
வரலாறுகள் ஆராயப்பட வேண்டும் என்பது முக்கியமானது. அதில் தவறுகள் இருப்பின் அவற்றை திருத்தி செம்மையாக நடக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். ஈழமக்களின் துயரங்கள் இன்னமும் நின்றபாடில்லை. அவை மேலும் தொடருவதற்கான வாய்ப்புக்களே தெரிகின்றன. ஏன்? ஈழத்தமிழர்கள் ஒரு போதும் சமுதாயத்தை நேசிப்பது கிடையாது. சமூகங்கள் ஒன்றுபட்டு வாழ்ந்ததும் கிடையாது. இப்பொழுது உள்ள இந்த நாகரீக வளர்ச்சியடைந்த தொலைத் தொடர்புகள் உலக மக்களை மிகவும் கிட்ட கொண்டு வந்துள்ள போதிலும் கூட எம்மவர்களாலே எமக்கு அழிவு, நாம் எப்போதும் ஒரு உணர்ச்சி உந்துதலுக்கு அடிமையாகவே எம்மை ஆட்படுத்தி கொண்டுள்ளோம். இதிலிருந்து எப்படி நாம் மீள வேண்டும்? மீண்டு வருவதற்கான தேவை என்ன? எதற்காக நாம் மீள வேண்டும்?
புலம்பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு இணையத்தளத்தையும் உருவாக்கி கொண்டு எந்தவொரு உடன்பாட்டிற்கும் வராமல் வரமுடியாமல் மாக்ஸியம் லெனினிஸம் பேசுவதில் யார் கெட்டிக்காரர் என்பதில் தான் நாம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம். எப்பொழுது தான் இந்த மேதாவித்தனங்கள் முடிவுக்கு வரப் போகின்றது? இவ்வளவு காலமும் நாம் காட்டிய மேதாவித்தனங்கள் போதுமானது என்றே நான் நினைக்கிறேன். அப்படியானால் இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும்?
1) எமது அரசியல் தலைமைகள் அறுபது வருடமாக ஈழத்தமிழர்களுக்கு என்னதான் செய்திருக்கிறார்கள்?
2)எல்லா இயக்கங்களிலும் நடந்த படுகொலைகளையும் வெளிக் கொணர்ந்து போராடவென வந்தவர்களை ஏன் அடித்தும் விச ஊசி போட்டும் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் எரித்தும் புதை குழிகளிலும் கொன்று தள்ளினார்கள் என உரிய விளக்கங்களை சம்மந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இப்படியான மனநோயாளிளை இனங்கண்டு நடந்து முடிந்த மனிதப் பேரழிவுகளை மீண்டும் வராது தடுக்க முடியும் என நினைக்கிறேன்.
கடந்த கால ஈழத்து அரசியலில் நாம் விட்ட தவறுகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் சில தகவல்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதில் சரி பிழை இருப்பின் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
1948 ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. எப்போதும் சுதந்திரம் கிடைத்த மக்கள் சந்தோசமாகவே இருந்திருப்பார்கள். அப்படியென்றால் தமிழர்களும் சந்தோசமாகவே இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் வாழ்வு அமைதியை இழந்திருந்தால் அங்கே பிரிவினை என்றொரு பேச்சு இருந்திருக்கும். அக்கால கட்டத்தில் பிரிவினை என்ற எண்ணம் தோன்றியிருப்பின் ஏன் இவர்கள் ஆங்கிலேயரிடம் பிரிவினை என்ற கொள்கையை வைக்கவில்லை. ஏன்? தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பெரிய படித்தவர்கள் அரசியல் வாதிகள் குறிப்பாக ஜி ஜி பொன்னம்பலம் போன்றோர் அக்கால கட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
தமிழர் இளைஞர் காங்கிரஸ் பின்பு காங்கிரசாக மாறியபோது ஜிஜி பொன்னம்பலம் தலைவராக இருந்தார். அந்த காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மூன்றாம் கட்ட தரத்தில்தான் செல்வா இருந்திருக்கிறார். அப்படி இருந்த செல்வா ஏன் தமிழரசு கட்சியை ஸ்தாபித்தார்? என்பது தான் எனது கேள்வி. ஜனநாயக முறையில் எத்தனை கட்சிகளும் ஆரம்பிக்கலாம். தவறில்லை. ஆனால் என்ன பிழையைக் கண்டு பிடித்து பிரிந்து சென்றார்? இதுவும் எனது கேள்வி. இப்படியே பல தமிழ் தலைவர்கள் எமது மக்களை ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்க வைத்து தமது அரசியல் லாபங்களுக்காகவும் சுயநல சுகபோகங்களுக்காகவும் எமது மக்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது அறுபது வருட அரசியலில் எம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. எந்த ஒரு அடிப்படைத் தேவையான பூகோள ரீதியான பரந்த சிந்தனை இல்லாமலே எமது மக்களை வெறும் உணர்ச்சியூட்டி நெருப்பாகவே அதை உருவாக்கி காய்ந்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே அரசியல் கற்றவர்களே எமது கடந்த கால வரலாற்றை ஆராயும் போது அதன் தவறுகள் வெட்ட வெளிச்சமாகவே வெளிப்படும். எமது தமிழினம் எப்பொழுதும் கடந்த கால வரலாற்றை படித்துப் பார்ப்பதற்கு விருப்பமில்லாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஏன் என்பதுதான் எமக்கு புரிவதே இல்லை. பல தடவைகள் நாம் எமது அறிவை ஒழுங்காக பயன்படுத்தி இருந்தால் இப்படியொரு முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒன்று நடக்காதவாறு தடுத்திருக்கலாம்.
தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தமது இருப்பை இழந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் இரு கட்சிகளும் சேர்ந்து தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவே பிரிவினை என்ற கோசத்தையும் சுயாட்சி சமஸ்டி ஆகியவற்றையும் முன் மொழிந்து 1977 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு வேப்பிலை அடித்து திருநீறு எறிந்து 22 பேரும் பாராளுமன்றம் சென்றார்கள். இவர்களுடைய ஆக்கிரோசமான நெருப்பான வார்த்தைகள் காற்றை விட மோசமான வேகத்தில் இளைஞர்களை வன்முறைக்கு உந்தி தள்ளியது. ஆனால் இந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எந்தவிதமான அடிப்படையான ஆயுத போராட்ட உணர்வுகளும் இருந்திருக்கவில்லை. ஆங்காங்கு நன்கு அரசியல் தெரிந்தவர்கள் தொலை நோக்கு கொண்டவர்கள் இவர்களுடைய அரசியல் தவறு என்று விமர்சித்து இருக்கிறார்கள். விமர்சித்தவர்களை கூட்டணியின் முக்கியஸ்தர்கள் துரோகிகள் என்றே வருணித்திருக்கிறார்கள். இங்குதான் கல்வியாளர்கள் மக்களை நேசித்தவர்கள் பண்புள்ளவர்கள் எல்லோரையும் அழித்தொழிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பின் பலர் உணர்ச்சி மிக்க இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எந்தவித விசாரணைகளுமின்றி விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் பல உயிர்களை சுட்டுக் கொல்கிறார்கள். இந்த கொரூர கொலைகளை த.வி.கூட்டணி எந்த கண்டனங்களுமின்றி மௌனமாகவே இருந்து இந்த படுகொலைகளுக்கு உரம் எறிந்து எண்ணை ஊற்றி ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அரசியல் சுயநல நோக்கங்களுக்கான இளைஞர் வளர்ப்புக்கள் இறுதியில் இவர்களையே கொலை செய்து விடுகிறது. தமிழ் மக்களாகிய நாங்கள் எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் எப்படி த.வி. கூட்டணியை நூறு வீதம் ஆதரித்து எமது விடிவிற்காக பாராளுமன்றம் அனுப்பினோமோ அவர்களைக் கொன்றவர்களையும் பின்பு ஆதரித்துள்ளோம். பல இயக்கங்களையும் உன்னத மனிதர்களையும் ஒன்று விடாமல் அழித்துக் கொன்ற தமிழ்ஈழ விடுதலைப் புலிகளையும் நாம் ஆதரித்துக் கொண்டுதான் இருந்தோம். இந்தக் காட்டு மிராண்டிகள் உலக அரங்கிலே எமது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மனிதர்கள் இல்லாத அளவிற்கு கொன்று புதைத்து போட்டிருந்தார்கள்.
இப்பொழுதும் கூட ஐம்பதாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கவீனர்களாகி வறுமையிலும் பிச்சைஎடுத்துக் கொண்டும் உள்ளார்கள். அவ்வளவு கொடுமைகள் நடந்து முடிந்து விட்ட நிலையிலும் பல போராளிகள் பொதுமக்கள் உயிருடனே சித்திவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையிலான புகைப்படங்கள் காட்சிகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படியான கோரமான பிடியில் இருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவேயில்லை. ஆனால் புலம்பெயர் புலிப்பினாமிகளும் அவர்கள்சார்ந்த தமிழினமும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த குற்றங்களை உணராமல் ஆராயாமல் ஈழத்தமிழ் மக்களின் குருதி காய்வதற்கு முன்னமே வட்டுக் கோட்டை தீர்மானம் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் எனக் கூறிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். உண்மையில் இதயமுள்ள மனிதர்களா இவர்கள்?
