2010

2010

குறைந்தபட்ச புரிந்துணர்வு செயலாக்க குழுவின் முன்மொழிவுகளும் பொதுக்கூட்டத்தின் உடன்பாடுகளும்

யூன் 21 2009ல் ‘அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்‘ என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றை தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. இச்சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஓகஸ்ட் 2 2009ல் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓகஸ்ட் 2 2009ல் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக 15 சந்திப்புக்களில் ஆராய்ந்து அதன் தொகுப்பாக இவ்வறிக்கையைத் தயாரித்து உள்ளனர். இதனை  8 2010 இல் இடம்பெற்ற பொதுச் சந்திப்பில் – MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim – அங்கு கூடியோர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அவர்களின் கையொப்பங்கள் பிடிஎப் அறிக்கையில் இணைக்கப்பட்டு உள்ளது. அறிக்கையின் முழுமை இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

இதன் பிரதிகள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலே குறிப்பிட்ட எட்டு விடயங்கள் தொடர்பான விரிவான கட்டுரைகள் ஒரு நூலாக வெளியிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
._._._._._.

புரிந்துணர்வு என்பது ஜனநாயகம் பற்றியது. ஆனால் அது குறைந்த பட்சமாக அமைய வேண்டி இருப்பது அதனுள் ஈடுபடுபவர்களிடையே அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. சகல மக்களது முன்னேற்றத்தை வேண்டி, கூடியளவு மக்களை ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதே குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முனைவதின் பிரதான நோக்கமாகும். அவ்வாறான பொது வேலைத் திட்டத்தினை அமைப்பதாயின், அதன் முதற் கட்டமாக குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைக் கொள்கைகள், விளக்கங்கள் என்பவற்றை ஐயங்கள் இல்லாது உருவாக்க வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பார்வையில் இலங்கையின் அரசியலில் அதற்கென ஒரு சரித்திரம் உள்ளது. தேசியவாதிகளிடையே இன ரீதியான உடன்பாடு உருவாகி உள்ளதையும், அது சிங்கள மக்களிடையே மொழி – மத உணர்வுகளில் எழும் பேரினவாதமாகவும், தமிழ் மக்களிடையே அதன் எதிர்ப் – பிரதிவாதமான தமிழ்த் தேசியவாதமாக உருவாகி உள்ளது.
  
இந்த நிலைப்பாடுகளையும் கடந்து, இலங்கைத் தேசியத்திலும், வர்க்க நிலைப்பாடுகளிலும் தளம் கொண்டு இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் உட்படுத்தும் குறைந்தபட்ச வேலைத் திட்டங்களுக்கான தேடல்கள் எப்போதும் இருந்து வந்துள்ளன. இவை பொதுவாக இடதுசாரி அரசியல் அமைப்புகளால் சமத்துவம் – சமதர்மம் என்ற சித்தாந்த வழிமுறைகளுடன் முன்வைக்கப்பட்டன. ஆனால் இம் முயற்சிகளும் அமைப்புகளும், காலப் போக்கில் சிங்களப் பேரினவாதத்தால் பலவீனப்படுத்தப்பட்டது. இன ரீதியில் எஞ்சியோர் தமிழ் தேசியவாதத்தின் முதன்மைப்படுத்தலை ஏற்றுக்கொள்ள நேரிட்டது.  

இதன் பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இருந்து இதுவரைகாலமும் தமிழீழக் கோரிக்கையும் தமிழீழப் போரும் ஒருமுகப்பட்டது. அதன் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை பலவந்தமாக நியமித்துக் கொண்டனர். அதற்கான உக்கிரமான நான்கு ஈழப் போர்களையும் அவற்றின் விளைவுகளையும் இலங்கையின் சரித்திரம் குறித்துக் கொண்டுள்ளது.

