21

21

போலி பிரிட்டிஷ் விசா ஒத்திவைக்கப்பட்ட சிறை

court222.jpgபோலி பிரிட்டிஷ் விசாவுடன் லண்டன் செல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகி டீ அல்விஸ் 50 ஆயிரம் ரூபா அபராதமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்தார்.  2008 ஏப்ரல் 24 ஆம் திகதி இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இவ்வாறு நீதிவான் தீர்ப்பு வழங்கினார்.

வெளிநாட்டுப் பயண முகவர் ஒருவரே தனக்குப் பயண ஏற்பாடு செய்துதந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலீடுகளுக்கு வரிச்சலுகை – நிதி அமைச்சு தகவல்

ep-map.jpgகிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கிழக்கின் உதயம  வேலைத்திட்டத்தின் கீழ் இந்த முதலீட்டு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் 3 கோடி ரூபாவுக்கு குறைவில்லாத முதலீடுகளுக்கு வருமானவரி விலக்களிக்கப்படும். இயந்திரங்கள் இறக்குமதி மீதான வரி விதிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சு மேலும்  தெரிவித்துள்ளது.

லாக்கர்பி குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்

lockerbie_bombing.jpgஸ்காட் லாந்தில் இருபது வருடங்களுக்கு முன்னார் லாக்கர்பி நகருக்கு மேலாக பயணிகள் விமானம் ஒன்றை குண்டுவைத்துத் தகர்த்ததற்காக சிறையிலிடப்பட்டிருந்த, அப்டல் பசட் அல் மெஃராஹி என்னும் நபர் விடுதலை செய்யப்பட்டு, தனது நாடான லிபியாவுக்கு விமானத்தில் சென்றார்.

குணப்படுத்த முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெஃராஹி அவர்கள், மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளது.பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

அரசு மேலதிக வரிச்சுமைகளை சுமத்தாது; மானியங்களும் குறைக்கப்படமாட்டா சபையில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

26parliament.jpgதுண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக எக்காரணம் கொண்டும் அரசாங்கம் மக்கள் மீது மேலதிக வரிச்சுமைகளை சுமத்தவோ மானியங்களை குறைக்கவோ நடவடிக்கை எடுக்காது. இந்த வருட முடிவுக்குள் வருமான இலக்குகளை எட்ட ஆவன செய்யப்படுமென அரச வருவாய்த்துறை அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (20) பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க வருமானம் குறைந் துள்ளதால் துண்டு விழும் தொகையை 6.5ல் இருந்து 7 வரையாக உயர்த்த நேரிடுகிறது. ஆனால் இந்த வருட முடி வுக்குள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள வருமான இலக்குகளை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

துண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக புதிதாக வரிகளை அமுல்படுத்தவோ மானியங்களை குறைக்கவோ மாட்டோம். வருவாயை அதிகரிக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது.

2003ம் ஆண்டில் 105 வீதமாக இருந்த கடன் வீதம் தற்பொழுது 81 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வருமானம் வேகமாக அதிகரித்து வருவதோடு வருமான முரண்பாடுகளை குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அரசாங்க வருவாய் 255 பில்லியன் ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் துண்டுவிழும் தொகையை நிரப்புவதற்கு அரசாங்கம் வரிகளை அதிகரிக்கவும் மானியங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார்.

சிறுமிகளின் மரணம்; விசாரணைக்கு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் – ஆகஸ்ட் 23இல் மஸ்கெலியாவில்

girl2222.gifமஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமிகள் இருவர் கொழும்பில் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பில், உரிய விசாரணைகளைப் பக்கச்சார்பின்றி நடத்தக்கோரி மஸ்கெலியா நகரில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடப்போவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.  திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சிறுமிகளின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சிவசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு திகாம்பரம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; குடும்பத்தின் வறுமைகாரணமாக கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமிகள் இருவர் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையானது பேரதிர்ச்சியைத்தருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தாம் பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மரணமான சிறுமிகளின் பெற்றோர் எமது கவனத்துக்கொண்டு வந்துள்ளனர். கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் யுவதிகள் இளைஞர்கள் சொல்லொணா துயரங்களுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் கல்விகற்க வேண்டிய வயதிலுள்ள சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு தோட்டப்பகுதி சிறுவர்களை வெளிமாவட்டங்களில் வீட்டு வேலைக்கு அமர்த்துவதற்கு தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த ஒரு சிலர் உடந்தையாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், முள்ளுகாமத்தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு சிறுமிகளின் மரணமானது, முழு மலையக தமிழ் சமூகத்துக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமது வறுமையைப்போக்கிக் கொள்வதற்காக தலைநகரம் சென்ற சிறுமிகளின் இந்தப்பரிதாபகரமான நிலைமைக்கு யார் காரணம், என்பதை கண்டறிந்து சட்டத்துக்கு முன்நிறுத்துவதற்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு இவ்வாறு இடம்பெற்ற இந்த அநீதிக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில், மஸ்கெலியா பிரதேச பொதுமக்கள், மலையக சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.

தலைபிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

muslim-prayer.jpgஹிஜ்ரி 1430 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன்று மஃரிப் தொழுகை நேரமாகிய 6.24 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைமைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-2390783, 2432110, 2434651 மற்றும் 0777-366099 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளவாசலின் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியா, தக்கியா, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆயுள்வேத வைத்தியசாலைகள் அரசுடமையாகும்

ep-map.jpgஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளை அரசுடமையாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்வைத்திருந்தார்

யூனானி மற்றும் சித்த வைத்திய முறைகள் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்பட்டுவருவதால் அந்த வைத்திய முறைகளையும் அவை தொடர்பான ஆய்வுகளையும் அரசாங்கத்தால் மேற்கொள்வதற்கு வசதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.

தென்னிலங்கை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கும் “தண்டனை விலக்கீட்டு உரிமை’

court222.jpgஇலங் கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது குற்றச் செயல்களுக்கு தண்டனையிலிருந்தும் விலக்கீட்டு உரிமை பெறும் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துவதாக உருவாகியுள்ளது. 1971 இல் மாக்ஸிஸ்ட் கிளர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் பாதுகாப்பு சேவைத்துறையின் உறுப்பினர்கள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் நாட்டின் செல்வாக்கும் அரசியல் ரீதியில் தொடர்பும் உடைய வட்டாரங்களில் தந்திரோபாயமான ஆதரவுடன் சித்திரவதை அல்லது தண்டனைகளை முன்னெடுத்துச் சென்ற, செல்கின்ற வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட அல்லது வர்த்தக அல்லது அரசியல் காரணங்களுக்காக இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு விலக்கீட்டு உரிமை பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பொறுமை காக்கப்படும் நிலைமை இல்லாமல் போய்விடும் நிலைமை உருவாகியிருக்கிறது. தண்டனை விலக்கீட்டு உரிமையானது முதலீட்டாளர்களுக்கு நட்புறவுடனான நாடு என்ற பிரதிமையை இலங்கை மீள ஏற்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிக்கு சவாலாக உள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மீது பொதுமக்கள் விசனமடைந்துள்ளதை வெளிக்காட்டுவதாக ஆசிரியர் தலையங்கங்கள் வெளிவந்திருக்கின்றன. யுத்தகாலத்தில் விமர்சிப்போரை துரோகிகளென பட்டியலிடும் நிலையில் இது அபூர்வமாக உள்ளது. தப்பிச் செல்ல முடியாத யதார்த்தம் என்னவெனில் இயல்பு நிலை அல்லது இயல்பு நிலையை அண்மித்த நிலை உருவாக்கப்பட்ட நிலைமையில் மக்கள் தமது கண்களை திறந்து வைத்திருக்கின்றனர். சாதாரண மக்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் இப்போது தமது கண்களை திறந்துள்ளனர் என்று ஞாயிறு ஐலண்ட் பத்திரிகை இந்த வாரம் தெரிவித்துள்ளது.  இப்போது எமக்கு தேவை…. தெளிவான முறையில் சிதைவடைந்திருக்கும் முறைமையை துப்புரவு படுத்துவதே என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவன் ஒருவனை கடத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் திங்கட்கிழமை 11 பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. செல்வாக்குமிக்க பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனுடனான தகராறு தொடர்பாகவே நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவை விடுத்திருந்தது. சிரேஷ்ட அதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார். ஆனால் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பொதுமக்கள் பொலிஸ் நிலையமொன்றை முற்றுகையிட்டு ரயில்களை தடுத்தனர். இருவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரியின் பெண் சிநேகிதியை இந்த ஆட்கள் கடுமையாக விமர்சித்திருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

பொலிஸார் அவர்களை கைது செய்திருந்ததன் பின்னர் இருவரின் சடலங்கள் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. பொறுப்பதிகாரி உட்பட 7 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குற்றத் தொடர்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் முறைமையானது சிலசமயம் ஸ்திரமின்மையையும் குழப்பத்தையும் தோற்றுவித்திருக்கலாம். இதற்கு இலங்கையிலுள்ள பொலிஸார் அதிகளவு பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்று ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த பசில் பெர்னாண்டோ கூறியுள்ளார். பாதாள உலகத்தவருக்கு எதிரான யுத்தத்தை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

குற்றச்செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. கிடைக்கும் சான்றாதாரத்தின் அடிப்டையில் எந்த நிலைமையில் அல்லது சிரேஷ்ட தரத்தில் இருந்தாலும் குற்றச் செயலில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் தயங்கமாட்டோம் என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறியுள்ளார்.