July

July

நாடு முழுவதும் 18 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் – பாராளுமன்றத்தில் நிமல் சிறிபால

sri-cub.jpgஇவ்வருட ஆரம்பம் முதல் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து 18030 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வருடத்திலேயே அதிகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை 190 பேர் டெங்கு நோய் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

டெங்கு நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நாடு பூராகவுமுள்ள சகல வைத்தியசாலைகளிலும் விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு 23 இரத்தப் பரிசோதனை இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் 4035 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதோடு 16 பேர் மரணமடைந்தனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இந்நோய் காரணமாக இறந்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

தன்னை தூக்கிலிட வேண்டும் என்கிறார் கசாப்

இந்தியாவில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு பாகிஸ்தான் ஆயுததாரியான அஜ்மல் கசாப், தான் மரண தண்டனைக்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தன்மீது கருணை காட்டக்கூடாது என்றும், தன்னை தூக்கிலிடவேண்டும் என்றும் நீதிமன்ற விசாரணையின் போது, அஜ்மல் கசாப் நீதிபதியிடம் கூறினார்.

தாக்குதல்களில் பங்கெடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர், தாம் வழிநடத்தப்பட்டவிதம் குறித்த முழுமையான விபரங்களையும் நேற்று வழங்கியுள்ளார்.

மரண தண்டனையை தவிர்ப்பது மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய, பாகிஸ்தானிலுள்ள ஏனைய சூத்திரதாரிகளை பாதுகாப்பதுமான தனது கோரிக்கையை கசாப் கைவிட்டுள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

‘ஆசியான்’ அமைப்பிலிருந்து மியான்மர் நாட்டை வெளியேற்ற வேண்டும் : ஹிலாரி

hillary_clinton.jpgவீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகியை விடுதலை செய்யாவிட்டால் ‘ஆசியான்’ அமைப்பிலிருந்து மியான்மர் நாட்டை வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். தாய்லாந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மியான்மரில் மனித உரிமைகள் நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆங் சாங் சூகியை அமெரிக்கர் ஒருவர் சந்தித்துப் பேசியது தொடர்பான விவகாரத்தில் சூகி மீது மியான்மர் இராணுவ அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இது மியான்மரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆசியான் அமைப்பிலிருந்து மியான்மரை வெளியேற்ற வேண்டும் என்று ஹிலாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிப்பு 7 பேர் கைது;பெருமளவு கஞ்சாவும் மீட்பு

மரக்கறி பயிர்களை உற்பத்தி செய்யும் இடங்களில் கஞ்சா தோட்டங்களை பயிரிட்ட 7 பேரை கைது செய்ததுடன், பெருந்தொகையான கஞ்சாவையும் சூரியவௌ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பேகமுவ காட்டிலே இக்கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 20 இலட்சம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,கஞ்சா பயிரிடுவதற்கென பயன்படுத்தப்பட்ட 3 இலட்சம் ரூபா பெறுமதியான உபரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தலமன்வில,அம்பேகம,பலஹருல காட்டுப்பகுதிகளில் பல இடங்களில் கஞ்சா பயிரிடப்படுவதாகவும் அவற்றை விரைவில் கண்டுபிடித்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சூரிய வௌ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாணக்க சுமண சிறி தெரிவித்தார்.

சொந்த மகள்மீது பாலியல் வல்லுறவு கொண்ட தந்தைக்கு 15 வருட கடூழியச் சிறை : வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

images000.jpgபதினாறு வயது நிரம்பாத தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக இருந்த இவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.  வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில், சட்டமா அதிபரினால் பதினாறு வயதுக்குக் குறைந்த தனது மகள் மீதான பாலியல்வல்லுறவு தொடர்பில் 3 குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி தனது கணவர் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை நேரில் கண்டதாகக் குறிப்பிட்டார். பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து இது தொடர்பான வழக்கு எதிரியான செல்வராஜா சற்குணலிங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது. தனது தந்தை பல தடவைகள் தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாக சிறுமி தெரிவித்தார். எதிரி மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களும் பாலியல்வல்லுறவு தொடர்பானவை.

குற்றச் சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வவுனியா வைத்திய அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்புறுப்பின் உட்பகுதியில் உராய்தல் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் பலவந்தமாக அவர் மீது பாலியல் குற்றம் புரியப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தமது வைத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

விசாரணைகளின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் எதிரிக்கு 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் அபராதமாக அவர் 10 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டு என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்

மடுத்திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களுக்கு…

கத்தோலிக்க மக்களின் புனித தலமாக விளங்கும் மடுமாதா ஆலயத்தின் ஆகஸ்ட் மாத திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.  திருவிழாவுக்கு தனியார் வாகனங்களில் வருகின்ற யாத்திரிகர்கள் தமது அடையாள அட்டைகளின் இலக்கங்கள், பெயர் விபரங்கள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்கள் அடங்கிய பட்டியல் பிரதிகளை எடுத்துவருமாறு ஆலய பரிபாலகர் அறிவித்துள்ளார்.

திருவிழா ஆரம்பதினத்திலிருந்து 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையும் யாத்திரிகர்கள் இரவில் மடுவில் தங்கமுடியாது. இந்நாட்களில் மடு றோட் சந்தியில் இருந்து மடு ஆலயத்துக்கு காலை 6 மணிக்கு பின்னர் யாத்திரிகர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நாட்களில் காலை 11 மணிக்கும் மாலை 4 மணிக்கும் சிறப்புத் திருப்பலிகள் தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும். ஆயினும் 12 ஆம் திகதி புதன்கிழமை முதல் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் மடுவில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நாட்களில் வழமைபோல மாலை 6.30 மணிக்கு வழிபாடுகள் நடைபெறும். இம்முறை மடுவுக்கு வருகின்ற யாத்திரிகர்கள் போதுமான அளவு உணவுப்பொருட்கள், விறகு, தண்ணீரை எடுத்துவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் மதுபானம், ஐஸ்கிறீம், விளையாட்டுப்பொருட்கள் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. ஏற்படக் கூடிய அசௌகரியங்களை நல் மனதுடன் ஏற்று, திருப்பதியில் தங்கியிருக்கும் நாட்களில் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுமாறு யாத்திரிகர்களை வினயமாக கேட்டுக்கொள்வதாக மடு பரிபாலகர் தெரிவித்துள்ளார்.