வைகாசி 2009ல் உலகநாடுகளின் உதவிகளுடன் இப்போரினை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. அதனால் ஏற்பட்ட பலத்த அழிவுகளுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிய தமிழ் மக்கள் தம்சார்பில் எடுக்கப்பட்ட இன, சமுதாய, அரசியல் நிலைப்பாடுகளை – பொருளாதார உறவுகளை அனுபவரீதியில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பெயரிலான எந்த முயற்சியும் அரசியல் – சரித்திர ரீதியிலும் ஆய்வு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகமுள்ள இலங்கையில் அரசியற் கட்சிகளே பெரும்பாலும் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அதனால் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கு அக்கட்சிகளிடையே இணக்கங்களை ஏற்படுத்துவது அடிப்படையானது. இவ்வாறான முயற்சிகள் தமிழ் கட்சிகளிடையே இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டியது அத்துடன் மக்களையும் அவர்களது சமுதாய அமைப்புகளையும் இந்த குறைந்த பட்ச புரிந்துணர்விற்குள் உள்ளடக்க வேண்டியதும் அவசியமானது.

அக்குறைந்தபட்ச புரிந்துணர்வு அரசியல் – பொருளாதாரம் மக்கள் – இனங்கள் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைப்பாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும். அதற்கு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சாசன அடிப்படையில் காலனித்துவ சுதந்திரம் பெற்றதில் இருந்துள்ள சரித்திரத்தை ஆராய வேண்டும். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னான மூன்றில் இரண்டு பகுதி காலம் 1) தமிழ் மக்கள் இன ரீதியிலும், 2) சிங்கள மக்கள் வர்க்க ரீதியிலும், அரசியல் -பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான அடிப்படையில் எட்டப்படும் புரிந்துணர்வு பூரணமான மக்கள் வளர்ச்சியைத் தருவதற்கும் நடைமுறைச் சாத்தியமானதாய் அமைவதற்கும் 1) இலங்கை, 2) பிராந்தியம், 3) சர்வதேசம் என்ற நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கடந்த முப்பது வருட ஒடுக்கு முறைகள், அவஸ்தைகளுள் இருந்து வெளிவர எத்தனிக்கும் தமிழ் மக்கள் தனித்து நின்று பூரண அபிவிருத்தியை, வளர்ச்சியை கண்டுவிடமுடியாது, ஆகவே அயற் சமூகங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

எனவே புரிந்துணர்வு முயற்சிகளுக்கு அரசியல் – பொருளாதார வடிவங்கள் தந்து, அவற்றிடையேயான தொடர்புகளை ஏற்படுத்த முயல வேண்டும். அவை இன, மத, பிரதேச பிரதிபலிப்புகளாக இல்லாது அனைவரினதும் அபிலாசைகளாக உருவாகிட ஒத்தாசையாக இருக்க வேண்டியது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முன்வருவோர்களது பணிகளாகும்.  

அதேவேளை இலங்கையின் இன, சமூக – பொருளாதார, சமுதாயப் பிரச்சனைகளை தனித்தனியாகவோ அல்லது ஒரே தடவையிலாகவோ அணுகுவது? இவ் அணுகுமுறையில் எவை தீர்வுக்காக முதன்மைப்படுத்தப்பட வேண்டும்? எவ்வாறான நிலைப்பாடுகள் இவற்றிடையே பொதுத் தளத்தை உருவாக்க உதவும்? என்பவை பற்றிய முடிவுகளும் இங்கே அவசியம்.

இவ்வாறான பின்னணியில் தேசம் ஆசிரியர்கள் த. ஜெயபாலன், த. சோதிலிங்கம் மற்றும் சு.வசந்தி, ரவி சுந்தரலிங்கம் ஆகியோரது ஆனி 03, 2009 சந்திப்பின்போது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அவசியத்தை ஊர்ஜிதம் செய்வதற்கான பொதுக்கூட்டம் ஒன்று தேவை என்ற முடிவு ஏற்பட்டது. அதன்படி லண்டன், லேய்ற்றன்ஸ்ரோனில் ஆனி 21, 2009 தேசம் இணையத்தளத்தின் முக்கிய பங்குடன் ஒரு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆவணி 02, 2009 அதே இடத்தில் இம்முயற்சியை முன்னெடுப்பதற்கான மற்றுமொரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.

