2025

2025

அமெரிக்கா காஸாவை அழிக்கின்றது ! அமெரிக்காவை காட்டுத்தீ அழிக்கின்றது !

அமெரிக்கா காஸாவை அழிக்கின்றது ! அமெரிக்காவை காட்டுத்தீ அழிக்கின்றது !

காசாவின் குழந்தைகளுக்கு, புத்தாண்டு தாக்குதல்கள், உணவு பற்றாக்குறை மற்றும் கடுங்குளிர் காரணமாக அதிக இறப்பு மற்றும் துன்பங்கள் நிகழ்ந்துள்ளது என யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

யுனிசெப் அறிக்கைகளின்படி, 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் காசா பகுதியில் நடந்து வரும் வன்முறையால் குறைந்தது 74 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

குறித்த அறிக்கை, 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இடம்பெயர்ந்து, போதிய மனிதாபிமான உதவியின்றி தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்றனர் என்றும், அங்குக் குடிமுறைக்குரிய ஒழுங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் கூறியுள்ளது.

இத்துயரமான தருணத்தில், உடனடி போர்நிறுத்தம், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுதல் மற்றும் துன்பத்தை போக்க மனிதாபிமான அணுகலை மேம்படுத்துதல் குறித்து வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்ளும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உயிர்களைக் காப்பாற்ற உதவி விநியோகம் முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இஸ்ரேலிய ஹமாஸ் மோதலின் முதல் 9 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களை விட மிகவும் அதிகம் என லான்செட் மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது. நீண்ட ஆய்வுகள் அடிப்படையில் வெளியான குறித்த சஞ்சிகையின் தகவல்களின் படி , 2023 முதல் 2024 ஜூன் இறுதிவரை இஸ்ரேலின் தாக்குதல்களினால் 64260 பேர் கடும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 59.1 வீதமானவர்கள் பெண்கள் சிறுவர்கள் 65வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைகள் தொடர்பில் பெரிதாக உலக நாடுகளின் ஊடகங்கள் அலட்டிக் கொள்ளாத அதேவேளை அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விபரங்கள் உலக பிரபல்யமான ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் ஊடகங்கள் வரை அனைத்திலும் பிரசுரமாகியிருந்தது. அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கே பதறும் ஊடகங்கள் பாலஸ்தீனில் அமெரிக்கா இஸ்ரேலை தூண்டி விட்டு செய்யும் படுகொலைகளை பற்றி பேசத் தயாரில்லை என பல அரசியல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வடக்கில் இராணுவ குறைப்பு செய்வது தவறு – சரத் வீரசேகர ! 

வடக்கில் இராணுவ குறைப்பு செய்வது தவறு – சரத் வீரசேகர !

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தது முதல் தமிழர் பகுதிகளில் இராணுவத் தடைகளை முகாம்களை அகற்றி வருகிறது. மேலும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அட்மிரல் சரத்வீரசேகர , தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுகிறது. தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. இந்த நாடு 30 வருடகால பிரிவினைவாத போராட்டத்தை எதிர்கொண்டது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தான் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த அமைப்பின் நோக்கம் அழியடையவில்லை என தெரிவித்துள்ள சரத் வீரசேகர, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ளவர்கள் இன்றும் உள்ளார்கள்கள். ஆகவே தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே பல்லாயிர இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள். ஆகவே சமஸ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்கி படையினரின் உயிர் தியாகத்தை மலினப்படுத்த இடமளிக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நொதேர்ன் வைத்தியசாலைக் தொற்று நோய்க் கிருமிகள், மலசலக் கழிவுகள் யாழ் திருநெல்வேலி வீதியில் ! தூக்கத்தில் யாழ் அதிகாரிகள் !

நொதேர்ன் வைத்தியசாலைக் தொற்று நோய்க் கிருமிகள், மலசலக் கழிவுகள் யாழ் திருநெல்வேலி வீதியில் ! தூக்கத்தில் யாழ் அதிகாரிகள் !

யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களால் மக்கள் படும் துன்பம் ஒருபுறம் இருக்க கொஞ்சம் கூட சமூக நோக்கு இல்லாமல் தனியார் வைத்தியசாலைகளும் இயங்கி மக்களை சிரமத்துக்குள்ளாக்கி வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் வைத்தியசாலையான நொதேன் வைத்தியசாலை கொஞ்சம் கூட சாதாரண மக்களை பற்றிய சிந்தனையுடன் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே முன்வைக்கபடுகின்றது.