நாம் வாழும் இந்த ஐரோப்பிய நாடுகளில் எத்தகைய ஐனநாயகத்தை மனிதப் பண்பை சட்டங்களை மதித்து எப்படி வாழ்கிறார்கள். ஒவ்வொரு வேலை செய்யும் போதும் எப்படியெல்லாம் ஆராய்ந்து முடிவு எடுக்கிறார்கள் என்பதெல்லாம் எம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மாத்திரம் மனிதப்பண்பை இழந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
மீண்டும் ஜிரிவி தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டுள்ளது. ஜிரிவி யின் அழுகுரல்கள் உண்மையில் எந்தக் கருங்கல் இதயம் கொண்டவர்களையும் கரைத்து விடும் சோகம் வேதனை நிறைந்தது. ஆனால் இந்த அழுகுரல்களால் தமிழரைத் தவிர வேறெந்த இன மக்களையும் எம்மோடு சேர்ந்து கவலைப்பட வைக்க முடியவில்லை. ஏன்? ஜிரிவி உரிமையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் அனுதாபங்களில் தான் அவர்களுடைய பிழைப்பு ஓட்டப்படுகிறது. இது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் புரிந்த ஒன்று. எப்படி இந்த அரசியல் அறிவு மனிதப் பண்பு இரக்கம் இல்லாத பிரபாகரனை இந்த தமிழனம் ஆதரித்ததோ அதே போல் நாடு கடந்த அரசாங்கத்தையும் ஆதரிக்க கோருகின்றது. பிரபாகரனை ஆதரித்த குற்றத்திற்காக மூன்று லட்சம் தமிழர்கள் மரணத்தை அடைந்து, கைகால்களை இழந்து, முள்ளிவாய்காலில் பிரபாகரனுடைய பிணம் நாதியற்று உரிமை கோர ஒரு ஈ காக்கா கூட இல்லாமல் கோவணத்துடன் கிடந்தது செய்திகளாக வந்து சேர்ந்தது.
முப்பந்தைந்து வருட போராட்டம் அரசியல் பற்றாக்குறையாலும் சர்வாதிகார போக்காலும் தமிழ் மக்களை அநாதையான நிலைக்கு தள்ளிற்று. ஏன் இவ்வாறு தள்ளப்பட்டது என யாராலும் ஆராயப்படவில்லை. ஆனால் புலிப்பினாமிகள் தமிழ் மக்களுக்குள் இருந்த துரோகிகள் தான் காரணம் என வரலாற்றை புரட்டிச் சொல்கிறார்கள். மேலும் பிரபாகனும் அவரது குடும்பமும் தமிழ் மக்களுக்காகத்தான் உயிர் கொடுத்தார்கள் எனவும் சூரிய தேவன், கரிகாலன், ராஐகோபுரம் என்றெல்லாம் புகழ் பாடுகிறார்கள். ஆனால் தலைவரும் புலிகளும் தமது உயிர்கள் பறிக்கப்பட போகின்றன என தெரிந்தும் மோசமான கொடுமைகளை இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுக்கு செய்தார்கள்.
1)மக்களுக்காக அனுப்பப்பட்ட சீனி பருப்பு போன்றவற்றை விற்று காசு பார்த்தார்கள்.
2)சாப்பாட்டிற்கே வழியற்ற குடும்பங்களின் 10, 12 வயது பிள்ளைகளை பிடித்து சென்றார்கள். பெண் குழந்தைகளின் தலைமுடியை கட்டையாக வெட்டி இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தார்கள்.
(3)தாம் தமிழினத்தின் காவலர்கள் என சொல்லி தமது இனத்தை தாமே கொன்று குவித்து போர் குற்றம் செய்தார்கள்.
இலங்கை அரசு போர் குற்றம் செய்தது என கண்டிக்கும் நாம் புலிகள் செய்த போர் குற்றங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சுயநலம் மிக்க தமிழர்கள் தமது மக்கள் மத்தியில் அம்பலமாவார்கள். ஆனால் ஜிரிவி ஒற்றுமை இல்லை எல்லோரும் ஒன்றுபடுவோம் என்றே அறைகூவல் விடுத்துக் கொண்டு இருக்கிறது. ஏன் இவர்கள் ஒன்றுமே தெரியாத ஞான சூனியங்களாக இருக்கிறார்கள். இத்தனை அவலங்கள் நடந்து மக்களை அகதிகளாக முகாம்களிலும் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் செய்திகளை அறிந்து பார்த்த பின்பும் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தங்களை தயார்ப்படுத்தாமல் தமிழீழ அரசாங்கம் என ஒன்று தயாரித்து இருக்கிறார்கள். இவர்களுடைய தயாரிப்புக்களில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் என்ற பிரமாண்டமான படம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு கடலிலே கரைக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்திற்கான சுய விமர்சனம் இவர்களால் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை. ஓன்றுமே நடக்காத மாதிரி இப்போது மே 18 ம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அகிம்சைப் படத்தை திரைக்கு விட்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே இந்தப் படத்திற்கான விமர்சனத்தை முன்வையுங்கள்.
