ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய பேட்டி பற்றிய குறிப்புகள் உள்ளடக்கிய குறிப்பேட்டை ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் சம்பா ராஜரட்னவின் உத்தரவின் பேரில் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தார். சம்பந்தப்பட்ட குறிப்பேட்டை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான் பிரதம ஆசிரியர் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கினார்.
சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இருந்து ரகசிய பொலிஸார் அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டுள்ளதாக பிரதி சட்டமாஅதிபர் வசந்த நவரட்ன நீதிமன்றத்துக்கு கூறினார்.
‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ஜென ரல் பொன்சேகாவின் நேர்காணல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அந்த சமயத்திலேயே பிரதி சட்டமா அதிபர் மேற்கூறியவாறு தெரிவித்தார். ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் சார்பாக வாதாடிய சட்டத்தரணி என். எம். சஹீட் குறிப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட நேர்காணல் உள்ளடக்கிய குறிப்பேடு மூல ஆவணம் என்பதால் அதனை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு அவர் கூறினார்.
நேர்காணல் இடம்பெற்ற குறிப்பேடு தொடராக இலக்கமிடப்படவில்லை என்று பிரதி சட்டமா அதிபர் கூறியதையடுத்து குறிப்பேட்டில் தொடர்ச்சியாக இலக்கமிடுமாறு நீதவான் உத்தரவிட்டார். ஜெனரல் பொன்சேகாவின் சார்பாக வாதாடிய சட்டத்தரணி நளின் லத்துவ ஹெட்டி குறிப்பேடு மீது நம்பிக்கை இல்லையென்று கூறினார்.
சண்டே லீடர் பத்திரிகையின் செயற்பாடுகள் அவ்வாறான நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அப்பத்திரிகை பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சர்ச்சைக்குரிய செய் திகளை பிரசுரிப்பதாகவும், இவ்வாறான ஒரு அறிக்கையை அப்பத்திரிகை வெளியீட்டின் நோக்கம் என்ன என்பதை தனக்கு விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
நேர்காணல் இடம்பெற்ற பக்கங்களுக்கு இடையே குறிப்பேட்டில் சில காலி பக்கங்களை காண முடிவதாகவும், பத்திரிகைக்கு வெளியாரிடம் இருந்து பணம் கிடைக்கும் போது ஏதேனும் தேவையானளவு நிறைப்பதற்கு அவை காலியாக விடப்பட்டுள்ளனவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவ்வாறான காலிப் பக்கங்கள் குறிப்பேட்டில் உள்ள விடயத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜுலை 12ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் ஜெனரல் பொன்சேகாவை தொடர்ந்து இராணுவ பாதுகாப்பில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.