10

10

கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !

கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !

பொலிஸ் கழிப்பறையில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் 39 வயதுடைய கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கு இலங்கையில் அண்மைய காலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களுக்கு பின்னணியிலும் பொலிஸார் செயற்பட்டுவருவதாக கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் தமிழ் எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை பொலிஸ்பிரிவு முழுமையாக கிளீன் சிறீலங்கா திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டு கிளீன் செய்யப்படவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 இலங்கை முன்னேற்றப் பாதையில் – IMF நிர்வாக இயக்குநர் வாழ்த்து

இலங்கை முன்னேற்றப் பாதையில் – IMF நிர்வாக இயக்குநர் வாழ்த்து

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட சந்திப்பு பற்றி அவர் தனது ‘X’ கணக்கில் ஒரு பதிவில் கூறினார்.

முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தனது ‘X’ கணக்கில் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனின் காஷ்மீர் தொழிற்ச்சாலை சர்ச்சையில் சிக்கியது !

முத்தையா முரளிதரனின் காஷ்மீர் தொழிற்ச்சாலை சர்ச்சையில் சிக்கியது !

 

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடத்தி வரும் குளிர்பான நிறுவனத்திற்கு காஷ்மீர் மாநில அரசாங்கம் 25.75 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்துள்ளது. காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் ரூ. 1,500 கோடியில் அலுமினியம் பொட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கைச்சாத்தான ஒப்பந்தமே தற்சமயம் சர்ச்சையாகி உள்ளது. அதாவது முரளிதரனுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விடயத்தை கேள்வியாக எழுப்பி உள்ளன. இந்த கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுபற்றி விவசாயத்துறை மந்திரி ஜாவித் அகமது தார் ‛‛இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இதுபற்றி எங்களிடம் எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்தின் உண்மை தன்மை பற்றி விசாரிக்கிறோம்” என்று சமாளித்துள்ளார். முத்தையா முரளிதரன் இந்தியாவில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகின்றார். கர்நாடகாவில் அரு. 1400 கோடி முதலீடு செய்துள்ளார். இதற்காக கர்நாடக அரசு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 46 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களை அடிக்க தடை !

சிறுவர்களை அடிக்க தடை !

 

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டமூலம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு தொடர்பான விவாத த்தின் போதே இதனை தெரிவித்தார். குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், வன்முறையால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று குழந்தைகள் நம்பினால், அவர்கள் பெரியவர்களானாலும் அதைத் தொடர்வார்கள் என தெரிவித்தார் அமைச்சர். அந்தவகையில் சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டம் சிறுவர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

குழந்தை மற்றும் பிள்ளை வளர்ப்பிலும் சரி மற்றும் கல்வி நிலையங்களிலும் சரி உடல் மற்றும் உள ரீதியான வன்முறையை பிரயோகிப்பதை மேற்குநாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே சட்டரீதியாக தடைசெய்து விட்டன. பெற்றோர் அதிகாரத்துடன் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் கலாச்சாரம் முற்றாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கைவிடப்பட்டு விட்டன. இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு என ஆசிய நாடுகளில் பிள்ளைகளை அடித்து வளர்ப்பது பெற்றோருக்கு இருக்கிற பிரத்தியேக அதிகாரமாக மற்றும் உரிமையாக கருதும் மனப்பாங்கு இருந்து வருகின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் கூட மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பிப்பதாக உடலியில் ரீதியான தண்டனைகளை வழங்குகின்றனர்.

ஆப்பிழுத்த ரணில் – அல்ஜசீரா நேர்காணல் !

ஆப்பிழுத்த ரணில் – அல்ஜசீரா நேர்காணல் !

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்புபட்ட “பட்டலந்த அறிக்கை” குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல உறுதிப்படுத்தி உள்ளார்.

அப்போதைய அரசாங்கம் ஜே.வி. பியின் கிளர்ச்சியின் போது கைதான ஜே.வி.பியினரை தடுத்து வைக்கும் முகாமாக பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தை பயன்படுத்தியது. அங்கு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை மற்றும் படுகொலைகள் இடம்பெற்றன என குற்றம் சாட்டப்பட்டது. 1980களின் பிற்பகுதியிலும் 1990இன் ஆரம்பத்திலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 1994 இல் சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கம் அமைத்த பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையே பட்டலந்த அறிக்கை என அழைக்கப்படுகிறது.

1997 இல் வெளியான ஆணைக்குழுவின் அறிக்கை பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு  அக்காலப்பகுதியில் சிரேஸ்ட அமைச்சராக பணியாற்றிய ரணில்விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்புள்ளது என தெரிவித்திருந்தது. இவ் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாமை தொடர்பிலேயே அல்ஜசீராவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சுனில் வட்டகல மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு (al jazeera) வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும். அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதுவலை ரணில் விக்ரமசிங்க அரசியல் பாதுகாப்பைப் பெற்று தவிர்த்து வந்த அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஹெல்பிங் வீடியோ பணக்காரனான கிருஷ்ணா மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் !

