துண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக எக்காரணம் கொண்டும் அரசாங்கம் மக்கள் மீது மேலதிக வரிச்சுமைகளை சுமத்தவோ மானியங்களை குறைக்கவோ நடவடிக்கை எடுக்காது. இந்த வருட முடிவுக்குள் வருமான இலக்குகளை எட்ட ஆவன செய்யப்படுமென அரச வருவாய்த்துறை அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (20) பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க வருமானம் குறைந் துள்ளதால் துண்டு விழும் தொகையை 6.5ல் இருந்து 7 வரையாக உயர்த்த நேரிடுகிறது. ஆனால் இந்த வருட முடி வுக்குள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள வருமான இலக்குகளை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
துண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக புதிதாக வரிகளை அமுல்படுத்தவோ மானியங்களை குறைக்கவோ மாட்டோம். வருவாயை அதிகரிக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது.
2003ம் ஆண்டில் 105 வீதமாக இருந்த கடன் வீதம் தற்பொழுது 81 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வருமானம் வேகமாக அதிகரித்து வருவதோடு வருமான முரண்பாடுகளை குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அரசாங்க வருவாய் 255 பில்லியன் ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் துண்டுவிழும் தொகையை நிரப்புவதற்கு அரசாங்கம் வரிகளை அதிகரிக்கவும் மானியங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார்.