அதன் முடிவுகளாக
(1) இலங்கையில் இடம்பெறும் சர்ச்சைகளின் முக்கிய விடயங்களின் தேர்வும்
(2) அவைபற்றிய விளக்கங்களை ஆய்வு வடிவத்தில் தருவதற்கான தனிநபர்களின் பட்டியலும்
(3) அந்த தனிமனிதர்களே ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் செயற்குழுவாக இயங்கவும்
(4) ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் இணைப்பாளர்கள் த ஜெயபாலன், த சோதிலிங்கம், எஸ் பேரின்பநாதன் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த ஒருவருடகாலமாக தனது பல இருப்புகளின் போது ஆவணி 02, 2009 புரிந்துணர்வுக் கூட்டத்தால் தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளிலான ஆய்வுக் கட்டுரைகளை தம்மிடையே விவாதங்களினாலும் கலந்துரையாடல்களினாலும் பரிசீலனை செய்த அமைப்பின் செயற்குழு ஆவணி 08, 2010 லண்டன், வோல்தம்ஸ்ரோவில் தனது தேடலின் முடிவுகளாக அரசியல், பொருளாதாரம், மக்கள் வளம் என்ற வகையில் சில கருத்துக்களை மக்களது பரிசீலனைக்கும் பொது முடிவுக்கும் சமர்ப்பித்தது. அவர்களின் முடிவுகளை ஆவணி 02 குறைந்தபட்ச புரிந்துணர்வு குழுவின் மொழிவுகளாக அடிப்படை நிலைப்பாடுகள் (Principles) பிரகடனங்கள் (Proclamations), கோரிக்கைகளாக (Propositions) என வகைப்படுத்தி தரப்பட்டுள்ளது.

இவை ஆவணி 02, 2010ல் இடம்பெற்ற புரிந்துணர்வுக் குழுவின் பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறைந்தபட்ச புரிந்துணர்விற்கான முன்மொழிவுகள்

(1) அடிப்படை நிலைப்பாடுகள்
 
1. இலங்கையின் இனபபிரச்சனையால் உருவான உள்நாட்டுப் போர் இலங்கை அரசின் இராணுவத்தால் அடக்கப்பட்டுவிட்டாலும் அதற்கான இறுதித் தீர்வு அரசியல் வழியால் அமைவதாகும்.
 
2. இலங்கையின் சமூக – பொருளாதாரப் பிரச்சனைகளும் இனப்பிரச்சனைகளும் ஒரே தளத்தை கொண்டிருந்தாலும் அவையிரண்டும் வேறானவை. (ஒருதளமும், அதேவேளை இருமுகங்களும் கொண்டவை)
 
3. சர்வதேச சந்தைப்படுத்தலில் இலங்கை மக்களுக்கு சார்பான எதிரான சாராம்சங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளது மறைவும் இவ்விரு பிரச்சனைகளையும் பொதுமைப்படுத்திப் பார்க்கக் கூடிய, இனவரைவுகளைத் தாண்டிய குறைந்தபட்ச புரிந்துணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தந்துள்ளன.
 
4. இச்சந்தர்ப்பம் பூரணமான ஜனநாயகம் ஏற்படுத்தும் பொது இணக்கங்களுடாக மேலெடுத்துச் செல்லக் கூடியவை.
 
5. பூரண ஜனநாயகம் (full democracy) என்பது மக்களது சமூக – சமுதாய உடமைகளையும் அவற்றின் பூரணமான வளர்ச்சியையும் நுகர்வுகளையும் எய்துவதற்கான பாரம்பரிய சொத்துகளையும் அவை சார்ந்த உரிமைகளையும் தருவது.
 
6. இவை அனைத்தையும் ஊர்ஜிதம் செய்யும் பன்முகத் தன்மைநாடாக இலங்கையை சகல மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலமை அவசியம்.
 
(2) பிரகடனங்கள்
 
1. இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு ஐக்கிய இலங்கைக்கு உள்ளேயே சாத்தியமாகும்.
 
