2010

2010

சம்மாந்துறையில் 25 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு; விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை 25 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் பலர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் இதனையிட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக டெங்குக் காய்ச்சலை பரப்பப் கூடிய நுளம்புகள் பெருக்கமடையும் இடங்களை பொதுமக்கள் சிரமதானம் மூலமாக துப்புரவு செய்யுமாறும் வீடுகளில் காணப்படும் டயர், சிரட்டை, தகரடப்பா, குரும்பை மட்டை போன்ற நீர் தேங்கியிருக்கக் கூடிய பொருட்களை வீட்டின் சுற்றுப் புறச் சூழலிலிருந்து அகற்றி புதைத்து விடுமாறு அல்லது எரித்து விடுமாறு கேட்டுள்ளனர்.

இதேவேளை சம்மாந்துறைப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் காணப்படும் நுளம்புகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இது வரையும் புகை விசுறும் நடவடிக்கையினை மேற்கொள்ள வில்லையென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு

police_logo.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் தேர்தல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 488 பொலிஸ் நிலையங்களிலும் இந்தப் பிரிவு அமைக்கப்படுகிறது. அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,  பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை உள்ளடக்கிய 75 தேர்தல் நடவடிக்கை அலுவலகங்களும் இயங்கும் என குறிப்பிட்டார்

அத்துடன் பொலிஸ் நிலைய மட்டத்தில தேர்தல் முறைப்பாட்டுக்கென; 413 விசேட பிரிவுகளும் நிறுவப்படவுள்ளது.  மூன்று மட்டத்தில் நிறுவப்படும் விசேட கண்காணிப்பு நிலையத்தின் பணிகள் யாவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம், மாவட்ட பொலிஸ் அலுவலகம், பிரதேச பொலிஸ் நிலையம் என்ற மட்டத்தில் பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

சத்துணவு நஞ்சாகியதில் 10 வயது மாணவி மரணம் – மேலும் 62 மாணவர் ஆஸ்பத்திரியில்

சத்துணவு விஷமாகியதால் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 62 மாணவர்கள் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை உண்டதையடுத்து மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்துபோன மாணவி மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயதுடைய தனஞ்சனி கமகே என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலாபத்வெல புத்தகோஸ தொம்பவெல, கவட்டயாமுனை ஆகிய மூன்று பாடசாலை மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலண்டன் இலங்கை வங்கியை உலகக் கிளைகளின் மேற்பார்வை வங்கியாக மாற்ற நடவடிக்கை

london.jpgஇலண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை வங்கியாக மாற்றியமைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்’ என்ற பெயரில் இலண்டனில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கியே உலக நாடுகளில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளை நிர்வாக மேற்பார்வை செய்யும் என்று தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரி வித்த கலாநிதி விக்கிரமசிங்க, தற்போது இலண்டனிலிருந்து இலங்கை வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்துவித பணப்பரிமாற்றங்களுக்கும் கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாதென்றும் குறிப்பிட்டார்.

திருமலை மாவட்டத்தில் 4 மீன்பிடி இறங்குதுறைகள்

கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நான்கு மீன்பிடி இற ங்குதுறைகளை இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் “யுனொ ப்ஸ்” அனுசரணையில் அமைக்கவுள் ளதாக கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் அண்ணல்நகர் மூதூரில் தக்வா நகர், குச்சவெளியில் சலப்பையாறு, பட்டிக்குடா ஆகிய இடங்களில் புதிய மீன்பிடி இறங் குதுறைகள் அமையப்பெறவுள்ளன. இதன் மூலம் பிரதேச மீனவர்கள் பெரிதும் நன்மையடைவர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

sarath.jpgஇராணுவப் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் சார்பில் அவரின் மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை பெப்ரவரி 23 இல் இடம்பெறுமெனத் தெரிவித்திருக்கிறது.

