இலங்கை அகதிகளின் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு தயாராக இருக்குமாறு தமிழக அரச பாடசாலைகளுக்கு மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனுமதி கோரி பல்வேறு திணைக்களங்களுக்கு பாடசாலைகல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிடின் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் வருகை தரக்கூடும் என்று ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் பொருளாளர் எஸ்.சி.சந்திரகாசனை மேற்கோள்காட்டி , ரைம்ஸ் ஒவ் இன்டியா நேற்று தெரிவித்திருந்தது.
“இலங்கையின் முகாம்களில் சுமார் 3 இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் சொந்தக்கிராமங்களில் அவர்களை மீளக்குடியேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. முகாம்களுக்குள் பாடசாலைகள் இருக்கின்றபோதும் அவை பொருத்தமானவையாக இல்லை. ஒழுங்கானபாடசாலைகளில் தமது பிள்ளை கல்வி கற்பதையே பெற்றோர் விரும்பக்கூடும். அதனால் இங்கு (தமிழகம்) வருவதற்கு அவர்கள் விரும்புவார்கள் என்று சந்திரகாசன் கூறியுள்ளார்.
இதேவேளை 29 ஜூன் 2009 திகதியிடப்பட்ட கடிதமொன்று பாடசாலை கல்விச் செயலாளரால் பாடசாலைக் கல்வி, ஆரம்பக்கல்வி, ஆதிதிராவிடர், பழங்குடிநலன், வருவாய் நிர்வாகம், பின்தங்கிய வர்க்கத்தினர், மிகப்பின்தங்கிய வர்க்கத்தினர், சிறுபான்மையினர் நலன், சமூகநலன், போஷாக்கு உணவு செயல்திட்ட திணைக்களங்கள் ஆகியவற்றின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு வரை இலங்கை அகதிகளின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்குமாறு அக்கடிதத்தில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு சீருடை, பாடசாலைப் புத்தகங்கள், தொப்பிகள், நண்பகல் உணவு என்பனவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.