05

05

போர்க்குற்ற விசாரணையை புதிய அரசும் நிராகரிப்பு – எம்.ஏ சுமந்திரன்

போர்க்குற்ற விசாரணையை புதிய அரசும் நிராகரிப்பு – எம்.ஏ சுமந்திரன்

போர்க்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். உண்மைகளை மூடி மறைக்க வேண்டும் என்ற தோரணையிலேயே தற்போதைய அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிக்கனமாக பயணிக்கும் என்.பி.பியினர் – அமெரிக்க டொலர்களை திருப்பிக்கொடுத்த அமைச்சர் சரோஜினி !

சிக்கனமாக பயணிக்கும் என்.பி.பியினர் – அமெரிக்க டொலர்களை திருப்பிக்கொடுத்த அமைச்சர் சரோஜினி !

ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW) 90 வது அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார். அவர் அந்த நிதியை ஜெனீவாவில் செலவு செய்யாமல் அப்படியே திருப்பி கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்கான பற்றுச்சீட்டை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியும் ! பிரதமர் ஹரிணி

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியும் ! பிரதமர் ஹரிணி

 

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்யவும் தவறுகளை திருத்திக்கொள்ளவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அரச அதிகாரிகள், மத தலைவர்கள் போன்று நாட்டு மக்களும் முன்வர வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மகளிர் பேரவை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, “நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் நாம் சரியான இடத்தை வந்தடைந்துள்ளோம். பெண்களை பொருளாதாரத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. அதற்கான தடைகளை படிப்படியாக குறைத்து வருகிறோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பெண்கள் தங்கள் வீட்டில் தங்கள் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்கின்ற அதேநேரம் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் பாலர்ண பாடசாலைகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்துவருகிறோம்” என்றார்.

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் மாபியாக்கள் !

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் மாபியாக்கள் !
வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான குறித்த வீட்டின் மீது திடீர் சுற்றிவளைப்பை நேற்று 4ஆம் திகதி  மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகளுடன் அதேபகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் குறித்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !

யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியிலுள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில், களஞ்சியசாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில்  மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர், களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து  இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.  வாள்வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில், இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள வாள்வெட்ட பிரச்சினைகள் பாரிய பேசுபொருளாக மாறியிருந்ததது. மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபாநாயகர் இடைநிறுத்தி, இது ஒரு ஒழுங்கு பிரச்சினை அல்ல ஆகையால் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான பிரேரணையாக கொண்டு வந்து பேசலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சாணக்கியனுக்கு இது தொடர்பில் உரையாடுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையைில், குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் “நாடாளுமன்ற உறுப்பினருக்கு முக்கியமான கேள்விகளை கேட்பதற்கு இடமுண்டு, அதேபோன்று நான் கட்சி தலைவராகவும் இருக்கின்றேன். ஆகவே, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு பொறுப்பு இருக்கின்றது, நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். அங்கு துண்டு துண்டாக மக்கள் வெட்டப்படுகின்றார்கள். அதை இங்கு கூறாமல் எங்கு சென்று கூற முடியும்?
ஆகவே கிழக்கு மாகாணத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்” என அவர் தெரிவித்தார்.
இந்த வாக்குவாதத்தில் பாராளுமன்ற உரைகள் சிறிது நேரம் தடைப்பட்டது. அப்போது மற்றுமொரு பா உ எழுந்து, முன்னர் ஒருவர் தான் கத்திக்கொண்டிருப்பார், இப்போது இருவராகி விட்டனர் என்ற தொனியில்
சிங்களத்தில் பா உ அர்ச்சுனாவையும் சாணக்கியனையும் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக வட்டுக்கோட்டையில் சிலர் சாதிய வெறியர்களாக காடைத்தனங்களிலும் ஈடுபட்டு வருவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. சாதிய வெறியாட்டங்கள், கொலை போன்ற செயற்பாடுகளிலும் குருவி என்கின்ற சாதியக் குழு ஈடுபட்டுள்ளமை பரவலாக அறியப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எழுக்கவில்லை என்றும் பா உ க்களிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நிகழ்நிலை காப்புச்சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தபோது, நாட்டு மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தேர்தல் காலத்தில் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைவாகவே செயற்படுவோம். நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுஜன ஊடகத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுக்களை ஒன்றிணைத்து உப குழு ஒன்றை அமைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை. பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை நாங்கள் முழுமையாக பாதுகாப்போம் என்றார்.

இலங்கையில் தினசரி 45 பேர் பலி ! – தீவிரமடையும் மதுபான பாவனை

இலங்கையில் தினசரி 45 பேர் பலி ! – தீவிரமடையும் மதுபான பாவனை

இலங்கையில் மதுபான பாவனை காரணமாக வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு 40 முதல் 45 பேர் உயிரிழக்கின்றனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பிரதிநிதி எம்.நிதர்சனி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2022ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனைக்காக தினமும் 121 கோடி ரூபா செலவிடப்படுகின்றது, 2022 ஆம் ஆண்டில் மதுபான வரி வருமானம் மற்றும் மதுபான பாவனையால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார செலவீனம் 237 பில்லியன் ரூபாவாகும். 2023ஆம் ஆண்டில் மதுபான வரியை 20 வீதத்தால் அதிகரித்தமையால் நாட்டின் மதுபான வரி வருமானம் 11.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்ததுடன் மதுபான பாவனைகளும் குறைவடைந்தன.

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான மதுபானசாலைகள் உள்ளன. மதுபான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 60 கோடி ரூபா வருமானம் மீட்கின்றனர். பாடசாலைகளுக்கிடையே நடைபெறுகின்ற பிக் மெச் விளையாட்டிலிருந்து மாணவர்கள் மதுபானம் அருந்தப் பழகுகின்றனர் எனவும் எம்.நிதர்சனி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதிகளில் மட்டும் 27 இரகசிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் அண்மையில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் வன்னி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு பாவனையால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்கது. இதேவேளை நேற்றையதினம். யாழ். (Jaffna) நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.

தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !

தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !

தமிழரசுக் கட்சிக்குள் பா உ சிறிதரனும் எம் ஏ சுமந்திரனும் இருக்கும்வரை கட்சி வளர்ச்சியடையாது என தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்கள் என தங்களை முன்நிறுத்தும் ஊடகவியலாளர் நிலாந்தன் மற்றும் பொங்கு தமிழ் கணேசலிங்கம் ஆகியோர் டான் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆய்வாளர் வி சிவலிங்கம் பா உ எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது தானாக கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியிலிருந்து இவ்விருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது. கட்சி தற்போது எம் ஏ சுமந்திரனின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மத்திய குழுவில் சுமந்திரனுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாலும் பா உ சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பா உ சிறிதரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தில் அவர் ஆசனத்தை வென்று எம் ஏ சுமந்திரன் ஆசனத்தை இழந்தார்.

இருந்த போது பா உ சிறிதரனால் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலில் வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் இன்னுமொரு நெருக்கடிநிலை உருவாகும்.

ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பா.உ சிறிதரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாக இருந்தால், முதலில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் 50 சதவீத தொகுதி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு தென்னிலங்கையிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. நாமும் அதனை எதிர்க்கிறோம். மாகாணசபைத் தேர்தல் இவ்வாறானதொரு இழுபறி நிலையில் தான் இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயாரில்லை. அதேபோன்று எமது கட்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. கட்சி உறுப்பினர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இது தாயை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, தாயிடம் உணவு கேட்பதுபோல் உள்ளது. நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல. மாறாக இனவிடுதலையை இலக்காகக்கொண்ட அரசியலாகும். பதவிகளுக்காக அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

தங்களை தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்களாக முன்நிறுத்தும் நிலாந்தனும் பொங்குதமிழ் கணேசலிங்கமும் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளே தமிழ் தேசியம் பலவீனப்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்டினர்.

