வன்னியில் மிதிவெடிகள். கண்ணிவெடிகள் முதலான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் வெடிபொருட்களின் அபாயம் இன்னமும் காணப்படுவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம், கோணாவில், பகுதிகளில் மீளக்குடியமர்ந்த மக்கள் தங்கள் காணிகளைத் துப்புரவாக்கி தீமூட்டும் போது, சில வெடிபொருட்கள் துப்பாக்கிச் சன்னங்கள் என்பன வெடித்துள்ளன. இதே வேளை, தென்னை, பனை போன்ற மரங்களில் கொழுவியபடி சில எறிகணைகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டதாகவும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான வெடிபொருட்கள் தொடர்பாக வளர்ந்தவர்கள் அவதானமாக இருந்தாலும் கூட சிறுவர்கள் இதில் அவதானமற்றும், விளையாட்டுத் தன்மையுடனும் நடந்து கொள்ளும் நிலை உள்ளதால் பொதுமக்கள் இவ்வெடி பொருட்கள் தொடர்பாக அச்சம் கொண்டவர்களாகவே உள்ளனர்.