July

July

நியூசிலாந்தை தாக்கிய பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை

tsunami111.jpgநியூசிலாந் தில் இன்று மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சிறிய அளவிலேயே சுனாமி அலைகள் உருவானதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் பியோர்ட்லாண்ட் என்ற இடத்தில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அருகே நிலத்தின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவானதையடுத்து பசிபிக் கடலில் சுனாமி ஏற்படலாம் என நியூசிலாந்து முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டது.

முதலில் தென் தீவையும் பின்னர் தலைநகர் ஆக்லாந்து மற்றும் முக்கிய நகரான வெலிங்டன் ஆகியவை அமைந்துள்ள வடக்குத் தீவையும் சுனாமி தாக்கக் கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் இந்த அலைகள் ஆஸ்திரேலியாவையும் அடையக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு அங்கு கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சிறிய அளவிலான சுனாமி அலைகளே உருவானதாகவும் இதனால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும் ஆஸ்திரேலிய வானிலை மையம் பின்னர் அறிவித்துவிட்டது. இந்த அலைகள் ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியை (டாஸ்மான் கடல் பகுதி) நோக்கி சீறியதாகவும் அந்த மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவின் தெற்குத் தீவில் உள்ள குயீன்ஸ்டெளன், கிரைஸ்ட்சர்ச் ஆகிய நகர்கள் உள்பட பெரும்பாலான பகுதிகளும் குலுங்கின. மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தையடுத்து தென் தீவு முழுவதும் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. நிலநடுக்கம் மிக பயங்கரமாக இருந்ததாக வனாகா என்ற நகரைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆயுதக்குழுக்களால் பாதிப்பில்லை – ஐ.தே.கவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு

laxman_yapa_abeywardena.jpgஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளால் வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு ஒரு போலியான குற்றச்சாட்டாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத வகையில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் நிலவுவதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அங்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருந்தால் பொலிஸாரிடம்; முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் இதுவரை எவ்வித முறைப்பாடும் செய்யப்படவில்லை.

வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வாய்ந்த ஒருவராக ஐக்கிய தேசியக் கட்சி டொக்டர் ஜயலத் ஜயவர்தனாவை நியமித்துள்ளது. அவரிடம் ஆயுதக்கழுக்களின் இடையூறுகள் பற்றி விசாரித்த போது முறைப்பாடுகள் எதுவும் இல்லை என்றே தெரிவிக்கின்றார். எனவே ஆயுதக்குழுக்களினால் தடை ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உன்மையும் இல்லை என்பது இதன் மூலம் புலனாகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தா

வவுனியா நகரில் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்வு; சில இடங்களில் காவலரண்கள் நீக்கம்

வவுனியா நகரில் இதுவரை காலமுமிருந்த பாதுகாப்பு கெடுபிடிகளில் தற்போது சற்றுத் தளர்வேற்பட்டுள்ளது. நகரில் சில இடங்களிலிருந்த காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன. தேக்கம்காடு முதல் மூன்று முறிப்பு வரையில் மேற்கு புறத்தே பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலிகள் அகற்றப்பட்டு பாரிய குழிகளும் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது. நகரசபைத் தேர்தலை முன்னிட்டு சில பாதுகாப்பு செயல்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வவுனியாவிலிருந்து தனிப்பட்ட தேவையின் பொருட்டு கொழும்பிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து மதவாச்சி ஊடான வாகன போக்குவரத்திற்கும் அனுமதி பெறலாம். அத்துடன், மதவாச்சி சோதனை நிலையத்தின் ஊடாக போக்குவரத்திலும் சில தளர்வுகள் அடுத்த சில தினங்களில் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

new_appointment.jpgஇலங்கை இராணுவத்தின் அதிஉயர் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய இராணுவத் தளபதியாகவும் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டனர்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இந்த நியமனத்தின்படி  இராணுவத் தளபதி பதவியிலிருந்து நேற்று பதவி விலகிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது புதிய பதவிக்கான கடமைகளை இன்று பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 19ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

