01

01

காணாமல் போனோர் அறிக்கையும் காணாமல் போய்விட்டது – நளிந்த ஜயதிஸ்ஸ

காணாமல் போனோர் அறிக்கையும் காணாமல் போய்விட்டது – நளிந்த ஜயதிஸ்ஸ

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 14 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பார்கள். ஆணைக்குழு அமைக்கப்பட்டது ஒரு செய்தியாக குறிப்பிடப்படும். ஆனால் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஏதும் வெளிவராது.

2016 ஆம் ஆண்டு முதல் பிரதானமாக 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக 66 மில்லியன் ரூபா செலவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இறுதியில் இந்த குழுவின் அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை.

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கும் 15மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை கிடைக்கவில்லை.அதுவும் காணாமலாக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக மொத்தமாக 530 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுக்கள் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கவில்லை . ஆனால் 2022 மே 09 சம்பவம் தொடர்பில் மாத்திரம் துரிதமாக விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பித்து நட்டஈடும் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

தீவிரமடையும் யாழ் குடிநீர் பிரச்சினை – பாலியாற்றில் வடலி வளர்த்து பதநீர் குடிப்போம் என்கிறார் சீ.வி.கே

தீவிரமடையும் யாழ் குடிநீர் பிரச்சினை – பாலியாற்றில் வடலி வளர்த்து பதநீர் குடிப்போம் என்கிறார் சீ.வி.கே

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர் கடல்நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களால் உரிய விளக்கங்களும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்னமும் குறுகிய காலப்பகுதியில் மிகப் பாரிய அளவிலான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் நிலத்தடி நீர் அப்பகுதி மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை எனவும் பொறியியலாளர் சிவகுமார் அண்மையில் தேசம் நெட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

மேலும் தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தின் மூலம் தண்ணீர் பெறுவது என்பது இஸ்ரேல், அராபியா போன்ற நாடுகளுக்கே பாரிய பணச்செலவை ஏற்படுத்தும் திட்டமாக உள்ளதால் குறித்த நாடுகளே மாற்று வழியை தேடுகின்றன. அத் திட்டம் யாழ்பாணத்தில் வெற்றியளிக்க வாய்ப்பில்லை எனவும் அதற்கு பதிலாக இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே அதிகமாக பூர்த்தியான நிலையில், அரசியல் வறுமையின் வெளிப்பாடாகவே இரணைமடு நீர் யாழுக்கு வர சிரமப்படுகிறது என பொறியியலாளர் சிவகுமார் மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை அண்மையில் பாலியாறு நீர்வழங்கல் திட்டம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் குறிப்பாக நியாயமான சுகாதாரமான நீர் விநியோகத்திற்கு ஏங்கியிருக்கிறார்கள். வட மாகாணசபை, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நீர்விநியோகத்துக்கென வருடம் பூராகவும் கடலைச் சென்றடையும் நீரை திசைதிருப்பும் திட்டமாக பாலியாறு நீர்விநியோகத் திட்டத்தை முன்மொழிந்திருந்தது. எனவே இந்தத் திட்டத்தின் நிறைவேற்றலுக்கான போதிய நிதியை தற்போது பரிசீலிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அதன் துரித நிறைவேற்றத்திற்கான பணிப்புரையை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ்ப்பாண மக்களின் குடி நீர் பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாத கள்ள மௌனம் காத்து வருவதாகவும் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

குட்டி நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுகளும் மரணங்களும் – இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவர் கைது !

குட்டி நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுகளும் மரணங்களும் – இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவர் கைது !

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குருந்துவத்த மற்றும் புபுரஸ்ஸ ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் இருவரும் இலங்கை இராணுவத்தின் பொலிஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அண்மையில் அதிகரித்துள்ள துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்னணியில் இராணுவத்திலிருந்து தபபியோடியவர்களும் கனிசமாக ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வேர்களை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !

அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !

அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலைத் தாருங்கள் அவர்களை விடுவிப்பது பற்றி ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை எப்போது விடுதலை செய்வீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பேசிய சிவஞானம் சிறீதரன், “தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கையின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களின் கண்ணீருடனம் கவலையுடனும் அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றார்கள். தாயை இழந்த நிலையில் தந்தை பல ஆண்டுகளாக சிறையில் இருக்க தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமலே பல பிள்ளைகள் தமது பெற்றோரின் விடுதலைக்காக தவமிருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் இன ஒற்றுமை, மாற்றம் வேண்டிய புதிய சிந்தனை, சுத்தமான இலங்கை உள்ளிட்ட மகுட வாசகங்கள் சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற மகுட வாசக்ததை மனதில் வைத்தாவது பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியற் கைதிளை விடுவிக்குமாறு அவர் தம் உறவுகள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்” என குறிப்பிட்டு, இது தொடர்பில் 4 கேள்விகளை எழுப்பிய பா.உ சிறிதரன், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெயர்களையும் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர், ஒரு வார காலத்திற்குள் இதற்குப் பூரணமான பதிலை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் என உறுதியளித்தார். மேற் குறிப்பிட்ட பெயர்களை இன்றைய தினம் எனக்கு வழங்கினால் நான் விசேட கவனம் செலுத்துவதுடன் இதற்குரிய பதிலையும் வழங்குவேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாளிதன் புலம்பெயர்ந்த கணவனது அரசியல் தஞ்ச வழக்கிற்கு கடிதம் கேட்கச் சென்ற போது அவரை படுக்கையறைக்கு அழைத்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பாதிக்கப்பட்ட பெண்ணை பா உ சிறிதரனின் அலுவலகத்தில் வைத்தே வேழமாளிதன் சீண்டியும் உள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் பா உ சிறிதரனது பெயரையும் பாதிக்கப்பட்ட பெண் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சம்பவங்களால் பா உ சிறிதரன் பாராளுமன்றத்தில் காட்டும் தமிழ் தேசிய முகக்காடு காற்றில் பறக்கின்றது.

 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்

 

பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைவாக புதிய சட்டம் உருவாக்கப்படும் எனவும் எதிர்வரும் தேர்தல் வரை அது இழுத்தடிக்கப்பட மாட்டாது என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.

தற்போது பாதாள உலகத்தவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 17 பேரில் 15 பேர் பாதாள உலகத்தோடு தொடர்பானவர்கள் இருவர் மட்டுமே தமிழர்கள்.

 

2.3: இந்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரங்களிடம் சொல்லி நான் உங்களுக்கு பிச்சை போடுகிறேன் எனப் பாராளுமன்றத்தில் குவினார் அர்ச்சுனா. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காதபடியால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தாகத் தெரிவித்தார் பொன்னம்பலம் கஜேந்திர குமார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனும் இக்கோரிக்கையை வைத்தார். உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முன்னுக்குத் தள்ளுகின்றனர் தமிழ் தேசியவாதிகள்.

 

2.4: இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது, அரசாங்கமானது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என அன்றும் குறிப்பிட்டோம்.இன்றும் அதனையே குறிப்பிடுகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்தடிப்புச் செய்யப்பட மாட்டாது என்றார்.

இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இனிமேல் அனுமதிக்கப்படாது. அதேவேளை, புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

படைகளின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைக்கப்படும் ! ஜனாதிபதி அனுரா; வடக்கு கிழக்கில் காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும் !

படைகளின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைக்கப்படும் ! ஜனாதிபதி அனுரா; வடக்கு கிழக்கில் காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும் !

