2010

2010

மக்கள் விடுதலை முன்னணி தூதுக்குழு இன்று வன்னிக்கு விஜயம் – அநுர குமார

anurakumara.gifமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவொன்று வன்னிகான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது வவுனியாவிலுள்ள இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் கண்டறியப்படவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா தெரிவித்தார். மூன்று நாட்களாக அமையவுள்ள இந்த விஜயத்தின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணுமாறு டில்லியிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை – பீரிஸ்

g.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயத்தின்போது இலங்கை இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா எந்த அழுத்தமும் வழங்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை தொடர்பிலான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும் அதேநிலைப்பட்டிலேயே அந்நாட்டு எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் (பி.ஜே.பி.) இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய அமைச்சர் பீரிஸ் அவ் விடயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்களை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது;

“புதுடில்லி விஜயத்தின்போது ஜனாதிபதி தலைமையில் நாம் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்படப் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்து பேசினோம். அது மட்டுமல்லாது தமிழ் நாட்டு எம்.பி.க்கள் 21 பேரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தனர். இதன்போது அரசியல் தீர்வு பற்றித் தமிழ்க் கட்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பேச்சுகள் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்.

அது மட்டுமல்லாது இந்தப் பேச்சுகளை முன்னெடுத்து செல்லவிருப்பது பற்றியும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினோம். இதேநேரம், இந்திய அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்த அழுத்தங்களும் வரவில்லை. இது தான் தீர்வு. இதைத்தான் நீங்கள் வழங்க வேண்டும் என்றெல்லாம் எந்த அழுத்தத்தையும் புதுடில்லி எமக்கு வழங்கவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்புகள் மிகவும் வெளிப்படையானதாகவே இருந்தது. இந்தியா அதனது கருத்துகளை கூறியது. நாம் எமது முன்னுரிமைகள் மற்றும் நோக்கங்கள் பற்றி அவர்களுக்கு விளக்கிக் கூறினோம். அந்த வகையில் சந்திப்புகளானது மிகவும் சுமுகமானதும் முன்னேற்றங்கள் மிக்கதுமாக இருந்தன.அது மட்டுமல்லாது இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நெருங்கிய உறவு இருந்து வரும் நிலையில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் இல்லை.

அத்துடன், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜையும் நாம் சந்தித்துப் பேசினோம். இலங்கை தொடர்பாக காங்கிரஸ் அரசாங்கம் பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையை பி.ஜே.பி.யும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதில் இந்திய அரசாங்கம் சந்தேகமடைந்தது போல் எதிர்க்கட்சியும் சந்தேகப்படுவதாக அவர் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவிகளுக்கும் சுஷ்மா ஸ்வராஜ் இணக்கம் வெளியிட்டார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.அது மட்டுமல்லாது இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் இந்திய அரசாங்கம் போலவே எதிர்க்கட்சியும் ஏற்றுக் கொள்வதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்” என்றார்.

டக்ளஸ் மீதான வழக்குகள் குறித்து மத்திய அரசுக்கு தகவல் இல்லை ஊடகங்கள் மூலமே அறிந்தேன்; சிதம்பரம்

douglas-devananda.jpgஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பத்திரிகைகள் மூலம்தான் தமக்குத் தெரிய வந்தது என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை சந்தித்துவிட்டு வெளியே வந்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் வந்திருந்தடக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவரை கைது செய்வதற்குப் பதிலாக அரசாங்க வரவேற்பளித்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

“டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் வழக்கு உள்ளது பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை. செய்தித்தாள்கள் மூலம்தான் இதுபற்றி அறிந்துகொண்டேன். இது குறித்த நீதிமன்றத் தீர்ப்புகள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று அவர் கூறினார். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்த குண்டுவெடிப்பு தமக்கு அச்சுறுத்தலா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் அப்படிக் கருதவில்லையென்றும் எல்லா உயிர்களும் சமம்தான் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ரயில்பாதை தகர்ப்புக்கு ஜெலட்டின் குச்சிகள் பயன்பாடு

track.gifவிக்கிர வாண்டி அருகே சித்தணி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தண்டவாளத்தை தகர்க்க ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாமென கருதுவதாக ரெயில்வே பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெலட்டின் குச்சிகள் வழக்கமாக பாறைகளை வெடிவைத்து தகர்க்க பயன்படுத்தப்படுகின்றன. ஜெலட்டின் குச்சிகளை வைத்து மின் இணைப்பு கருவியின் மூலம் வெடிக்கச்செய்து தண்டவாளத்தை தகர்த்து இருக்கலாமென அந்த வட்டாரங்கள் கூறின.

