2010

2010

இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!

Vasudeva Nanayakaraஇரத்தின புரியில் உள்ள நிவித்திகல குக்குலெகம தோட்டத்திலிருந்து தாக்குதல் அச்சம் காரணமாக வெளியேறியுள்ள மக்கள் இன்னமும் தங்களின் இடங்களுக்குச் செல்லாமல் நண்பர்கள் உறவினர் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மக்கள் தற்போது எங்கிருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை எனவும் அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தால் அவர்களுக்கான நிவாரணத்தைப பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அச்சம் காரணமாக வெளியெறியுள்ள இம்மக்கள் தமது அலுவலகத்துடனோ, அல்லது தமது தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டால் அவர்களுக்கான நிவாரண உதவிகளை மேற்nகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் குக்குலெகம தோட்டத்தில் சிங்கள காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து சில சிங்களவர்கள் இரவு வேளையில் தமிழர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் வீடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் உட்பட அவர்களின் அனைத்து ஆவணங்களையும் தீக்கிரையாக்கினர். இதனையடுத்து தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தேயிலைச் செடிகளுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் மறைந்திருந்து விட்டு விடிந்ததும் உறவினர், நண்பர்கள் விடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.

இது இவ்வாறிருக்க மலையக அரசியல்வாதிகள் இச்சம்பவம் குறித்தும், இம்மக்களின் பாதுகாப்பு குறித்தும் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எவையும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இரத்தினபுரி தோட்டமொன்றில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர்.

Ratnapuri_Map_of_SLஇரத்தினபுரி தோட்டமொன்றில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தினால் இடம்பெயர்ந்தனர். இரத்தினபுரி தோட்டம் ஒன்றில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நிவித்திகல பொலிஸ் பிரிவிலுள்ள குக்குலகல தோட்டத்தைச்சேர்ந்த சிங்கள தோட்டக் காவல் தொழிலாளி ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போய் பின்னர் அவர் சடலமாக மீட்க்கப்பட்டதையடுத்து சிலரால் அப்பகுதியிலுள்ள இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலுள்ள பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இத்தோட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து இரு பிரிவினருக்கிடையில் சில இடங்களில் கைகலப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் அனைவரும் பருவ மழைக்கு முன்னர் மீள்குடியமர்த்தப்படுவர் என அரசாங்கம் அறிவிப்பு.

milroy_fernando.bmpபருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் தொகை தற்போது 25 ஆயிரம் மட்டுமே எனவும் இவர்கள் அனைவரும் வெடிபொருட்கள் அகற்றப்பட்டவுடன் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். பருவமழைக்கு முன்பு இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னர் வடபகுதியின் அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழனின் இன்றைய யதார்த்தம்! : வாசுதேவன்

Students_Mannarதமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் இன்று குழிதோண்டிப் புதைத்துவிடப்பட்டுள்ளது. ஆனால் புலம்பெயர் மன்ணில் உள்ள எச்ச சொச்ச தேசிய படை வீரர்கள் கறுப்பு சிவப்பு என்று தற்போது தமக்குள் மோத வெளிக்கிட்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் இருப்பை காக்க என்று தொடங்கிய போராட்டம் இன்று தமிழ் மக்களின் அரசியலை நிர்வாணமாக்கி அவர்களை நட்டாற்றில் விட்டுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மாற்றிய அனைவரும் புலிகளின் அராஜகத்தால் அழித்தொழிக்கப்பட மிஞ்சிய புலிகளும் அரசினால் அழித்தொழிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அவர்களுக்கு இருந்த உரிமைகளையும் பறிகொடுப்பதற்கே வழி வகுத்தது. தமிழ் பேசும் மக்களிற்கு குறைந்தபட்சம் கிடைக்க இருந்த பல தீர்வுகள் இந்த போராட்டத்தல் நிராகரிக்கப்பட்டு இன்று தருவது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் தமிழ் மக்கள் உள்ளனர்.

