2010

2010

டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்போருக்கு விஷேட வெகுமதியுடன் கெளரவம்

mos.jpgதிரு கோணமலை மாவட்டத்தில் டெங்கு பரவலுக்கு உடந்தையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே நேரம், டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்போருக்கு வெகுமதிகளுடன் கெளரவமும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கிழக்கு சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

திருமலை மாவட்டத்திலிருந்து டெங்கை ஒழிக்கும் செயல்திட்டம் தொடர்பான உயர்மட்ட மாநாடு நேற்று மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து துறைசார் உயர் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருமலை நகரம் கிண்ணியா பிரதேசங்களில் டெங்கு தீவிரமடைந்துள்ளது. உடனடியாக இப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பை தீவிரப்படுத்துமாறு பணிப்புரை வழங்கிய அமைச்சர் சுபைர், இப்பிரதேசங்களில் டெங்கு பரவலுக்கு உடந்தையாக இருப்போர் குறித்து கூடுதலான கவனம் செலுத்துமாறும் பணிப்புரை வழங்கினார்.

யாழ். வீதி விபத்தில் பல்கலைக்கழக மாணவர் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொறியியல் பீட மாணவன் உட்பட இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஞாயிறு இரவு 11.30 மணியளவில் பழம் வீதியில், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டபோதே இந்த இரு மாணவர்களும் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலியிலிருந்து பழம் வீதியூடாக இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் பருத்தித்துறை குருநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 24), சுண்டுக்குழி, கொழுப்புத் துறைவீதி பண்டியந்தாழைச் சேர்ந்த கண்டி பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட 2 ஆம் வருட மாணவனான அன்ரன் யோகராஜா கலிஷ்ரஸ் கஜேந்திரன் (வயது 24) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை தான் இச்சம்பவத்தில் பலியான எஸ்.சந்துருவின் பிறந்த தினம் என்பதுடன், கஜேந்திரன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குப் பயிற்சிக்காக வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இருவரது சடலங்களையும் யாழ்.மாவட்ட நீதிபதி ஏ.பிரேம்சங்கர் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டதுடன், யாழ்.பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொலைபேசி ஊடாக புகார் தெரிவிக்கலாம்

telephone.jpgஉள்ளூராட்சி மன்றங்களால் தீர்க்கப்படாதி ருக்கும் பிரச்சினைகள் குறித்து தொலைபேசி ஊடாக புகார் தெரிவிக்கவென உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு விஷேட பிரிவொன்றை அமைத்துள்ளது.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லாவின் ஆலோசனைக்கு அமைய இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் இது கடந்த சனியன்று திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களினால் தீர்க்கப் படாதுள்ள பிரச்சினைகள் குறித்து இப்பிரிவில் புகார் செய்ய முடியும்.

அதேநேரம் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் இப்பிரிவிலிருந்து தொலைபேசி ஊடாக பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பிரிவுக்கான 0112328428, 0112328282 என்ற தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பிரிவுக்கு தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தவும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நீலன் திருச்செல்வம் நினைவு பேருரையாற்றுகிறார் ரோமிலா தாபர்

Neelan Thiruchselvam Drஇந்தியாவின் புராதன வரலாற்றுத் துறை சார்ந்த உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான ரோமிலா தாபர் நீலன் திருச்செல்வம் ஞாபகார்த்த விரிவுரையை நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி மாலை 6 மணிக்கு இலங்கை மன்றக்கல்லூரி மண்டபத்தில் வரலாறுகளும் அடையாளங்களும் எனும் தொனிப்பொருளில் 11 ஆவது நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையை ரோமிலா தாபர் நிகழ்த்தவுள்ளார்.

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புராதன இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் ரோமிலா தாபர், கோர்னெல் பல்கலைக்கழகம், பென்சிலவேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

பண்டைக்கால இந்திய வரலாறு தொடர்பான பல நூல்கள், கட்டுரைகள், ஆக்கங்களை வெளியிட்டுள்ள தாபரின் அசோகாவும் மௌரியர்களின் வீழ்ச்சியும், அரசுக்கான பரம்பரை, வரலாறும் அதற்கப்பாலும், ஆரம்ப இந்திய வரலாற்றின் கடந்த கால கலாசார கட்டுரைகள், அஞ்ஞாதவாசமும் இராஜ்ஜியமும், இராமாயணம் பற்றிய சில சிந்தனைகள், ஆரம்பகால இந்தியா போன்ற பல நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக 60 வயது நபர் தனக்குத்தானே தீமுட்டிக் கொண்டார்!