புகையிரத ஆணைச்சீட்டு பதிவுக் காரியாலயத்தை கல்முனையில் அமைக்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள்

train0000.jpgஅம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையாகவுள்ள புகையிரத ஆணைச்சீட்டை பதிவு செய்யும் காரியாலயத்தை கல்முனையில் அமைத்துத் தருமாறு பெருந்தோட்ட முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீனிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று தசாப்தங்களின் பின்னர் கிழக்க மாகாணத்தில் சுமுகமான நிலைமையொன்று தோன்றியுள்ளதனால் புகையிரதத்தின் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமது பயணத்தை மேற்கொள்வதற்காக ஏனைய புகையிரத நிலையங்களில் நடைமுறையிலுள்ள முன் கூட்டிய ஆசனங்களை பதிவு செய்வதற்காக பொத்துவில்,அக்கரைப்பற்று, நிந்தவூர், அம்பாறை, சம்மாந்துறை மற்றும் கல்முனையைச் சேர்ந்த பயணிகள் மட்டக்களப்பிற்குச் சென்றே ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.மேலும் ஒரு பயணி ஆசனம் ஒன்றை பதிவு செய்வதற்காக 10 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யும் நடவடிக்கையொன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைமுறையிலுள்ளது.இதனால்,திடீரென பயணம் செய்யும் ஒருவரால் இவ்வாறான ஆசனப் பதிவை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான பயணச் சிக்கலிலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பல வருடங்களுக்கு முன் கல்முனையில் இயங்கிவந்த புகையிரத ஆசனத்தை முன் கூட்டியே பதிவு செய்யும் காரியாலயத்தை மீண்டும் இயங்கச் செய்து புகையிரத பயணத்தை சீர்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்.

கிழக்கில் வீதிகள் வெறிச்சோட்டம்

sun.jpg‘சூரிய கிரகணம்’ அச்சம் காரணமாக அம்பாறை மாவ ட்டத்திலுள்ள முக்கிய வீதிகளும், பிரதேசங்களும் நேற்று புதன்கிழமை மு.ப. 8.00 மணிவரை வெறிச் சோடிக் காணப்பட்டன.

மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களின் வரவு குறைவ டைந்திருந்ததாகவும், அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகை கணிசமானளவு வீழ்ச்சி கண்டிருந்ததாகவும் அதிபர்களும், அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அதிகமான பாடசாலைகள் மு.ப. 8.00 மணிக்குப் பின்னரே ஆரம்பமாகின. இருந்த போதிலும் அச்சம் காரணமாக அதிகமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நேற்று பாடசாலைக்கு அனுப்பி வைக்கவில்லை. அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் நேரம் பிந்தி சமுகமளித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

அதிகாலை தொழிலாளர்கள் உரிய நேரத்திற்குப் புறப்படாது வீட்டில் முடங்கியிருந்தனர். வர்த்தக நிலையங்களும், வழமையான நேரத்தை விடவும் பிந்தியே திறக்கப்பட்டன.

கடற்கரையை அண்டி வாழும் மக்கள் அச்சம் காரணமாக ஏற்கனவே இடம் பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தனர். அம்பாறை மாவட்டப் பள்ளிவாசல் களில் சூரிய கிரகணத் தொழுகை நிறைவேற்றப்பட்டதுடன் பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டன.

சார்க் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு 25ஆம் திகதி கொழும்பில்

saarc_colombo_2009.jpgசார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும்.

காலை 9.00 மணிக்கு மாநாடு ஆரம்பமாகவுள்ளதோடு அன்றைய தினம் மாலை சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதன்(கேபி) சனல் 4 தொலைக்காட்சியில்

இன்று 22ம் திகதி மாலை 7மணி (சனல்4) CH4 தொலைக்காட்சியில் புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதனின் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் ஒளி பரப்பப்பட்டது. இதில் தாம் புலிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், இலங்கை அரசு இன்று வரையில் அரசியல்த்தீர்வு யோசனையில் இல்லை என்பதையும்,
தமிழ்மக்கள் தமது சுதந்திர வாழ்விற்காகவே தான் மீண்டும் இந்த அமைப்பை பொறுப்பேற்றுள்ளதாகவும், தமது 1500 பேர்வரையிலான போராளிகள் இன்னமும் இலங்கைக் காடுகளில் இருப்பதாகவும், புலிகளால் மீண்டும் ஒரு இராணுவ தயார்படுத்தலை செய்ய முடியும் என்பதை மறைமுகமாகவும் தெரிவித்தார்.

இன்றய இந்த தனது வெளிப்படுத்தலின் மூலம் புலிகளின் இருப்பை திரு செல்வராசா பத்மநாதன் நிரூபிக்க முயற்ச்சித்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் புலிகள் இயக்கம் இல்லை. இலங்கையில் தமிழர்கள் முகாம்களில் துன்புறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக ஆயுதங்களை வாங்கி புலிகளை பலப்படுத்தியவர் இன்று அந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராகி தாம் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் என CH4 தொலைக்காட்சி தெரிவித்தது.