சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருக்கும் 1.9 பில்லியன் உயர் கடன் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இது அந்த அமைப்பின் நோக்கத்திற்கான பரீட்சையாக அமையும் என்றும் பிரதி நிதியமைச்சரான சரத் அமுனுகம கூறியுள்ளார்.
இக் கடன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருந்த நிலையில் அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கையின் கடன் விண்ணப்பம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச அரசியலுக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது. இது பொருளாதார விவகாரம் அல்ல. அடுத்த நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குள் பதில் என்னவென்பது பற்றி எமக்குத் தெரியவரும் என்று கொழும்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
1.9 மில்லியன் டொலரை அவர்கள் வழங்குவார்களா என்பது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நோக்கத்திற்கு இது பாரிய பரீட்சையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக பூர்த்தியடைந்துள்ளதாகவும் கடனை வழங்காவிடின் அவர்கள் தரப்பில் (நாணய நிதியம்) சங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் சரியான விடயத்தை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றும் கப்ரால் கூறியுள்ளார்.