 

இலங்கை பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும், வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிக்கப்டும், பாதைகள் திறக்கப்படும் என்பதை இவ்வாண்டு முற்பகுதியில் தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது. இதனை ஜனாதிபதி அனுரா உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதிகள் ஊடாக ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின் மூன்றாவது மீளாய்வு அறிக்கையை இன்றைய தினம் குறித்த நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று மாலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். இதனூடாக சாதகமான பிரதிபலன்கள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் ஸ்திரமான பொருளாதாரத்துடன் நாடு பயணிப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடிகள் ஊடாக அதிகாரத்தை கட்டியெழுப்பு நீங்கள் சிந்திப்பதாயின் அது இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு பல காரணங்கள் அடிப்படையாக இருந்தன. பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பது கனவு மாத்திரமே. அது ஒருபோதும் நிறைவேறாது என்றார்.

இதேவேளை, பொருளாதாரம் இப்போது நிலையாக உள்ளது. பயங்கரவாதமும் இனவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவத்தின் பணியாளர்கள் 100,000 ஆகவும், இலங்கை கடற்படை 40,000 ஆகவும், இலங்கை விமானப்படை 18,000 ஆகவும் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரச பணியாளர்களை 50 வீதமாகக் குறைக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்துள்ளது. இந்த அரச பணியாளர்களில் படையினரும் கணிசமான பங்கினர். இலங்கையின் சனத்தொகைக்கு இலங்கையில் உள்ள படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த அடிப்படையில் படைகளை 1,00,000 கக் குறைக்க வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் தேசிய மக்கள் சக்தியாலும் முன்னெடுக்கபடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வருகின்றது. பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் – பொதுத் தேர்தலுக்கு முன் வடக்கு கிழக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும். மேலும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் போது அவர்களுக்கு காணிகளும் அவசியமில்லாமல் போகும். இந்தப் பின்னணியில் இப்போதே காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதையும் பாதைகள் திறக்கப்படுவதையும் காணலாம்.

இது பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பிரித்தானிய போன்ற மேற்குநாடுகள் போல் தேசிய மக்கள் சக்தி அரசும் தன்னுடைய இராணுவத்தை வினைத்திறன் மிக்க இராணுவமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைத்து வினைத்திறன் மிக்க ‘ஸ்மாட்’ படையணிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என பாதுகாப்புச் செயலர் ஓய்வுபெற்ற வைஸ் மார்சல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். டிசம்பர் 28இல் திருகோணமலையில் உள்ள நவல் அன் மரிரைம் அக்கடமியின் அணிவகுப்பை ஏற்று டிசம்பர் 31இல் ஓய்வுபெற்ற இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை கொமான்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

அமெரிக்க ஓவல் ஓபிஸ் நாடகம்: செலன்ஸ்கி – ட்ரம் – மோடி – பிரபாகரன்: காலங்கள் வேறு காட்சிகள் ஒன்று!

அமெரிக்க ஓவல் ஓபிஸ் நாடகம்: செலன்ஸ்கி – ட்ரம் – மோடி – பிரபாகரன்: காலங்கள் வேறு காட்சிகள் ஒன்று!

நேற்று வெள்ளிக் கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்மின் ஓவல் ஓபிஸ், நான்கு சுவர்களினுள் நடக்கும் ராஜதந்திரப் பிணக்கை, ஊடகங்களை வரவழைத்து நிகழ்நேரலையில் பொதுவெளியில் அரங்கேற்றியது. இதுவரை மர்மமாக இருந்த இந்த ராஜதந்நிர குத்துப்பாடுகள் எவ்வாறு நடைபெறும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இது பற்றி கருத்து வெளியிட்ட முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயரின் ஆலோசகரான அலிஸ்ரர் கம்பல், டொனால் ட்ரம்பையும் அவரது துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸையும் காடையர்கள் என வர்ணித்துள்ளார்.

பண முதலைகளும், பலம் கொண்ட காடையர்களும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை ஓவல் ஓபிஸில் நடந்தது சுட்டிக்காட்டுகின்றது. அமெரிக்க ஊடகவியலாளர்கள் சிலரும் ஏன் கோட்சூட் போடவில்லை என்று தங்கள் திமிர்க் கேள்விகளை எழுப்பினர். டொனால் ட்ரமும் ஜே டி வான்சும் உக்ரைன் தலைவரை, பாடசாலைச் சண்டியர்கள் போல் வம்புக்கு இழுத்து கேவலமாக நடந்து கொண்டனர்.

உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி அமெரிக்கா எதிர்பார்த்த 350 பில்லியன் பெறுமதியான அரிய தாதுப்பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததை அடுத்து கடுப்பாகியதையடுத்தே இந்தக் குத்துப்பாடு இடம்பெற்றது.

உக்ரைன் தன்னுடைய உயிர்வாழ்வுக்கு அமெரிக்காவில் தங்கியிருந்த போதும் இந்த இடத்தில் மிகத் தைரியமாக நடந்துகொண்டு, இந்தச் சண்டியர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாமல் ஓவல் ஓபிஸை விட்டுச் சென்றார்.

ஆனால் உலகின் மிகப்பெரிய சனத்தொகையையும் அணுகுண்டுகளையும் கொண்ட பிராந்திய வல்லரசின் பிரதமரான மோடி, டொனால் ட்ரமால் நையப்புடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டார். அப்படிப் பார்க்கின்ற போது மோடியோடு ஒப்பிடுகின்ற போது உக்ரைன் தலைவர் செலன்ஸ்கியின் ஆளுமை பாராட்டப்பட வேண்டியதே.

1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் செலன்ஸ்கியுடைய நிலையிலேயே அன்றிருந்தார். பிரபாகரன் கைது செய்யப்பட்டு உடன்படிக்கைக்கு உடன்பட நிர்ப்பந்திக்கப்பட்டார். வே பிரபாகரன் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட போது நிர்வாணமாக்கப்பட்டு அல்லது அரை நிர்வாணமாக்கப்பட்டு சோதணையிடப்பட்டதாகவும், அப்போது தான் ராஜீவ் காந்திக்கு பாடம் புகட்டுவேன் என சங்கற்பம் பூண்டதாகவும் ஒரு துணைக் கதையுண்டு.

இதேநிலை ஜேஆர் ஜெயவர்த்தனவுக்கும் வந்தது. அன்றைய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே என் டிக்ஸிற் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அன்றைய இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்தினார். அப்போது ஜே என் டிக்ஸிற் தான் ஒரு தூதுவர் என்பதற்கு அப்பால் சென்று ஜே ஆர் ஜெயவர்த்தனாவை மிரட்டியும் உள்ளார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஜே அர் ஜெயவர்த்தனா, “நான் எங்கு கையெழுத்துப் போட வேண்டும்” என்று சத்தமிட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு வற்புறுத்தல்கள், மிரட்டல்களுக்கு மத்தியிலேயே இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்தியாவின் நலன்பேண உருவாக்கப்பட்டது.

அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் நம்பி, புருசனைக் கைவிட்ட நிலையில் செலன்ஸ்கி உள்ளார். டொனால் ட்ரம் சொல்கின்ற ஒரு விடயம் உண்மையானது. செலன்ஸ்கி ஒரு மூன்றாம் உலகமகா யுத்தத்தை பணயம் வைத்து அரசியலை நகரத்துகின்றார். ஆனால் செலன்ஸ்கி அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் இந்த சாட்சிக் காரர்களை நம்பாமல் சண்டைக்காரணான ரஷ்யாவோடு சமாதானமாகப் போவதே தற்போதுள்ள ஒரே மாற்றுவழி. தற்போது உக்ரைன் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்துள்ளது.

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை கூட்டாக இனப்படுகொலை செய்த அமெரிக்க, ஐரோப்பிய தலைமைகள் தற்போது உக்ரைனின் வளங்களை கொள்ளையடிப்பதில் பங்குப் பிரச்சினையில் சிக்கியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய தலைமைகளின் நலன்களுக்காக வசதியற்ற, பலமற்ற நாடுகள் அந்நாட்டு மக்கள் பலியாகின்றனர். காலனித்துவம் நவீன வடிவத்தில் தொடர்கின்றது.