இந்த போராட்டத்தினால் இன்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் சொல்லில் அடங்காது. பட்டினிக் கொடுமைகளை காணத வடக்கு கிழக்கில் இன்று பலர் பட்டினிக் கொடுமையால் தங்கள் குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்க்கும் கட்டத்தில் உள்ளனர்! வேலையற்ற எந்த வித தொழில் பயிற்சியுமற்ற மற்றவர்கள் தருவதை எதிர்பார்க்கும் ஒரு சமூகத்தை இந்த போராட்டம் தோற்றுவித்துள்ளது. எண்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இன்று தமது எதிர்காலத்தை வெறும் சூனியத்துடன் எதிர் நோக்கியுள்ளனர். வீதியோரங்களில் தம் வீடுகளை இழந்த சமூகம் ஒன்று வெறும் கொட்டில்களை போட்டு முற்றாக  நம்பிக்கையிழந்த நிலையில் ஏதோ வாழ வேண்டும் என்று தம் வாழ்கையை தொடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் அற்ற தம் வாழ்க்கைகளை அன்னியர்களுடன் வாழத் தொடங்குகிறார்கள். விடுதலைத் தீயினில் சங்கமிக்க வாருங்கள் என்று அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் சிறைகளில் தம் இருண்ட எதிர்காலத்தை உறுத்துப்பார்த்தபடி விரக்தியுடன் காலத்தை ஓட்டுகின்றனர். இவர்களின் பலர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு யுத்த களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். 

IDP_Camp_Injured_Manஆனால் புலத்திலோ கறுப்பு சிவப்பு பச்சை என்று பல்வேறு கூட்டங்கள் தங்கள் இருப்பை காக்க தங்களுக்குள் மோதிக்கொண்டு ஆளுக்காள் சேற்றை வாரியடித்துக் கொண்டுள்னர். யுத்த காலத்தில் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரைச்சதம் கொடுப்பதற்கு ஆயிரம் கதை கூறுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு தான் எனவே சிறீலங்கா அரசு செய்யட்டும் என்று புறந்தள்ளி விட்டு தங்கள் குழந்தை செல்வங்களின் முதல் மாதவிடாய்க்கு 5 நட்சத்திர விடுதியில் விழா எடுக்கிறது புலம்பெயர் சமூகம்! ஆயிரக்கணக்கில் அகதிகள் அனாதைகள் விதவைகள் அடுத்த வேளை உணவிற்கு அல்லலுறுகையில் மாதமொரு ஆண்டு விழா வாரமொரு அரங்கேற்றம் நாளுக்கொரு பிறந்தநாளுடன் இருக்கின்ற சுபதினங்களில் கல்யாணம் கச்சேரியில் வயிறுபுடைக்க உண்டுவிட்டு தலைவர் நடுக்கடலிலை சுத்துறார் ஒரு நாளைக்கு வெளியிலை வருவார் என்று ஏப்பக்கதைகள் கதைக்கிறார்கள். இவர்கள் உண்ணாத உணவுகளை கறுத்தப்பைகளில் சேர்க்க கோட்டு சூட்டுடன் வாடகைக்கு அமர்த்தப்படும் வெள்ளைக்காரர்கள்.

ஒவ்வொரு ஈழப்போரிற்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் புலிக்கு பணம் சேர்த்த பண முதலைகளின் இருப்பை காக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள். போரில் வெற்றி வந்தால் கொண்டாடும் இந்த சமூகம் தோல்விக்கு இன்று ஒருவரை தேடி அவரை துரோகி என முத்திரை குத்துவதில் காலத்தை ஓட்டுகின்றனர். தற்போது இந்த துரோகிகள் பட்டியல் மைல் கணக்கில் நீண்டுகொண்டு முடிவற்று செல்கிறது. அதிலும் பதவிகள் துரோகி மேஜர் ஜெனரல், துரோகி லெப்டினட் கேணல் என்று. ஆனால் இந்த பட்டியலில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் மட்டும் வரவே வராது! ஏனெனில் அவர் இப்போது எம்மோடு இல்லை. குறைந்தபட்சம் புலிகளின் தோல்வியை கூட சுதந்திரமாக சுயவிமர்சம் செய்யத் தயங்கும் இவர்கள் இன்னமும் புலிகள் வளர்த்த புழுத்துப்போன கலாச்சாரத்தில் நின்று சுற்றி சுற்றி வருகிறார்கள் ‘அவர் வருவார், வந்து ஒரு பதில் தருவார்’ என்று கனவுலகில் சஞ்சரிக்கும் இவர்கள் தற்போது நாடுகடந்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்.