2. இலங்கைவாழ் சகல தேசியச் சிறுபான்மை இனங்களின் உடமைப் பிரச்சனைகளின் தீர்வுக்கு அரசியல் அமைப்பினை மாற்றி அமைப்பது அவசியமானது.
 
3. மக்களின் பன்முக தேசியத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தரும் அலகுகள் கொண்டவையாக புதிய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். 

4. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இஸ்லாமிய, சிங்கள சமுதாயங்களின் உடமைகளும், உரிமைகளும் அரசியல் ரீதியில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.
 
5. இலங்கைவாழ் மக்களது சமூக, சமுதாயப் பிரச்சனைகள் இன, மத, சாதிய பாகுபாடுகள் இன்றி, அம் மக்களையொட்டிய அபிவிருத்தியின் போதே அற்றுப் போகும்.
 
6. மனிதவள வளர்ச்சிக்கு, அபிவிருத்தித் திட்டங்களுடன் கூடிய இனங்களிடையே புரிந்துணர்வை வளர்த்தெடுக்க கூடிய கல்வி சார்ந்த திட்டங்களும் இடம்பெற வேண்டும்.
 
(3) கோரிக்கைகள்
 
1. இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற வரையறுப்பு சகல இராணுவ வகைகளிலும் விஸ்தரிப்பு காண்பதைத் தவிர்த்து, மக்களின் நேரடி நிர்வாகத்தை (civil adminstration) மிகவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
2. இலங்கையின் பாதுகாப்பு படைகள், நிர்வாகம், மக்கள் சேவை என்ற சகல மத்திய, மாகாண அரச கருமங்களிலும் மக்களது விகிதாசாரம் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
 
3. சகல திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவை தவிர்ந்த அபிவிருத்தி சார்ந்த குடியயேற்றத் திட்டங்கள் மக்களது மாகாண விகிதாசாரங்களை பிரதிபலிப்பவையாக அமைய வேண்டும்.
 
4. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களது ஜனநாயக உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். அவர்களது புனர்வாழ்வு துரிதமாக இடம்பெற வேண்டும்.
 
5. உள்நாட்டுப் போரினால் பாதிப்புற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும், நிவாரணம் வழங்கப்படல் வேண்டும், தேவைக்கேற்ற அபிவிருத்திக்கான வளங்களும் வழங்கப்படல் வேண்டும். இவ்வகையில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மக்களது மீள்குடியேற்றம், நிவாரணம் என்பவையும் இடம்பெற வேண்டும்.
 
இவையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அடிப்படை நிலைப்பாடுகள், பிரகடனங்கள், கோரிக்கைகள் என ஆவணி 08, 2010ல் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு (லண்டன்). 

அறிக்கையும் அதில் கையெழுத்திட்டவர்களும்:

MoU_Report_By_MoUGroupLondon

குறைந்தபட்ச புரிந்துணர்வு தொடர்பான சந்திப்புக்களின் முன்னைய பதிவுகளுக்கு:

தமிழ் மக்களிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைகள். : வி சிவலிங்கம்

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

கொமன்வெல்த் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொட ங்குகின்றன. இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்வரும் 14ம் திகதி வரை நடைபெறும்.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மட்டும் நடை பெறும். போட்டிகள் எதுவும் இல்லை. திங்கள் முதல் போட்டிகள் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த காமன் வெல்த் விளையாட்டுத் திரு விழாவில் 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. 6700 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கின்றனர்.

பொன்சேகா முறைப்படி மன்னிப்பு கோரினால் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி

சரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் (நேற்று முன்தினம்) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும். “என்னைக் கொலை செய்வதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பளிக்க முடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பில் கவனத்திற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவ நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

சிறுவயதுத் திருமணம் பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

குறைந்த வயது சிறுவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் பதிவாளர்களை வேலை நீக்கம் செய்து, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.நாட்டின் எப்பகுதியாயினும் இவ்வாறு செயற்படும் திருமணப் பதிவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பொலன்னறுவையில் நேற்று நடை பெற்ற வடமத்திய மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய் வுக் கூட்டத்தின் போது வெலிக்கந்தை பிரதேசத்தில் பெருமளவு சிறுமிகள் குறைந்த வயதில் திருமணம் முடித்து ள்ளதாகவும், 15 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிறுமி கூட அப்பிரதேசத்தில் தற்போது இல்லை யென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது தொடர்பான முறைப்பாடு தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு அங்கு சிறுவயதில் திருமணம் முடிந்த சிறுமிகளின் புகைப்படத்தையும் ஆதாரமாகக் காட்டினார். தனித்தனியே காணிகளைப் பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களுக்காக பெற்றோர் சிறு வயதிலேயே தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இத்தகைய சிறு பிள்ளைகள் இன்னும் சில மாதங்களில் பிள்ளைகளைப் பெற்று எவ்வாறு அவற்றை வளர்க்கப் போகின்றார்கள் என்பதை அந்த பெற்றோர் ஏன் சிந்திக்கவில்லையெனவும் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். சிறுவர் தினம் கொண்டாடப்படும் இவ் வாரத்தில் இத்தகைய அநியாயங்கள் நடப்பதைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கடுமையான உத்தரவு பிறப்பித்தார்.

”எந்திரன்” – தமிழ்ப்பட ரசிகர்களைத் ‘தந்திரமாக’ ஏமாற்றும் பிரமாண்டமான படைப்பு : ரதிவர்மன்

Endiranமிகப் பிரமாண்டமான செலவில் (25-40 அமெரிக்க கோடிகள்), தயாரிக்கப்பட்டு ஒரே நாளில் உலகில் 2250 திரைகளில் வெளியிடப்பட்ட படம் எந்திரன். முதல்நாள் காட்சிகளே  25 கோடி (அமெரிக்க டாலர்ஸ்) களுக்கு விற்கப் பட்டிருக்கிறதாம். படத்தின் ஆதிமூலம் தமிழாகவிருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் ‘டப்’ பண்ணப் பட்டிருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு ஆங்கில மொழியில் சப் டைடிலும் போடப் பட்டிருக்கிறது. ஒரேயடியாக உலகமெல்லாம் 2250 திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் பலரின் பலவிதமான எதிர்பார்ப்புக்களையும் தூண்டி விட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பட வசூலைக் கொடுப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் பொழுது போக்குக்குத் தமிழ்ப் படங்களை நாடுகிறார்கள். இவர்களால் தமிழத் திரையுலகம் நன்றாகப் பணம் படைக்கிறது. தமிழ்த் திரையுலகம் என்ன படத்தைக் கொடுத்தாலும் அதை விழுந்தடித்துக் கொண்டு பார்க்க புலம்பெயர்ந்த தமிழ்க் கூட்டம் இருக்கிறது. நோர்வேயில் ‘எந்திரன்’ ஒரு பிரமாண்டமான ‘கொலோசியக் கட்டிடத்தில்’ திரையிடப்படுவதாத் தமிழகப் பத்திரிகைகள் பீற்றிக்கொண்டன.

நோர்வேய்த் தமிழர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழர்கள். இப்படம் அவர்களுக்கு என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்ற தெரியாது. திரையிடப்படும் இடங்கள் திருவிழா காண்கிறது என்று தென்னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகள் பறைசாற்றின. ஆனால் ஹிந்தியில்  ‘ரோபோர்ட்’ என்ற பெயரில் (எந்திரன்) திரையிடப்பட்ட விடயங்களில் கைவிட்ட எண்ணக்கூடிய கூட்டம்தான் வந்திருந்தது. (01.10.10).

இது ஒரு வழக்கமான தமிழ்ப் படம், காதலிக்காக உலகத்தை அழிக்க முயலும் தமிழ்த் திரைப்படக் கதாநாயக வடிவத்தின் ‘இயந்திர் சொருபமாக ‘எந்திரன்’ படைக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருத்தரான சங்கரின் கதையமைப்பு, இயக்கத்தில் மிக மிகப் பணச்செலவில் தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலப் படங்களான ‘அவதார’, ‘மெட்டரிக்ஸ்’ போன்றவற்றிக்கு இணையானது இப்படம் என்று இந்திய  தமிழ்ப் படங்கள் பெருமை கொட்டிக்கொள்கிறது.