இந் நிலையில் வைத்தியசாலை கழிவுநீர் பொதுமக்கள் பாவிக்கும் பாதைகள் மற்றும் வீடுகளை நோக்கி திருப்பிவிடுவதாக திருநெல்வேலி பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கழிவுநீர் கழிவுகளுடன், தொற்றுநோய் கிருமிகள், மற்றும் மலக்கழிவுகளும் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நொதேன் வைத்தியசாலையின் கட்டடங்கள் மின்னல் வேகத்தில் அயல் காணிகளை ஆக்கிரமித்து வருவதுடன் இந்த கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதிகள் மிக வேகமாக வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சாதாரண மக்கள் கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான அனுமதிகளை பெற மாதக்கணக்கில் – வருடக்கணக்கில், யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை போன்றவற்றில் கடமையாற்றும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் நிலையில், நொதேர்ன் வைத்தியசாலை போன்ற கோடிகளில் பணம் புரளும் நிறுவனங்களுக்கு மட்டும் இலகுவில் கட்டட அனுமதிகள் கிடைப்பது அரச அதிகாரிகள் விலைபோயுள்ளதை தெளிவாக காட்டுகிறது. இந்த நிலையை அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனும் குறிப்பிட்டிருந்தார். சாதாரண மக்கள் அரச அலுவலகங்களுக்கு சென்றால் சேவையை பெற பல மாதங்களாகின்ற நிலையில் பணம் படைத்தவர்கள் இலகுவாக தங்கள் வேலைகளை அரச அலுவலகங்களில் செய்து முடிக்கிறார்கள் என ஆளுநர் வேதநாயகன் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

15 ஆண்டுகள் கன்னிகளியாத 500 உழவு இயந்திரங்கள் – வடமாகாண அதிகாரிகளின் சோம்பேறித்தனம் !

15 ஆண்டுகள் கன்னிகளியாத 500 உழவு இயந்திரங்கள் – வடமாகாண அதிகாரிகளின் சோம்பேறித்தனம் !

 

இந்திய அரசின் நன்கொடையின் கீழ் வழங்கப்பட்ட சுமார் ஐநூறுக்கும் அதிகமான உழவு இயந்திரங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பயன்பாடுகளும் இன்றி விவசாய சேவை மையங்களில் காணப்படும் நிலையில், விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அதனை வழங்கி வைக்குமாறு வடக்கு மாகாண விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

விவசாயிகள் இலவசமாக அல்லது தவணை அடிப்படையில் குறித்த உழவு இயந்திரங்களை கோரி வருகின்ற போதும் கூட அரசாங்க அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபை இயங்கிய காலத்தில் விவசாயத்துறை அமைச்சு பொன் ஐங்கரநேசனிடமே இருந்தது. அவர் இது தொடர்பில் அப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

அண்மைய தரவுகளின் படி, முறையாகப் பயன்படுத்தப்படாமலும் பராமரிக்கப்படாமலும் குறித்த உழவு இயந்திரங்களின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. மதிப்புக் குறைப்பு மற்றும் கைவிடப்பட்ட அரசாங்க சொத்துக்களுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி விவசாய அமைப்புக்களால் எழுப்பப்பட்டுள்ள நிலையில், கொடுக்கப்பட்ட டிராக்டர்களின் உரிமை மாகாண சபையால் விவசாய சேவை மையங்களுக்கு மாற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி விவசாய சேவை மையங்களால் நடத்தப்பட்ட ஏலம் உரிமை முறையாக மாற்றப்படவில்லை எனவும் விவசாய சேவைக் குழுக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகளுக்கு நன்கொடை அளிக்கவோ அல்லது விற்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடும் விவசாய அமைப்புகள், இப்பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க கௌரவ ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் 52 கமநல சேவை நிலையத்தில் மட்டும் எந்த பழுதும் இல்லாமல் பயன்படுத்தாமல் வருடக்கணக்காக கிடந்து உக்கும் ஐநூறு உழவு இயந்திரங்களையும் ஒன்றில் பயன்படுத்த வேண்டும் இல்லையேல் விற்பனை செய்து விட்டு பணத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். பாராமுகமாக விடுவதற்க்கான காரணம் என்ன எனவும் விவசாய அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