அத்தோடு தமிழ் மக்களே! மற்றவன் தமிழ் ஈழத்தை எடுத்துத் தருவான் நாம் இங்கிருந்து எமது பிள்ளைகளை டாக்டர்களாக்கி பட்டதாரிகளாக்கி உள்ள கலைகளெல்லாம் கற்பித்து அரங்கேற்றங்கள் செய்து, நாங்களும் வீட்டு வாசலில் ஏறினால் கார் இறங்கினால் கார் காஞ்சிபுரம், பனாரஸ் பட்டுவேட்டி -கட்டி கட்டியாய் தங்கம், வறுத்த கோழி, பீட்ஸா என தின்று குடித்து உள்ள சுக போகங்களையும் கைவிடாது- போனால் போகுது இலங்கை அரசாங்கம் இதற்கெல்லாம் ஊருக்கு போகும் போது கோபிக்கவா போகின்றது என வட்டுக் கோட்டை, நாடுகடந்த அரசாங்கம் போன்றவற்றிற்கு கைகளில் மைதடவி வாக்களித்து – ஜிரிவிக்கு தொலைபேசி எடுத்து அரசியல் விமர்சனங்ளைப் பேசிக் கொண்டு துளி இரத்தம் சிந்தாமல் ஐரோப்பாவின் ஜனநாயக உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஈழத்தின் அப்பாவி மக்களின் குருதியிலே வாழ்ந்தது போதும்!
ஐயா புலம்பெயர் தமிழினமே! ஒவ்வொருவரும் முதலில் உங்களது பிள்ளைகளைப் போல் மற்றவர்களுடைய பிள்ளைகளையும் நேசியுங்கள். ஐரோப்பாவில் இருக்கும் புலிப் பினாமிகளே! சுயநல பேய்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட வேலைக்கு உடனடியாகவே லீவு போட்டு விட்டு வைத்தியரிடம் கொண்டு ஓடுகிறீர்கள். சொல்லப் போனால் உங்களுடைய பிள்ளைகள் வைத்தியராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதற்கு துடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆண் பெண் என எந்த பேதமும் பாராமல் புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு போய் பலியிட்ட போது எத்தனை பச்சிளம் பாலகர்கள் குண்டடிபட்டு துடித்திருப்பார்கள். அதை படம் பிடித்து உங்கள் தொலைக்காட்சிகளில் கண்ணுங்கருத்துமாய் ஒளிபரப்பி காசு சேர்த்தீர்கள்.
புலி பினாமிகளே! புலம்பெயர் நாடுகளில் இருந்து எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளை தற்கொடை படைக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். தயவு செய்து பதில் தாருங்கள். ஜிரிவி அறிவிப்பாளர்களே! மிகவும் கவலை தோய்ந்ததாக முகங்களை வைத்துக் கொண்டு உணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்கிறீர்களே உங்களுடைய பிள்ளைகள் யாராவது ஈழத்தில் போராட அனுப்பப்பட்டு கொல்லப்படடுள்ளார்களா? ஈவு இரக்கம் இருந்தால் நீங்கள் விட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.
இறுதியாக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தனிநாடு பிரிந்து தான் ஆக வேண்டும். சந்தர்ப்பம் தன்னலமற்ற தியாகம் நேரம் இவைகள் சரியான தருணங்களில் பாவிக்கப்படும் போது நிச்சயம் ஈழம் மலரும். தயவு செய்து புலப்பினாமிகளே தமிழர் தொலைக்காட்சிகளே நீங்கள் ஈழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் முற்றாக ஒதுங்கி இருக்கும் பட்சத்தில் தரமான நேர்மையான மனிதநேயம் மிகுந்தவர்களால் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
முதலில் அங்குள்ள மக்களின் வறுமை அகன்று நிம்மதியாக மூன்று வேளை உணவு உண்ண ஏற்பாடு செய்ய வேண்டும். அங்குள்ள குழந்தைகளின் கல்வியை குறிப்பாக வளர்க்க வேண்டும். இவற்றை திட்டமிட்டு நடத்தி வெற்றி காணவேண்டும். ஏனெனில் சிங்கள் அரசு திட்டமிட்டு இவற்றை அழித்து கொண்டிருக்கிறது. ஆனால் புலிப் பினாமிகளே!! நீங்கள் அமெரிக்காவில் பாராளுமன்றம் கட்டவென பணம் சேர்த்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. நீங்கள் நடக்க முடியாதவைகளை சொல்லித் தான் இதுவரை காசு சேர்த்தீர்கள். இனியும் சேர்ப்பீர்கள்.
தமிழ் மக்களே! இனியும் தொடர்ந்து ஏமாளிகளாக இருக்காதீர்கள். தமிழினம் மேலும் அழிவதற்கு காரணமாக இருக்காதீர்கள்.