September

September

ஐ. ம. சு. மு. வேட்பாளர் நிஷாந்த விளக்கமறியலில்

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் நிஸாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமாகிய நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கருத்து தெரிவித்தமையால் அவர் நேற்று முன்தினம் (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இவரது வழக்கை நேற்று மீள விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர் நிஷாந்த, அதே கட்சியில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவுக்கு இடையூறு ஏற்படுத்தினாரென அவர் மீது நடிகை பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய பொலிஸார் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய நிஷாந்த, பொலிஸ் தம்மிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து மன்மோகன் மற்றும் சோனியாவிடம் பேச்சு

இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்களது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.

திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து நேற்று பேசியுள்ளார்கள்.

இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்வதாகவும், அதனை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர்கள் இந்திய பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்துக்கு 17 வைத்திய அதிகாரிகள்

doctors.jpgஇலங் கையிலுள்ள வைத்தியசாலைகளில் தமது மருத்துவ உள்ளக பயிற்சிகளைப் பூர்த்தி செய்த பதினேழு வைத்தியர்கள் யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.  நியமனம் பெற்றவர்களில் ஐந்து பேர் சிங்கள வைத்தியர்களாவர்.

இவர்களுக்கான நியமனம் கடந்த பதினாறாம் திகதியென அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்றுவரை எவரும் தமது பதவிகளைப் பொறுப்பேற்கவில்லையென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் முப்பத்தேழு வைத்தியசாலைகள் செயல்படுகின்றபோதும் பெரும்பாலான வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடமுள்ளது.

துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

பொலிசாரின் கடும் தாக்குதலை சகிக்க முடியாமலேயே அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களில் கையொப்பமிட நேர்ந்ததாக ”நோத் ஈஸ்டன் மன்த்லி” என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த சஞ்சிகையின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று சாட்சியமளித்தார்.

யசீகரன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரெ என்பவருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர் சுயேச்சையாக வழங்கியதா என்பதை அறியும் நோக்கில் இந்த விசாரணை நடந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி தன்னையும் தனது மனைவியையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து தன்னை தாக்கி கடும் இம்சைகளுக்குட்படுத்தி பல்வேறு கடதாசிகளில் தனது கையொப்பத்தை பலவந்தமாக பெற்றதாக யசீகரன் சாட்சியில் தெரிவித்தார். தான் ஒருபோதும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரே என்பவருக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் அவரை முதற்தடவையாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இந்த வழக்கின்போதே கண்டதாகவும் யசீகரன் அரச சட்டவாதியின் குறுக்குகேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

வவுனியாவில் பெண் தற்கொலைதாரி சந்தேகத்தில் கைது

220909prisoner1.jpgபொலி சாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் செவ்வாயன்று நடத்தப்பட்ட தேடுதலின்போது தற்கொலைதாரி எனச் சந்தேகிக்கப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின்போது இந்தப் பெண் வழங்கிய தகவலையடுத்து தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 3 அங்கிகளும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். காட்டுப்பகுதி ஒன்றில் இவை ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொரு இளம் பெண் சைனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கலாம் எனப் பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டி: முதற் தடவையாக பெண்களுக்கான உதைப்பந்தாட்டம்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் போது முதற் தடவையாக பெண்களுக்கான உதை பந்தாட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு தீர்மானிக் கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான உதைபந்தாட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தது.  அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் 23 வயதுக்குட்பட்ட குழுக்களை உள்வாங்குவாக தீர்மானிக்கப்பட்ட போதிலும் பின்னர் வயது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியை தெரிவு செய்வதற்கான தெரிவு போட்டிகள் இம் மாதம் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சீ. ஆர். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளன.

சவால்களை எதிர்நோக்கினாலும் கொள்கையில் உறுதி : கி.மா. முதலமைச்சர்

210909pillayan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் தமது கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிராமிய மட்ட அங்கத்தவர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் வைபவம் பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

“தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிலாஷை மற்றும் தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கையாகும். சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்குரிய ஒரு கட்சியாகவே இன்று எமது கட்சி விளங்குகின்றது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எமது கட்சியாகும். கிழக்கில் இதுவரைக்கும் அரசியல் தலைமைத்துவத்தில் ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது.இதனை மாற்றி அமைக்க வேண்டும். என்றார். 