சித்திரவதை, பலவந்தமாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்தல் என்பனவற்றிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகள் மனுவானது நாடி நிற்கிறது.மனு மீதான விசாரணையின் ஆரம்பகட்டமான “விசாரணை செய்வதற்கான அனுமதியை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாம் வழங்கியுள்ளதாக பொன்சேகாவின் சட்டத்தரணிகளில் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டவேளை, நீதிமன்ற வளாகத்தைச் சூழ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வோர் சோதனையிடப்பட்டனர். பாதிக்கப்பட்டவரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவரின் மனைவியலேயே மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாதென்று அரசாங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமர்ப்பித்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்ததுடன் பொன்சேகா சார்பல் அவரின் சட்டத்தரணிகள் முன்மொழிவுகளைச் சமர்ப்பில் அனுமதியளித்தது. நீதியரசர்கள் குழுவில் சிராணி பண்டாரநாயக்க மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவைச் சமர்ப்பித்த அவரது மனைவியான அனோமா பொன்சேகாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அகீஸ் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சிகளின் சார்பில் வழக்கினைப் பார்வையிட ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, சுனில் ஹந்துன் நெத்தி, விஜேய ஹேரத் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்; எமது அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை எமக்குக் கிடைத்துள்ள முதலாவது வெற்றியாகும். நீதி எங்கும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.தேர்தல் முடிவுக்கு எதிரான மனுவில் ஜெனரல் சரத் பொன்சேகா கையொப்பம் இடுவதற்கு சட்டத்தரணிகள் எந்நேரத்திலும் பார்வையிட அனுமதி கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு அப்பால் சட்ட உதவி ஆணைக்குழுவுக்கு முன்னால் உள்ள சந்தியிலிருந்து வாழைத்தோட்டப் பொலிஸ் சந்திவரை சட்டத்தரணிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி அமைதிப் பேரணியை நடத்தினர். இதில் இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய சட்டத்தரணிகள், சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இது இவ்வாறிருக்க, உயர் நீதிமன்றத்தின் விசாரணையைப் பார்வையிட உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க ஆகிய அமைச்சர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கூச்சல்களை எழுப்பினர். இதையடுத்து பொலிஸாரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களும் அமைதி பேணுமாறு கோரியதையடுத்து அமைதி திரும்பியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக மீண்டும் பிபிஸி!

bbc.jpgஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பிபிஸியின் ஒலிபரப்பு மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வொலிபரப்பு தொடர்பாக இன்றுகாலை இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்கவும் பிபிஸி சார்பாக அதன் தெற்காசிய பணிப்பாளர் மிஷைல் ரோபலும் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிஸியின் ஒலிபரப்பு நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பரிவர்த்தனை ஒலிபரப்பு செய்யப்பட்டபோதும் கடந்தகால உள்நாட்டு மோதல்களின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் தற்போது உள்நாட்டு மோதல்கள் அனைத்தும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிபிஸியின் ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாவிட்டால் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் – ஜனாதிபதி ரணிலிடம் தெரிவிப்பு

ranilmahinda.jpgஇராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாவிட்டால் அவர் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து முக்கியமாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று  சரத் பொன்சேகா சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து அவரது மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்காக உயர் நீதி மன்றம்  இன்று ஏற்று எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

அரசுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்துக்கு ஆதரவாக இன்று பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் பெரும்  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

ஜனாதிபதியின் வெற்றியை குறைத்து மதிப்பிட்டு ஏளனம் செய்யும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள 80 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் பெருந்தொகையான பொது மக்களும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது

கீ போட் மார்க்ஸிஸ்டுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள தூரம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Conference_in_Jaffna_Univercityயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமானவை. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து பட்டதாரியாகிய மாணவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் அவர்களிடம் ஏதும் ஒழுங்கமைக்கப்பட்ட சங்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்க மாணியங்களால் ஒதுக்கப்படுகின்ற பணம் அடிப்படை வசதிகளைக்கூட பராமரிக்கக்கூடிய நிலமையில் இல்லை. உதாரணமாக இங்குள்ள வியாபார நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் தமது பெயரில் அல்லது தமது குடும்பப் பெயரில் தமது வசதிகளுக்கு ஏற்றாற்போல் உதவிகளைச் செய்யலாம்.

உதாரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு 1987ம் ஆண்டு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு பழைய வாகனம் மட்டுமே இன்றுவரை பாவனையில் உள்ளது. வேறு ஒன்றும் இல்லை. யாழ்ப்பாண கல்வி பாரம்பரியத்தை மார்தட்டிச் சொல்லும் சமூகத்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு இந்த நிலமை.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறுகின்ற அரசியலுக்கும் அங்குள்ள யதார்த்த நிலமைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு புலியின் அட்டூழியங்களை மட்டும் கதைத்து கொம்பியூட்டர் ஊடாக புரட்சிசெய்த keyboard மார்க்ஸிட் அனைவரும் இப்போது புலம் போய் உங்கள் மாபெரும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்த ஒரு தடையும் இல்லை.

சாமம் 2 மணிக்குக்கூட வட்டுக்கோட்டைச் சந்தியில் சைக்கிளில் போனால் அங்கு கடமையில் உள்ள ஆமிக்காரன் நிற்பாட்டி சேவை கேட்கும் நோக்கம் இல்லை. இந்த நிலமை வருங்காலங்கிலும் தொடருமோ தெரியாது. ஆனால் இன்றைய நிலமை இதுதான்.

