தொடர்ந்து தேர்தல்களை நடத்துவதால் மக்கள் மத்தியில் பெரும் சலிப்பு – வாக்களிப்பு வீத வீழ்ச்சிக்கு ஐ.தே.க. கூறும் காரணம்

அரசு தொடர்ந்து பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்திவருவதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலிப்புத் தன்மையினால் வாக்களிக்கும் வீதம் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐ.தே.க., இதுவே பாரிய நிதி விரயத்துக்கும் காரணமாகியுள்ளதெனவும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்;

பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தே நாம் தேர்தல்களை எதிர்கொண்டோம். அரசாங்கம் தனது அரச பலம் மற்றும் வளங்களை பாவித்து பிரசாரங்களை முன்னெடுத்தது. இது குறித்து நாம் தெரியப்படுத்தி வந்த நிலையில், தேர்தல் ஆணையாளரிடமும் முறையிட்டோம். இந்நிலையில், எமக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தேர்தல்களை நாம் நோக்குகின்ற போது வாக்களிப்பதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 80 வீதவாக்களிப்பு இடம்பெறாதுள்ள அதேசமயம், வவுனியாவில் 50 வீதமும் ஊவாவில் 30 முதல் 35 வீதமானவர்களும் வாக்களிக்க வில்லை.

இதற்கு காரணம், அரசாங்கம் தனது லாபத்துக்காக பகுதி பகுதியாக பிரித்து தேர்தலை நடத்தும் அதேவேளை, அரசவளங்கம் மற்றும் பலத்தினை பயன்படுத்துவதேயாகும். இதனாலேயே இத்தகைய தேர்தல் பெறுபேறுகளை அரசு பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் முதல் பிரித்து பிரித்து நடத்தப்பட்ட தேர்தல்களில் வாக்களிக்காதோர் தொகை அதிகரித்திருப்பதை காணலாம். கடந்த ஒன்றரை வருடமாக அமைச்சர்கள், ஆலோசகர்கள் வேறு எந்த வேலையும் செய்யாது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அதேசமயம், அரச வளங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒன்றாக நடத்தாது பிரித்து பிரித்து நடத்துவதாலும் பெருமளவு மக்கள் பணம் அநியாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தென்மாகாணம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த அதிகாரத்தை பலப்படுத்தும் விளையாட்டை நிறுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இனியாவது முன்வரவேண்டும். குறிப்பாக மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க முன்வர வேண்டும். மாகாண சபை ஆரம்பம் முதல் அக்காலப்பகுதியில் உள்ள அரசாங்கம் வெற்றி பெற்றதை நாம் காணலாம். 89 முதல் 94 வரையும் 94 முதல் 2002 வரையும் ஆட்சியில் உள்ள அரசாங்கம் மாகாண சபைகளை கைப்பற்றியது. இந்நிலையில், இம்முறை முடிவுகள் வழமையானதே. ஊவா மாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவராக உபாலி சமரவீரவை நியமிக்க கட்சிதீர்மானித்துள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *