August

August

அரசுடன் இணைந்து மக்களுக்குப் பணிபுரிய வருமாறு – கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் முரளி அழைப்பு

தமிழ் மக்களுக்கு தேசிய அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள் ளுமாறு அழைப்புவிடுகின் றேன் என தேசிய நல்லி ணக்க ஒருமைப்பாட்டு அமை ச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறு மூலை சித்தாண்டி மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் முரளிதரன், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி ஜனாதிபதி எடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவேண்டும். அதற்கான அழைப்பை இம் மேடையில் வைத்து கிழக்கு மாகாண முலமைச்சருக்கு விடுக்கின்றேன்.

தமிழ் மக்களை தேசிய அரசியலில் இணைத்து இப்பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும்.

இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஒவ்வொரு சிங்கள அமைச்சர்களையும் மட்டக்களப்புக்கு அழைத்து வருகின்றோம். அமைச்சர்கள் இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்காக முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றனர்.

இம்மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக விளையாட்டு அமைச்சரை அழைத்து வந்து இங்குள்ள விளையாட்டு வீரர்களை அபிவிருத்தி செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.எம். எப் (IMF) அழுங்குப் பிடியில் இலங்கை : வ அழகலிங்கம்

Protest_Against_IMF கடந்த சில நாட்களாக சர்வதேச நாணய சபை இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாகக் கொடுத்ததை ஒரு வெற்றியாக இலங்கை அரச ஆதிக்ககுழாங்கள் கொண்டாடுகின்றன. ஒரு நாடு கடன்கார நாடாகிவிட்டால்  அந்த நாட்டை அழிக்கப் பிரத்தியேக எதிரி எவரும் தேவையில்லை. அது தானாகவே அழிந்துபடும். எதையும் உயர்வு நவிர்ச்சியாகச் சொல்லும் கம்பன் “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கடன் எவ்வளவு பெரிய சோகத்தைத் தரவல்லது என்று குறிப்பிடுகிறான். இந்த நிதியானது கடுமையான நிபந்தனையின் கீழேயே மேலும் இலங்கை மக்களின் வறுமைக் கோட்டக்குக் கீழ் வாழும்  வாழ்க்கைத் தரத்தை மேலும் வெட்டி வீழ்த்தும் நடவடிக்கையாகும். இலங்கைப் பொருளாதாரமோ நெருக்கடிக்கு மேல் நெருக்கடியில் உள்ளது. வெளி நாட்டு முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பாரிய அளவில் விழ்ந்துள்ளது. மாசி மதத்தில் வெளிநாட்டுச் செலவாணிச் சேமிப்பானது ஒன்றரை மாதத்திற்கே போதுமானதாக இருந்தது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம்கொடுக்கவே பணம் இல்லாத நிலை இருந்தது.

இதற்கிடையில் நிதிக் கொள்ளை நோய் உலகெங்கும் கடுமையான சீரழிவுகளைச் செய்த கொண்டிருக்கிறது. அது ஒவ்வொரு நாடாகக் கபளீகரம்செய்து கொண்டிருக்கிறது. அதன்விளைவாக வறுமையும் தொழிற்சாலை மூடல்களும் வேலையில்லாத்திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. நிதி மூலதன ஒட்டுண்ணிகளின் சூதாட்டமானது ருத்திரத் தாண்டவமாடுகிறது. இதன் தாக்கம் யுத்தக் காயங்களால் பீடிக்கப்பட்ட இலங்கையில் பாரியளவு இருக்கிறது. இதிலிருந்து மீளவே மாற்று வழி ஏதுமில்லாமல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கெட்டது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பழைய காலனித்துவ நாடுகளை இன்றுவரை முன்னேறவிடாமற் தடுத்ததிலே சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு பிரதானமானது. இன்று வரை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்று உலகில் எந்த நாடும் முன்னேறியது கிடையாது. ஆனால் இலங்கையோ இது தொடர்பாகப் பிரத்தியேகமான வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ளது. எந்த உரிமையுமே பொருளாதார அபிவிருத்திக்குக் கட்டுப் பட்டது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.

இலங்கையில் தமிழ் மக்களோ சிங்கள மக்களோ எந்த உரிமையைப் பெற வேண்டுமானாலும் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்பதை முன் நிபந்தனையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது வரவு செலவுத்திட்டத்தில் பற்றாக்குறை இல்லாத நாடாக மருந்து எண்ணெய்  இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய தேவைப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ற மட்டத்திற்கு இறக்குமதி செய்வதற்கு வேண்டிய வெளிநாட்டுச் செலவாணி உள்ள நாடாக வேண்டும். அது இலங்கை ஒரு நவீன நாடாகி உலகச்சந்தையோடு இரண்டறக் கலக்கும்பொழுதுதான் அது சாத்தியமாக முடியும். அதற்கு முந்நிபந்தனையாக இலங்கை தொழில் நுட்பத்தில் மேலாண்மை பெற வேண்டும். அப்படி மேலாண்மை பெற்றால் மாத்திரம் தான் சர்வதேசச் சந்தையிற்போட்டி போட்டு இலங்கையின் உற்பத்திப் பொருட்களைப் போட்டிகளுக்கு மத்தியில் விற்று வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டலாம். அந்த மட்டத்திற்கு இலங்கைத் தொழிலாளர்களின் சமூகஉழைப்பு உற்பத்தித்திறன் உள்ளதாகி விலைக்கு வாங்கும் சக்தி உள்ளதாகும்.

