”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன” ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

Wanni_War_Mullivaykkal”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன. இறுதிக்கட்டப் போரில் படையினர் தடைசெய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தினர் நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகினர்”’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

போரின் இறுதிக் கட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கிளிநொச்சியில் தற்போது நடைபெற்றுவரும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களையும் சாட்சியங்களையும்  தெரிவித்து வருகின்றனர். இவ்வகையில் படையினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமை குறித்தும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனகரி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற விசாரணைகளின் போது  கமநல உத்தியோகத்தரான ந. சுந்தரமூர்த்தி என்பவர் தனது சாட்சியத்தில் இவ்விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் படைத்தரப்பு புதுமாத்தளன் பகுதியில் கொத்துக்குண்டுகளையும், பொஸ்பரஸ் இரசாயனக் குண்டுகளையும் பயன்படுத்தியதெனவும் இதனால் பொதுமக்ளுக்கு பெரும் உயிரிழப்புகள் எற்பட்டதெனவும், நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகியதுடன் 1000பேர் வரை காயமுற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கெதிராக இக்குண்டுகளை படையினர் பயன்படுத்தியிருந்தாலும் அவை அப்பாவி பொதுமக்கள் மீதே வீழ்ந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதியிலிருந்து பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களை தடுப்பதற்காக புலிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை அச்சுறுத்தியுறுத்தியதாகவும், இவ்வாறு செல்ல முயலும் பொதுமக்களை பச்சைமட்டையால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன எனவும் அவர் தெரிவித்தார்.

._._._._._.

மீள்பிரசுரம்: கிளிநொச்சி மக்கள் சாட்சியமளித்தனர் – பிபிசி தமிழோசை (செப்ரம்பர் 19 2010)

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம்-கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்ற தாய், இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்த போது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு, உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, திங்கட்கிழமை முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *