எவ் புளட் என்று வரிசையில் சுட்டுத் தள்ளியபோதும் இயக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். இப்ப சாள்ஸ் சொல்லிறமாதிரி ஒரு மனிதாபிமாதிரி எனக்குத் தெரியவில்லையே?.
கேபி: இது மட்டுமல்ல. இன்னும் நிறைய என்னைப் பற்றி வரும். என்னைச் சித்திரவதை செய்ததாய் வரும். எனக்கு சொகுசு மாளிகை தந்ததாக வரும். கேபிக்கு கொம்பிருக்கு எண்டு வரும். கேபிக்கு துவக்குக்கு எழுத்துக் கூட்டக் கூடத் தெரியாது எண்டு வரும். கேபி ஒண்டுக்குப் போனா பெற்றோல் வருது எண்டு வரும். இப்பிடி எத்தினையோ வரும். ஆனா யதார்த்தம் என்ன சொல்லுங்கோ. நான் ஒரு படு பிற்போக்கான பாசிச அமைப்பில் அங்கத்தவராய் இருந்தவன். அதன் தலைவனுக்கு விசுவாசமாய் இருந்தவன். நான் வாங்கி அனுப்பின ஆயுதத்தால் செத்து மடிந்து போனவர்கள் எதிரிகள் மட்டுமல்ல மாறன் எங்கள் நண்பர்கள், அரசில்வாதிகள், மாணவர்கள், புத்திஜீவிகள் என்று ஒரு பெரிய பட்டிலே போடலாம். சாள்ஸ் சொல்லுவது போல எனக்கு மனிதாபிமானம் வந்திருக்கிறது என்பது சிறுபிள்ளைத் தனம்.
ஈழமாறன்: அந்தக் குழுவில் வந்த அருட்குமார் பற்றி?
கேபி: யார் மக்டொனால்ட் பேகர் குடுத்துக் குடுத்து வைத்தியம் பார்த்த டொக்டரையோ கேக்கிறியள்? அந்த மனுசன் கொழும்பிலை நல்லா இருந்து கதைச்சவர். பிறகு லண்டன் போன பிறகு போறம் ஜனநாயக முறையிலை வெருட்டியிருக்கினம் போல. இதென்ன பரமேசு பெடியன்ரை உண்ணாவிரத விளையாட்டே சொல்லுங்கோ?
ஈழமாறன்: இந்தியாவிலை செத்தாலும் பட்டம் குடுப்பார். கொழும்பிலை செத்தாலும் பட்டம் குடுப்பார். உதாரணத்திற்கு புளட்டிலை இருக்கும்போது போராளிகளை போட்டுத்தள்ளிய சிவராமுக்கும் பட்டம் குடுத்தவர். இப்பிடி பாம்பு கடிச்சு செத்தவன், விசர் நாய் கடிச்சு செத்தவனுக்கெல்லாம் மாமனிதர், மாமாமனிதர் எண்டெல்லாம் பட்டம் குடுத்த தலைவர், பட்டெண்டு போனபோது சரி அஞ்சலி வேண்டாம். ஒரு பட்டமாவது குடுத்திருக்கலாமே?
கேபி: புலம்பெயர் மக்கள் அவர் இன்னும் சாகேல்லை எண்டு சொல்லுகினம். எப்பிடி பட்டம் குடுக்கிறது. நான் சிலோனுக்கு கிளம்ப முதல் ஒரு பட்டத்தைக் குடுத்து, குத்துவிளக்கை ஏத்தி, கூட இருந்த குற்றத்திற்காக கோடலிக் கொத்தன், கோவணச் சண்டியன், அம்மணச் சோழன் காலிலை விழுந்த கரிகாலன் என்று ஏதாவது பட்டம் குடுக்கிற ஜடியா இருந்தது. உருத்திரகுமாரன் உழைச்சது காணாது எண்டு சொன்னபடியால், அவர் சாகா நாடகத்தை கொஞ்சம் தொடர வேண்டியதாய் போச்சு. இப்பதான் நாடு கழண்ட தழிழீழத்தை அமைச்சிருக்கினம். பொறுமையா இருந்து கேக்கிற போதெல்லாம் காசைக் குடுங்கோ. குறுக்கை குறுக்கை கேள்வி கேக்காமல். நீங்கள் மாற்று அமைப்போ?