கனடாவில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை

கனடா, ரொறன்ரோவில் கிறிஸ்ரியன் தனபாலன் (வயது 22 என்ற தமிழ் இளைஞன் கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ரொறன்ரோ நகரில் கிளமோர்கன் பார்க்கில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்து விட்டார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபாலன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் இரு குழுவினருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றைய குழுவினர் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்ட போதும் பின்னர் அவர்கள் திரும்பி வந்ததாகவும் நள்ளிரவில் இரு குழுக்களும் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனபாலும் நண்பர்களும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இரு குழுவினரும் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைக் கண்டிக்க அரசுக்கு எவ்வித நோக்கமும் இல்லை – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgஊடகவி யலாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித நோக்கமும் இல்லை என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

தகவல்களைத் அறிந்துகொள்வதற்கு மக்களுக்குரிய சுதந்திரமான வழிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் ஊடகவியலாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து தண்டிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜயந்த கருணாதிலக்க ஊடகங்களுக்குத் தெரிவிததிருந்தார். அவர் தெரிவித்திருந்த கூற்றை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன் அவரது கூற்றில் எவ்வித உன்மையும் இல்லை.

இது தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைக் கொண்டுவரவும் அரசாங்கத்துக்கு உத்தேசம் இல்லை. குறைந்தபட்சமாக இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றையோ அல்லது கலந்துரையாடல் ஒன்றையோ அரசாங்கம் நடத்தவில்லை. நாட்டில் யுத்த நடவடிக்கைகள் இடம்பெற்ற போது ஜனாதிபதிக்கும் ஊடகங்களின் தலைமை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் யுத்த செய்திகளை நியாயமான முறைக்கு பிரசுரிக்க வேண்டுமென மட்டும் வேண்டுகொள் விடுக்கப்பட்டது.

அதைத்தவிர ஊடகங்களை பாதிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.அத்துடன் ஊடகங்களைப் பாதிக்கும் வகையிலான கட்டளைச் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் ஒரு போதும் கருதியதில்லை  என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதி பதவியிலிருந்து பிரியாவிடை

comd_last_.jpgஇலங் கையின் 18ஆவது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தனது பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றார். புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்தே ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகிச் செல்கிறார். இது தொடர்பான வைபவம் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட்ட இராணுவ மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதனையடுத்து இராணுவத் தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்துக்குச் சென்று புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்புக்களைக் கையளித்ததுடன் உத்தியோகபூர்வ வைபவங்களின்போது தனது ஆடையில் சொருகிக்கொள்ளும் வாளையும் வழங்கினார். பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின்போது ஊடகவியலாளர்களுடன் உரையாடிய ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் அபிவிருத்திக்கும் புனரமைப்புக்கும் படையினரின் பூரண பங்களிப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 12ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இப்புதிய நியமனத்தின்படி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரித்தானியாவில் சாதியப் பாகுபாடு விழிப்புணர்வு மாநாடு

Virendra Sharma MPபிரித்தானியாவில் காணப்படும் சாதியப் பாகுபாட்டை அடையாளப்படுத்தம் மாநாடு ஒன்று யூலை 15ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Voice of Dalit International (VODI) என்ற அமைப்பும் Catholic Association for Racial Justice (CARJ) என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டில் ஆபிரிக்க ஆசிய சமூகங்கள் முகம்கொடுக்கும் இனப்பாகுபாடு பற்றியும் பேசப்பட இருக்கின்றது.

ஈலிங் சவுத்தோல் பா உ விரேந்திர சர்மா சிறப்புப் பேச்சாளராக உரையாற்றும் இம்மாநாட்டில் சகல சமயக் குழுக்கள், தேவாலயங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், பொது அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என 70 பேர்வரை கலந்துகொள்கின்றனர்.