unp-logo.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக நபரொருவர் தனக்குத்தானே தீமுட்டிக்கொண்ட சம்பவம் நேற்று மாலை (26-07-2010) நடைபெற்றுள்ளது.  கொழும்பில் அமைந்துள்ள ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிக்கோத்தாவின் முன்பாக வைத்து இந்த நபர் தன்னைத் தீயிட்டுக்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான எரிகாயங்களுடன் இந்நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வெலிகம என்ற இடத்தைச் சேர்ந்த றியான்சி அல்கம என்ற 60 வயதான நபரே இவ்வாறு தீயிட்டுக்கொண்டவர் என களுபோவில வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை, ஐக்கியதேசியக் கட்சிக்குள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் தீக்குளிப்பு நடவடிக்கையில் இறங்கினார் என மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

மேல் நீதிமன்றத்தில் “வெள்ளைக்கொடி’ வழக்கு

ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவின் “வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (29) மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.வியாழக்கிழமை மேல்நீதிமன்றத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதிவானிடம் அரச சட்டத்தரணி நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான வெள்ளைக்கொடி விவகார வழக்கு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அத்துடன் ஏனைய கொழும்பு நீதிமன்றங்களில் பொன்சேகாவுக்கு எதிரான இரு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

ஆளும் கட்சியுடன் இணையப் போவதாக வெளியான வதந்திகளை விஜயகலா மகேஸ்வரன் மறுத்துள்ளார்.

Vijayakala_Maheswaranஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சிக்குத் தாவப்போவதாக வெளியான வதந்திகளை அவர் மறுத்துள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன்பு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் யாழ். கந்தர்மடத்திலுள்ள காலம்சென்ற அமைச்சர் மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதற்கு முன்னதாகவே விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணையப்போகிறார் என்கின்ற வதந்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இச்செய்திகளில் எந்த உண்மையுமில்லை என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

மகேஸ்வரன் உயிருடன் இருந்த காலத்திலேயே தற்போதைய ஆளும் கட்சியைச சேர்ந்தவர்கள் அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது.

மேல் மாகாண தனியார் பஸ்களிடம் இருந்து அறவிடப்படும் பதிவுக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து இன்று நள்ளிரவு முதல் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது. மாதாந்தப் பதிவுக் கட்டணத்தை ஆயிரம் ரூபாவாகவும் வருடாந்த பதிவுக் கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்க மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்திருந்தது.

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையையடுத்து மாதாந்த பதிவுக் கட்டணத்தை 100 ரூபாவினாலும் வருடாந்தப் பதிவுக் கட்டணத்தை 500 ரூபாவினாலும் உயர்த்த முடிவு காணப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் வெடிபொருட்களின் ஆபத்து காணப்படுகின்றது.

landmines.jpgவன்னியில் மிதிவெடிகள். கண்ணிவெடிகள் முதலான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் வெடிபொருட்களின் அபாயம் இன்னமும் காணப்படுவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம், கோணாவில், பகுதிகளில் மீளக்குடியமர்ந்த மக்கள் தங்கள் காணிகளைத் துப்புரவாக்கி தீமூட்டும் போது, சில வெடிபொருட்கள் துப்பாக்கிச் சன்னங்கள் என்பன வெடித்துள்ளன. இதே வேளை, தென்னை, பனை போன்ற மரங்களில் கொழுவியபடி சில எறிகணைகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டதாகவும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான வெடிபொருட்கள் தொடர்பாக வளர்ந்தவர்கள் அவதானமாக இருந்தாலும் கூட சிறுவர்கள் இதில் அவதானமற்றும், விளையாட்டுத் தன்மையுடனும் நடந்து கொள்ளும் நிலை உள்ளதால் பொதுமக்கள் இவ்வெடி பொருட்கள் தொடர்பாக அச்சம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

பதினேழு தடவைகள் பிடியாணை; நான்கு நீதிமன்றங்களால் தேடப்பட்ட பெண் கைது!

பதினேழு முறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று (26ம் திகதி) மடக்கிப் பிடித்துள்ளனர்.

இப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் மீது கண்டி, பேலியாகொடை, ராகமை, புதுக்கடை ஆகிய நீதிமன்றங்களே பிடியாணை பிறப்பித்துள்ளன. இப்பெண் கைது செய்யப்பட்ட சமயம் அவரிடமிருந்து 22 போலி விசாக்கள், 15 போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகங்களின் அனுமதிப் பத்திரப் புகைப்படப் பிரதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.