ஈழமாறன்: கடைசி வரைக்கும் தொடர்பிலை இருந்த ஒரு ஆள் நீங்கள் தான். உண்மையா சொல்லுங்கோ. அம்மாவாணை அண்ணை இருக்கிறாரோ? ஏன் கேக்கிறன் எண்டா.. புலியிலை ஒரு பிரிவு சொல்லுது அவர் 300 பேரோடை கப்பலிலை சுத்திக் கொண்டிருக்கிறார் எண்டு. சுத்திறதெண்டா விடலை பெடியள் சுத்திற சுத்தில்லை.. இது போறதுக்கு இடம் இல்லாமல் சுத்துற சுத்து.
இன்னொரு பிரிவு சொல்லுது 600 பேரோடை அம்மணியையும் கூட்டிக்கொண்டு தலைவர் எஸ்கேப். அதுவும் ஆபிரிக்காவிலை இருக்கிற ஒரு காட்டிலை இருக்கிறார் எண்டு. அதுக்காக புலியோடை புலியா இல்லை… வலு சொகுசாத்தான்.
வேறை ஒரு பிரிவு சொல்லுது அவர் இருக்கிறார். ஆனா இருக்கிற இடம் சொல்ல மாட்டம். ஒரு நாளைக்கு வருவார் அப்ப தெரியும் எண்டு. எப்ப வருவார் எண்டு கேட்டா, இருக்கிற இடமே சொல்ல மாட்டம் எண்டு சொல்லிறம் வாற நாளை மட்டும் சொல்லிடுவோமோ? எண்டு தினா வெட்டாக் கேக்கிறாங்கள்.
ஒரு பிரிவு கோடாலியாலை கொத்தினதா சொல்லுது. ஒரு பிரிவு கொம்பியூட்டர் கிராபிக்ஸ் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு கோவணத்தோட வைச்சு அடிச்சுக் கொண்டவங்கள் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு கொண்ட பிறகுதான் கோவணத்தைக் கட்டிவிட்டவங்கள் எண்டு சொல்லுது. ஒரு பிரிவு வெள்ளைக் கொடியோட, வெள்ளக்காரன்கள் நிண்டவங்கள். நிண்டவங்களைக் கண்டவங்கள் சொன்ன பிறகுதான் அண்ணை கெலியிலை ஏறினவர் எண்றாங்கள். ஏறுன பிறகு மிதிச்சவங்கள் எண்டு ஒரு குறூப் சொல்லுது.
போற வயசிலை உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் அம்மாவாணை ஆள் இருக்கோ இல்லையோ? அண்ணை தேசத் துரோகி எண்டு மாற்றுக் கருத்தாரை வன்னிக் காட்டுக்குள்ளை பிடிச்சுக் கொண்டுபோய் சுட்டபிறகு, சொந்த பந்தம் ஆளிருக்கோ? ஆளிருக்கோ? எண்டு விட்ட கண்ணீர்… இண்டைக்கு நான் கேக்கிற நிலைக்கு கொண்டுவந்து விட்டிட்டு.…
கேபி: சில விசயம் உங்களுக்கு நான் சொல்லோது. ரெக்கோடரை நிறுத்தினா… ஓவ் த ரெக்கோடா சில விசயம் சொல்லலாம்.
