பயங்கர வாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையை Incidents Report வெளியிடுமாறும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்குமாறும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க செனட் சபைக்கு தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகள் குறித்த குழு 2009 டிசம்பர், மாதம் 7 ஆம் திகதி வெளியிட்டுள்ள ’Sri Lanka Recharting U.S Strategy after The War” என்ற அறிக்கையை மேற்கோள்காட்டியே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது. நாடு என்றதும் கட்சி, நிறம், பேதம் எதுவும் இன்றி வெளிநாட்டுக் கொள்கையை மதித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். இதற்கு எமது அண்டைய நாடான இந்தியாவை எடுத்துக்கொள்ளலாம்.
ஜனாதிபதி இந்தியா சென்றிருந்தபோது நெருங்கிய நண்பனாக எம்மை வரவேற்றது மட்டுமல்ல, பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றிகண்டவர்கள் என பாராட்டியதுடன் இந்த நாட்டை மீண்டும் முழுமையாக கட்டியெழுப்ப பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதேபோன்று எதிர்க் கட்சி உறுப்பினர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்தோம். அவர்கள் இந்தியாவுக்காக குரல் கொடுத்தார்கள். தாங்கள் எதிர்க் கட்சி என வேறுபட்டு பேசவில்லை. இந்தியா கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கையை மதிக்கிறோம். அதனடிப்படையிலேயே செயற்படுகிறோம் என்றார்கள். இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிக்கும் இலங்கையிலுள்ள எதிர்க் கட்சிக்கும் வேறுபாடு இதுதான். இவ்வாறு செயற்படக் கூடாது. இறுதி யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் மீது குற்றம் சுமத்தி அவர்களை வேட்டையாடும் எண்ணத்தில் இவை முன்வைக்கப்பட்டனவா?
யுத்தம் என்ற இருட்டிலிருந்து இலங்கை இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிக்கிறது. முதலீடுகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன.அரசியல் இருக்கலாம். எனினும் எதிர்க் கட்சியினர் அதிலிருந்து விடுபட்டு எமது வெளிநாட்டு கொள்கையின்படி நடந்துகொள்ள வேண்டும். யுத்தம் என்ற சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து வரும் எங்களுக்கு எமது வெளிநாட்டு கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் உதவுகின்றன. கட்சி, நிறம் பற்றி பாராமல் சிந்தியுங்கள் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
“2008 ஆம் ஆண்டுகளில் தான் நான் அமெரிக்கா சென்றேன். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் பற்றி நான் எப்படி அமெரிக்க செனட் சபைக்கு கூற முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வி எழுப்பினார்.நீங்கள் கூறியதாகத்தான் செனட் சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதோ என் கையில் இருக்கிறது என ஜீ. எல். பீரிஸ் கையிலுள்ள ஆவணமொன்றையும் காட்டினார்.