August

August

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்ற சந்தேகம் கே.பி. கைதால் நீங்கியது – பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்

kp00.jpgசர்வதேச உதவியுடன் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்றிருந்த சந்தேகம் கே.பி.யைக் கைது செய்ததன் மூலம் முற்றாக நீங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் விலி கமகே நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற வீரதரு உதான புலமைப் பரிசில் நிதியத்திற்கு நிதி கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றுகையில் கூறினார்.  நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் டாக்டர் சம்பா அலுத்வீர தலைமையில் வைத்திய சாலை வளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் விலிகமகே தொடர்ந்து உரையாற்றுகையில்;

எமது வாழ்க்கையில் அரைவாசிக் காலத்தில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் உதவியுடன் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்ற சந்தேகம் ஒரு சிலரிடம் நிலவியது. விடுதலைப்புலிகளின் புதிய தலைவரை கைது செய்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்று எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர இராணுவத்தினர் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர்.

முப்பதாயிரம் படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். 23 ஆயிரம் பேர் வரை அங்கவீனமுற்றுள்ளனர். ஆறாயிரம் பேர் வரை முற்றாக அங்கவீனர்களாகியுள்ளனர். இதனால், அறுபதினாயிரம் குடும்பங்கள்வரை பாதிக்கப்பட்டுள்ளன.  இவர்களுக்கு உதவி செய்து பராமரிப்பது எமது பொறுப்பாகும். இவர்களுக்காக வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் காணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரம் வீடுகளை கட்டுவதே எமது இலக்கு. இதற்காகவே அபிவெனுவென் அபி திட்டத்தை ஆரம்பித்தோம்.

எமது சேவா வனிதா இயக்கத்தின் தலைவியின் கருப் பொருளுக்கிணங்க வீர தருஉதான திட்டத்தை ஆரம்பித்து இராணுவ வீரர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக உதவி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதற்காகவே இன்று நிதி உதவி செய்யப்பட்டது. யுத்த வீரர்களைப் போன்று வைத்தியசாலை டாக்டர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் யுத்த காலத்தில் அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்கள். அவர்களின் சேவைகளும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்.

வவுனியா ந.ச தலைவராக எஸ்.என்.ஜீ. நாதன்

வவுனியா நகர சபைத் தலைவராக எஸ்.என்.ஜீ. நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அறிவிக்கவுள்ளார்.

இந்த நகர சபைக்கான பிரதித் தலைவராக என்.எஸ்.முகுந்தரன் நிய மிக்கப்பட்டுள்ளார் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

புலிகளுடன் தொடர்பு : கிறிஸ்தவப் பாதிரியார் கைது

jeyanesan.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்படும் கிறிஸ்தவப் பாதிரியாரான ஜெயநேசன் கைது செய்யப்பட்டிருப்பதாக இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அமைச்சர் ஒருவரே இவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் எனக் கூறப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்துக்குப் பொறுப்பாக இருந்த குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அந்தப் பொறுப்பு பிரதமரிடம் வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கிறிஸ்ரியன் கெயர்’ என்ற மனிதாபிமான நிறுவனம், ‘லடர் ஹோப்’ (Ladder of Hope) என்ற அமைப்புடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றது. ‘லடர் ஹோப்’ நிறுவனத்தின் தலைவராகவும் இலங்கையில் ‘கிறிஸ்டியன் கெயர்’ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளராகவும் அருட்தந்தை ஜெயநேசன் பணிபுரிந்து வருகின்றார் எனவும் மேற்படி இணையச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

இங்கிலாந்து மக்கள் உலக மகா சோம்பேறிகள்

சமீபத்திய சர்வே ஒன்று உலக மகா சோம்பேறிகள் பட்டத்தை இங்கிலாந்து மக்களுக்கு வழங்கியுள்ளது. இங்கிலாந்து மக்கள் சுமார் 2 ஆயிரம் பேரிடம் லேசி லீக் டேபிள் என்ற நலநிதி அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் முடிவு இங்கிலாந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அது இங்கிலாந்து மக்கள் உலக சோம்பேறிகள் என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மக்களில் 6ல் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் இல்லாத சூழ்நிலையில் எழுந்து சென்று டிவியை மாற்றமாட்டார்கள். சோம்பேறித்தனம் காரணமாக அதே சேனலை பார்த்து கொண்டிருப்பார்கள், 59 சதவீதம் பேர் முதல் மாடிக்கு கூட லிப்டில் தான் செல்வார்கள் என தெரிவித்துள்ளது. அவர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் ஜிம் பக்கம் போனதே கிடையாது என கூறியுள்ளனர். சிலர் சோம்பேறித்தனத்தால் சில சமயம் செக்சுக்கு கூட நோ சொல்லிவிடுவதாக தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் வேளை கொஞ்சம் அதிகம் இருந்தால் இளசுகள் கூட மன்மத கலையை மறந்துவிடுகிறார்களாம்.