தம்பி தமிழேந்தி ரேப்பை நிப்பாட்டிப் போட்டு கொஞ்சம் வெளியிலை இரு. உவன் கோத்தபாய ஆரையும் விட்டு ஒட்டுக் கேப்பான். ஆரும் வராமல் பார், பாப்பா நீ எயாப் போட்டுக்குப் போய் எங்கட பெடியள் ஆரும் தப்பிப் போனா காட்டிக் குடு. பொட்டு நீ சிவத்தம்பி ஏதோ செம்மறி மொழி மாநாட்டுக்கு போறானாம் அவனை ஏத்திக் கொண்டுபோய் பத்திரமா கலைஞர் வீட்டிலை விட்டிட்டு வா. டேய் பொட்டன்… செம்மறி மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்து அறிஞர்கள் மட்டும் தான் போறாங்களாம். அது உண்மையாத்தான் இருக்கும் எதுக்கும் ஒருக்கா விசாரிச்சுப் பார்.
ஈழமாறன்: இப்ப சொல்லுங்கோ!
கேபி: மாறன்… ஆள் உயிரோடை இல்லை. ஆளை போடுறதுக்கு பிளான் போட்டுக் குடுத்ததே நாங்கள் தான். அவங்கள் சொன்னவங்கள். உள்ளுக்க வர விட்டு அடிக்கிற பிளானும் எங்கடைதான். என்னிலை நம்பிக்கை இல்லை எண்டா பொட்டனைக் கேளுங்கோ.
ஈழமாறன்: அவங்கள் எண்டா..
கேபி: நோர்வே இந்தியா சீனா அமெரிக்கா. அப்பிடிக் கனபேர். முள்ளிவாய்க்கால் வரைக்கும் கதை குடுத்து, கதை குடுத்து கூட்டிக் கொண்டு வா. அதுக்குப் பிறகு வெள்ளைக் கொடியும் காட்டி வெள்ளக் காரனையும் காட்டி …மிச்சம் உங்களுக்கு தெரியும்தானே.
ஈழமாறன்: நாடு களண்ட மன்னிக்கவும் கடந்த தமிழீழம் தொடர்பாய் உங்கட கருத்து என்ன? நீங்கள் தானை ஆரம்பிச்சனிங்கள்…..
கேபி: ருத்ரகுமாரன்….. ஆரெண்டு தெரிஞ்சா நீங்கள் இந்தக் கேள்வி கேக்க மாட்டிங்கள். போகப் போகத் தெரியும். அதிலை ஒரு நேர்மையான ஆள் காட்டுங்கோ. யாராவது ஒருத்தனுக்கு வன்னி தெரியும் எண்டு சொல்லுங்கோ?. ஒருத்தன் பத்து நிமிசம் துவக்கு தூக்கியிருபானா? துப்பாக்கி வேண்டாம், காயப்பட்ட போராளிகளுக்கு மருந்து….. இவங்களைப் போய் பொருட்டாய் மதிச்சு கேள்வி கேக்கிறியள்.
ஜநநாயக அமைப்பு எண்டு எல்லோ சொல்லுறாங்கள். அப்பியெண்டா எதுக்கு பிரித்தானியாவிலை கிட்டடியிலை நடந்த கூட்டத்திலை ஒரு வேட்பாளர் கேள்வி கேட்க மொத்து மொத்து எண்டு மொத்தினவை. புலி புலால் தான் உண்ணும். புல்லு தின்னும் எண்டு புலம்பெயர் புத்திசாலி மக்கள் நினைச்சா சிரிக்கலாம். வேறை என்னதான் சொல்ல. கழண்ட தமிழீழத்திலை இருக்கிறவை எல்லாரும் நல்லா சம்பாதிச்சிட்டாங்கள். சொத்து வேறை சேத்திட்டாங்கள். மெயின்ரெயின் பண்ண வேண்டாமோ? மரத்திலை இருந்து வேருக்கும் வேரிலை இருந்து மசிருக்கும் எண்டு கவிதை எழுதினவர் எல்லாம் நாடு கழண்ட தமிழீழத்திலை இருக்கிறார், எண்டா வடிவா விளங்கிக் கொள்ளுங்கோ. 30 வருசம் கழிச்சு வந்து கேட்க நானும் இருக்கமாட்டன். அரைவாசிச் சனமும் இருக்காது.
