இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2011 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை முற்றுப்பெறும் என்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.பீ.பி.எஸ் வைத்தியரத்ன தெரிவித்தார்.
10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கௌளப்பட்டபோதும் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அப்பணி முழுமையடையவில்லை என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகள் அந்த வீடுகளில் வசிப்பவர்களின் விபரங்கள் என்பன ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.