மேலும், 64 சதவீதம் பேர் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சோம்பேறித்தனமாக தடையாக இருப்பதை ஒப்பு கொண்டுள்ளனர். இது குறித்து நப்பீல்டு ஹெல்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சாரா டவுன்சி கூறுகையில், ரெடிமேட் உணவு, ரிமோட் கண்ட்ரோல், இன்டர்நெட் ஷாப்பிங் ஆகியவை மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டது. இங்கிலாந்து மக்களை இந்த மோசமான சோம்பேறித்தனத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றார்.

சோம்பேறித்தனம் காரணமாக அதிகம் குண்டாகி வரும் இங்கிலாந்து மக்களில் 9 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் தங்களது வாழ்நாளை விரைவிலே இழந்துவிடுகின்றனர். 58 சதவீதம் பேருக்கு சக்கரை நோயும், 21 சதவீதம் பேருக்கு இதய கோளாறும் ஏற்படும் வாய்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், மக்களின் வாழ்நாள் 9 ஆண்டுகள் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து மக்கள் தொகையில் 2050ம் ஆண்டு வாக்கில் பெரியவர்களில் 10ல் 9 பங்கினரும், குழந்தைகளி்ல் 3ல் 2 பங்கினரும் அதிகம் குண்டாக இருப்பார்கள என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளுக்காக மட்டும் ரூ. 600 கோடி செலவழிக்கும் என கூறப்படுகிறது.

வியட்னாம் அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு – பாதுகாப்பு அமைச்சு தகவல்

gothabaya.jpgவியட் னாம் உதவி வெளிவிவகார அமைச்சர் தாஓ வியட்றங் தலைமையிலான விசேட குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ராஜபக்க்ஷவை சந்தித்துள்ளனர்.

நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வியட்னாம் உயர்ஸ்தானிகர் குவான்ங் டைம்,  வெளிநாட்டு அமைச்சின் உதவி இயக்குனர் ஜெனரல் பாம்ஹ_ங் ரம் மற்றும் வியட்னாம் அதிகாரிகளும்; கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

90இல் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிகளின் நினைவுதினம் இன்று

batti-0000.jpg1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் நினைவாக ஏறாவூரில் சுஹதாக்கள் தினம் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களின் 19 ஆவது ஆண்டினை நினைவுகூரும் முகமாக இன்று அப்பிரதேசத்தில் ‘சுஹதாக்கள் தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.

‘சுஹதாக்கள் நிறுவனம்’ விடுத்த அழைப்பின் பேரில் இப்பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்கள், சந்தை, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மாணவர் வரவின்மையால் பாடசாலைகள் இயங்காத போதிலும் க.பொ.த. உயர் தர பரீட்சைகள் சுமூகமாக நடைபெறுகின்றன.

வெளியிடங்களுக்கான போக்குவரத்து வழமைபோல் நடைபெற்றாலும் உள்ளூர் போக்குவரத்து நடைபெறவில்லை. அரசாங்க காரியாலயங்கள் மற்றும் வங்கிகளின் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடுதலை புலிகள் 121 முஸ்லிம்களைக் படுகொலை செய்தனர். பள்ளிவாசல்களில் சுஹாதாக்களின் நினைவாக கத்த முல் குர் ஆன் ஓதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இரண்டாம் நாளாக தொடரும் சிட்னி இளைஞர்களின் நடை பாத போராட்டம்

sidni00000.jpgநேற்றைய இரவுப்பொழுதை Liverpool ல் கழித்துவிட்டு இன்று இரண்டாவது நாளாக காலை 7:30 க்கு தமது நடை பாத போராட்டத்தை சேரனும் விஷ்ணாவும் தொடர்ந்தார்கள். Liverpool புகையிரத நிலையத்தில் காலை 9:30 மணி வரை துண்டுப்பிரசுரங்களை அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு விநியோகம் செய்தார்கள்.
 
அத்துண்டுப்பிரசுரங்களில் இலங்கை அரசாங்கத்தால் 300 ஆயிரம் மக்கள் அங்கு வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும் போதிய உணவு மருத்துவம் இன்றி அல்லற்படுவதும் தினம் தினம் இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் எமது உறவுகளை உடனடியாக இந்த சித்திரவதைகளிலிருந்து விடுவிக்க அனைத்துலக சமூகத்தின் உதவியையும் அத்துண்டுப்பிரசுரங்களின் மூலம் கோரிக்கையாக விடப்பட்டுள்ளது.

