சர்வதேச உதவியுடன் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்றிருந்த சந்தேகம் கே.பி.யைக் கைது செய்ததன் மூலம் முற்றாக நீங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் விலி கமகே நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற வீரதரு உதான புலமைப் பரிசில் நிதியத்திற்கு நிதி கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றுகையில் கூறினார். நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் டாக்டர் சம்பா அலுத்வீர தலைமையில் வைத்திய சாலை வளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் விலிகமகே தொடர்ந்து உரையாற்றுகையில்;
எமது வாழ்க்கையில் அரைவாசிக் காலத்தில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் உதவியுடன் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்ற சந்தேகம் ஒரு சிலரிடம் நிலவியது. விடுதலைப்புலிகளின் புதிய தலைவரை கைது செய்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்று எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர இராணுவத்தினர் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர்.
முப்பதாயிரம் படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். 23 ஆயிரம் பேர் வரை அங்கவீனமுற்றுள்ளனர். ஆறாயிரம் பேர் வரை முற்றாக அங்கவீனர்களாகியுள்ளனர். இதனால், அறுபதினாயிரம் குடும்பங்கள்வரை பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உதவி செய்து பராமரிப்பது எமது பொறுப்பாகும். இவர்களுக்காக வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் காணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரம் வீடுகளை கட்டுவதே எமது இலக்கு. இதற்காகவே அபிவெனுவென் அபி திட்டத்தை ஆரம்பித்தோம்.
எமது சேவா வனிதா இயக்கத்தின் தலைவியின் கருப் பொருளுக்கிணங்க வீர தருஉதான திட்டத்தை ஆரம்பித்து இராணுவ வீரர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக உதவி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதற்காகவே இன்று நிதி உதவி செய்யப்பட்டது. யுத்த வீரர்களைப் போன்று வைத்தியசாலை டாக்டர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் யுத்த காலத்தில் அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்கள். அவர்களின் சேவைகளும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்.