பூநகரி-குருநகர் படகு சேவை நேற்று ஆரம்பம்

பூநகரிக்கும் யாழ்-குருநகருக்கும் இடை யிலான படகுச் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள், பிரதியமைச் சர்கள், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு இந்த படகுச் சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்தப் படகுச் சேவை நடத்தப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக நான்கு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் மூலம், தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை இந்த படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் பெரிதும் நண்மையடையவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பூநகரியிலிருந்து குருநகருக்கு தற்பொழுது சென்றுவரும் பொதுமக்கள் வழங்கும் பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக படகின் மூலம் செல்லும் பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி – குருநகர் பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ‘ஜெர்மன் வாரம்’ நடைபெறுகிறது!

Germany_Flagயாழ்ப் பாணத்தில் இன்று முதல் (14-06-2010) ‘ஜேர்மன் வாரம்’ நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஐந்து நாட்களுக்கு நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு ஜேர்மன் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் யாழ்.கோவில் வீதியிலுள்ள ஜி.ரி.இசட் நிறுவன விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நிகழ்த்தவுள்ளார். 

தொடர்ந்து இன்று மாலை யாழ. பொதுநூலக மண்டபத்தில் ‘யாழ்ப்பாணத்தில் ஜேர்மன் வாரம்’ வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும். நாளை 15ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையான நிகழ்ச்சிகள் யாவும் யாழ். பிரதான வீதியிலுள்ள கலைத்தூது கலையகத்தின் வளாகத்தில் நடைபெறும்.

தமிழ் மொழியிலான அரங்க நிகழ்வு 15ம் திகதி நடைபெறும். 16ம் திகதி ‘ஜெர்மனியில் கல்விகற்றல்’ எனும் தலைப்பில் ‘டாட்’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஹெய்டி ஸ்ரெய்னர் உரையாற்றுவார். அன்று மாலையிலிருந்து 18ம் திகதி மாலை வரை ஜேர்மன் மொழியலான திரைப்படங்கள் காண்பிக்கப்படும். 

18ம் திகதி மாலை தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜெர்மன் சேர்பிய அணிகளுக்கிடையிலான போட்டி திரையில் ஒளிபரப்பப்படும்.  நிகழ்ச்சிகளுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெர்மன் வார’ நிகழ்வுகள் கொழும்பிற்கு வெளியே முதற் தடவையாக   இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

”முல்லைத்தீவில் 22 000 வீடுகள் அழிவடைந்துள்ளது.” முல்லை அரச அதிபர்

Imelda_Sugumar_GAமுல்லைத் தீவு மாவட்டத்தில் மட்டும் போரின் காரணமாக 22 ஆயிரம் வீடுகள் முற்றாகச் அழிவடைந்துள்ளதாக முலலைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ஐயாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றை மீளமைப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், முல்லை மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மட்டும் 60 வீதமான மக்கள் மிள்குடியேற்றப்பட்டு உள்ளதாகவும், முல்லை மாவட்டத்தில் எல்லாமாக இதுவரை 13 612 குடும்பங்களைச் சேர்ந்த 39 470 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெடி பொருட்கள் அகற்றும் பணிகள்  நிறைவடைந்ததும் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் முதன்மையான தொழில் விவசாயமாகும். இவ்வருட காலபோகத்தில் 35 ஆயிரம் ஏக்கரில் நெல் விதைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், கைவிடப்பட்ட குளங்கள், காணிகளை திருத்துவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குமுதினி படகில் பயணிக்க ‘டோக்கன்’ முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

Kumudini_Boatகுறிக் கட்டுவான் – நெடுந்தீவிற்கிடையே சேவையில் ஈடுபட்டுவரும் குமுதினி படகில் பயணிப்பதற்கு பயணிகளுக்கு இப்போது ‘டோக்கன்’ முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது. குமுதினி படகு அடிக்கடி பழுதடைந்து வருவதால் ஒரு தடவையில் நூறு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்காக ஒரு தடவையில் நூறு பயணிகளுக்கு மட்டுமே ‘டோக்கன்’ வழங்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதகாரி தெரிவித்துள்ளார்.

Kumudini_Boatகுமுதினி படகில் முன்னர் நூறுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை, இப்படகு அடிக்கடி பழுதடைந்த வருவதால் இதற்கான மாற்று ஒழங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நெடுந்தீவு பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நயினை நாகபூசணி அம்மன் திருவழாவில் அதிகளவிலான நகைகள் களவு போயின!

Naagapoosani_Amman_Kovilபல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நயினை நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றத் திருவிழாவில் அதிகளவு நகைள் களவாட்டப்பட்டுள்ளன. இம்முறை நடைபெற்ற  இவ்வாலயத் திருவிழாவில் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர். Jun 12 2010 நடைபெற்ற திருவழாவில் 18 பவுண் வரையிலான தங்க நகைகளை மக்கள் கள்வர்களிடம் பறிகொடுத்துள்ளனர்.