ஈழமாறன்: அப்ப நாடுகடந்த தமிழீழம் மூத்தி ஜயா அனுப்பின வணங்கா மண் கப்பல் மாதிரியோ.
கேபி: எங்களுடன் நெருங்கின தொடர்பிலை இருக்கிற ஆக்களைப் பற்றி நான் விரிவா கதைக்க முடியாது. ஆறுமாசமா கப்பல் விடத் தெரியாதவங்கள் அமெரிக்காவிலை இருந்து ஈழம் எடுத்துத் தாறம் எண்ணிறது எருமையிலை ஏறிப்போய் செவ்வாய் கிரகத்திலை தண்ணியிருக்கோ எண்டு ஆராச்சி செய்த மாதிரித்தான்.
உருத்திர குமாரன் கோழி படிச்சவன் குற்றவாழியா இல்லையா எண்டு வாதிடலாம். சிலவேளை ஜெயிக்கலாம்.
தமிழீழம் எண்டா எல்லாருக்கும் விளையாட்டாப் போச்சு. வடக்கையும் கிழக்கையும் இணைக்கவே வக்கில்லை. தமிழீழமோ? மாறன் உருத்திகமாரும் அவரோடை போட்டி போட்டு வெண்ட வெளிநாட்டு விசுக்கோத்துக்களும் வேணும் எண்டா சண் ரிவியிலை நடக்கும் எல்லோ அசத்தப் போவது யார் நிகழ்ச்சி. அதிலை போய் ஜோக் அடிக்கச் சொல்லுங்கோ.
ஈழமாறன்: ஒரு குறைஞ்சபட்சத் தீர்வு பற்றிக்கூடக் கதைக்காமல் அபிவிருத்தி என்றும் பொருளாதார மேம்பாடு என்றும் பேசும் நீங்கள் புலம்பெயர் மக்கள் இதைச் செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்? ஆமிக்கார கொமாண்டர் சொல்லிற மாதிரி பிரபாகரனிட்டைக் கேட்கேல்லை. அதுக்கு காரணம் இருக்கு. அரசாங்கம் இப்பிடிப் பதில் சொல்லலாமோ?
கேபி: புலம்பெயர் மாக்களைக் குழப்பாட்டி புத்தர் கோயில் கட்டிற மகிந்த சிந்தனைக்கு ஒருநாளைக்கு ஆபத்து வரும் என்று பிரபாகரனை முடிச்சவங்களுக்குத் தெரியாதோ? இதிலை புலம் பெயர் மக்களின்ரை பங்களிப்பு மிக முக்கியம். நான் என்னாலானதை செய்யத் தொடங்கிட்டன். சாள்ஸ் சொன்னமாதிரி தமிழ் மக்களை வைத்தே தமிழரை இல்லாமல் பண்ணிற வித்தையை மகிந்த அரசு நன்றாக விளங்கி வைத்திருக்கு. அதைச் செவ்வனே செய்யக் குழு குழுவாய் வருவினம். போவினம். இனிமேத்தான் வேடிக்கை விநோத நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கு.
ஈழ: வடக்கு கிழக்கு மக்களுக்கு என்ன சொல்ல விரும்பிறியள்?
கேபி: எல்லாரும் குனிஞ்சு நில்லுங்கோ…… மகிந்த சிந்தனையின் கீழ் நல்ல சுகம் கிடைக்கும்.
ஈழ: நன்றி. சிரமத்தையும் பாராமல்…. புலியிலை இருந்த அத்தனை கொமாண்டர்களோடையும் சொகுசா இருந்து பேட்டி தந்ததுக்கு…