August

August

மடு ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் : வசதி, வாய்ப்புகள் திருப்தி எனவும் தெரிவிப்பு

madhush_2.jpgவிடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் நடத்தப்படும் முதலாவது மடு ஆலய திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குழுமியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு மாதாவுக்குத் தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

சுமார் 30 ஆயிரம் மக்கள் இதுவரை எதுவித அச்சமோ தயக்கமோ இன்றி மடு அன்னையைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றனர்.

முழு இரவும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று புதன்கிழமை மட்டும் 13,000 பக்தர்கள் ஆலயத்தில் தங்கியிருந்தனர். பாதயாத்திரையாக வந்த சுமார் ஆயிரம் வாகனங்கள், உரிமையாளர்களின் வசதிக்கேற்ப பாதுகாப்பான இடங்களில் தரித்து வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்து வசதிகளும் சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை ஆலயத்துக்கு வந்த தமக்கு வழக்கத்தை விடவும் தாராளமான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தாம் மகிழ்ச்சியுடன் மடு அன்னையின் பிரார்த்தனை, வழிபாடுகளில் கலந்து கொள்வதாகவும் அங்கு சென்று தங்கியுள்ள அடியார்கள் திருப்தி தெரிவிக்கின்றனர்.

யாழ் பஸ் சேவை வவுனியா வரையில் கட்டணங்களும் குறைப்பு

25sri-lankan-road.jpgயாழ்ப் பாணத்திலிருந்து மதவாச்சி வரை ஆரம்பத்தில் நடத்தப்பட்ட யாழ் பஸ் சேவை வவுனியா வரையிலுமே இப்போது நடத்தப்படுகின்றது. பயணிகள் வவுனியா பஸ் நிலையத்தில் இறக்கிவிடப்படுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு 200 ரூபா மட்டுமே இப்போது கட்டணமாக அறவிடப்படுகின்றது. முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கென 475 ரூபா கட்டணமாக அறவிடப்பட்டு, பயணிகள் மதவாச்சி வரையில் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டார்கள்.  எனினும் மதவாச்சியில் இருந்து இந்த பயணிகளுக்கான இணைப்பு பஸ் சேவைகள் சீராக இடம்பெறாத காரணத்தினாலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் மதவாச்சியில் பஸ் வண்டிகள் ஒழுங்கு படுத்தப்படாத காரணத்தினாலும், இந்த பஸ் சேவை வவுனியா வரையில் மட்டுமே நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காலை 11 அல்லது 11.30 மணிக்குப் புற்பபடும் பஸ் வண்டிகள் இராணுவத்தினரின் வழித்துணையுடன் தொடரணியாக வவுனியாவை பிற்பகல் 2 அல்லது 2.30 மணிக்கு வந்தடைகின்றன.

வவுனியா பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடுகின்ற இந்த பஸ் வண்டிகள் வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்திற்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை 5 மணி அல்லது 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி இராணுவ பாதுகாப்புடன் தொடரணியாகப் புறப்பட்டுச் செல்கின்றன.

வீதிச் சிறுவர்களை கண்டுபிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தகவல்

police_man.jpgபாடசா லைக்குச் செல்லாது வீதிகளில் கவனிப்பாரின்றி சுற்றித் திரியும் சிறுவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பாடசாலை செல்லாதுள்ள அனைத்து சிறுவர்களையும் கண்டுபிடிக்குமாறு கொழும்பு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான சிறுவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் பெண் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள். இரவுவேளைகளில் சிறுவர்கள் பிடிக்கப்பட்டால் அவர்கள் நகரிலுள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.ஆனால் சிறுவர்கள் விளக்கமறியல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட மாட்டார்கள். பிடிக்கப்படும் சிறார்களின் பெற்றோரோ பாதுகாவலர்களோ கண்டுபடிக்கப்பட்டால் அவர்கள் அழைப்பாணை விடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள்.

இவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் பணிக்கும். அக்குடும்பங்களிடம் அதற்கான பண வசதி இல்லாவிட்டால் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்கும். இலங்கையில் 14 வயது பூர்த்தியாகும் வரை அனைத்து சிறார்களும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக பெறவேண்டும் என்பது சட்டமாகும் என்றும் அவர் கூறினார்

வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு மலேசியா ஒரு லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!

malasiia_agre.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ரொஸ்லி இஸ்மாயில் இந்த உதவியை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் இன்று கையளித்தார்.

இது தொடர்பாக வைபவம் வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது. இலங்கையின் சார்பில் இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய அரசுக்கு நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை நடத்திய யுத்தத்திலும் மலேசிய அரசு வழங்கிய உதவிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

வடக்கு கிழக்கை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்

களனி பல்கலைக்கழகத்துக்கு புதுக்கட்டடம்

wiswa_warnapala_00.jpgகளனி பல்கலைகழத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவப் பீடத்துக்கு புதுக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி 2010 ஆம் ஆண்டில் 600 மீட்டர் சதுர நிலப்பரப்பில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கு திறைசேரி மூலம் 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

சிறிய கட்சியாக மாறி வரும் ஐ.தே.க – அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா

anura_priyadarshana_yapa00.jpgஐக்கிய தேசியக் கட்சி மிகவும் வேகமாக பிரதேசக் கட்சியின் அளவுக்கு ஒரு சிறிய கட்சியாக மாறி வருகிறது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தோல்விகள் மூலம் இது புலனாகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் போது யாழ்ப்பாண மக்கள் வாக்களித்திருந்தால் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றிருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அப்படிக் கூறிய அவர்களுக்கு நடந்து முடிந்த யாழ்ப்பாண மா நகரசபைத் தேர்தலில் 83 வாக்குகளே கிடைத்துள்ளன