தேசிய மக்கள் சக்திக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் அச்சமடைந்து தான் தமிழ் தேசியக் கட்சிகள் புதிய கூட்டணிகளை உருவாக்குவதாக நிலாந்தனும் கணேசலிங்கமும் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !

பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !

பாராளுமன்றச் செயற்பாடுகளில், பாராளுமன்ற விவாதங்களில் ஈடுபடுவதில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னணியில் நிற்கின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சி பா உ இரா சாணக்கியன் பாராளுமன்ற செயற்பாட்டில் 27வது இடத்தில் உள்ளார். ஒன்று முதல் 225 வரையான தரவரிசைப்படுத்தலில் தமிழ் தரப்பில் சாணக்கியனே முன்னணியில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பொன்னம்பலம் கஜேந்திர குமார் 41 வது இடத்தில் உள்ளார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா 42வது இடத்தில் உள்ளார். பாராளுமன்றச் செயற்பாடுகளில் விவாதங்களில் பா உ எவ்வாறு வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் என்பதைப் பொறுத்து மந்திர டொட் எல்கே என்ற அமைப்பு இத்தரவரிசையை மேற்கொண்டுள்ளது.

சமூக வலைத் தளங்களில் முன்னிலை வகிக்கும், தமிழ் அரசியலை கலகலப்பாக வைத்திருக்கும் பா உ இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றச் செயற்பாடுகளில் 44வது இடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து 48வது இடத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன் உள்ளார். அவரையடுத்து வன்னிப் தேசிய மக்கள் சக்தி பா உ ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் 54வது இடத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பா உ கவீந்திரன் கோடீஸ்வரன் 55வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 63வது இடத்தில் உள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ கருணானந்தன் இளங்குமரன் பாராளுமன்றச் செயற்பாடுகளில் 79வது இடத்தில் உள்ளார். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பா உ செல்வம் அடைக்கலநாதன் 89வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ் மாவட்ட பா உ சிவஞானம் சிறிதரன் தமிழ் ஊடகங்களால் பேசப்படும் அளவுக்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் தீவிரமாக இல்லை. 113 இடத்திலேயே உள்ளார். 2010 முதல் பாராளுமன்றம் செல்லும் அனுபவமிக்க பா உ பாராளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமானவராகவே உள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவாக பாராளுமன்றச் செயற்பாடுகளில் முன்னிலைக்கு வருவது சற்று கடனமானதே. அவர்களுடைய அரசாங்கமே ஆட்சியில் இருப்பதால் ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் தங்களுடைய கருத்துக்களை வைப்பதில் தயக்கம்கொள்வார்கள். மேலும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்களாகையால் தயக்கமும் மேலோங்கி இருக்கும். மேலும் அமைச்சர்களே ஆளும்கட்சியின் பெரும்பாலான நேரத்தை எடுத்தக்கொள்வதால் சாதாரண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். எதிர்காலத்தில் அவர்கள் இதனைப் புரிந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

இத்தர வரிசையானது வெறுமனே பாராளுமன்றத்தில் உரத்துக் குரல் எழுப்புவது அல்ல. சட்டவாக்கங்களில், கொள்கை வகுப்புகளில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி சட்டங்களையும் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் செழுமைப்படுத்துவது.

கடல்தொழில் அமைச்சர் இராமரிங்கம் சந்திரசேகர் பாராளுமன்ற செயற்பாட்டுத் தரவரிசையில் 122வது இடத்தைப் பிடித்துள்ளார். ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட நீண்ட பாராளுமன்ற அனுபவமுடைய ஐக்கிய மக்கள் சக்தி பா உ மனோ கணேசன் பாராளுமன்ற செயற்பாடுகளில் மந்தநிலையில் 148வது இடத்தில் உள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் 225வது இடத்தில் உள்ளனர். 75 பாராளுமன்ற உறுப்பினர்களை மந்தநிலை உறுப்பினர்களாக மந்திரி.எல்கே என்ற அமைப்பு தரவரிசைப்படுத்தியுள்ளது.