Tilko_HotelTilko_Hotelஇன்று இலண்டனில் இயங்கிவந்த புலிகளின் பெரிய ஆதரவாளராகிய Tilko ஸ்தாபனம் பெரிய Hotel ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிர்ணயிக்கிறது. பழைய கதைகளைப் பேசி மக்களை இன்னும் துன்புறுத்தாமல் இவ்வாறான வேலைத் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தமிழ் நிறுவனங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்குச் சென்று தமது நிறுவனங்களை நிறுவி வேலைத்திட்டங்களையும் பயிற்சிகளையும் மேற்கொள்ள உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

10 பவுண்களுக்கு பூ வாங்கி ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பின்னால் வரிசையில் சென்று 5 பவுண்களுக்கு விளக்கு வாங்கி அதை வரிசையாக கொழுத்தி வைத்து பின்னர் தமிழ் ஈழத்தின் தேசிய உணவான கொத்து ரொட்டியும், மட்டின் ரோலும் உண்டு வீடு திரும்பும் எமது புலம்பெயர்ந்த விழிப்புப் போராட்டங்கள் முடிவிற்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.

ஜந்து சதவிகித மக்கள் இருந்து கொண்ட 33 சதவிகித பகுதி நிலத்தை எமது பாரம்பரிய பிரதேசம் என்று கட்டிப்பிடித்து கதறியழும் யதார்த்தமற்ற முட்டாள்தனமான வரட்டு அரசியலுக்கு சாவு மணி அடிக்கப்படல் வேண்டும். தமிழ்பேசும் மக்களின் அரசியல் யதார்த்த நிலைமையை பிரதிபலிக்காவிட்டால் எமது சமுதாயமும் பாலஸ்தீனம் போல் Gaza Strip (ஈழத்து முள்ளிவாய்க்கால்) போன்ற ஒரு பிரதேசத்தில் முடுக்கி வைக்கப்பட்டு காலாகாலமாக மேற்கத்தைய நாடுகளை கையேந்தி வாழும் நிலைமைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்தியாவை மையப்படுத்தி “மோட்டு சிங்களவனுக்கு” பாடம் படிப்பிக்கும் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இன்று இந்தியாவின் வெளிநாட்டு பாதுகாப்பு கொள்கைகள் எல்லாம் பொருளாதாரத்தையும் பிராந்திய செல்வாக்கையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர் தமிழ் மக்கள் வேண்டும் என்றால் பொய் கூறி புலமை பெற்று, கொழுத்துப்போய் இருக்கும் வெறும் புஸ்வாணங்களாகிய சீமான், வைகோவை அழைத்து மட்டின் ரோல் கொடுத்து விழா நடத்தலாம். இல்லாவிடில் இன்னும் நான்கு அப்பாவித் தமிழர்களை தீக்குளிக்க வைத்து இங்கு குளிர் காயலாம். இவை ஒன்றும் மண்ணில் வாழும் மக்களுக்கு எவ்வித சுபீட்சத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

யாழ்பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம்இன்றைய அரசியல் பொருளாதாரத்தையும் வாக்குப் பலத்தையும் அடிப்படையாக கொண்டது. யதார்த்தத்திற்கு அப்பாற்ப்பட்ட அரசியல்கள் மக்களின் அவலங்களை அதிகரிக்கும். 1980 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய யாழ்  சனத்தொகை 50 விகிதம் குறைவாக இருக்கின்றது யாழ்ப்பாண வைத்தியசாலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்கு விளம்பரங்கள் பிரசுரிக்கப்படும்போது சிங்களவர்களின் விண்ணப்பங்களே தரமானவையாக இருப்பதாயும், இதனால் தாம் சிங்களவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலைமையில் இருப்பதாக யாழ் வைத்திய அதிகாரி டாக்டர் தேவதாஸன் மற்றும் யாழ் பல்கலைக்கழக் துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் அவர்களும் தெரிவிக்கின்றார்கள். யதார்த்தம் இதுதான்.

வவுனியாவில் தனிமையில் வாடும் புத்தர்30 வருடங்களுக்கு முன்பு ரூட்டிங் வந்த நாங்கள் மூலைக்கு மூலை கோயில் வைத்து நடு சமர் காலங்களில் நடுரோட்டில் வெறுமனே நின்று தேங்காயை உடைத்து (Health and safety hazard) வீதியெல்லாம் குத்துக்கரணம் அடித்து எமது மதச்சடங்குகளை பின்பற்ற வேண்டும். நடு அநுராதபுரச் சந்தியில் பிள்ளையார் மிகவும் சந்தோசமாக இருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் கல்லாக உள்ள புத்தர் எங்களுக்கு என்ன கெடுதியை கொண்டுவரப் போகிறார்? Traffic Jam கொண்டு வருகிறாரா? அல்லது Health and safety issue …?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத எழுச்சிக்கும், பழைமையை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற அரசியலுக்கும் சாவு மணி அடிக்கப்படும் வரை தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு கிடையாது. இன்று சிறுபான்மையான தமிழினம் இன்னும் சிறுபான்மையாகி விட்டது. பாரம்பரிய தமிழ்பிரதேசம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு போன்ற அரசியல்வாதங்கள் செயலற்றதாகப் போயுள்ளது. இன்று ஜக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும் செழுமையாகவும் வாழ்வது காலத்தின் ஒரு கட்டாயத் தேவை.