ஒவ்வொரு பொருளாதார அபிவிருத்திகளும் சமுதாய உறவுகளிலே மாற்றங்களைக் கொண்டு வரும். ஒவ்வொரு சமுதாய உறவுகளும் அதற்கேற்றாற்போல பொரளாதாரத்தை மறு சீரமைக்கும். சமூகங்களுக்கு உள்ளேயுள்ள உறவுகள் நாகரீகத்தை முன் நோக்கி உந்தித் தள்ளும் மாற்றங்களாக ஏற்பட்டால் மாத்திரம்தான் பொருளாதாரம் மேல் நோக்கி வளரும். இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உரிமை வழங்காததற்கான முக்கிய காரணம் அதன் பற்றக்குறைப் பொருளாதாரமேயாகும்.  சமூகங்களுக்குள்ளே உரசல் நிகழ்வதால் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகிறது. மணிக் கூட்டின் உள்ளேயுள்ள பல்லுச்சக்கரங்கள் ஒன்றோன்று இசைந்து இயங்காமல் ஒன்றோடொன்று மல்லுக் கட்டினால் சரியாக மணிக்கூடு இயங்காது போல சமுதாய உறவுகளிலே ஏற்படும் இசையாமையும் உரசல்களும் சமுதாயத்தை முன்னேற விடாது.

அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவே என்று மாக்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் சின்னப் பொருளாதாரமாக இருந்தால் பெரிய அரசியல் செய்ய வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் பெரிய பொருளாதாரமாக இருந்தால் சின்ன அரசியலே போதுமானது. இலங்கை மக்கள் அதுவும் சிங்கள வெகுஜனங்கள் அரசியல் பேசுவதுபோல உலகில் எந்த இனமும் பேசுவது கிடையாது. அதன் காரணத்தைப் பற்றாக்குறைப் பொருளாதாரத்தில் தேட வேண்டும்.

இலங்கைக்கு இன்று கடனை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் என்ன நிபந்தனையின் கீழ் அக்கடனை வழங்கியுள்ளது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
 
“எண்ணைமானியக் கடன், மின்சக்திமானியக் கடன், மற்றய அரசதொழிற்சாலைகள் ஏற்படுத்தியிருக்கும் கடன் போன்றவற்றைக் குறைக்க வேண்டும். வெளி நாடுகளிலிருந்து பெறும் கடன்களை மட்டுப்படுத்த வேண்டும். மானியம் வழங்குவதைக் குறைக்க வேண்டும். இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும். வரவுசெலவுப் பற்றாக்குறையைக் குறைக்கவேண்டும். பற்றாக் குறையை ஈடுசெய்யுமகமாக அரச வருமானத்தைக் கூட்டுவதற்காக வரிகளை உயர்த்த வேண்டும். மற்றய நாடுகளிலிருந்து நிதிஉதவி பெறும்பொழுதும், மற்றய அரசியல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பும் சர்வதேச நாணய நிதியத்தோடு கலந்துரையாடிவிட்டே எடுக்க வேண்டும்.’

இந்த நிபந்தனைகளில் இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றயவை இலங்கை மக்களுக்கு ஏற்புடையதல்ல. இதுகூட புதுமையான நிபந்தனையாகும். இராணுவச் செலவைக் குறையென்று சர்வதேச நாணய நிதியம் ஒரு நாளும் சொல்வதில்லை. இன்று கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  மூன்றாமுலக நாடுகள், அதிகமாக நேற்று ஏராளமாக ஆயுதங்களை வாங்கிக் குவித்தவை என்பதே உண்மை. ஆயுதங்களுக்காகச் செலவு செய்வதால் அழிவைத் தவிர ஆக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இராணுவச் செலவீட்டில் வெறும் நுகர்வைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. ஆயுதங்களைக் கடனில் வாங்கும் நாடுகள், அசலோடு வட்டியையும் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து எந்த வருமானமும் கிடையாது.

இந்தச் சீர்திருத்தங்கள் எண்ணெய் விலையையும் மின் சக்தி விலையையும் மற்றய சாமான்களின் விலையையும் கூட்டும் என்பதை விளங்கிக் கொள்ள  வேண்டும். உலகச் சந்தையிலே விலை கூடினால் அதற்கு ஏற்றாற்போல் இலங்கையிலும் விலையைக் கூட்டவேண்டுமே ஒளிய மானியம் வழங்கி விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக எச்சரித்துள்ளது.

வரவுசெலவுப் பற்றாக் குறையைக் குறைப்பதற்கு மேலும் வரிகளைக் கூட்டி அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்வது  விலைவாசியைப் பாரிய மட்டத்திற்குக் கூட்டும். அரசாங்கத்தின் வரிவசூல் இலாகாவுக்கு வரும் வருமானம் குறைந்தால் மேலும் வரிகளைக் கூட்டுவதன் மூலம் அவற்றை ஈடுசெய்ய வேண்டும்.

இன்றைக்குள்ள இலங்கை மக்களின் விலைக்கு வாங்கும் சக்தியோடு ஒப்பிடுமிடத்து இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எவருமே இலகுவாக ஊகிப்பர். மூன்று தசாப்த யுத்தத்தால் விரக்தியின் விழிம்பில் உள்ள இந்த மக்களை இந்தச் செயற்பாடுகள் என்ன செய்யத்தூண்டும் என்பதை ஊகிக்க முடியும்.

சில கிழமைகளுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ்ச தான் சர்வதேச நாணய சபையின் நிபந்தனைக்குக் கட்டுப்படப் போவதில்லை என்று சூழுரைத்தார். 2007 மார்ச்சில் சர்வதேச நாணயசபை இலங்கை அரசாங்கத்தின் இசைவு இணக்கமும் ஒத்தாசையும் இல்லாமையால் நாட்டடைவிட்டு வெளியேறியது. இருந்தபோதும் அதன் இருபது வீதமான கடனை சர்வதேச நாணய நிதியத்திற்கு வருடா வருடம் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. 2004 றணில் விக்கிரம சிங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தால் பல தனியார்மயமாக்கல் நடவடிக்கை செய்யததாலேயே கலைக்கவேண்டி வந்தது. குறிப்பாக றெயில் சேவையை ஓரு இந்திய நிறுவனத்திற்கு விற்க எடுத்ததைத் தொடர்ந்து, அந்த இந்திய நிறுவனம் கொழும்பு கோட்டை புகையிரத நிலயத்தையும் மருதானைப் புகையிரத நிலயத்தையும் இடித்து அந்த இடங்களில் வர்த்தகக் கட்டிடங்களைக் (shopping complex) கட்ட இருந்தது. அதைத்தொடர்ந்த தொழிலாளர் வேலை நிறுத்மானது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு செல்லவே வேறு மார்க்கமில்லாமல் அன்றய ஜனாதிபதி சந்திரிக்கா, றணில்விக்கிரமசிங்கா அரசாங்கத்தைக் கலைக்க வேண்டி வந்தது.