அத்துண்டுப்பிரசுரங்களில் அடங்கியுள்ள விடயங்களும் இவ்விளைஞர்களின் இப்போராட்டமும் அவுஸ்திரேலியா வாழ் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

புகையிரத நிலையத்தில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய பின் அங்கிருந்து நடக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக 21 கிலோமீற்றர் தூரம் நடந்து Campbelltown ஐ வந்தடைந்தனர்.

சிட்னி இளைஞர்களின் நடை பாத போராட்டம் ஊடகங்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. SBS  தொலைக்காட்சி நிறுவனம் மாலை 4:30 மணிக்கு Hurley Park Community Centre ல் வந்து இப்போராட்டத்தை ஒளிப்பதிவு செய்தது. அப்பகுதி மக்கள் அங்கு கூடி தமது பெரும் ஆதரவை வழங்கினர்.

சேரன் மற்றும் விஷ்ணா இன்று சற்று களைப்படைந்தாலும் அவர்கள் மனதலவில் மிகவும் திடமாக உள்ளனர். தமது இலக்கை எட்டும்வரை அவர்கள் சோர்ந்து விடமாட்டார்கள். 300 ஆயிரம் மக்களின் விடிவை மனதில் நிறுத்தி மிகவும் உறுதியுடன் தமது போராட்டத்தை தொடர்கிறார்கள்.

நாளை காலை 7 மணிக்கு Campbelltown ஐ விட்டு புறப்பட்டு Bargo எனும் இடத்தை நோக்கி 43 கிலோமீற்றா தமது நடைபாத போராட்டத்தை தொடர்வார்கள். நாளை மாலை 6 மணியளவில் Bargo ஐ சென்றடைவர்.

இவ்விளைஞர்கள் செல்லும் இடங்கள் மற்றும் இப்போராட்டம் பற்றிய முழு விபரங்களையும்  www.free300k.com எனும் இனையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும். உங்கள் மேலதிக விபரத் தேவைகளுக்கு free300kgmail.comஎனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கி கணக்குகளை முடக்குமாறு இலங்கை பத்து நாடுகளிடம் கோரிக்கை

pathmanathan.jpgகுமரன் பத்மநாதன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி அந்தப் பணத்தை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் பத்து நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
   
குமரன் பத்மநாதனுக்கும், ஐயன்னா குருப் என்ற புலி ஆதரவு நிறுவனத்திற்கும் சொந்தமான கணக்குகளில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கணக்குகளில் அதிகமானவை சுவிட்சர்லாந்து மற்றும் சென் மோரிஸஸ் ஆகிய நாடுகளில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

சில கப்பல் நிறுவனங்களினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ச்சியாக நிதி வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனிடம் நடாத்திய விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது 

இந்தியாவில் ஸ்வைன் பலி 17 ஆனது- மகாராஷ்டிரத்தில் இன்று 3 பேர் சாவு

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை முதல் பிற்பகல் வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். புனேவில் மட்டும் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. மும்பையில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர், மேகலாயா மாநிலங்களுக்கும் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஹைதராபாத்தில் உலக பேட்மிண்டன் போட்டித் தொடரையும் பன்றிக் காய்ச்சல் பீதிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய அளவில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது. இதனால் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மத்திய அரசு  தீவிரப்படுத்தியுள்ளது. மும்பையில் அரசு மருத்துவமனைகளுக்கு உதவியாக தனியார் மருத்துவமனைகளும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சை நடவடிக்கைகளில் குதித்துள்ளன.

பல்வேறு நகரங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் ஆங்காங்கு மூடப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை மத்திய குழுக்களை அனுப்பி பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உதவ அனுப்பியுள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கு மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் புனேதான். இங்கு மட்டும் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பம்பைமடு விடுதி காமினி வித்தியாலயத்தில் பரீட்சை எழுதும் சரணடைந்த 166 பேர்

examination_departmentsss.jpgக.பொ.த உயர்தரப் பரீட்சை வவுனியாவில் சுமுகமாக நடைபெற்று வருகிறதாக பரீட்சை இணைப்பாளரும் வலயக்கல்விப் பணிப்பாளருமான திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வோல்ட் தெரிவித்தார்.  நலன்புரி நிலையங்களில் வசிக்கும் 1187 மாணவர்களும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 1625 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களில் சரணடைந்த 139 ஆண்களும் 27 பெண்களும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பம்பைமடு வளாக விடுதியிலும் ஆண்களுக்குரிய காமினி வித்தியாலயத்திலும் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நலன்புரிநிலைய ஏனைய மாணவர்களுக்கு கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி, இராமநாதன் ,அருணாச்சலம், வலயம்4 ,கல்வியியல் கல்லூரி,வீரபுரம் ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையத்தில் வசிக்கும் பார்வையற்ற ஒரு மாணவனும் பரீட்சை எழுதுகின்றார். அவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு வவுனியாவில் உள்ள 17 நிலையங்களில் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் இணைப்பாளர் தெரிவித்தார்.