ரிடிகல காட்டுப்பகுதியிலுள்ள கீரியகஸ்வெவ பிரதேசத்தில் புதையல் தோண்டச் சென்ற பத்துப் பேரை நேற்று முன்தினம் இரவு ஹபரணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது :-
ஹபரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்று பொலிஸ் குழு புதையல் தோண்டியோரையும் அதற்கு பயன்படுத்திய பொருட்கள் தீ. ஜி. றி. வி. 5808 இலக்கக் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கொழும்பு, மாத்தறைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்களை கெக்கிராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.