கிழக்கு லண்டன் ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக் கடையில் தங்கள் சேமிப்பிற்காக நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் ஆயிரக் கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் செலுத்திய கட்டுப் பணத்தையும் இழந்து நிர்க்கதியாகி உள்ளனர்.உரிமையாளர்(கள்) தலைமறைவான நிலையில் வாடிக்கையாளர்கள் நகைக்கடைக்கும் வீட்டுக்குமாக அலைகின்றனர்.
ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடை அண்மைக் காலமாகப் பூட்டப்பட்டு உள்ளது. இவர்களிடம் நகைச் சீட்டுப் போட்ட பலரும் தங்களுடைய பணத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர்.
ஏரிஎன் ஜவலர்ஸில் நகைச்சீட்டுப் போட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்னதாகவே லண்டன் குரலுக்கு இது பற்றி அறியத் தந்தனர். அக்குடும்பத்தினர் 2008 பிற்பகுதியில் ஏரிஎன் ஜீவலர்ஸில் நகை வாங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏரிஎன் ஜீவலர்ஸ் அக்குடும்பத்தினரை நகைச்சீட்டில் சேர வற்புறுத்தினர். பெண்களுக்கு நகைகள் மீதுள்ள மோகத்தை குறிவைத்து ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைச்சீட்டில் ஏராளமானவர்களை இணைத்துக் கொண்டனர்.
குறிப்பிட்ட குடும்பத்தினர் 13 மாத கால நகைச்சீட்டில் இணைந்து கொண்டனர். சீட்டு முடிவில் அவர்களுக்கு 13 பவுண் நகைகொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏரிஎன் ஜிவலர்ஸ் அவர்கள் இரு மாதம் 5 நாட்கள் தாமதமாகக் கட்டியதற்காக மாதத்திற்கு ஒரு பவுண் வீதம் 2 இரு பவுண்களைக் கழித்துக் கொண்டனர். இது குறித்து சீட்டின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டு இருக்கவில்லை.
மிகுதி 11 பவுண்களுக்கும் சரியாக நகைகள் கொடுக்கப்படவில்லை. தனித் தங்க நகைகளுக்குப் பதிலாக கல் பதித்த இரு நெக்லஸ் நகைகள் (ஒவ்வொன்றும் நான்கு பவுண்கள்) வழங்கப்பட்டது. கல்லின் நிறைக்கான தங்கம் சீட்டுப் பிடித்தவர்களுக்கு நட்டமாகியது.
மேலும் ஏரிஎன் ஜீவலர்ஸினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு தங்க நாணயங்கள் (ஒவ்வொன்றும் ஒரு பவுண்) 22 கரட் தரம் இல்லாதவை என்பதனை நகைவினைஞர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஏரிஎன் ஜீவலர்ஸில் நகைச்சீட்டு போட்டவர்களிடம் இருந்து இவ்வாறான கதைகள் பல தாராளமாகவே வெளிவருகின்றது. இதனைவிட இன்னும் பலருக்கு நகைச்சீட்டின் எப்பெறுமதியும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஏரிஎன் ஜீவலர்ஸிடம் சென்று மன்றாடி தனது நகைச்சீட்டின் பெறுமதிக்கு காசோலையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் மீளவும் அவரிடமே வந்துவிட்டது.
சில வாரங்களுக்கு முன்னதாக ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கு ‘ஏரிஎன் சொப்’ எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. ஆயினும் தொடர்ந்தும் கடை பூட்டப்பட்டே உள்ளது.
ஏரிஎன் ஜீவலர்ஸ் சர்ச்சைக்கு உள்ளானது இது முதற்தடவையல்ல. கிறடிட்காட் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கும் வோல்தம்ஸ்ரோ இளைஞர் குழுவுக்கும் நகைக் கடையிலேயே மோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஏரிஎன் ஜீவலர்ஸ் உடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.