வவுனியா விற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் நிலையங்களை மீளமைப்பதற்காக 42 கோடி ரூபா உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘உதுரு மிதுரு’ திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ‘உதுருமிதுரு’ திட்டத்திற்கான பிரசாரப் பணிகளுக்கு ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டதாக ஜே.வி.பி. எம்.பி.
ஒருவர் பாராளுமன்றத்தலி பொய்யான தகவலொன்றை தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான பிரசாரப் பணிகளுக்கு ரயில் திணைக்களத்தினூடாக 10 இலட்சம் ரூபா கூட செலவிடப்படவில்லை. எனது நேரடிக் கண்காணிப்பின் கீழே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் தவறான செய்திகளை பரப்பி சபையையும் மக்களையும் தவறாக வழிநடத்த வேண்டாமென கோருகிறேன்.
மோதல் காரணமாக சேதமான ரயில் நிலையங்களை மீளமைக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இதற்காக நிதியமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி ரயில் பாதைகளை மீளமைக்க 42 கோடி ரூபா அனுசரணை கிடைத்துள்ளது என்றார்.
262 கோடி செலவில் ரயில் பெட்டிகள்
மற்றொரு வாய்மூல வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், 2006ம் ஆண்டு முதல் ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் என்பன கொள்வனவு செய்வதற்கு 262 கோடி ரூபா செலவிடப்பட்ட தாகவும் இந்தக் காலப்பகுதியில் 100 ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் மற்றும் சிற்றுண்டி கூட பெட்டிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதில் 57 மூன்றாம் வகுப்பு பெட்டிகளும் 24 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் 6 சிற்றுண்டி கூட பெட்டிகளும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.