தாயகத்தில் அரசிற்கும் புலிகளிற்கும் இடையில் சிக்கி சின்னாபின்மாகிப் போன மக்களை யாரும் கவனிக்க தயாராக இல்லை! சிறு சிறு குழுக்களாக ஒரு சிலர் இன்று பல்வேறு உதவிகளை செய்த போதும் இது தேவைப்படும் உதவிகளில் ஒரு கடுகளவே! உதவிகள் என்பது வெறும் பணம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. உளவியல் ரீதியாக இன்று பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களிற்கு பல்வேறு தேவைகள் இன்று உள்ளன. பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்கள் தம் மன அழுத்தங்களால் இன்று மனநோயாளிகளாக மாறி வருகின்றனர். யுத்தம், இரத்தம், சதைத் துண்டங்கள் போன்ற அவலங்களை பார்த்த குழந்தைகள் மூர்க்கதனமான பழக்க வளக்கங்களை சாதரணமாக செய்கிறார்கள். தன்னுடன் படிக்கும் சக மாணவனை கல்லால் அடித்து விட்டு ரத்தம் ஒழுகுவதை பார்த்து ரசிக்கும் கூரூர மனப்பாங்கில் உள்ள பல குழந்தைகளை இன்று ஆசிரியர்கள்  எதிர்நோக்க வேண்டியுள்ளது. தன் கண்முன்னே கொல்லப்பட கணவனை அரை குறையாக புதைத்து விட்டு ஓடிய மனைவியின் மன அவலங்கள் இன்னும் அவர்களின் மனதில் ஒட்டியுள்ளது. இந்த மன உளைச்சலுடன் வெளியல் வந்து தம் வாழ்வை தொடங்க முயல்கையில் ‘முண்டச்சி முழிவியளத்திற்கு வந்திட்டுதுகள்!’, ‘தாலியறுந்ததுகள் வீடுகளுக்கை இருக்காமல், எங்கடை உயிரை எடுக்குதுகள்’ என்று வசைவாங்கியே தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

IDP_Camp_Barbed_Wireஇதற்கும் மேல் இடம்பெயர்ந்து வந்த ஒரு புதுச்சாதி யாழ் குடாவில் உள்ளது. இவர்களை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக அங்கு வசித்து வருபவர்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர். காரணம் இவர்கள் என்ன சாதியென்று தெரியாதாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த இந்த மக்கள் புலிகள் அல்லது புலிகளின் ஆதவராளர்கள். எனவே இவர்களுக்கு தொழில் கொடுக்க பயப்படுவதுடன் இவர்களை ஒரு கள்வர்களை போல பார்க்கிறர்கள். சந்திக்கு சந்தி நின்று பெண்களுடன் சேட்டை பண்ணும் இன்னுமொரு கூட்டம் மாலையானதும் மதுவில் மயங்குகிறார்கள். மாலை மயக்கதில் வீடுகளை பூட்ட மறந்தால் முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இரத்தம் கண்ட பின்னே அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு சென்று விடுவார்கள்.

இன்று யாழ் குடாவில் தற்போது பல வீதிகள் செப்பனிடும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இதற்கு கூட தெற்கில் இருந்து தான் ஆட்களை கெண்டு வரவேண்டியுள்ளது. காரணம் பலருக்கு இந்த வேலைகள் பிடிப்பில்லை. அத்துடன் ஒரு சிலருக்கே இந்த தொழில் தெரிந்திருக்கிறது. மேசன் வேலை செய்ய ஆட்கள் இல்லை. தச்சுத் தொழில் செய்ய வவுனியாவிலிருந்து ஆட்களை கொண்டு வரவேண்டியுள்ளது. இதற்கு காரணம் புலம்பெயர் நாட்டில் இருக்கும் நம்மவர்கள் அனுப்பும் பணமா அல்லது சோம்பலா அல்லது தொழில் சார் அறிவீனமா? புரியவில்லை. ஒரு சிறு வேலையை கூட சுயமாக சிந்திக்க தெரியாத ஒரு சமூகமாக உருவாகியுள்ள சமூகத்தில் இன்று ஓரளவு படித்து வேலை செய்பவர்கள் வெளிநாடு போவதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.

