தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதே அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கிய பணியென இலங்கைக்கான ஐ.நா. அபிவிருத்தித் திட்ட நிறுவனத்தின் (யூ.என்.டி.பி.) உதவிப் பணிப்பாளர் டி.எஸ். ரட்னாநாயக்க தெரிவித்தார்.
பசறை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் “பதுளை எதிர்காலம் எமது கரங்களில்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிக் கொள்கை மொழி உரிமை எனும் தலைப்பிலான ஒருநாள் செயலமர்வு அமைப்பின் பணிப்பாளர் பிரபாத்குமார, உதவி பிரதேச செயலாளர் சாமர ஜெயசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
கடந்த 1956 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் தனி ஈழமோ தனி நாடோ கேட்கவில்லை. ஆட்சியில் சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமையை தமிழ் மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றே கேட்டனர். ஆட்சியில் பங்கு வழங்கப்பட்டிருந்தால் இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக யுத்தம் நடைபெற்று இருக்காது. சிங்கள மொழிக்கு என்ன உரிமை அந்தஸ்து இருக்கிறதோ அதே உரிமையை தமிழ்மொழிக்கும் வேண்டுமென 1956 ஆம் ஆண்டுவரை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் கேட்டுவந்தனர்.அரச கருமமொழி என்ற போர்வையில் சிங்கள மொழியும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்ட மொழி உரிமை தமிழ்மொழிக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே வட, கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தமிழ்மொழிக்கு இதுவரையிலும் உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. பொதுவாக வட, கிழக்கை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்கள் தமது தேவைகளை சிங்கள மொழியிலே மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தான் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
இதேபோல் வட,கிழக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் சிறுபான்மையாக சிங்கள மக்களும் வசிக்கும் பிரதேசங்களில் சிங்கள மொழியால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் சிங்கள மக்கள் இருந்து வருகின்றனர். எனவே, தமிழ் மக்கள் தமிழ்மொழியில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அரசாங்க திணைக்களங்களில் பணிபுரியும் பெரும்பான்மை இனத்தவர்கள் கட்டாயமாக தமிழ்மொழி படித்து இருக்க வேண்டும். தமிழ்மொழியில் தமிழ் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு மேலாக தமிழ்மொழி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
இப்படியான சில அடிப்படை உரிமைகள் தமிழ்மொழிக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டிருந்தாலும் அவை செயல்பாட்டில் இல்லையென்பதே தமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருகிறது. இன்று பசறை பிரதேசத்திலுள்ள சமுர்த்தி அதிகாரிகளுக்கே மொழி உரிமை குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. காரணம் பசறை லுணுகலை பிரதேசத்திலே தமிழ், சிங்கள மக்கள் சம அளவில் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே தான் பசறை, லுணுகலை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களும் தெரிவுசெய்யப்பட்டு மொழி உரிமை குறித்த செயலமர்வுகளை நடத்தி வருகிறோம்.
இலங்கை போன்ற சிறிய நாட்டில் யுத்தம் நடைபெறுவதை எந்தவொரு நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள். ஆனால், சர்வதேச அளவில் ஆயுத வியாபாரம் செய்யும் வர்த்தகர்களே யுத்தத்தை அதிகமாக விரும்புவார்கள். இந்த சர்வதேச ஆயுத வியாபார கும்பலே இரு பக்கமும் ஆயுத வியாபாரம் மேற்கொண்டு நாட்டை சீரழிப்பவர்கள்.
இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வை தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய காலப்பகுதி இதுவாகும்.
இந்த சந்தர்ப்பத்தை ஒருபொழுதும் அரசாங்கம் தவறவிட்டுவிடக் கூடாது. தமிழ்மொழிக்குரிய உரிமை அந்தஸ்து கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். அதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தமிழ்மொழியை சிங்களவர் படிக்க வேண்டும். அதேபோல சிங்கள மொழியை தமிழர் படிக்க வேண்டுமென்ற சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும் அல்லது பிரகடனப்படுத்தப்பட வேண்டும். பாடசாலைகளில் தரம் 1 முதல் 13 வரை சிங்கள, தமிழ் பாடங்களை கட்டாய பாடங்களாக்கப்பட வேண்டும்.
இப்படியான நுணுக்கமான சட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பட்சத்தில் தமிழ்மொழிக்கு தானாகவே உரிய அந்தஸ்து கிடைத்துவிடும்