வறிய மக்களின் துன்ப துயரங்களை இந்த நிதிநிறுவனம் ஒருபோதும் கருத்தில் கொண்டது கிடையாது. மாறாக முதலாளித்துவத் தொழிற்துறைகளை வளர்ப்பதற்காக ஏழைகளின் நிதியில் பெருவீதிகள் துறைமுகங்கள் விமான நிலையங் கட்டிக் கொடுத்ததே வழக்கமாக இருந்தது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு மூலகாரணம் சர்வதேச நாணய நிதியமாகும். 1950 தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் அங்கத்துவ நாடாகச் சேர்ந்து கொண்டது. 1953 இல் இதன் நிர்ப்பந்தத்தால் அரிசிவிலை கூட்டப்பட்டதால்  மாபெரும் கர்த்தால் போராட்டம் வெடித்து பிரதம மந்திரி டட்லி சேனனாயக்கா கொழும்பு துறைமுகத்தில் இருந்த பிரித்தானியக் கப்பலில் ஓடி ஒழித்துக் கொண்டார்.

மீண்டும் 1965 டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தில் கல்விக்கான மானியத்தை வெட்ட சர்வதேச நாணய நிதியம் நிர்ப்பந்தித்தது. ஆனால் அப்பொழுது சர்வகலாசாலைக்குப் புகுவதற்குத் தகுதியான மாணவர்கள்  இலங்கையில் இருந்த பல்கலைக் கழகக் கொள்ளளவைவிடப் பத்து மடங்காக இருந்தனர். பொன்னம்பலம் செல்வனாயகத்தின் இந்துப் பல்கலைக்கழகமா தமிழ் பல்கலைக் கழகமா என்ற வாத விவாத இழுபறியால் ஒரு பல்கலைக் கழகமுமே போடாமல் டட்லி சேனனாயக்க தப்பிக் கொண்டார். உண்மை சர்வதேச நாணய நிதியம் அதற்கு நிதி ஒதுக்க விடவில்லை.

ஆனால் 1969 இல் பல்கலைக்கழகப் புகுமுகத்திற்கான மாணவர் போராட்டங்கள் நடைபெறவே அது 1970 இல் புதிதாக ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் பல்கலைக் கழகப் புகுமுகத்தில் தரப்படுத்தலை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. மேலும் சர்வதேச நாணய சபை முன்பு பட்ட கடனைத் திருப்பிக் கட்டும்படி பிடிவாதமாக நின்றதால் புதிய நிதி மந்திரி என்.எம் பெரோராவால் வரவு செலவுத் திட்டத்தைச் சமாளிக்க முடியாமற்போகவே அது ஏற்படுத்திய தாக்கத்தாலும் உலக நாணயமாக விளங்கிய அமெரிக்க டொலருக்கும் தங்கத்துக்கும் உள்ள பிணைப்பு ஜனாதிபதி நிக்ஸ்சன் நிர்வாகத்தால் உடைக்கப்பட்டு பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போய் அதன் பிரதி விளைவால் எண்ணெய் விலை உலகச் சந்தையில் நாலுமடங்காக கூடி மேலும் நெருக்கடி ஏற்படவே 1971 இல் ஜே.வி.பி கிராமப் புறச் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. அன்று போடப்பட்ட அவசரகாச் சட்டத்தின் கீழான ஆட்சி இன்று வரை நீடிக்கின்றது.

1977 ஜே.ஆர். ஜெயவர்த்தனா யூ.என்.பி அரசாங்கம் வந்தவுடன் அதன் நிதி மந்திரியாக றொணி டீ.மெல் வந்தார். அப்போதும் சர்வதேச நாணய சபை உணவு மானியத்தையும் கல்வி வைத்திய வசத்திக்கான மானியத்தையும் வெட்டும் படி பிடிவாதமாக நின்று கொண்டது. அப்பொழுது ஜெயவர்த்தனா இலங்கையைச் சிங்பூராக்கக் கனாக்கண்டு 1956 இல் இருந்து நிலவிய இறக்குமதித்தடையை எடுத்ததோடு திறந்த பொருளாதாரத்திற்கு வழி வகுத்தார். முதலாவது வரவு  செலவுத்திட்டத்தை வாசிக்கும் நாள் பாராளுமன்றத்துக்குள் இரண்டு சர்வதேச நாணயநிதியப் பிரதிநிதிகள் கேட்போர் கூடத்தில் காத்திருந்து நிதிமந்திரியின் வரவுசெலவுத்திட்ட நகலைத் பரிசீலித்த பின்பே வாசிக்க அனுமதித்தனர்.

அன்று சர்வதேச நாணய சபை மற்றய மூன்றாமுலக நாடுகளுக்கு  ‘மறுசீரமைப்பு” என்று சொன்ன அதே சுப்ரபாதத்தை இலங்கை அரசுக்கும் சொன்னது.

‘நாணய மதிப்பைக் குறை, அரச செலவுகளைக் கடுமையாக வெட்டு. குறிப்பாக சமுதாயச் செலவு உணவு மற்றும் பிறநுகர்வுக்காக அளிக்கப்படும் மானியத்தைக் குறை, அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு, அரசு கொடுக்கும் பொருட்களின் விலையை உயர்த்து, (மின்சக்தி, எண்ணெய், போக்குவரத்துக் கட்டணம், உரம், பூச்சிகொல்லி, நீர்), விவசாய நீப்பாசனத்திற்கு இலவச நீர் வழங்காதே, விலைக் கட்டுப்பாடுகளை அறவே அகற்று, ஊதியக் குறைப்பு மூலம் நுகர்வைக் குறை, வரி மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்து.”

