அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையாகவுள்ள புகையிரத ஆணைச்சீட்டை பதிவு செய்யும் காரியாலயத்தை கல்முனையில் அமைத்துத் தருமாறு பெருந்தோட்ட முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீனிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று தசாப்தங்களின் பின்னர் கிழக்க மாகாணத்தில் சுமுகமான நிலைமையொன்று தோன்றியுள்ளதனால் புகையிரதத்தின் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமது பயணத்தை மேற்கொள்வதற்காக ஏனைய புகையிரத நிலையங்களில் நடைமுறையிலுள்ள முன் கூட்டிய ஆசனங்களை பதிவு செய்வதற்காக பொத்துவில்,அக்கரைப்பற்று, நிந்தவூர், அம்பாறை, சம்மாந்துறை மற்றும் கல்முனையைச் சேர்ந்த பயணிகள் மட்டக்களப்பிற்குச் சென்றே ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.மேலும் ஒரு பயணி ஆசனம் ஒன்றை பதிவு செய்வதற்காக 10 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யும் நடவடிக்கையொன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைமுறையிலுள்ளது.இதனால்,திடீரென பயணம் செய்யும் ஒருவரால் இவ்வாறான ஆசனப் பதிவை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது.
இவ்வாறான பயணச் சிக்கலிலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பல வருடங்களுக்கு முன் கல்முனையில் இயங்கிவந்த புகையிரத ஆசனத்தை முன் கூட்டியே பதிவு செய்யும் காரியாலயத்தை மீண்டும் இயங்கச் செய்து புகையிரத பயணத்தை சீர்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்.