ஹெல்பிங் வீடியோ பணக்காரனான கிருஷ்ணா மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் !

 

உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனலை நடாத்தி வருகின்ற யூரியுப்பர் கிருஷ்ணா என்பவர் நேற்றையதினம் பண்டத்தரிப்பு இளைஞர்களால் இடைமறிக்கப்பட்டார். கிருஷ்ணா இளைஞர்களால் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கப்பட்டார். அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை கொடுக்க முடியாது கிருஷ்ணா, ஏதேதோ சொல்லி சளாப்பினார். இறுதியில் கிருஷ்ணா இளைஞர்களின் முயற்சியில் யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்வதாக கூறப்படுகின்றது.

கிருஷ்ணாவினால் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் காணொளியில் கிருஷ்ணா வீடியோ எடுக்க சம்மதிக்காத உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவி ஒருவரை தரக்குறைவாக விமர்சிக்கிறார். வழமையாகவே கிருஷ்ணா தனது உதவி வழங்கும் காணொளிகளில் தனிப்பட்ட குடும்பங்களின் மற்றும் தனிநபர்களின் அந்தரங்க மற்றும் பிரத்தியேக பிரச்சினைகளை எந்த வித தணிக்கையும் இன்றி வெளிப்படுத்தி வந்தார். இதனை ஏற்கனவே தேசம்நெற் தவிர பெரும்பாலும் யாரும் கண்டிக்கவில்லை.

சமீபத்தில் சர்ச்சையான வீடியோ குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்த விடயத்தில் இப்போதாவது எதிர்வினையாற்றியுள்ளார்கள் என்பது காலம்தாழ்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் வரவேற்றக்கத்தக்கது.

இது ஒரு கிருஷ்ணா என்ற தனிப்பட்ட யுரீயூப்பர் ஒருவருக்கு எதிரான நடவடிக்கையுடன் முடிவடையக் கூடாது. கிருஷ்ணா போன்று இன்னும் பலர்பேர் இத்தகைய காணொளிகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த விடயத்தில் என்பிபி அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சைபர் கிரைம் பிரிவினூடாகவோ அல்லது புதிதாக கொண்டுவரப்பட்ட ஒன்லைன் சட்டத்தின் கீழோ சமூக வலைத்தளங்களுக்காக ஒழுங்கு விதிகளை உருவாக்க வேண்டும். தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் அவதூறுகள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் தணிக்கையை கொண்டு வர வேண்டும்.

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன் 

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன்

 

அனுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அங்கு எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார்.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக தேர்தலை கவனமாக அணுக வேண்டும் . நாமும் அநுர அலையோடு அள்ளுண்டு போக கூடாது. “ நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.” என்றார்.

ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி அவுஸ்ரேலிய பிரதிநிதிக்கு 40 ஆண்டுகள் சிறை !

ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி அவுஸ்ரேலிய பிரதிநிதிக்கு 40 ஆண்டுகள் சிறை !

 

அவுஸ்திரேலியாவில் வேலைக்கு விளம்பரம் போட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட, 40 வயதான பிஜேபி அவுஸ்திரேலிய பிரதிநிதி பாலேஸ்; தன்கருக்கே இச்சிறைத்தண்டனையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விதித்துள்ளது. 21 முதல் 27 வயதான கொரிய நாட்டுப்பெண்களை வேலைக்கான நேர்காணல்களுக்கு அழைத்து அவர்களுக்கு மயக்கமருத்து கொடுத்து அதன்பின் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