கதாநாயகன் ( ரஜனிகாந்த், அறுபது வயதைத் தாண்டியவரா அல்லது தொட்டுக்கொண்டிருப்பவரா) டொக்டர் வசீகரன் (?) பத்துவருட கால கட்டங்களாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய ஒரு இயந்திர மனிதனுக்கு டொக்டரின் காதலியான ஐஸ்வரியாவின் முத்தம் கன்னத்தில் பட்டதும் மனித உணர்வுகள் வந்து ஐஸ்வரியாவின் காதலை முழுமையாகப் பெற விஞ்ஞானத்தையே விழுங்குமளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டு இயந்திர மனிதன் போராடுவதுதான் கதை.

திரைப் படங்கள் எடுப்பவர்கள் தனக்குத் தெரிந்த ஒரு கருத்தையோ தத்துவத்தையோ சாதாரண மக்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் படம் எடுப்பார்கள். அல்லது பொழுதுபோக்குக்காக ஜனரஞ்சகமான படங்கள் எடுப்பார்கள். அல்லது சமயத்தைப்போதிக்கக் கடவுள்களின் மகிமைகளைக் காட்டும் படங்களை எடுப்பார்கள்.

இதை எடுத்த சங்கரால், தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பல நாள் ஆசையான எப்படியும் உலக அழகியாகப் பட்டம் எடுத்த (1992) ஐஸ்வரியாவின் காதலான நெருங்கி நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தத்தான இந்தப் படம் எடுக்கப் பட்டதா என்ற கேள்வியின் திரைப்பட அமைப்பு எழுப்புகிறது.
 
அறுபது வயது முதுமை (பாவம் பார்க்கப் பரிதாபம்) முப்பத்தியாறு (மூ)முத்தழகுடன் பல நாடுகளுக்கும் பறந்து படம் பார்க்க வரும் இளைஞர்களைக் கிளு கிளுப்படைய வைக்க முயற்சிக்கிறது. இந்தக் கருத்துக்கு உதாரணம், காதலன் காதலி ஊடலில் தான்கொடுத்த முத்தங்களைத் திருப்பித் தரசொல்லிக் கதாநாயகன் கேட்க காதலி, காதலன்  வசீகரனின் கன்னத்தில் பட் பட்டென்று ‘உம்மாக்கள்’ கொடுக்க, அவள்கொடுக்கும் ‘இச்சுக்களின்’ நெருக்கம் பத்தாதென்று அடம் படிக்கிறார். உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த இயந்திர மனிதனை உருவாக்கிய ‘க(ல்)லாநிதி, இந்தக் கட்டத்தில் என்ன புதிய காதல் உத்தியை உட்புகுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. (இக்கட்டத்தைப் பெரிதுபடுத்தி விமர்சனம் எழுதப்பட்டதால் இதை எழுத வேண்டியிருக்கிறது.)

இயந்திரத்துக்கு டாக்டரின் காதலி சானாவில் வந்த  (ஐஸ்வரியாவில்) வந்த காதலைப் புரிந்து கொண்ட, கதாநாயகனின் எதிரியான இன்னொரு விஞ்ஞானி, இயந்திர மனிதனை மடக்கித்  தன் தேவைகளுக்குப் பாவித்துப் பணம் சேர்க்க அயல் நாட்டு சக்திகளுடன் கூட்டுச்சேர்கிறான். ஐஸ்வரியாவின் காதலைத் தவிர வேறு எதையும் கண்டுகொள்ளாத இயங்திர மனிதன் தன்னனைப் போல் இன்னும் பல் நூறு இயந்திரங்களை உருவாக்கி சானாவுக்காக உலகை அழிக்க முயல்கிறான்.
தனது காதலியை இயந்திரத்திடமிருந்து காப்பாற்றவும் அதேநேரம் உலகைக் காப்பாற்றவும் கதா நாயகன் வசீகரன்(?) தனது விஞ்ஞான அறிவைப் பாவித்து இயந்திர மனிதனை அழித்து விடுகிறார்.