இக்களவுகளில் பெண்களே அதிகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருவிழாவில் பெண்களின் பக்கம் ஆண்கள் சென்றால் பெண்கள் சந்தேகப்பட்டு அவதானமாக இருப்பார்கள் என்பதனால் பெண்களே பெண்களின் பக்கம் நெரிசலாக இருக்கும் போது சாதுரியமாக நகைகளை அபகரித்துக்கொண்டு நழுவி விடுவதாக அக்கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

Naagapoosani_Amman_Kovilநடைபெறும் இக்களவுகள் காரணமாக பக்தர்கள் அவதானமாக இருக்கமாறும் கூடியவரை கோவிலுக்கு வரும்போது அதிகமான தங்க  நகைகள் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நயினை நாகபூசணி அம்மன் திருவிழாவிற்கு  அதிகளவு பக்தர்கள்  சென்றதால் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் முப்பதிற்கும் மேற்பட்ட படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. படகுகளில் மக்கள் பாதுகாப்பு அங்கிகள் அணிந்தே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!!

ATN_Jewelersகிழக்கு லண்டன் ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக் கடையில் தங்கள் சேமிப்பிற்காக நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் ஆயிரக் கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் செலுத்திய கட்டுப் பணத்தையும் இழந்து நிர்க்கதியாகி உள்ளனர்.உரிமையாளர்(கள்) தலைமறைவான நிலையில் வாடிக்கையாளர்கள் நகைக்கடைக்கும் வீட்டுக்குமாக அலைகின்றனர்.

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடை அண்மைக் காலமாகப் பூட்டப்பட்டு உள்ளது. இவர்களிடம் நகைச் சீட்டுப் போட்ட பலரும் தங்களுடைய பணத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர்.

ATN_Jewelersஏரிஎன் ஜவலர்ஸில் நகைச்சீட்டுப் போட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்னதாகவே லண்டன் குரலுக்கு இது பற்றி அறியத் தந்தனர். அக்குடும்பத்தினர் 2008 பிற்பகுதியில் ஏரிஎன் ஜீவலர்ஸில் நகை வாங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏரிஎன் ஜீவலர்ஸ் அக்குடும்பத்தினரை நகைச்சீட்டில் சேர வற்புறுத்தினர். பெண்களுக்கு நகைகள் மீதுள்ள மோகத்தை குறிவைத்து ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைச்சீட்டில் ஏராளமானவர்களை இணைத்துக் கொண்டனர்.

குறிப்பிட்ட குடும்பத்தினர் 13 மாத கால நகைச்சீட்டில் இணைந்து கொண்டனர். சீட்டு முடிவில் அவர்களுக்கு 13 பவுண் நகைகொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏரிஎன் ஜிவலர்ஸ் அவர்கள் இரு மாதம் 5 நாட்கள் தாமதமாகக் கட்டியதற்காக மாதத்திற்கு ஒரு பவுண் வீதம் 2 இரு பவுண்களைக் கழித்துக் கொண்டனர். இது குறித்து சீட்டின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டு இருக்கவில்லை.

மிகுதி 11 பவுண்களுக்கும் சரியாக நகைகள் கொடுக்கப்படவில்லை. தனித் தங்க நகைகளுக்குப் பதிலாக கல் பதித்த இரு நெக்லஸ் நகைகள் (ஒவ்வொன்றும் நான்கு பவுண்கள்) வழங்கப்பட்டது. கல்லின் நிறைக்கான தங்கம் சீட்டுப் பிடித்தவர்களுக்கு நட்டமாகியது.

மேலும் ஏரிஎன் ஜீவலர்ஸினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு தங்க நாணயங்கள் (ஒவ்வொன்றும் ஒரு பவுண்) 22 கரட் தரம் இல்லாதவை என்பதனை நகைவினைஞர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏரிஎன் ஜீவலர்ஸில் நகைச்சீட்டு போட்டவர்களிடம் இருந்து இவ்வாறான கதைகள் பல தாராளமாகவே வெளிவருகின்றது. இதனைவிட இன்னும் பலருக்கு நகைச்சீட்டின் எப்பெறுமதியும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஏரிஎன் ஜீவலர்ஸிடம் சென்று மன்றாடி தனது நகைச்சீட்டின் பெறுமதிக்கு காசோலையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் மீளவும் அவரிடமே வந்துவிட்டது.

சில வாரங்களுக்கு முன்னதாக ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கு ‘ஏரிஎன் சொப்’ எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. ஆயினும் தொடர்ந்தும் கடை பூட்டப்பட்டே உள்ளது.

ATN_Jewelersஏரிஎன் ஜீவலர்ஸ் சர்ச்சைக்கு உள்ளானது இது முதற்தடவையல்ல. கிறடிட்காட் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கும் வோல்தம்ஸ்ரோ இளைஞர் குழுவுக்கும் நகைக் கடையிலேயே மோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஏரிஎன் ஜீவலர்ஸ் உடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.