கட்டுனாயக்காவில் போடவிருந்த சுதந்திர வாத்தக  வலையத்திற்கு எதிராக ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங்களைக் கட்டுப்படுத்த 1977 இனக்கலவரத்தை செயற்கையாக ஆத்திரமூட்டி ‘சண்டையெண்டால் சண்டை சமாதானம் என்றால் சமாதானம்” என்று பயமுறுத்தி அதன் பின்னணியில் 1978 இல் பங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டது. அது இன்றுவரை நீடிக்கின்றது. அதைத் தொடர்ந்து 1983 இல் இனக்கலவரம் இராணுவத்தின் உள்சதி காரணமாக  வெடித்ததோடு வெறியாட்டம் ஆடிய இராணுவத்தை ஜெயவர்த்தனாவும் கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார்.

அதைத் தொடர்ந்து நீடித்த 36 வருடங்களும் சர்வதேச நாணய நிதியம் உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மேற்கு நாடுகள் எல்லாம் ஒவ்வொரு சமாதானப் பேச்சு வார்த்தைகளின் முன்னும் பின்னும் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கு, அரசுடமையான நிறுவனங்களைத் தனியார் உடமையாக்கு என்று உச்சாடனம் செய்வதில் ஓய்ந்ததே கிடையாது. மாவிலாற்றுப் பிரச்சனை மத்தியிலும் கூட அவர்கள் தமது தனியார் மயமாக்கு என்ற நிர்ப்பந்தத்தை நிறுத்தியது கிடையாது. இருந்த போதும் பொருளாதாரத் தாரளமயமாக்கலும் தனியுடமையாக்கலும் இலங்கையில் பூரணம் அடையவில்லை. இன்றுவரை இலவச வைத்திய வசதியும் இலவசக் கல்வியும் உணவு எண்ணெய் மின் போக்குவரத்து உர மானியங்களும் பாதியளவென்றாலும் தப்பிப் பிழைத்துள்ளன. மூன்று தசாப்தமாக லட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களை வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் இரைகொடுத்து தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டன. தமிழ் மக்களுக்கு இந்த யுத்தம் தமிழீழப் போராட்டமாகத் தோன்றிளாலும் மேற்குலக ஏகாதிபத்தியங்களோ இதனுள் தலையிட்டு தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவே அக்கறையாக இருந்து சமாதானத்தை வஞ்சக வழிகாளாற் குழப்பின. புலியும் அவர்களது மகிடிக்கு வளைந்து வளைந்து ஆடியது.

Board of Investment (BOI), Sri Lanka  என்கின்ற வெளி நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் திணைக்களம் இன்று இலங்கையிலே எந்தவித அரச தலையீடுமின்றி வெளிநாட்டவர் தமது முதலீடுகளை நூற்றுக்கு நூறுவீதம் தமது சொந்த நிறுவனத்தின் பேரில் முதலிடலாமென்றும் அதனால் வரும் லாபம் முழுவதையும் தமது சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லலாமென்றும் அதற்காக 15 அன்றேல் 20 வருடங்களுக்கு பூச்சிய வரிச்சலுகை தருவதாகவும் அறை கூவுகின்றன. அவர்களது முதலீடுகளைப் பாதுகாக்க மேலும் 100000 இராணுவத்தைச் சேர்கப் போவதாக இராணுவச் செய்திகள் கூறுகின்றன. இலங்கை மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தோரணையில் இலங்கை அரசு இராணுவத்தைப் பெருக்கி வருகிறது.

இந்த உள் நாட்டு யுத்தத்திலே வென்றதாக எண்ணற்ற இராணுவக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் கெட்டித்தனம் பெற்று விட்டோமென்றும் அரசாங்க மந்திரிகள் புளுகுகிறார்கள். உதவி நிதி மந்திரி றன்ஜித் சியம்பலப்பிற்றியாவும் மத்திய வங்கி முகாமையாளர்  Ajith Nivard Cabraal புலியை வென்றதின் பின் மேலும்ஒரு பெரிய வெற்றி என்று ஊடகங்களக்குக் கூறிப் புழகாங்கிதம் அடைந்தனர்.

சேக்ஷ்பியரின் “ஹம்லெட” நாடகத்திலே வரும், எரிச்சலூட்டும் அந்த வயதான மனிதனான பொலோனியஸ் தன் மகனிடம் இவ்வாறு கூறுவான் ‘கடன் வாங்கவும் செய்யாதே, கடன் கொடுக்கவும் செய்யாதே.”

இந்த இலங்கை அரசாங்கத்தின் கண்மூடித்தனமான கடனுக்குப் பலியான இலங்கை மக்கள் விளைவுகளைக் கட்டாயம் சந்தித்தே தீரவேண்டும். உள்ளுர்ர் அத்தியாவசிய செலவுகளைக் குறைத்து, இலங்கை மக்களின் கல்வி உடல்நலம் போன்ற அடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்து வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
(பட்டினி பரம ஒளடதம்,
மீதூண் விரும்பேல்,
பாவி பட்டினி கிடந்தால் பரிசுத்தவான் ஆகிறான்)

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் இருண்ட எதிர்காலத்தை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வேண்டும். பட்ட கடனில் பாதியளவாவது மேலும் கள்ள வழிகளால் கறுப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளில் போய் சேர்வது திண்ணம்.
(எத்தொழிலைச் செய்தாலும்,
ஏது அவஸ்தைப் பட்டாலும்,
முத்தர் மனமிருக்கும் மோனத்தே)

அந்த அயோக்கியத்தனத்தை மறைக்க நாட்டிலே தேசப்பற்றாளர்களும் தேசப்பற்று இல்லாதவர் என்ற இரு பிரிவினரே இருக்கிறார்கள் என்று கடவுளை ஒத்த அதிஅறிவாற்றல் உடைய உத்தமர்கள்  அந்தரத்தில் நின்று பேசும் சுந்தர வசனங்களால் ஊடகங்கள் இனிக்கின்றன. உண்மையில் முழு இலங்கை மக்களும் தாம் கஷ்டப்பட்டுப் போராடி வென்றெடுத்த ஜனனாயக உரிமைகளையும் வாழ்க்கைத்தரத்தையும் சமூக அன்னியோன்யங்களையும் இழந்து விட்டனர். இலங்கையோ புரட்சி ஒன்றைக் கருக் கொண்டுள்ளது என்பதுவே உண்மையாகும். உலகம் முழுவதும் உதவி செய்தாலும் எந்த நிதி நிறுவனமும் எவ்வளவு காசைக் கொட்டினாலும் நெஞ்சை நெருடும் உண்மையொன்று உண்டு.