இயக்குனர் சங்கர் தனது உதவி இயக்குனர்களுக்குப் பல ஆங்கிலப் படங்களைக் கொடுத்து அவற்றில் வரும் விறு விறுப்பான கட்டங்களைப் பற்றிய தகவல்களைச் கேகரித்துத் தனது படங்களின் ‘தேவைகளுக்குப்’ பாவிப்பதாக எங்கேயோ படித்திருக்கிறேன். பல ஆங்கிலப் படங்கனின் காட்சிகளின், கருத்துக்களின் சாயல்கள் இப்படத்தில் தொட்டுத்தடவிக் கிடக்கின்றன.
 
இந்தப் படத்தில் கதை பற்றியோ நடிப்பு பற்றியோ பெரிதாக ஒன்றும் இல்லை. ஐஸ்வரியாவுடன் பல நாடுகளுக்குப் போய்க் கவர்ச்சி நடனம் ஆடவும் ஐஸ்வரியாவுக்கு விதமான ஆடைகளைப் போட்டு அழகு பார்க்கவும்  பிரமாண்ட செலவு செய்யப்பட்டிருக்கிறது

அதுசரி ‘கிளி மான்சரோ’ பாட்டுக்குரிய ஆட்டக் காட்சியை ஏன் தென் அமெரிக்காவில் பெரும்பாலும் எடுத்தார்கள்? கிளிமாஞ்சரோ ஆபிரிக்காவிலல்லவா இருக்கிறது? (தமிழர்களுக்குச் சரித்தரம் தெரியாதென்ற நினைவு போலும்!) இவர்கள் அந்தப் பாடலுக்குப் படம் எடுத்த இடம் ஒருகாலத்தில் நாகரிக மனிதர்களாயிருந்து ஸ்பானிய காலனித்துவ வாதியான பிரான்கோயி பிச்சாரோ (1528) என்பரால் அழிக்கப்பட்ட ‘இங்கா’ என்ற இன மக்களைக் கொண்டிருந்த  ‘மாச்சுப்பூச்சி’ (1400 ஆண்டுகளில் உருவாக்கிய நகர்) என்ற தென்னமரிக்க இடமாகும்.

இந்தப் படத்தை மக்கள் திரணடு வந்த பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி படத்தை ஓட்டுவது பிரமாண்டமான டெக்னிக் காட்சிகளாகும். இப்படியான காட்சிகளைப் பார்க்க விரும்புவர்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பக்கத்தில் அவர்கள் கொம்பியுட்டர் கேம் விளையாடும் போது சேர்ந்திருந்தால் மிகவும் விறுவிறுப்பாகவிருக்கும்.

இறுதியாக, இப்படம் 12 வயதுக்கு மேலுள்ள வயதுள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் என்று மேற்குலக தணிக்கை சபை சொல்லியிருக்கும் போது ‘எந்திரன்’ குடும்பத்துடன் சேர்ந்திருந்து பார்க்கக்கூடிய படம் என்று தென்னிந்தியத் தமிழ் இணையத்தளம் ஒன்று புழுகித் தள்ளியிருக்கிறது.

குடும்பம் என்றால் அதில் சிறு குழந்தைகளும் அடங்குவார்கள், அதைப்பற்றி ஒரு சின்னச் சந்தேகம், கதாநாயகியை வில்லர்கள் துரத்தித் தங்கள் கூட்டத்தின் நடுவிற் கிடத்தி துப்பட்டாவை உரிவதை அந்தக் கூட்டத்திலுள்ள ஒருத்தர் மோபைலில் படம் எடுக்கிறார். இக்கேவலமான கட்டத்தை சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் தனது பேரன் யாத்திராவுடன் சேர்ந்திருந்து பார்ப்பாரா?

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் நடத்தைகள் சீரழிந்து செல்வதாக அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் நடத்தைகள் சீரழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணையம் எனபனவற்றினால் யாழ். பாடசாலை மாணவர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோது இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீருடையுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மாற்றுடைகளையும் அவர்களின் பைகளில் எடுத்துச் செல்வதாகவும், பாடசாலை விட்டதன் பின்னர் மாற்றுடையுடன் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாகவும், இணைய வசதிகள் வழங்கும் (நெற்கபே) நிலையங்களுக்குச் சென்று ஆபாச இணையத்தளங்களைப் பார்வையிடுவதாகவும், கையடக்கத் தொலைபேசி மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், ஆள்நடமாட்டமற்ற பகுதிகளில் – கட்டடங்களில் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குறித்த கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடைபெற்ற இக்கூட்டம் தொடர்பாக அரசாங்க அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர்களும் ஆசிரியர்களும் விழிப்பாக இருக்க வேண்டும். அவர்களின் புத்தகப் பொதிகளை தேவைப்பட்டால் சோதனையிட வேண்டும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து கவனமாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும். இணைய நிலையங்களின் உரிமையாளர்கள் 18 வயதிற்கு குறைந்த மாணவர்களை இணையத் தளங்கள் பார்வையிட அனுமதிக்கின்ற போது தடுப்புகளற்ற திறந்த வெளியமைப்பில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் உள்ளிட்ட சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளை பொலிஸாரின் உதவியுடன் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் டெங்குநுளம்பை ஒழிக்க ‘பக்றீரியா’

யாழ். குடாநாட்டில் டெங்கு நுளம்பை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக கழிவு நீர் அகற்ற முடியாத இடங்களில் டெங்கு நுளம்புகளுக்கெதிரான ‘பக்றீரியா’ பயன்படுத்தப்படவுள்ளது. கழிவு நீர் வாய்க்கால்களுக்கு தெளிப்பதற்கான இந்த ‘பக்றீரியா’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி. திருமகள் சிவசங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் டெங்கு நோயை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள போதும், அதனை முற்றாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதெனவும், அடுத்து வரப்போகும் மழைக்காலத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான ஆபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மத்தியில் டெங்கு நொய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இந்திய அரசினால் யாழ். குடாநாட்டில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளன. பயனாளிகள் பிரதேசச் செயலங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக கையளிக்க வேண்டும் என யாழ். அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகக்கொண்டு 18-05-2009 இற்குப்பின் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்ந்தவர்கள், சொந்தக் காணிகளையுடையவர்கள் மட்டும் இவ்வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு பகுதியளவில் சேதமடைந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும் எனவும அவர்கள் அதனைப் புனரமைப்பதற்கு இரண்டு லட்சரூபா வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் குடும்பங்கள், போரில் உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீடமைப்பிற்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்தவர் பிணையில் விடுதலை.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

லண்டனுக்க அனுப்பி தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த நபர் மூன்று மாணவர்களிடம் ஐந்து இலட்ச ரூபா வீதம் பெற்றுள்ளார். அம்மாணவர்களிடம் போலிச் சான்றிதழ்களையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக இம்மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இம்மோசடி குறித்த வழக்கினை விசாரணை செய்த யாழ். நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா  இது குறித்து விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த நபரை 75 ரூபா பெறுமதிக்கு மூன்று பேரின் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

கிளி – முல்லை இல் பணியாற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சென்று பணிபுரிவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றாக இல்லாவிடினும் ஓரளவிற்கு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் ஏ-9 பாதையூடாக பயணம் செய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு தடவையும் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. தற்போது அம்முறை தளர்த்தப்பட்டு அனுமதி மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகின்றது என யாழ.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் வி. கேசவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல தேவைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமலுள்ளது எனவும், கிளிநொச்சி முலலைத்தீவு மாவட்டங்களில் பணியாற்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும், அங்கு பணியாற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் அமைய செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.