இந்தத் தோல்விகளையும் பெற்றுவரும் வாக்குகளையும் கவனித்தில் கொள்ளும் போது வெகு விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சிறிய கட்சியாக ஒரு பிரதேசக் கட்சியாக மாறிவிடும் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ராஜபக்சவை கொல்ல மனித வெடிகுண்டு

இலங்கையின் தெற்கு மாகாண கவுன்சிலர் டேன்னி ஹிதித்தேதியாகே கொலை தொடர்பாக மதுஷா லட்சுமணன் என்பவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஜனாதிபதி ராஜபக்சவின் சொந்த ஊரான அங்குனாகோலபெலீசாவில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு ராஜபக்சவை கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்துஇ லட்சுமணனை விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசு நீதிமன்றத்தில் விசேஷ மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிவான்  எதிர்வரும் 17-ந்தேதி லட்சுமணனை கோர்ட்டில் ஆஜர் செய்யும்படியும்இ அதன் பின் அவரை பொலிஸ் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.

இது குறித்து மூத்த சட்டத்தரணி திலீபா பெய்ரிஸ் நீதிமன்றில் கூறுகையில்இ மஹிந்த ராஜபக்சவை கொல்வதற்காக ஜனாதிபதியின் ஊரில் உள்ள ஒருவர் உதவியுடன் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு லட்சுமணன் செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.

முன்னணி பாடசாலை அதிபர் நாடு கடத்தப்பட்டார்

கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். விஸாக் காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்ததால் அவர் நாட்டைவிட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அதிபர் காணாமல் போய்விட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கனடாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருக்கும் போது அவரின் அடையாளத்துவம் வெளியிடப்பட்டிருக்கவில்லையென்றும் 3 மாத விஸா பெற்று வந்திருந்ததாகவும் ஆகஸ்ட் 9 உடன் அவரின் விஸாக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி.அபேயக்கோன் கூறியுள்ளார்.

நெடியவன் பொலீஸ் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்

lttelogoநோர்வேயில் வதியும் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவன் நேற்றைய தினம் நோர்வே பொலீசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் நோர்வே சேதுரூபன் மீதான தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக தெரியப்படுகிறது எனினும் இவர் கைது செய்ப்பட்டமைக்கான காரணம் பொலீசாரினால் தெரிவிக்கப்படவில்லை.

2005ம் ஆண்டின் ஆரம்பகாலங்களில் வன்னி சென்ற ஆர் ஜெயதேனை புலிகள் கைது செய்தபோது அவரை இந்த நெடியவனே கிளிநொச்சியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தினார். அச்சமயத்தில் நெடியவன் நீலநிற சேட்டும் மண்ணிற ரவுசரும் அணிந்திருந்தார் என ஜெயதேவன் கூறியிருந்தார். இச்சம்பவம் பற்றி லண்டன் பொலீசாரிடம் ஜெயதேவன் முறையிட்டிருந்தார்.

நோர்வேயில் நெடியவன் விசாரணையின் பின்னர் இதுபோல பலர் கைது செயய்ப்படலாம் என ‘தேசம்நெற்’ க்கு தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது? – சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறே அது குறித்து முடிவு செய்யப்படும்.

election000.jpgஜனா திபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறே அது குறித்து முடிவு செய்யப்படும். ஆனால், ஐ. ம. சு. முன்னணி எந்தத் தேர்தலுக்கும் தயாராகவே உள்ளதென ஐ. ம. சு. முன்னணி தலைவர்கள் நேற்று (12) தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டுமெனவும் ஊவா தேர்தல் முடிவு இதனை உறுதிப்படுத்துகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (12) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது :-

சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும். எந்தத் தேர்தல் நடத்தவும் நாம் தயாராகவே உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறுவோம்.

யுத்த வெற்றி காரணமாக மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்திகள் காரணமாகவுமே மக்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களித்து வருகின்றனர். தமிழ், முஸ்லிம் மக்களும் அரசாங்கத்துடனேயே உள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தல் துரிதமாக நடத்தப்பட வேண்டுமென்றே விரும்புகிறோம் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஆரம்ப முதல் ஐ. தே. க. வே தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கூட ஐ. தே. க. பொதுத் தேர்தல் நடத்த வேண்டுமென கோரியது.

ஊவா மாகாண தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐ. தே. க. செயலாளர், பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு நல்ல பாடம் புகட்டுவதாக கூறியுள்ளார். ஐ. தே. க. கோரும் எந்தத் தேர்தலையும் முதலில் நடத்தத் தயார் என ஜனாதிபதி கூறியுள்ளார் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன.

ஊவா மாகாண மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான தமது நம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளனர். அரசியல் யாப்பின் பிரகாரம் எந்தக் கட்சிக்கும் 2/3 பெரும்பான்மை பெறமுடியாது என்ற கருத்தே இத்தனை காலமும் காணப்பட்டது. அந்த நிலைப்பாட்டை எமது அரசாங்கம் பொய்யாக்கியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் எமக்கு 2/3 பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தந்தது போல பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தருவது உறுதி. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குறித்து மக்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது என்றார். இங்கு அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச ஆகியோரும் உரையாற்றினர்.