வன்னி முகாங்கள்  நல்வாழ்வுக்கான சாதனமாய் இல்லாமல் அவல வாழ்வுக்கு எதிரான பரிகாரமாக மட்டும் இருப்பது  தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும்.

வ.அழகலிங்கம்
ஜேர்மனி
30.06.2009

கல்வி அமைச்சர் யாழ். விஜயம்

0309susil-premajayantha_.jpgகல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ். சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்குக் பாடசாலைகளின் குறைப்படுகள் தொடர்பாக நேற்று  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.

அதிபர், ஆசிரியர் தொடர்பான வெற்றிடம் மற்றும் நிர்வாக பிரிவுகளில் நிலவும் குறைபாடுகளை நிறைவு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

கல்வி நிர்வாக சேவையுடன் இணந்த பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்கள் கூட்டத்தில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்தே அமைச்சர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.

கல்வி அமைச்சு செயலாளருடன் கோப்பாய் கல்விப் பீடத்தையும் அமைச்சர் குழுவினர் பார்வையிட்டனர்.

”நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர்.” 1983 பிப்ரவரி 24ல் நீதிமன்றத்தில் தோழர் தங்கதுரை

thangathurai1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தோழர் தங்கதுரை நிகழ்த்திய உரை.

”கனம் நீதிபதி அவர்களே!
ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.

நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம்.

எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு.

வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.

இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல.

இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?

நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.

இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன?

காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.

இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர்.

இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?

பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு.

இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?

பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.

ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று.

இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.

எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.

எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.

ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.

வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு – நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு – தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.

உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்?. அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே.

இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.”

விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ”இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?” என்றார்.

”எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது.

நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?

மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸாரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம்.

வவுனியாவில் கிராமம் கிராமமாக வீதிப் பிரச்சாரத்தில் ஈடுபடும் புளொட் அமைப்பினர்

வவுனியா நகரசபைக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளில் புளொட் அமைப்பினரும், ஆதரவாளர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) நங்கூரம் சின்னத்தில் தனித்துவமாக போட்டியிடுகின்றது. முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் இதில் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். ஜனநாயக மக்கள் முன்னணி முன்னர் வவுனியா நகரசபையைப் பொறுப்பேற்றிருந்த போது மேற்கொண்ட பணிகளும், சாதனைகளும் ஏராளம் என்பதை மக்களுக்கு ஞாபகமூட்டும் வகையிலும்இ இனி மேற்கொள்ளப் போகும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் எடுத்துக் கூறியே இந்தப் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வீடுவீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரப் பணிகளை புளொட் அமைப்பு மக்களோடு மக்களாக இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

மனிதாபிமான பணிகளில் அரசுடன் சேர்ந்து செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயார்

tna-logo.jpgபத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளார்களென்று அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால் அவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் ஜே. வி. பி. உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்த அடிப்படையிலேயே இளைய சமூகத்தினரான இவர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அவர்கள் தங்களது எதிர்கால வாழ்வைக் கட்டியெழுப்பவும் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருடனான பேட்டி முழுமையாக இங்கே தரப்படுகிறது.

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இறுதியாக நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டது. இந்தச் சந்திப்புக்கும் மேலாக ஜனாதிபதியுடனான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றுக்கும் நீங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். இவ்வாறானதொரு தனிப்பட்ட சந்திப்புக்கான அவசியம் தான் என்ன?

பதில்: சர்வகட்சிக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்தோம் என்பதே உண்மை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மனித அவலத்துக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பான மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முடிவெடுத்திருந்தோம்.

வவுனியா அகதி முகாம்களிலுள்ள மக்களை நாம் பார்வையிட அனுமதித்தல், இடம்பெயர்ந்த மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட கம்பி வேலிக் கூடாரங்களுக்குள் தொடர்ந்தும் வாழக் கூடாதென்பதற்காக அவர்களை விரைவாகச் சொந்த இடங்களில் குடியேற்றுதல், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல் போன்றன குறித்து நாங்கள் பல நாடுகளிடம் குறிப்பாக இந்தியாவிடமும் ஐ.நா. பிரதிநிதிகளிடமும் வலியுறுத்தி வந்தோம். இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசுவதென்றும் முடிவெடுத்தோம்.

ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஒரு முன்னோடியாக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவைச் சந்திப்பதெனத் தீர்மானித்தோம். இதன்படி கடந்த மாதம் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவரது அமைச்சு அறையில் சந்தித்து, இடம்பெயர்ந்துள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து விளக்கினோம். அவர்களைப் பார்க்க முடியாத எமது நிலை குறித்தும் தெரிவித்தோம். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மோதல் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமலிருந்தார். இன்று அவர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் எடுத்துக் கூறினோம். மேலும் மனிதாபிமானப் பணிகளையும் மருத்துவப் பணிகளையும் மேற்கொண்ட டாக்டர்களின் தடுத்து வைப்புக் குறித்தும் பிரஸ்தாபித்தோம். ஆகவே இந்த விடயங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையையும் அமைச்சர் டலஸிடம் முன் வைத்தோம். அப்போது அமைச்சர் டலஸ், ஜனாதிபதியை நீங்கள் சந்தித்து பேசினால் என்னவென்று எம்மைக் கேட்டார். இதுதான் உண்மையில் நடந்தது.

கேள்வி: இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலும் கூட சர்வகட்சிக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றனவே. அதற்கான அழைப்புகள் உங்களுக்கும் அனுப்பப்பட்டன. அந்த வேளையில் நீங்கள் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தீர்களே? அழைப்பினை ஏற்று நீங்களும் கலந்து கொண்டிருந்தால் சில பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கிடைத்திருக்குமல்லவா?

பதில்: ஆம், சர்வகட்சிக் குழுக் கூட்டங்களில் பங்கு கொள்ளுமாறு எமக்கு இருமுறை அழைப்புகள் வந்தன. ஆனால் அன்றைய சூழ்நிலைகள் ஜனாதிபதியைச் சந்திக்க எம்மை அனுமதிக்கவில்லை.

கேள்வி: ஜனாதிபதியை சந்திக்கும் உங்கள் முடிவுக்கு சாதகமான பதில் கிடைத்ததா? ஜனாதிபதியை நீங்கள் சந்தித்தீர்களா?

பதில்: இல்லை. இதுவரையும் எந்தவித பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் இறுதியாக நடைபெற்ற சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அழைப்புக் கிடைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நாம் எமது கட்சியைச் சேர்ந்த எம். பிக்கள் சிலரை என்.ஸ்ரீகாந்தா தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து எமது பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்குமாறு கூறினோம். அங்கு சென்ற எமது பிரதிநிதிகள் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பேசினார்கள். ஆனால் இதுவரைக்கும் வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்து பேச எமக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தருகிறது. வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களின் பிரதிநிதிகளான நாம் அவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி அனுமதி தர மறுப்பதன் காரணமாகவே இந்த விடயங்களை அண்மையிலும் இந்தியா மற்றும் ஐ.நா பிரதிநிதிகளிடமும் முறையிட்டோம். இதேவேளை, இடம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது தொடர்பாகவும் அவர்களின் நலன் குறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக ஒரு குழுவினை அரசாங்கம் அமைத்துள்ளது. ஆனால் அந்தக் குழுவில் கூட ஒரு தமிழ் அரச பிரதிநிதியோ நாடாளுமன்றப் பிரதிநிதியோ உள்வாங்கப்படவில்லை. இதன் காரணமாக அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தாலும் கூட மனிதாபிமானப் பணிகள், தொடர்பில் இரு தரப்பும் சந்தித்துப்பேசுவதில் தவறில்லை. சுனாமி காலத்தில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் விடுதலைப் புலிகளின் தலைவரும் ஒரு ஒப்பந்தத்தையே செய்திருந்தார்கள். அவ்வாறாயின் எங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் மனிதாபிமானப் பணிகள் தொடர்பில் பேசுவதில் தவறில்லை என்ற முடிவின் அடிப்படையிலேயே சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

கேள்வி: வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் எண்ணிக்கை, இடம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளிவருகின்றனவா?

பதில்: ஆம். அகதிகளாக வந்த மக்களின் பெயர்பட்டியல் முதலில் வெளியிடப்பட வேண்டும். இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது 4,30,000 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்ததாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் முன்னர் தெரிவித்திருந்தார். உலக உணவுத் திட்டத்தின் தகவல்களின் அடிப்படையில் 3,30,000 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கமோ முல்லைத்தீவு மாவட்டத்தில் 70,000 பேர்மட்டுமே இருந்ததாக சர்வதேச ரீதியாகவே பிரசாரத்தை மேற்கொண்டது. இவ்வாறான முரண்பாட்டு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் சுமார் 3,15,000 பேர் இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களுக்கு வந்திருந்தனர். இது ஆச்சரியத்தையே தந்தது. ஆகவே மீதியான சுமார் ஓர் இலட்சம் மக்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதனை நாம் இன்னும் அறியாதவர்களாகவே உள்ளோம். ஆகவே இவ்வாறான முரண்பாடான தகவல்கள் காரணமாக உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் அந்த மக்களைச் சந்தித்துப் பேச வேண்டியுள்ளது.

அடுத்ததாக, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளார்களென்று அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால் அவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் ஜே. வி. பி. உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்த அடிப்படையிலேயே இளைய சமூகத்தினரான இவர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அவர்கள் தங்களது எதிர்கால வாழ்வைக் கட்டியெழுப்பவும் அனுமதிக்கப் பட வேண்டும்.

கேள்வி: சமஷ்டிக்கே இடமில்லை யென்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறி விட்டார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன?

பதில்: தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போது ஒரு சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தையே முன் வைத்திருந்தோம். தந்தை செல்வாவின் அந்தத் திட்டத்துக்காக மக்களும் வாக்களித்து வந்தனர். இது தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வுத் திட்டம் குறித்தோ பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற போதெல்லாம் ஒரு முறையான தீர்வுத் திட்டத்தை எந்த சிங்கள அரசாங்கத் தலைமைகளுமே முன்வைக்கவில்லை. தந்தை செல்வா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் பங்கு கொண்ட வட்டுக்கோட்டை மாநாட்டில் முன் வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கை கூட சிங்கள அரசியல் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டது. இன்று இந்த அரசாங்கமும் சமஷ்டியை நிராகரித்துள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைக்கான ஒரு தீர்வுத் திட்டத்தை எவ்வாறு முன் வைக்கப்போகிறதென்று கூட இன்னும் தெளிவாகக் கூறவில்லை. சமஷ்டியை நிராகரிக்கிறார்களென்றால் வேறெதனை முன் வைக்கப்போகிறார்கள் என்பதும் எமக்குத் தெரியாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான் நாம் ஒரு புதிய தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான நியாயமான தீர்வொன்றினைக் காணும் வகையில் மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டமொன்றை தயாரிக்கும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. எமது இந்தத் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டதும் இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேசத்திலும் முன் வைக்கப்படும். தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை, சுய உரிமைத் தத்துவம், தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளும் சுயாட்சி முறை ஆகிய மூன்று அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே இந்த புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் எமது தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் போது அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே ஏற்படக் கூடிய உடன்பாடானது புதியதொரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் சென்றால் அந்தத் தீர்வுத் திட்டத்தில் நாம் முன்வைத்த மூன்று அடிப்படை அம்சங்களும் உள்வாங்கப்பட வேண்டும். அல்லது இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் தீர்வு காணப்படக் கூடிய ஒரு அரசியல் அமைப்பு உருவாக வேண்டும்

