அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !
இலங்கையின் வடக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிட்டுவிடு உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன. ஆனால் தமிழகத்தின் பாஜாக தலைவர் அண்ணாமலை அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் வரும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்வதாகக் கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை உடனடியாக நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் அண்ணாமலை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் அத்துமீறும் இந்திய மீனவர்கள், தங்கள் பொருளாதாரத்தை அழிக்கிறார்கள் என்று போராடிய போது அவர்களைக் கண்டுகொள்ளாத பா உ எஸ் சிறிதரன் அத்துமீறிய போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை யாழ் சிறையில் சென்று பார்வையிட்டு அவர்களது நலன்களை விசாரித்து அறிந்தார்.
அத்துமீறி வந்து வடக்கின் மீன்வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களுக்கு அங்குள்ள கட்சிகள் பெரும் ஆதரவை வழங்குகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களைப் பற்றி தமிழ் தேசியக் கட்சிகள் மௌனமாகவே இருந்து வருகின்றன. பாராளுமன்றத்திலோ, மாகாணசபையிலோ, உள்ளுராட்சி சபைகளிலோ பன்மைத்துவ அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததும் அதற்குக் காரணமாக உள்ளது என்கிறார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த். தமிழ் தேசிய அரசியலை சைவ வெள்ளாள மேட்டுக்குடி ஆண்களே பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏனைய சமூகங்களின் வலியை இந்த தமிழ் தேசியவாதிகளால் உணரமுடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கிடையே நேற்று எழுவைதீவு அனலைதீவு கடற்பரப்பில் 200 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் காரைநகர் மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வடக்கிற்கான கேரளா கஞ்ஞா மற்றும் போதைப்பொருட்களின் நுழைவாயிலாக வடக்கு கடற்பரப்பு உள்ளது. இந்திய மீனவர்களே அதனை இலங்கைக்கு கொண்டுவருகின்றனர் என்பதும் தற்போது உறுதியாகி உள்ளது.
வடக்கின் தமிழர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகின்ற போதும் தமிழ் தேசியத் தலைமைகள் இது விடயத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மறுத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழைமை வடக்கு மீனவர்கள் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் தமிழகத்தில் ராமேஸ்வரத்திலும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2024இலிருந்து 535 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
வடக்கு மீனவர்கள் விடயத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். கிளிநொச்சி நீதமன்றமும் தண்டனைகளை அபராதங்களை சற்று கடுமையாக்கி வருகின்றது. தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் மீனவர்கள் விடயத்தில் தனித்துக் குரல் எழுப்பியுள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாகவே உள்ளனர்.
வடக்கு மீனவர்களின் பிரச்சினையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் இந்திய அரசுக்கு அழுத்தங்களை வழங்கி வடக்கு மீனவர்களின் பிரச்சிகைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இது விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் பிரச்சினையை சரியானமுறையில் இனம் கண்டுள்ளார். அவருடைய கூற்றுப்படி தமிழகத்தில் உள்ள அப்பாவி மீனவர்களைப் பயன்படுத்தி தமிழக அரசியல் செல்வாக்குடையவர்களும் பெரும் பணமுதலைகளும் லாபமீட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்திய கடற்படை இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதற்கு முடிவுகட்ட வேண்டும். கேரளா கஞ்சா வடகடற்பரப்பிற்குள் நுழைவதற்கு முடிவு கட்ட வேண்டும்.