2018இல் 5வது பெண்ணை வன்புணர்வு செய்தது தொடர்பில் பொலிஸார் பாலேஸ் தன்கரின் வியாபார மையத்தைச் சோதணையிட்ட போது அங்கு அவர் பெண்களை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்திய மயக்க மருந்து கண்டெடுக்கப்பட்டது. அத்தோடு கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட வீடியோ கமராவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 2023இல் இவர் மீது 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட 29 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் தண்டணை வழங்க்பட்டுள்ளது. இதில் முதல் 30 ஆண்டுகள் இவருக்கு பரோல் மறுக்கப்பட்டும் உள்ளது. இவர் தனது 83வது வயதிலேயே விடுதலை செய்யப்படுவார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு இவ்வாண்டு மே 17, 18, 19 என வெவ்வேறு தினங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. 2009 மே 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்த செய்தியை 2009 மே 24 அன்று அதன் அன்றைய தலைவர் செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் அறிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இச்செய்தியை அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான ரிரின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பி இருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 பில்லியன் டொலர் சொத்துக்களை வைத்திருந்தவர்கள் அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிவந்தவர்கள் , தங்களிடம் உள்ள அசையும் அசையாத சொத்துக்கள் கேள்விக்கு உட்பட்டு விடும் என்பதால் வே பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்ற மாய விம்பத்தைக் கட்டினார்கள். இன்று ஈழத்தமிழ் சமூகத்தில் இருக்கின்ற தொழில் அதிபர்கள் என்று அறியப்படுகின்ற பெரும்பாலானவர்கள் உலகம் முழக்க கோடீஸ்வரர்களானது விடுதலைப் புலிகளின் பணத்தில் தான். இன்றும் தலைவர் வந்து கேட்டால் நாங்கள் கணக்குக் காட்டுவோம் எனச் சிலர் ரீல் விடுகின்றனர். பெரும்பாலனவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவை அன்றே அறிவித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இன்று முப்பதிற்கும் மேற்பட்ட பிளவுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்குள் ஏற்பட்டுள்ளது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நிகழ்ந்த மோசமான தவறாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த புலனாய்வுப் போராளி முல்லை மதி வருமாறு தெரிவிக்கின்றார்: “ப சிதம்பரத்தோடு கதைத்தபோது புலிகளையும் அதன் தலைமையையும் காப்பாற்றியிருக்க முடியும் அதற்கான அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதாகவே சிதம்பரம் சொன்னார். சிவசங்கர் மேனனும் அதையே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்த சிலரும் விடுதலைப்புலிகளை அழித்தே ஆகவேண்டும் என வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி கொள்கை வகுப்பாளர்கள் சிலரும் புலிகளை பரம விரோதிகளாக கருதிய இந்திய உளவுத்துறையின் ஒரு பகுதியினரும் விடுதலைப்புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உருத்திரகுமாரன் போன்றவர்களும் குழப்பியடித்தனர்.

ஒரு படி கீழிறங்கி இனத்தை காப்பாற்ற விடாத சுயகொளரவம் தன்மானம் இறுதியில் நான் நீ என்ற வறட்டு வாதமாகி அழிவில் முடிந்தது என்பதே உண்மை. சோனியாவின் பெயரை அநியாயமாக பயன்படுத்துகிறார்கள். கருணாநிதியை விட சம்மந்தன் என்ற கொடியனே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாட்டை முடக்கி வைத்திருந்தார்” எனக் குற்றம்சாட்டுகின்றார் முல்லை மதி.

 ‘நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் !’ உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் இயக்கப் போராளிக் கூட்டணிக்கு – சங்குக்கு வாக்களிக்க வேண்டும் !

‘நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் !’ உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் இயக்கப் போராளிக் கூட்டணிக்கு – சங்குக்கு வாக்களிக்க வேண்டும் !

வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சங்குச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இயக்கப் போராளிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் அவர்களுடைய வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளராகச் செயற்பட்ட முல்லைமதி தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

நீங்கள் எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் என உரிமைகோர முடியும் என தேசம்நெற் வினவிய போது “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக குமரன் பத்மநாதன் என்ற செல்வராஜா பத்மநாதன் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாங்களே உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை மக்களுக்கு அறிவித்து, தலைமையையும் பொறுப்பேற்றோம். அதன் அடிப்படையில் நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான தலைமை” எனத் தெரிவித்தார். இந்நேர்காணலை இன்று முழுமையாக தேசம் ரியூப்பில் பார்க்கலாம்.

“தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் ஆரம்ப நாட்களில் பல்வேறு தவறுகளை விட்டுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் நாங்கள் எங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் துணிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாங்கள். அதனால், ஆயதங்களைக் கைவிட்ட பின்னும் இந்த ஜனநாயகப் போராட்டத்தையும் எங்களாலேயே முன்னெடுக்க முடியும். மக்களுக்காக ஒரு துளி வியர்வையும் சிந்தாத மதிவாதத் தலைவர்களின் பரம்பரை அரசியல் வாதிகளால் அதனை நேர்மையாகச் செய்ய முடியவில்லை என்பதை இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன், சி வி விக்கினேஸ்வரன், பொன் ஐங்கரநேசன் போன்றோர் காட்டிவிட்டனர். முன்னாள் இயக்கப் போராளிகள் – உங்களுடைய பிள்ளைகள் விட்ட தவறுகளை மன்னித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான முல்லை மதி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாங்கள் மற்றைய போராளிகளின் ஆயதங்களை அன்று களைந்தோம் அதற்கான சூழல் அன்று ஏற்பட்டது இன்று எல்லோரும் ஜனநாயக வழியில் போராடுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் உட்பட்ட முன்னால் இயக்கப் போராளிகளுக்கு ஆதரவளியுங்கள்” என வலியுறுத்தினார் முல்லை மதி.