இந்த நிலையில் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் இந்தியா தனது முழுப் பங்களிப்பையும் வழங்கி தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளுகின்றோமென்ற உணர்வைக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியா உதவும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இதேபோன்று இலங்கைத் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கும் இந்தியா தனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பை யும் வழங்க வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியன இலங்கைத் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பிலும் அதனைத் தீர்த்து வைப்பதிலும் காட்டும் அக்கறை போன்று இந்தியாவும் தனது பங்களிப்பை நல்கி தமிழ் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைத் துரிதப்படுத்த உதவி செய்ய வேண்டும்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வை எட்டவும் மனிதாபிமான பணிகளுக்குப் பங்களிப்புச் செய்யவும் நாங்கள் தயாராகவுள்ளோம்.

கேள்வி: 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலத்தினை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமே?

பதில்: இல்லை, 13 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்ட மூலத்தை ஜே.ஆர். ஜெயவர்தன தனது விருப்பப்படியே நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்தார். அந்த நேரத்தில் நாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை என்பது தெரிந்த விடயமே. இருப்பினும் இந்தத் திருத்தச் சட்ட மூலம் எங்கள் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகவோ அல்லது தீர்வுக்கான அடிப்படையாக இருக்கமாட்டாது. நாம் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. இதனை நாம் அண்மைக்காலங்களில் பாராளுமன்றத்தில் தெளிவாகக் கூறிவிட்டோம். இந்தத் திருத்தச் சட்டமூலமானது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. இதனை இந்திய அரசாங்கத்துக்கு நாம் தெளிவாகக் கூறியுள்ளோம். இந்தச் சட்ட மூலம் அதிகாரத் தைப் பகிர்ந்து கொடுக்கவோ அல்லது ஆட்சியில் பங்களிப்புச் செய்யவோ அதிகாரத்தைப் பரவலாக்கவோ இடமளிக்கவில்லை. பொலிஸ், சட்டம். ஒழுங்கு, காணி, நிலப்பங் கீடுகளுக்கான அதிகாரங்கள் கூட 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வில்லை. தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் வரலாற்று போராட்டங்கள் என்ன இலக்குக்காக நடத்தப்பட்டனவோ என்ன இலக்குக்காக நாங்கள் உடன்பாடுகள் கண்டோமோ அவற்றில் எதனையும் இந்த 13 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டிருக்காத காரணத்தினால் இதனை நாங்கள் நிராகரித்துள்ளோம்.

கேள்வி: நீங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வளவு தான் கோரிக்கைகளை தமிழ் நாடு அரசிடமோ புதுடில்லி அரசிடமோ முன்வைத்தாலும் கூட அவர்கள் அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லையே.

பதில்: மோதல் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்ததை நாங்கள் அறிவோம். எங்கள் தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்களென்ற விடயத்திலும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற விடயத்திலும் இந்தியா எதனையும் கருத்திற் கொள்ளவில்லை என்ற அபிப்பிராயமும் நிலவியது. இந்த விடயத்தில் எங்களுக்கும் ஆழமான வேதனை உண்டு. எமது மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்திய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்ற நிலையிலும் இந்தியாவுக்கும் சென்று இங்குள்ள நிலைவரம் தொடர்பில் விளக்கினோம். முழுமையான ராஜதந்திரத்தை பிரயோகித்து இந்த யுத்தத்தை நிறுத்தும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதனைக் கூட அவர்கள் கருணையோடு அணுகவில்லை. இது இன்னும் வேதனை தருகிறது.

இருப்பினும் இந்தியா தொடர்பில் நாங்கள் முற்று முழுதாக நம்பிக்கையை இழந்து விடவில்லை. இலங்கைத், தமிழ் மக்கள் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு ஒரு தீர்வைக்காண உதவ வேண்டுமென்பதில் நாங்கள் இன்னும் திடமாக உள்ளோம். இதன் காரணமாகவே இந்தியத் தேர்தல் முடிந்தவுடனும் புதுடில்லிக்குச் சென்று இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உண்மை நிலைமைகளை விளக்கி இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்தியா உதவ வேண்டுமென்று மீண்டும் கோரிக்கை விடுத்தோம். வெளியுறவுத்துறை அமைச்சர் என்.எஸ். கிருஷ்ணாவைச் சந்தித்து நாம் பேசிய போது எமக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. நாம் முன்வைத்த அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொண்டார் என்றே நாம் நம்புகிறோம்.

கேள்வி: ஆனால் ஒன்றும் நடக்க வில்லையே?

பதில்: ஆம் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே நாம் திருப்திப்படமுடியும். ஆனால் எமது பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவுமென்ற நம்பிக்கை எமக்கு இன்னும் உள்ளது.

கேள்வி: யாழ் மாநகராட்சி, வவுனியா நகராட்சி தேர்தல் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இந்தத் தேர்தலை இப்போது நடத்தக் கூடாதென்றே நாம் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இரத்தம் காய்ந்து போவதற்கு முன்னர் இவ்வாறு ஒரு தேர்தல் நடத்துவது நல்லதல்ல. பலவீனப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அரசாங்கம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மக்களை வென்றெடுத்து, தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, அந்த மக்கள் தமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்ற மாயைத் தோற்றத்தை வெளியுலகுக்கும் சிங்கள மக்களுக்கும் காட்டுவதற்காகவே இந்தத் தேர்தலை அரசு நடத்துகிறது.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 8/2/2009

கொழும்புச் சந்தையில் யாழ் மீன் விற்பனை – அமைச்சர் பீலிக்ஸ் நடவடிக்கை

filix_perera.jpgவடபகுதி கடற் பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களை கெழும்பு நகரில் விற்பனை செய்யும் நிலையங்கள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். வடபகுதி கடற்பிரதேசங்களில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து வடபகுதியில் பெருமளவில் மீன் கிடைத்து வருகிறது.

