ஊடகவி யலாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித நோக்கமும் இல்லை என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
தகவல்களைத் அறிந்துகொள்வதற்கு மக்களுக்குரிய சுதந்திரமான வழிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் ஊடகவியலாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து தண்டிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜயந்த கருணாதிலக்க ஊடகங்களுக்குத் தெரிவிததிருந்தார். அவர் தெரிவித்திருந்த கூற்றை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன் அவரது கூற்றில் எவ்வித உன்மையும் இல்லை.
இது தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைக் கொண்டுவரவும் அரசாங்கத்துக்கு உத்தேசம் இல்லை. குறைந்தபட்சமாக இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றையோ அல்லது கலந்துரையாடல் ஒன்றையோ அரசாங்கம் நடத்தவில்லை. நாட்டில் யுத்த நடவடிக்கைகள் இடம்பெற்ற போது ஜனாதிபதிக்கும் ஊடகங்களின் தலைமை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் யுத்த செய்திகளை நியாயமான முறைக்கு பிரசுரிக்க வேண்டுமென மட்டும் வேண்டுகொள் விடுக்கப்பட்டது.
அதைத்தவிர ஊடகங்களை பாதிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.அத்துடன் ஊடகங்களைப் பாதிக்கும் வகையிலான கட்டளைச் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் ஒரு போதும் கருதியதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.