தமிழ் பிரதேசங்களின் மீள் புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு குறித்து 12.01.2010 அன்று உயர்மட்ட மாநாடு யாழ். புல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ மற்றும் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் என் சண்முகலிங்கன், பேராசிரியர் எஸ் சத்தியசீலன், கலாநிதி நொயல் நடேசன் (அவுஸ்திரேலியா), கலாநிதி என் நரேந்திரன் (அவுஸ்திரேலியா), பேராசிரியர் எம் சின்னத்தம்பி, திரு ரி கொன்ஸ்ரன்ரைன் (ஜக்கிய இராட்சியம்), திரு எம் இராமதாசன், பேராசிரியர் வி பி சிவநாதன் ஆகியோர் விஷேட உரைகளை ஆற்றினர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் உல்லாச விடுதிகள் பயணத்துறை தொடர்பாக ரி கொன்ஸ்ரன்ரைனின் உரையும் அதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் www.dailymirror.lk/print/index.php/opinion1/3405
வடக்கு கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத் துறையையும் அதனை சந்தைப்படுத்தும் விதி முறைகளையும் எடுத்துக் கொண்டால் அவை வடக்கு மாகாணம் அல்லது கிழக்கு மாகாணம் அல்லது வட-கிழக்கு மாகாணம் என்று ஒரு தனி அலகாகப் பிரித்தெடுத்து சந்தைப்படுத்தவோ இயக்கவோ முடியாது. அதற்குரிய பாரிய தனிப்பட்ட சந்தை இல்லை என்பதே எனது அபிப்பிராயம். எனவே உல்லாசப் பயணத்துறையைப் பொறுத்தவரை தமிழ்ப் பிரதேசங்களின் வியாபாரத் திட்டங்கள் சந்தைப்படுத்தும் திட்டங்கள் முழுவதும் முழுமையான சிறீலங்காவையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
கடந்த வருடம் மட்டும் சிறீலங்காவிற்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளின் தொகை 439 000 ஆக இருந்தது. சிறீலங்காவின் உல்லாசப் பயணத்துறை வரலாற்றில் 2004ம் ஆண்டே அதிகமான உல்லாசப் பயணிகள் வருகை தந்தனர். இத்தொகை 5666 202 ஆக இருந்தது. இதன்மூலம் 2004ம் ஆண்டு நாட்டிற்கு 416 மில்லியன் USடொலர்கள் வருவாயாகக் கிடைத்தது.
அத்துடன் 2004ம் ஆண்டு 112 000 பேர் உல்லாசப் பயணத்துறை தொடர்பான தொழில்வாய்ப்பை பெற்றிருந்தனர். இலங்கை உல்லாசப் பயணத்துறை அமைச்சின் திட்டத்தின்படி 2011ம் ஆண்டு 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் நாட்டிற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இக்கணிப்பு எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்றொரு கேள்வி எழுகின்றபோதிலும் World Tourist Organisation போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் கணிப்பின்படி சிறீலங்காவின் பயணத்துறை பெரிய வளர்ச்சியை வருங்காலங்களில் அடையும் என திட்டவட்டமாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதாவது ஒரு விடயத்தை நாம் சந்தைப் படுத்தும்போது அல்லது தூரநோக்கான வழிமுறைத் திட்டங்களை வகுக்கும்போது அதன் பலம் – பலவீனங்களை ஆராய்வது முக்கிய விடயமாக அமைகின்றது. உலகிலுள்ள பல நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறீலங்காவிற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறீலங்கா தனது 65 525 சதுர கிலோமீற்ரர் குறுகிய நிலப்பரப்பினுள் சகலவிதமான இயற்கை வழங்களையும் வெப்ப நிலைகளையும் உள்ளடக்கி இருக்கின்றது. மலைப்பிரதேசம், குளிர் பிரதேசம், உலர் பிரதேசம், வனவிலங்குகள் பிரதேசம், மலைப்பிரதேசம், காடுகள், சிற்ப ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள், குளங்கள், ஆறுகள் என பல தரப்பட்ட வித்தியாசமான விடயங்களை ஒரு குறுகிய நிலப்பரப்பினுள் உள்வாங்கி அமைந்துள்ளது. எனவே வடகிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறை வியாபார சந்தைப்படுத்தும் அணுகுமுறைகள் சகல விடயங்களையும் உள்வாங்கி அதன் சிறப்புக்களை ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சந்தைப்படுத்துதல் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. சிறீலங்காவின் உல்லாசப் பயணத்துறை படத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணம் ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கின்றது. இக்கால கட்டத்தில் இச்சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் உல்லாசப் பயணத்துறையை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
தமிழ்ப் பிரதேசங்களின் கலை, கலாச்சாரம், இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதற்குரிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டு அமைக்கப்படல் வேண்டும்.
சிங்களப் பிரதேசங்களின் உல்லாசப் பயணத்துறை 1966ம் ஆண்டிலிருந்து திட்டமிட்ட முறையில் முன்னேற்றப் பட்டுள்ளது. எசல பெரகரா, Navam Perhera, Kelenyia Duruthu Perhera, New Year Celebration, Vesak, Sri Lanka Pilgremade, போயா தினங்கள் உலக உல்லாசப் பயணத்துறை சந்தைகளில் முதன்மை படுத்திக்கொண்டன.