மது உற்பத்தியும் பாவனையும் 9.5 வீதத்தினால் வீழ்ச்சி – ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

அரசாங்கத்தின் மது ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மது உற்பத்தியும், மது பாவனையும் வெகுவாகக் குறைந்து ள்ளது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய தெரிவித்தார். 2007 முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் மது உற்பத்தி 9.5 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. மதுபாவனையும் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் 9.42 வீதமாக வீழ்ச்சியடை ந்துள்ளது.

அரசாங்கம் படிப்படியாக மதுவை ஒழிப்பதற்காக எடுத்துவரும் நடவடிக்கையையே இவை காட்டுகின்றன. எனினும், மதுவுக்கான வரி விதிப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மது ஒழிப்புக்கான ஒரு அங்கமாகவே மது வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுடன் 2009 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது மதுவுக்காக 44 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுவுக்கென 34 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பியர் வகைகளுக்கென 28 வீத வரி அதிகரிப்பும், வைன் வகைகளுக்கென 69 வீத வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரியினூடாக அரசுக்கு கிடைக்கும் பணத்தை விட மது பாவனையை குறைக்கும் நோக்கத்துடனே வரி விதிப்புகளும் செய்யப்படுகின்றன.

அரசாங்கம் மது வகைகளின் உற்பத்தி, வெளிநாட்டு மது வகைகளின் இறக்குமதி சகல மது வகைகளின் பாவனையை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. ரஞ்ஜித் அலுவிகாரே கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது ரவி கருணாநாயக்க மேலதிக கேள்வியொன்றை எழுப்பிய போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அணி தோல்வி அடைந்து வெளியேறியது

1509fiba-news203a.jpgஇந்தி யாவில் நடைபெற்றுவரும் 23 ஆவது ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விளையாடிய கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வி அடைந்து வெளியேறியது.

சென்னையில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் இலங்கை மகளிர் கூடைப்பந்து அணி நேற்றைய தினம் பிலிப்பைன்ஸ் அணியை சந்தித்தது. இதில் தொடர்ந்தும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி 5570 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இலங்கை அணி சார்பாக பிரெமிலா பேருவலகே மற்றும் இனோகா ஜுவான் ஆகியோர் அதிகபட்சமாக தலா 12 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் இலங்கை அணி இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டியில் விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. “பி’ பிரி வில் விளையாடிய இலங்கை அணி இதற்கு முன்னர் மலேசியா (4581), கஸகஸ்தான் (4094), லிபியா (5496) மற்றும் உஸ்பெகிஸ்தான் (4889) அணிகளுடனான போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இதன்படி 12 நாடுகள் பங்கேற்றுள்ள இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி கடைசி இடத்தை பிடித்தது.

மலையக தொழிற்சங்கங்கள் ஓரணியில் திரண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் – இராஜரட்ணம்

080909teawomen.jpgமலையகத் தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதைத் தவிர்த்து ஓரணியில் திரண்டு அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.  அவ்வாறு செய்வதன் மூலமே மலையக பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமென மத்திய மகாணசபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் தெரிவித்தார்.

கண்டி நில்லம்ப ஹார்ல் ஓயாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டத்தின் பின் மலையக தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதையே காணக்கூடியதாகவுள்ளது.  இச்சங்கங்கள் தமக்கிடையிலுள்ள வேற்றுமையைத் தவிர்த்து ஓரணியன் கீழ் திரள்வதன் மூலமே அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கவேண்டும். அவ்வாறு ஒன்று திரள்வதன் மூலம் மட்டுமே மலையக பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

மலையகத்திலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தோட்டத்தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பினை உருவாக்கவேண்டும்.  இக்கூட்டமைப்பு பொதுத்தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்காக பேரம் பேசும் சக்தியினை மீண்டும் பெறவேண்டும். வெற்றிபெற்ற பின் எந்தக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால், தேர்தலை கூட்டாக சந்தித்து தமிழரின் வாக்குகள் சிதறாமல் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாக்கவேண்டும்