விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் நடத்தப்படும் முதலாவது மடு ஆலய திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குழுமியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு மாதாவுக்குத் தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.
சுமார் 30 ஆயிரம் மக்கள் இதுவரை எதுவித அச்சமோ தயக்கமோ இன்றி மடு அன்னையைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றனர்.
முழு இரவும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று புதன்கிழமை மட்டும் 13,000 பக்தர்கள் ஆலயத்தில் தங்கியிருந்தனர். பாதயாத்திரையாக வந்த சுமார் ஆயிரம் வாகனங்கள், உரிமையாளர்களின் வசதிக்கேற்ப பாதுகாப்பான இடங்களில் தரித்து வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்து வசதிகளும் சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை ஆலயத்துக்கு வந்த தமக்கு வழக்கத்தை விடவும் தாராளமான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தாம் மகிழ்ச்சியுடன் மடு அன்னையின் பிரார்த்தனை, வழிபாடுகளில் கலந்து கொள்வதாகவும் அங்கு சென்று தங்கியுள்ள அடியார்கள் திருப்தி தெரிவிக்கின்றனர்.