அரசு கவனிக்கவில்லை அரசு புறந்தள்ளுகிறது என்று சோம்பேறித்தனமாக சாட்டுச் சொல்பவர்கள் மத்தியல் ஒரு சிறுபான்மையானவர்கள் கடும் வேலைசெய்து முன்னேற முனைவது ஒரு சிறு ஆறுதலாக உள்ளது. வெளிநாட்டில் உறவினர்கள் ஏதுமற்ற குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அண்மையில் தன் தாயாரிற்கு 7 லட்சம் செலவு செய்து இருதய சத்திரசிகிச்சை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் யாழ் குடாவில் படித்து அங்கேயே தங்கி வேலை செய்பவர்கள். அரச வேலை செய்யும் அதே நேரம் ஒரு சிறு வியாபார நிறுவனத்தை நடாத்தி அதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கி இந்த மருத்துவ சிகிச்சைக்கு யாரிடமும் கை நீட்டாது தங்களின் தாயாரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இவர்கள் ஒன்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. தாயார் தையல் தொழில் தந்தையார் மரக்கறி வியாபாரி. இவர்களும் மற்றவர்கள் போல் யாழ் குடாவில் பல்வேறு சமயங்களில் இடம் பெயர்ந்தவர்கள். சொந்த காணி கூட இல்லாது வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள். தங்கள் விடா முயற்றியால் இன்று சொந்தமாக ஒரு காணி வாங்கி வீடு கட்டி வருகிறார்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  என்பதை இவர்கள் நிருபித்துள்ளார்கள். 

தாயகப்பிரதேசம் வடக்கு கிழக்கு அது இணைந்தே தீர்வே தீர்வு என அகங்காரமாக வந்த தீர்வுகளையெல்லாம் தூக்கியெறிந்த ஆளப்பிறந்த இனம் என கொக்கரித்த தமிழ் தேசியப்பற்றாளர்கள்  இன்று ஆட்டம் கண்டு என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறார்கள். ஆள ஒரு துண்டு நிலம் கொடுத்தாலும் ஆட்சி செய்ய மன்னன் அற்ற நிலைதான் இன்று. இதன் வண்ட வாளங்களை இன்று வவுனியா நகரசபை நிர்வாகங்களில் நன்கே காண முடிகிறது. நகர சபைகளை கூட இயக்க தகுதியற்றவர்கள் மாகாண சபையை எப்படி நிர்வாகிக்க போகிறார்கள்? இது அவர்களின் தவறல்ல. தொழில் சார் அறிவு முகாமைத்துவ அனுபவம் தனிமனித தலைமைத்துவ பண்புகளற்ற ஒரு சமூகத்தை தான் இந்த போர் படைத்துள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் சிந்திக்க வேண்டிய காலம்.

Murukandi_Kovilஅண்மையில் பேராசியர் ராஜன் கூல் நாடு திரும்ப முன் சந்தித்த சந்திப்பில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட்ட விடயம் நிரந்தரமாக நாடுதிரும்ப முடியாத அறிஞர்கள் விடுமுறையிலாவது அங்கு சென்று தம் அறிவுசார் அனுபவங்களை அங்குள்ள துறைசார்ந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது.

Nallur_Thiruvillaசிறுதுளி பெரு வெள்ளம் போல் இன்று தோன்றிய இந்த சிறு மாற்றங்கள் தொடரும் பட்சத்தில் மீண்டும் வடக்கு கிழக்கில் ஒரு மாற்றும் உருவாகும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. ஆனால் இன்று பல்வேறு திசைகளில் பயணிக்க தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக குறைந்த பட்சம் அந்த மக்களின் வாழ்விற்காகவவது ஒன்றுபடுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! 

கரடியனாறு வெடி விபத்து; உருக்குலைந்த சடலத்தின் பாகங்களை மரபணு சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு

உருக்குலைந்த சடலமொன்றின் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யிலிருந்து மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் உருக்குலைந்த சடலங்கள் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்விரண்டு உருக்குலைந்த சடலங் களில் ஒரு சடலம் ஞாயிற்றுக்கிழமை யன்று அடையாளம் காணப்பட்டது.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த கண்டி, தெல்தெனிய கொமடதின எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தலால் என்பவரின் சடலமென அடையாளம் காணப்பட்டது.

இதன் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் சின்னய்யா மேற்கொண்டார். இதையடுத்து இச்சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட் டது.