National Council of Dalit Christians (NCDC) என்ற இந்தியாவில் உள்ள அமைப்பில் இருந்து வி ஜே ஜோர்ச் சர்வதேசப் பேச்சாளராகக் இம்மாநாட்டில் உரைநிகழ்த்த உள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிய சமூகங்களின் பெருக்கத்துடன் சாதியப்பாகுபாடு சமுகங்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்துவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு இம்மாநாடு பற்றிய தனது அழைப்பிதழில் தெரிவித்து உள்ளது. இச்சாதியப் பாகுபாடு ஒரு பரம்பரையில் இருந்து மற்றைய பரம்பரைக்கு கைமாற்றப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ)  தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.7 வீதம். இவர்களில் 50 000 தொடக்கம் 200 000 பேர் வரையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என Voice of Dalit International (VODI) அமைப்பு தெரிவிக்கின்றது.

‘இதனைச் சிலர் இந்து சமயப் பிரச்சினையாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல’ என்று கூறும் ஈலிங் – சவுத்தொல் பா உ விரேந்திர சர்மா  ‘இஸ்லாம், சீக், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் துணைக் கண்டத்தில் இருந்த வந்திருந்தால் அவர்களது சமூகப் பின்னலில் சாதியமும் பின்னப்பட்டு இருக்கும்’ என்கிறார். சர்மா IANSற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார்.

மேற்கு லண்டனில் உள்ள Voice of Dalit International (VODI) அமைப்பின் அலுவலகத்திற்கு சாதியப் பாகுபாடு பற்றிய 20 குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வாரமும் வருவதாக அவ்வமைப்பின் இயக்குநர் Eugene Culas தெரிவிக்கின்றார். இக்குற்றச்சாட்டுக்கள் திருமணம், தொழில், சேவைகள், கல்வி அகியவை தொடர்பாக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களில் ராம் லஹாக் என்ற கொவன்ரியின் முன்னாள் மேயர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியர் இல்லாத பகுதியில் போட்டியிட நேர்ந்தது. பள்ளியில் இவரது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இவர் தனது கதையை ‘No Escape: Caste Discrimination in the UK. என்ற அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

அனைத்து மக்களும் ஓரணி திரண்டால் இழந்தவற்றை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்

21deva.jpgகடந்த இருபது வருடகால யுத்தத்தால் இழந்துள்ள அனைத்தையும் மீளப் பெற அனைத்து மக்களும் ஓரணி திரண்டால் இலக்கை இலகுவாக எட்டிவிட முடியுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை குடாநாட்டில் வறிய குடும்பங்களை மேம்படுத்தும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளீடுகளை வழங்கும் நிகழ்வு நெடுந்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா;

எமது மக்கள் கேட்கும் முன்பதாகவே உதவிகளைச் செய்து வரும் நாம் எமது மக்களை ஒருபோதும் கையேந்தும் நிலைக்குத் தள்ளமாட்டோம் என்றும் எனினும் தவறான தலைமைத்துவங்களினால் எமது மக்கள் அவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது தான் அந்நிலைமையில் இருந்து எமது மக்களை மீட்டெடுத்து வரும் நிலையில் மீண்டும் அம்மக்களை படுபாதாளத்தில் தள்ளிவிட சில தீய சக்திகள் வேஷம் போட்டுக் கொண்டு மக்கள் முன்வர எத்தணிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் உரையாற்றிய பலரும் நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றியுள்ள சேவைகள் தொடர்பில் பாராட்டிப் பேசினர். நெடுந்தீவின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்ற மேம்பாட்டுத் திட்டங்கள் யாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூவரை மீனவர்கள் மீட்டனர்.

இலங்கையில் இருந்து தோணியில் புறப்பட்டு, நடுக்கடலில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழ் எழுத்தாளர் உட்பட மூவரை மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் அருகில் மூன்று பேர் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த தகவலையடுத்து, கடலோர காவல்படையினர், கப்பல் படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த படையினர் கடற்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் ஐந்தாம் தீடை அருகே தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மூன்று பேரை மீனவர்கள் காப்பாற்றி, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, சுகந்தன், வவுனியாவை சேர்ந்த யோகராஜ் என்பது தெரியவந்தது. அவர்களில் திருநாவுக்கரசு, இலங்கையில் பல தமிழ் நூல்களை எழுதிய, எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.