சிறீலங்காவின் ஏனைய பிரதேசங்களைப்போல வடக்கு கிழக்கு மாகாணமும் உல்லாசப் பயணத்துறையில் ஒரு முக்கிய இடமாக திகழ இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது: புலம்பெயர்ந்த தமிழர்களில் அதிலும் குறிப்பாக இரண்டாவது தலைமுறை தமிழர்களின் பிரயாணமும் அதன் மூலமாக உள்வாங்கப்படும் அந்நிய செலவாணியும்.
இரண்டாவது: இன்று சிறீலங்காவின் அதிகூடிய உல்லாசப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தருகின்றனர். எனவே இந்திய உல்லாசப் பயணிகளை தமிழ்ப் பிரதேசங்களுக்கு வரவழைப்பதற்கு வரலாறு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அதிக வழிமுறைகள் இருக்கின்றன.
தமிழ்ப் பிரதேசங்களின் உல்லாசப்பயண வளர்ச்சியைப் பொறுத்தவரை இப்பகுதியின் அரசியல்வாதிகளும் கல்விமான்களும் ஆரம்பத்திலேயே இருந்து மத்தியுடன் முழுமையாகப் பங்கெடுத்து இப்பிதேசங்கள் சர்வதேச சந்தையில் முக்கியப்படுத்த அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எமது பிரதேசங்களின் இயற்கை வளங்கள் இயற்கைக் காட்சிகள் எம்மவருக்குத்தான் அதிகம் தெரியும்.
இன்று சிறீலங்காவிற்கு வருகை தருபவர்களில் 99.9 வீதமானோர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகவே நாட்டினுள் வருகின்றனர். அமைச்சின் திட்டத்தின்படி வருகின்ற 6 வருடங்களில் உல்லாசப் பயணிகளின் வருகை 8.2 மடங்காக அதிகரிக்க திட்டங்கள் உள்ளது. இத்திட்டம் யதார்த்தமாகக் கருதுமிடத்து 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் விமானம் ஊடாக மட்டும் நாட்டிற்குள் வரமுடியாது. எனவே கடல் மார்க்கமாக போக்குவரத்துகள் விஸ்தரிப்பது இன்றியமையாது.
கடற்பரப்பிலான போக்குவரத்து விஸ்தரிக்கப்படும் போது முதலில் தமிழ்ப் பிரதேசங்கள்தான் இதன்மூலம் பயனடையப் போகின்றது. இலங்கை ஒரு தீவாக இருக்கின்ற போதிலும் 99.9 வீதமான மக்கள் விமானம் மூலம் நாட்டிற்குள் வருவது வழமைக்கு மாறானது.
இந்த நிலைமை அரசியல் காரணங்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் இந்நிலைமை வருங்காலங்களில் மாறுவதற்கு அதிக சந்தர்ப்பம் இருப்பதையும் நாம் முற்றாக உணர வேண்டும்.
உல்லாசப் பயணத்துறையில் உள்ள நன்மைகளை நாம் ஆராயும்போது அதன் பின்னடைவுகளையும் தீமைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். இன்று சிறுவர்களின் பாலியல் செயற்பாடுகளில் சிறீலங்காவின் பெயர் முன்னிலையில் இருக்கின்றது.
போதைவஸ்து விபச்சாரம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள் உலக உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சியின் கடுமையான விளைவுகள். சட்டங்கள் ஆயிரம்தான் ஏற்படுத்தினாலும் மக்களின் பூரண ஒத்துழைப்பு இன்றி இவற்றைத் தடுக்க முடியாது.
அண்மையில் வெளிவந்த கணிப்பின்படி சிறீலங்காவில் 10 000க்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவை மூர்க்கத்தனமாகக் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
எந்தவொரு வளர்ச்சியும் நாட்டு மக்களின் சுபீட்சத்திற்கு வழிசமைக்க வேண்டுமே தவிர அந்த நாட்டில் அரசியல் பொருளாதார நிலைமையை தகாத முறையில் பாவிக்க இடமளிக்கக் கூடாது. இவ்வாறான குற்றச் செயல்கள் பல நாடுகளை தொடர்புபடுத்தி கூட்டாக செயற்படுவதினால் இவற்றைத் தடுப்பதிலும் நாம் ஏனைய நாடுகளுடன் கூட்டாக செயற்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்வதில் இங்கு தொடர்ச்சியாக வாழ்ந்த மக்களுக்குத்தான் பூரண உரிமை இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்த பணத்தை முதலீடு செய்பவர்கள் இங்குள்ள சட்ட திட்டங்களுக்கும் வழிமுறைகளுக்கும் அமைவாகவே செயற்பட வேண்டுமே தவிர பொருளாதாரத்தின் பலத்தால் அவர்கள் முதன்மை அடையக்கூடாது. எனவே இங்கு வாழும் மக்களும் அதன் கல்விமான்களும் உத்தியோகத்தர்களும் அரசியல்வாதிகளும் கூட்டாக அமைக்கும் திட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாம் எமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.