”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன” ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

Wanni_War_Mullivaykkal”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன. இறுதிக்கட்டப் போரில் படையினர் தடைசெய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தினர் நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகினர்”’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

போரின் இறுதிக் கட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கிளிநொச்சியில் தற்போது நடைபெற்றுவரும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களையும் சாட்சியங்களையும்  தெரிவித்து வருகின்றனர். இவ்வகையில் படையினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமை குறித்தும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனகரி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற விசாரணைகளின் போது  கமநல உத்தியோகத்தரான ந. சுந்தரமூர்த்தி என்பவர் தனது சாட்சியத்தில் இவ்விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் படைத்தரப்பு புதுமாத்தளன் பகுதியில் கொத்துக்குண்டுகளையும், பொஸ்பரஸ் இரசாயனக் குண்டுகளையும் பயன்படுத்தியதெனவும் இதனால் பொதுமக்ளுக்கு பெரும் உயிரிழப்புகள் எற்பட்டதெனவும், நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகியதுடன் 1000பேர் வரை காயமுற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கெதிராக இக்குண்டுகளை படையினர் பயன்படுத்தியிருந்தாலும் அவை அப்பாவி பொதுமக்கள் மீதே வீழ்ந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதியிலிருந்து பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களை தடுப்பதற்காக புலிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை அச்சுறுத்தியுறுத்தியதாகவும், இவ்வாறு செல்ல முயலும் பொதுமக்களை பச்சைமட்டையால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன எனவும் அவர் தெரிவித்தார்.

._._._._._.

மீள்பிரசுரம்: கிளிநொச்சி மக்கள் சாட்சியமளித்தனர் – பிபிசி தமிழோசை (செப்ரம்பர் 19 2010)

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம்-கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்ற தாய், இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்த போது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு, உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, திங்கட்கிழமை முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வீடமைப்புப்பணிகள் தாமதமாகும் என்ற அரசஅதிபரின் செய்தியினால் மீள்குடியமர்ந்த மக்கள் கவலை!

Damaged_Houseகிளி நொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும்,  சேதமுற்ற வீடுகளை திருத்திக் கொடுப்பதற்கும் தாமதமாகும் எனவும் இது இது அடுத்த வருடமே ஆரம்பிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதையடுத்து கூடாரங்களிலும் கூரைகளற்ற உடைந்த வீடுகளிலும் தங்கியுள்ள மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக இவ்வேலைத் திட்டங்கள் நடைபெறும் என இம்மக்கள் எதிர்பார்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Damaged_Houseஇது தொடர்பாக பொதுமக்கள் சிலர் தேசம்நெற் க்கு கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களின் காணிகள் பலவற்றிற்கு உறுதி, அல்லது அனுமதிப் பத்திரங்கள் இல்லாமை  வீடமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படாமல் லுள்ளமைக்காண காரணமாக கூறப்படுககின்றது. ஆனால், காணி அனுமதிப் பதிரங்கள் உள்ளவர்களின் காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் உடைந்த, சேதமுற்ற  வீடுகளை திருத்திக் கொடுப்பதிலும் கூட தாமதம் நிலவுகின்றமையை அவர்கள் சுட்டடிக்காட்டுகின்றனர்.

புதிதாக விடுகளை அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டம் கட்டமாகவே அதற்கான பணத்தை வழங்கி வருகின்றன. மக்கள் தங்கள் வீடுகளை அமைக்கும் பணிகளில் வேகமாக செயற்படுகின்ற போதும் குறித்த நிறுவனங்கள் மிக மந்த கதியில் செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சேதமுற்ற வீடுகளை திருத்துவதற்காகன பதிவுகள் மேற்கொல்லப்பட்டுள்ள போதும் அதற்கான கொடுப்பனவுக்ள வழங்குவதிலும் தாமதங்கள் காட்டப்படுகின்றன.