அங்கு பிடிக்கப்படும் மீன்களை கொழும்பு மாநகரில் வாழும் மக்களுக்கும் பெற்றுக்கொள்வதற்கான விசேட திட்டமொன்றை மீன்பிடித்துறை அமைச்சர் வகுத்துள்ளார். அதன்படி வட பகுதியில் கூடுதலாக உள்ள மீன்களை குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் கொழும்புக்க கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வடபகுதி மீனவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி – மஹேல ஆட்ட நாயகன்

0308mahela.jpgபாகிஸ் தானுடனான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பு செய்ய முடிவு எடுத்தது

முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி  50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 288 ஓட்டங்களை பெற்றது. கம்ரன் அக்மல் 45 ஓட்டங்களையும்,  யூனுஸ் கான்  44 ஓட்டங்களையும்,  உமர் அக்மல் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் குலசேகர  10  0  74  1, மிரண்டோ  10  0  46  1, பெர்னாண்டோ  10  1  62  1, மதேவ்ஸ்  10  0  41  2,  முரளிதரன்  10  0  64  2,

பின்னர் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 46.3 ஓவர்களில் 289 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. அதிகபட்சமாக மஹேல 123 ஓட்டங்களையும்,  தரங்க 76 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் கபுகெதர ஆட்டம் இழக்காமல் 08 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மொதம்மாத் ஆம்  9.3  1  45  1,  அப்துல்  9  0  62  1,  சகிட் அபிரிடி  6  0  45  0 , அஜ்மல்  9  0  54  2,  மாலிக்  6  0  37  0  

மஹேலக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் – சிவநாதன் கிஷோர்

srilanka-refugees.jpgஅரசாங் கத்தின் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது சில காலமாகவே நடைபெற்று வருவதாகவும், இது ‘எல்லோருக்கும்’ தெரியும் என்றும் அவர் BBC தமிழோசையிடம் தெரிவித்தார். இவ்வாறு வெளியேறுவதற்கு மக்கள் பெரும் பணம் கொடுப்பதாகவும், ஒரு சிலர் விமான நிலையம் வரை அழைத்து செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக எந்த அரசியல் கட்சி மீதோ, எந்த ஒரு தனிநபர் மீதோ குற்றம் சுமத்தாத நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தனக்கு இது தொடர்பில் உறுதியான நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருப்பதாகவும், முகாம்களில் இருந்து மக்கள ‘நோயாளிகள்’ என்ற போர்வையில் வெளியில் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தாபய ராஜபக்ஷ், இவ்வாறு மக்கள் தப்பியிருப்பது தொடர்பில் தங்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும், சிலரை கைது செய்திருப்பதாகவும் கூறினார். இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

தமிழரின் ஒரே சக்தி த.தே.கூ. மட்டுமே என்பதை சர்வதேசம் அறியும் : செல்வம் அடைக்கலநாதன்

0308adaikalanathan.jpgதமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உரிமைகளையும் நேர்மையுடன் வென்றெடுக்கக் கூடிய, தமிழர்களின் சக்தியாய்,பலமாய் இருக்கக் கூடிய ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைத்துலக சமூகமும் பிராந்திய வல்லரசான இந்தியாவும், புரிந்துகொண்டுள்ளன.

ஜனாதிபதியும் கூட இதனை நன்கு உணர்ந்துள்ள நிலையில், தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை மீண்டும் உறுதியுடன் நிரூபிக்கும்,களமாக யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்கள் திகழ்கின்றன. இத்தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசு கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்ததாவது: “வரலாறு காணாத பேரவலத்தை சந்தித்த வன்னி வாழ் மூன்று லட்சம் மக்களும், இடம்பெயர்ந்து வவுனியாவில் முள்ளுக்கம்பி நடுவில், பரிதாபகர வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மரண பீதியுடன் வாழ்ந்து வரும் அவர்களைத் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளாமல், யாழ். மாநகர சபை தேர்தலையும், வவுனியா நகரசபை தேர்தலையும் அரசாங்கம் திட்டமிட்டுத் திணித்துள்ளது. திணிக்கப்பட்ட தேர்தலில் வலிந்து போட்டியிட வேண்டிய காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் இத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் விலகிவிட்டார்கள் என்று தப்புக்கணக்கு போடும் சிங்கள தேசத்தின் முத்திரையை கிழித்தெறியும் அரிய வாய்ப்பாக இத்தேர்தலை நாம் கருதுகிறோம். கடந்த 61 வருடங்களாக தமிழினத்தின் உரிமைப்போர் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் முன்னெடுத்த போதெல்லாம் அதனைத் திட்டமிட்டு உலக வல்லரசுகளின் ஆதரவுடன் தமிழர்களின் உணர்வுகளை அடக்கிய சிங்கள தேசம், பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தர தீர்வுக்காகப் பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தலைமைகள் முயன்ற போதெல்லாம் அதனை ஏற்றுக்கொள்ளவோ தமிழினத்துக்கு தீர்வு வழங்கவோ முன்வரவில்லை.

இன்னல்கள், இடர்கள், துன்பங்கள், சோகங்கள் என எமது வாழ்வு தொடரும் இவ்வேளையிலும் தமிழினம் தன்மானத்தை இழந்து சோரம் போகாமல் சுதந்திர தாகம் கிடைக்கும் இறுதி நேரம்வரை பற்றுறுதியுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான வல்லமையும் துணிவும் அரசியல் நேர்மையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமே உள்ளது என்பதனை தமிழ் மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

எமது கரங்களைப் பலப்படுத்த, உரிமையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கும் படி தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.