12

12

இலங்கை பாகிஸ்தான் இருபது 20 போட்டி இன்று

0308mahela.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது 20 சர்வதேச போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.  இதில் பாகிஸ்தான் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ஷஹீட் அப்ரிடி தலைவராக செயல்படவுள்ளார்.

அத்துடன் அண்மையில் நடந்த இருபது20 உலகக் கிண்ணத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, கடைசியக நடந்த இலங்கையுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இலகு வெற்றியீட்டியது. எனவே, இன்றைய தினம் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த பழியை தீர்ப்பதற்கு இன்று முயற்சிக்கும்.  நடந்து முடிந்த பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இலங்கை அணி இருபது20 போட்டியையும் இலகுவில் விட்டுக்கொடுக்காது என்பது நிச்சயம்.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இதுவரை 5 இருபது 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.

சனத் ஜயசூரியவுடன் ஆரம்ப துடுப்பட்ட வீரராக மஹேல உடவத்த களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே இருபது20 போட்டியாக நடைபெறும் ஆட்டம் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து தேர்தல்களை நடத்துவதால் மக்கள் மத்தியில் பெரும் சலிப்பு – வாக்களிப்பு வீத வீழ்ச்சிக்கு ஐ.தே.க. கூறும் காரணம்

அரசு தொடர்ந்து பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்திவருவதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலிப்புத் தன்மையினால் வாக்களிக்கும் வீதம் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐ.தே.க., இதுவே பாரிய நிதி விரயத்துக்கும் காரணமாகியுள்ளதெனவும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்;

பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தே நாம் தேர்தல்களை எதிர்கொண்டோம். அரசாங்கம் தனது அரச பலம் மற்றும் வளங்களை பாவித்து பிரசாரங்களை முன்னெடுத்தது. இது குறித்து நாம் தெரியப்படுத்தி வந்த நிலையில், தேர்தல் ஆணையாளரிடமும் முறையிட்டோம். இந்நிலையில், எமக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தேர்தல்களை நாம் நோக்குகின்ற போது வாக்களிப்பதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 80 வீதவாக்களிப்பு இடம்பெறாதுள்ள அதேசமயம், வவுனியாவில் 50 வீதமும் ஊவாவில் 30 முதல் 35 வீதமானவர்களும் வாக்களிக்க வில்லை.

இதற்கு காரணம், அரசாங்கம் தனது லாபத்துக்காக பகுதி பகுதியாக பிரித்து தேர்தலை நடத்தும் அதேவேளை, அரசவளங்கம் மற்றும் பலத்தினை பயன்படுத்துவதேயாகும். இதனாலேயே இத்தகைய தேர்தல் பெறுபேறுகளை அரசு பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் முதல் பிரித்து பிரித்து நடத்தப்பட்ட தேர்தல்களில் வாக்களிக்காதோர் தொகை அதிகரித்திருப்பதை காணலாம். கடந்த ஒன்றரை வருடமாக அமைச்சர்கள், ஆலோசகர்கள் வேறு எந்த வேலையும் செய்யாது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அதேசமயம், அரச வளங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒன்றாக நடத்தாது பிரித்து பிரித்து நடத்துவதாலும் பெருமளவு மக்கள் பணம் அநியாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தென்மாகாணம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த அதிகாரத்தை பலப்படுத்தும் விளையாட்டை நிறுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இனியாவது முன்வரவேண்டும். குறிப்பாக மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க முன்வர வேண்டும். மாகாண சபை ஆரம்பம் முதல் அக்காலப்பகுதியில் உள்ள அரசாங்கம் வெற்றி பெற்றதை நாம் காணலாம். 89 முதல் 94 வரையும் 94 முதல் 2002 வரையும் ஆட்சியில் உள்ள அரசாங்கம் மாகாண சபைகளை கைப்பற்றியது. இந்நிலையில், இம்முறை முடிவுகள் வழமையானதே. ஊவா மாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவராக உபாலி சமரவீரவை நியமிக்க கட்சிதீர்மானித்துள்ளது

வடக்கின் வசந்தம் செயலணியின் மீளாய்வுக் கூட்டம் இன்று

basil-raja.jpgவடக்கின் வசந்தம் செயலணியின் மீளாய்வுக் கூட்டம் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல முக்கியஸ்தர்கள்  கலந்து கொள்வர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பயணப்பாதுகாப்பு அனுமதி வழங்கும் நடைமுறையை இலகுபடுத்துவது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதையல் தோண்ட சென்ற 10 பேர் கைது

ரிடிகல காட்டுப்பகுதியிலுள்ள கீரியகஸ்வெவ பிரதேசத்தில் புதையல் தோண்டச் சென்ற பத்துப் பேரை நேற்று முன்தினம் இரவு ஹபரணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது :-

ஹபரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்று பொலிஸ் குழு புதையல் தோண்டியோரையும் அதற்கு பயன்படுத்திய பொருட்கள் தீ. ஜி. றி. வி. 5808 இலக்கக் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கொழும்பு, மாத்தறைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களை கெக்கிராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

musharap.jpgபாகிஸ் தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் பதவி வகித்தபோது, 2007-ம் ஆண்டு அவசரகால நிலையை அமுல் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகளை அவர் சிறையில் அடைத்தார். இவ்விதம் இரண்டு வாரகாலம் நீதிபதிகளை சிறையில் அடைத்தது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும். எனவே அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு பாகிஸ்தான்  நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்லம் குமான் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அக்மல் ரஸா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்

வெற்றி பெற்றோர் விபரம்: வர்த்தமானி அறிவிப்பு இவ்வாரம்

ஊவா மாகாண சபை மற்றும் யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு பதுளை, மொனராகலை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா அரச அதிபர்களிடம் கோரியுள்ளதாகவும், அதேவேளை, போனஸ் ஆசனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளி யிடப்படவுள்ளது.