அமைச்சர்களின் 50 ஆடம்பர குடியிருப்புக்கள் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

அமைச்சர்களின் 50 ஆடம்பர குடியிருப்புக்கள் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

 

அமைச்சரவை அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 50 ஆடம்பர உத்தியோகபூர்வ குடியிருப்புகளை, அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வகையிலான திட்டங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரச கட்டிடங்களில்  இடப்பற்றாக்குறை காரணமாக புதிய வளாகங்களைக் கோரியுள்ளதால், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு இந்த குடியிருப்புகளில் ஒன்று ஒதுக்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த குடியிருப்புகளுக்கு ஏற்கனவே அதிக அளவு பொது நிதி செலவிடப்பட்டுள்ளது. எனவே அவை மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் அதிகப்படியான சலுகைகளை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர் விஜேபால, அரசியல்வாதிகளுக்கான வாகன அனுமதிகளை அரசாங்கம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது. இதற்கிடையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமது  அரசாங்கத்தில் எந்த அமைச்சரும் ஆடம்பர குடியிருப்புகளை பயன்படுத்த மாட்டார்கள் என ஆட்சியமைப்பதற்கு முன்பே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் – தொழில்துறையை வளர்ப்பதன் மூலம் இளைஞர்கள் வெளியேற்றத்தை தடுப்போம் என்கிறார் பா.உ இளங்குமரன்!

 

வடக்கில் நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில் உருவாக்கப்படும்  என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன். நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பா.உ இளங்குமரன், “கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம். நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.தற்போது பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் நாட்டின் பொருளாதார பின்னடைவும் கிராமிய வறுமையுமே காரணம்.  நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும். என தெரிவித்தார்.

மேலும் பேசிய பா.உ இளங்குமரன், தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும். தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.

எதிர்காலத்தில் வடக்கில் மூன்று மத்திய பொருளாதார நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், பரந்தன் – ஆனையிறவை மையப்படுத்திய இடத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும், பலாலியில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இங்கேயே தொழில்துறையை உருவாக்கி, இங்கேயே உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம். கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது. ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !

யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாள் ஒன்றுடன் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினரிடையே அடுத்தடுத்து போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம் என்பன மிக வேகமாக தலைதூக்கி வருவதுடன் ஒரு அச்சமான ஓர் சூழல் உருவாகி வருகிறது. யாழ்ப்பாண வாள்வெட்டு பிரச்சினைகள் தொடங்கி போதைப்பொருள் பாவனை தொடர்பான வழக்குகள் வரை அனைத்திலும் அதிகமாக இளைஞர்களே கைதாகின்றமை எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை பலரிடமும் ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழையும் இலங்கையர்களால் பெரும் நெருக்கடி – இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் விசனம் !

சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழையும் இலங்கையர்களால் பெரும் நெருக்கடி – இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் விசனம் !

 

இலங்கையர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைவதால் தமது அரசாங்கத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவி (Damiano Francovigt) நீர்கொழும்பில் உள்ள டொன் போஸ்கோ ஆன்மீக நிறுவனத்திற்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கைக்கான இத்தாலிய தூதுவர், மொழி மற்றும் தொழில்முறை அறிவுடன் இத்தாலிக்கு வந்து தொழில் பெறுவதன் மூலம், இலங்கையர்களை பாதுகாக்கப்படுவதற்கும் நேரடியாக வேலை வாய்ப்புகளை தேடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என  குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் தாபோன் நகர சபையின் ஆளுநர் ரவேந்தா ஜெகநாதனின் தலையீட்டால், டொன் போஸ்கோ நிறுவனத்தில் தற்போது மூன்று துறைகளில் பயிற்சி பெற்று வரும் தொழிலாளர்கள் குழுவை முதல் முறையாக இத்தாலிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் இதன்மூலம் அந்நிய செலவணியாக டொலரை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும் என தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் தொழில் துறைகள் ஆக்கிரமிக்கும் வேறு மாகாண பட்டதாரிகள் – ஆளுநர் வேதநாயகன் !

வடக்கு மாகாணத்தின் தொழில் துறைகள் ஆக்கிரமிக்கும் வேறு மாகாண பட்டதாரிகள் – ஆளுநர் வேதநாயகன் !