அத்துடன் குறைந்த தொகைப் பணத்தில் ஓட்டுக்கூரைகள் அமைத்து வீடுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறித்த நிறுவனங்களால் உத்தரவிடப்படுகின்றன. உடைந்த, கூரைகளற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நகைகளை விற்றோ, அல்லது கடன் வாங்கியோ தங்கள் வீடுகளைத் தாங்களே திருத்தியமைத்தால் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படமாட்டாது எனவும், அவர்கள் வசதியுள்ளவர்களாக கணிக்கப்படுவார்கள் எனவும்  உதவி வழங்கும் நிறுவனங்ளைச் சேர்ந்தவர்கள் மக்களை அச்சறுத்தியும் வருகின்றனர். இதனால், மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்தும் அவல வாழ்விற்குள்ளேயே தள்ளப்படும் நிலை எற்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

”கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு அடுத்த வருடமே வீடுகள் கட்டுவது சாத்தியமாகும்” அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்

Rubavathy_Ketheeswaran_GAகிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் சாத்தியம் உடனடியாக இல்லை எனவும், அது ஜனவரி மாதத்தின் பின்னரே சாத்தியப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரவித்துள்ளார். கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரச அதிபர் இவ்வாறு கூறினார். எதிர்வரும் மழைக்காலத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபரிடம் விளக்கினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இல்லை. பலர் வேறு நபர்களின் காணிகளில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. குறித்த காலத்தில் காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் காணிகளை பொறுப்பேற்காமல் விட்டால் அக்காணிகளில் வசிக்கும் மக்களுக்கு அக்காணிகளிலேயே வீடுகளை அமைத்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு டிசெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

கத்திக்குத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட இளம் பெண்ணொருவரின் கண்கள் அவரது தாயாரினால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி சிறிபாகம என்ற இடத்தைச் சேர்ந்த சமீலா என்ற பெண் அவரது காதலனால் குறித்த பெண்ணின் தாயாருக்கு முன்பாக வைத்து கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இதன் பின்னர் குறித்த காதலன் பொலிஸில் சரணடைந்தார். இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரான மல்காந்தி குணவர்தன தனது மகளின் இரு கண்களையும் தானமாக வழங்கியுள்ளார்.

இலங்கை கண்தானச் சங்கத்தின் சார்பில் இரத்தினபுரி மாவட்ட வைத்திய நிபுணர்களால் கண்கள் அகற்றப்பட்டு பாதுக்கப்பட்டுள்ளன.

கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கைக் கால்களை மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் வழங்குகின்றது.

போரினாலும் விபத்துக்களாலும் தமது கால்களை இழந்த 20 பேருக்கு மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் செயற்கைக் கால்களை வழங்குகின்றது. இன்று திங்கள் கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள ஜெயப்பூர் புனர்வாழ்வு நிலையத்தில இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கயின் தலைமையக இந்துமாமன்றத்தின் உபதலைவர், செயலாளர், யாழ்.மாவட்ட மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மற்றும், ஜெய்ப்பூர் நிறுவனப் பணியாளர்களும்  கலந்து கொண்டு கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கை கால்களை வழங்கி வைக்கவுள்ளனர்.

முன்னாள் புலிகள் விபத்தில் குண்டுவெடிப்பில் இறந்த செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர். : மட்டக்களப்பு வெடிகுண்டு விபத்து

batti222.jpgகரடியனாறு வெடிவிபத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

கரடியனாறு குண்டுவெடிப்பில் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்று அறியப்பட்ட தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியான செய்தியை பொலிஸ் மறுத்துள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முன்னாள் புலிப்போராளிகள் பலியாகியிருக்க சாத்தியமில்லை எனவும், இது குறித்து தமக்கு எவ்வித தகவலோ அறிக்கையோ கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிப்போராளிகள் சீன நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும், குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவர்களும் பலியாகினர் என்றும் தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தொகை 60 என சம்பவம் நடைபெற்றவுடன் முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்தன. பின்னர் கொல்லப்பட்டவர்களின் தொகை 26 என பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொலிஸ்மாஅதிபர் மகிந்த பாலசூரிய வெளியட்டிருந்த அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் 19 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாறுபட்ட தகவல்கள் குறித்து சந்தேகங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 பொலிஸ் குழுக்கள், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் நிரப்பிய கொள்கலன் வெடிப்புக்கு திடீர் விபத்தே காரணம்; நாசவேலை காரணமல்ல என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரும், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நடாத்திய புலன் விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் வெடி மருந்து நிரப்பிய இரு கொள்கலன்கள் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நேரில் சென்று திரும்பிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இச் சம்பவத்தில் 12 பொலிஸாரும், 07 பொது மக்களும், 02 சீன பிரஜைகளுமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இச் சம்பவத்தில் 19 பொலிஸாரும் 21 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸாரில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று கூறின.

