கத்தோலிக்க மக்களின் புனித தலமாக விளங்கும் மடுமாதா ஆலயத்தின் ஆகஸ்ட் மாத திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. திருவிழாவுக்கு தனியார் வாகனங்களில் வருகின்ற யாத்திரிகர்கள் தமது அடையாள அட்டைகளின் இலக்கங்கள், பெயர் விபரங்கள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்கள் அடங்கிய பட்டியல் பிரதிகளை எடுத்துவருமாறு ஆலய பரிபாலகர் அறிவித்துள்ளார்.
திருவிழா ஆரம்பதினத்திலிருந்து 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையும் யாத்திரிகர்கள் இரவில் மடுவில் தங்கமுடியாது. இந்நாட்களில் மடு றோட் சந்தியில் இருந்து மடு ஆலயத்துக்கு காலை 6 மணிக்கு பின்னர் யாத்திரிகர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நாட்களில் காலை 11 மணிக்கும் மாலை 4 மணிக்கும் சிறப்புத் திருப்பலிகள் தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும். ஆயினும் 12 ஆம் திகதி புதன்கிழமை முதல் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் மடுவில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நாட்களில் வழமைபோல மாலை 6.30 மணிக்கு வழிபாடுகள் நடைபெறும். இம்முறை மடுவுக்கு வருகின்ற யாத்திரிகர்கள் போதுமான அளவு உணவுப்பொருட்கள், விறகு, தண்ணீரை எடுத்துவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் மதுபானம், ஐஸ்கிறீம், விளையாட்டுப்பொருட்கள் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. ஏற்படக் கூடிய அசௌகரியங்களை நல் மனதுடன் ஏற்று, திருப்பதியில் தங்கியிருக்கும் நாட்களில் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுமாறு யாத்திரிகர்களை வினயமாக கேட்டுக்கொள்வதாக மடு பரிபாலகர் தெரிவித்துள்ளார்.