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்ததாகவும் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைக்கின்றது.  அதனைச் சரிவர இளைஞர்கள் பயன்படுத்தவேண்டும்.  அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை என்றும் இவை தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பட்டதாரிகள்  தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கோரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஆளுநர் வேதநாயகனின் பல்கலைக்கழக கல்வி தொடர்பான கருத்துக்களை  சற்று ஆழமாக வடக்கு மாகாண பட்டதாரிகளும் – மாணவர்களும் சிந்திக்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ,   கணினி மற்றும் விஞ்ஞான துறைகளை சேர்ந்த மாணவர்கள் இலகுவாக தொழில் வாய்ப்புகளை பெறுகின்ற போதும் கூட கலைப்பாடங்களை தெரிவு செய்த மாணவர்கள் சுமார் 5 தொடங்கி 10 ஆண்டுகள் வரை வேலை ஒன்றுக்காக காத்துக்கொண்டு இருக்கும் சூழலே காணப்படுகின்றது. பல்கலைக்கழக தெரிவின் போது கலைப்பிரிவிலும் சில பாடங்கள் தொழில்சந்தை வாய்ப்பை கொண்டுள்ள போதும் கூட தமிழ் மாணவர்கள் இந்து நாகரிகம், வரலாறு, கிறிஸ்தவ நாகரிகம், புவியியல், நடனம், நாகம் ஆகிய பாடங்களையே தெரிவு செய்கின்ற போக்கு தொடர்கிறது.

மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு  தொழிற்சந்தைக்கு ஏற்றது போன்றதான கணினி அறிவு , ஆங்கில அறிவு  நவீன தொழில்நுட்பங்களை கையாளும் திறன்கள் கூட விருத்தி செய்யப்படாமலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளியேறுவதாக கல்வியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு தேசம் திரை நேர்காணலில் பங்குபற்றிய ஜேர்மன் டெக் அதிபர் தர்மநாதன் பல கோடி ரூபாய்கள் பெறுமதிமிக்க இயங்கும் கிளிநொச்சி ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் நாற்பது வீதம் கூட யாழ்ப்பாண, கிளிநொச்சி மாணவர்கள் கற்க வருவது கிடையாது. வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்தே மாணவர்கள் அதிகமாக வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் தென்னிலங்கை பாடசாலைகளில் இன்னமும் செயற்பாட்டு நிலையில் உள்ள தொழில்துறை பாடங்களை உள்ளடக்கிய பதின்மூன்று வருட உத்தரவாத கல்வி செயற்திட்டம் கூட வடக்கு மாகாண பாடசாலைகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை கல்வியை தொடர முடியாமல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூலிவேலைக்காக செல்லும் அபத்தமான சூழல் வடக்கின் பொறுப்பற்ற – தொழில்துறை பற்றிய அறிவற்ற ஆசிரியர்களாலும் , பல்கலைக்கழக விரிவுரையாளர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனான கடன் ஒப்பந்தத்தில் புதிய அரசாங்க வேலைவாய்ப்பு நியமனங்களை கட்டுப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் புதிய பட்டதாரி நியமனங்கள் எதுவுமே தற்போதைக்கு சாத்தியமில்லை என கூறப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையிலேயே தொழில்சந்தை வாய்ப்பில்லாத பாடங்களை தெரிவு செய்ய வேண்டாம் என ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/share/p/1BaoTiALrb/

நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை – மூவரை பணி நீக்கம் செய்த சபாநாயகர் !

நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை – மூவரை பணி நீக்கம் செய்த சபாநாயகர் !

அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் பணி புரியும் பெண் உறுப்பினர்களுக்கு பாலியல் தொல்லை வழங்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து உரையாற்றியதுடன் சபாநாயகர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பெண் பணியாளர்களுக்கு தவறான முறையில் தொல்லை கொடுத்த மூவரை பணிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மூவரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் குறித்த பெண் பணியாளர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழு விசாரணைகளின் போது, நாடாளுமன்றத்தின் 15 ஊழியர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே சபாநாயகர், குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் பணிநீக்கம் செய்துள்ளார்.

கடந்த காலங்களை விட அண்மைய காலங்களில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த குற்றங்கள் 20 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் பாராளுமன்றம் எனும் நாட்டின் உயரிய பீடம் ஒன்றில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் சர்வசாதாரணமாக நடைபெற்றிருந்தது பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. இந்த நிலை இலங்கையின் அரச அலுவலகங்கள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை நீடிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.