28

28

இந்தியாவின் பிரதி பாதுகாப்பு ஆலோசகராக அலோக் பிரசாத்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் இந்தியாவின் பிரதி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நியமனத்தின் ஊடாக இந்திய தேசிய பாதுகாப்புப் பேரவையின் பிரதான பொறுப்பதிகாரியாகவும் இவர் பதவியேற்கவுள்ளார். இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் தொடர்ச்சியாக கடமையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய பாதுகாப்பு பதவிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதி ஆலோசகர் பதவிகள் முக்கியமானவை என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜெனீவாவில் இன்று வருடாந்த அகதிகள் மாநாடு ஆரம்பம்

வருடாந்த அகதிகள் மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன.

இதன் போது அடுத்த ஆண்டுக்கான 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வரவு செலவுத் திட்டம்; மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த வருடத்தில் மாத்திரம் உலகளாவிய ரீதியாக 42 மில்லியன் மக்கள் பலவந்தமாக இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

பேரவையினால் இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள சுமார் 25 மில்லியன் அகதிகளுக்கு உதவியளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு நஞ்சானதால் 40 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதி

உணவு நஞ்சானதால் சுமார் 40 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு ஏழு பேருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஏனையோர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோதே இவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது

பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள் போகொல்லாகமவுடன் சந்திப்பு

rohithaogollagama.bmpபிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார்.

 நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் செயற்படுகின்ற மனிதாபிமான அமைப்புகள் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் தேவையின் அடிப்படையில், தடையின்றிக் கிடைக்கும் வகையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரென அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பயங்கரவாத அமைப்பிலிருந்து சரணடைந்துள்ளவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கே இதன் போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் முடிவடையும் பட்சத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த முடியுமென அமைச்சர் கூறினார். கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உதவி வரும் பட்சத்தில் இன்னும் பல நாடுகளின் உதவிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கப்படவிருக்கும் அரசியல் தீர்வு குறித்தும் அமைச்சர் குச்னர் மற்றும் மிலிபான்ட் ஆகியோருக்கு விளக்கமளித்துள்ளார்.

வட மாகாணத்தில் 500 பொலிஸாரை ஆட்சேர்க்க 6500 பேர் விண்ணப்பம் – இன்றும் நாளையும் நேர்முகப் பரீட்சை

260909srilanka.jpgவடக்கில் 500 பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெறுமென யாழ்ப்பாணத்துக்கான பொலிஸ் சுப்ரின்டன்ட் ஜி. எச். மாரப்பன தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

செப்டெம்பர் 19 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் 6 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 400 பெண்களினுடையதெனவும் யாழ். பொலிஸ் சுப்ரின்டன்ட் மாரப்பன கூறினார்.

கடந்த 03 தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போதே முதல் தடவையாக யாழ்ப் பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸில் கடும் மழை வெள்ளம் – சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

280909.jpgபிலிப் பைன்ஸ் தலைநகரில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தை தொடர்ந்து சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது. கெட்சானா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சூறாவளியை தொடர்ந்த வெள்ளத்தால் குறைந்தது 70 பேர் பலியாகியுள்ளனர். கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் இதுவே மிக அதிக அளவு பெய்த மழையாகும். பருவகால சூறாவளியால் ஒரு மாத காலத்தில் பெய்ய கூடிய மழை, ஆறே மணி நேரத்தில் தலைநகர் மணிலாவில் கொட்டியுள்ளது. இன்னும் பல இடங்களில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

தலைநகர் மணிலாவில் கூரைகள் மீது அமர்ந்துள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.உள்ளூர் தொலைக்காட்சிகளில், கூரை மேல் நின்று கொண்டிருந்த மக்கள் நீரில் அடித்து செல்லப்படுவது காண்பிக்கப்படுகிறது.

தலைநகர் மணிலா மற்றும் இருபத்து நான்கு மாகாணங்களில் அரசாங்கம் பேரிடர் காலநிலையை அறிவித்துள்ளது.

4வது மாடியிலிருந்து விழுந்து 80 வயது மூதாட்டி மரணம்

வயதுடைய மூதாட்டி ஒருவர் தொடர்மாடி வீட்டுத் திட்ட நான்காம் மாடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை கொழும்பு, வெள்ளவத்தை கல் கோர்ட் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இவர் கீழே தள்ளி விழுத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது கால் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கேஸ்வரி மாணிக்கவாசகமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

திமுக முப்பெரும் விழாவில் முதல்வருக்கு அண்ணா விருது

karunanithi.jpg திமுக முப்பெரும் விழா சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டது. முதல்வர் கருணாநிதிக்கு விழாவில் அண்ணா விருது வழங்கப்பட்டது.  அண்ணா நூற்றாண்டையொட்டி ஆண்டு முழுவதும் தி.மு.க. சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவது எனவும், அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்திலேயே விழாவை கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. நிறுவன நாள் விழா ஆகிய முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் எல்லையில், பெங்களூர் நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா நினைவு தூணை காலை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்

யாழ். பயணிகள் பஸ் பதிவு அலுவலகம் மாற்றம்

யாழ். பயணிகள் பஸ் பதிவு அலுவலகம் வவுனியா தேக்கம்காடு மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளது. வவுனியா ரம்மியா ஹவுஸிலிருந்து இந்த அலுவலகம் ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமிற்கு அருகில் மாற்றப்பட்டிருந்தது அதன் காரணமாக வவுனியாவிலிருந்து ஈரப்பெரியகுளம் செல்ல ஒரு பயணிக்கு முச்சக்கரவண்டிக்கு 400 முதல் 500 ரூபா வரை செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து த. தே. கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் எம்.பியை சந்தித்து விளக்கியிருந்தனர்.

கைத்துப்பாக்கி விற்பனை செய்தவர் கைது

100909media-teaching.jpgஇத்தாலி நாட்டு தயாரிப்பு பிஸ்டலுடன் சந்தேக நபர் ஒருவரை கொழும்பு, கிரான்ட் பாஸில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆயுத விற்பனை நடைபெறுவதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

மொடல 85 ஒடோநெல் ரகத்தைச் சேர்ந்த இத்தாலி நாட்டு தயாரிப் பான 8 மி.மீ. பிஸ்டல் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.