இதேவேளை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் எவரும் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இச் சம்பவத்தில் காயமடைந்து எமது ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை தேறிவருவதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கந்தசாமி முருகானந்தம் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு தொகுதியினர் இன்று அல்லது நாளை வீடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

துக்கம் அனுஸ்டிப்பு

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டுகிறது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கரடியானாறு வெடிவிபத்து குறித்து சீனத்தூதரகம் விசாரணை நடத்துகிறது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற கரடியனாறு பகுதிக்கு சீனத்தூதரகம் குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.

கிழக்கில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கொள்கலனிலிருந்த வெடிப்பொருட்களே நேற்று வெடித்து பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திருந்தது. இதில் இரு சீனப்பிரஜைகளும் உயிரிழந்தனர்.  இவ்வெடிவிபத்து எவ்வாறு எற்பட்டது என்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை சீனத்தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை உடனடியாக நடத்துமாறு தற்போது அமெரிக்கால் தங்கியுள்ள ஜனாதிபதி மகந்த ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்புத்தரப்பிற்கு  உத்தரவிட்டுள்ளார்.

 மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய குண்டு விபத்தில் 25 பேர்வரை மரணம்

மட்டக்களப்பில கரடியனாறு பகுதியில் கட்டிட வேலைக்கு பயன்படுத்த வழங்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன. 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர்களில் இருவர் சீன பிரஜைகளாவர். காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

 கட்டிட வேலைகளுக்கு வெடிபொருட்களை வழங்க நிறுத்தப்பட்ட வாகனம் அப்பகுதியில் இருந்த பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கும் வெடிப்புக்கு உள்ளாகியதால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

பாரிய சத்தத்துடன் இடம்பெற்ற இந்த வெடிவிபத்து வேலைநேரத்தில் இடம்பெற்ற விபத்து என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மே 18இன் பின் ஏற்பட்ட மிகப்பெரும் குண்டு வெடிப்பு இதுவாகும். இலங்கையில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பாரிய விபத்து மரணமாகவும் உள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தம் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே இப்பாரிய அழிவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

batti222.jpgஇவ்விபத்தில் அருகில் இருந்த பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணியாளர்களும் எனத் தெரியவருகின்றது. கொல்லப்பட்டவர்களில் சீனப் பணியாளர்கள் இருவரும் அடங்குவதாகத் தெரியவருகிறது.

இதுபற்றி தேசம்நெற் இணையத்திற்கு தகவல் அளித்த வி மகேந்திரன் கூட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கும் போது இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இலங்கை நேரம் காலை 10:40 க்கு நிகழ்ந்த இப் பாரிய குண்டுவெடிப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவித்தார்.

கொழும்பு  – மட்டக்களப்பு பாதையை திருத்தி அமைக்கும் சீன நிறுவனம் புல்லுமலையில் உள்ள குன்றுகளைத் தகர்ப்பதற்கு பெருமளவு டைனமைட் வெடிபொருட்களை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இவ்வெடிபொருட்கள் கரடியனாறு பொலிஸ் ஆயுதக்கிடங்கிலும் சேகரிக்கப்ட்டு இருந்து. இந்த டைனமைட்டை கையாளும் போதே இந்த வெடிவிபத்து நிகழ்ந்து பொலிஸ் ஆயுதக் கிடங்கிலும் விபத்தை ஏற்படுத்தி உள்ளது என வி மகேந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்பாரிய விபத்தால் பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மருத்துவமனையும் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பேருந்தும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தாங்கள் அறிவதாகவும் வி மகேந்திரன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் நிலையத்திற்கு தங்கள் முறைப்பாடுகள் மற்றும் காரணங்களுக்காகச் சென்ற சிலரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இப்பகுதி முற்றாக பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டு இருப்பதாகவும் வி மகேந்திரன் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சு தகவல்

batti17.jpgகரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் 10 பொலிஸார், 2 சீன நாட்டவர்கள் மற்றும் 7 பொதுமக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 52 பேர் காயமுற்றவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை 44 பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பொலிஸ் உத்தியோகத்தரகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 40 பேரில் 21 பொதுமக்களும் 19 பொலிஸார்கள் உள்ளடங்குவதாகவும் மட்டு.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் 6 பொதுமக்கள், 2 பொலிஸார், 2 சீனநாட்டவர்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

sri-lanka.jpgவவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.