இலங்கை விவகாரம்; தலைமை தாங்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

இலங்கையில் அண்மையில் முடிவடைந்த யுத்தத்தின்போது இடம்பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சர்வதேச ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் 6 முன்னணி மனித உரிமைக்குழுக்கள் கேட்டுள்ளன.

இது தொடர்பாக ஒபாமாவிற்கு இந்த அமைப்புகள் கடிதம் எழுதியிருப்பதாக “ஸீநியூஸ் கொம்’ தெரிவித்திருக்கிறது. யுத்தத்தின் போது இலங்கை அரசபடையினராலும் விடுதலைப்புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் பாரதூரமான முறையில் மீறப்பட்டதை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக ஓபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன சர்வதேச விசாரணைக்குழு ஒன்றுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்குமாறும் அதனை வென்றெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவை ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அத்துடன், இடம்பெயர்ந்த மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுயாதீனமான மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் முகாம்களுக்கும் முன்னர் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கும் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ள இடங்களுக்கும் முழு அளவில் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்த மனித உரிமை அமைப்புகள் ஒபாமாவை கேட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்குவது இப்போது அவசியமானது என்றும் இதன் மூலம் உயிர்தப்பியுள்ள பொதுமக்களை பாதுகாக்கவும் மனிதப் பேரனர்த்தத்துக்கு பொறுப்பானவர்களை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க இது தேவையெனவும் நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதத்தில் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறு செய்வதற்கு தவறுவதானது பெறுபேறுகள் குறித்து அச்சம் இல்லாமல் அரசாங்கங்கள் பாரிய அடாவடித்தனங்களில் ஈடுபடுவதை ஊக்கிவிப்பதாக அமையும். ஆதலாலேயே இந்தத்தருணத்தில் தங்களின் உடனடியான நடவடிக்கை முக்கியமானது என்றும் கடிதத்தில் இந்த மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *