July

July

கண்டி உதவி இந்திய தூதரகத்தினால் நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு

school-books.jpgகண்டி உதவி இந்திய தூதுவராலயத்தில் மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.

சிறுவர்களுக்கு பயன்தரும் நூல்கள் அடங்கிய தொகுதி இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. காலை 10.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் நூல்களைப் பெறும் பாடசாலைகளுக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் அல்லது பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆசிரியர் வருகை தந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொட்டதெனிய ரூ.10 கோடி கொள்ளைச் சம்பவம்; சிங்கப்பூர் தப்ப இருந்த வேளை சூத்திரதாரி மடக்கிபிடிப்பு

கொட்டதெனிய 10 கோடி ரூபா கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரியான நகை மாளிகை உரிமையாளரொருவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற வேளை, அம்பலாங்கொடையில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 92 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தினகரனுக்குத் தெரிவித்தார்.

பொலிஸாரிடம் சிக்காமல் தப்பியோடிய இருவருள் ஒருவரே இவரென்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அம்பலாங்கொடையில் வைத்து ரொயொட்டா வீஓஎல் காரில் கொள்ளையிட்ட பணத்துடன் சென்று கொண்டிருக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். கபில டி சில்வா என்ற இந்த நபர் சிங்கப்பூருக்குச் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டைத் தயார்படுத்தியிருந்ததாகவும், அவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

விமானப் படையில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தப்பியோடிய அவர், அம்பலாங்கொடையில் நகைமாளிகை நடத்தி சுகபோகமாக வாழ்ந்து வருபவரென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பீ. தெரிவித்தார்.

குருநாகலில் இரண்டு தனியார் வங்கிக் கிளைகளில் சேகரிக்கப்பட்ட 10 கோடி ரூபா பணத்துடன் நிறுவனத்தின் காவலர்கள் கிரியுல்லை வழியாகக் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கொட்டதெனியவில், பொலிஸ் சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்த ஆயுததாரிகள் அறுவர் அந்த வாகனத்தை சோதனையிடுவதற்காக நிறுத்தியுள்ளனர். உடனே வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி தம்மை அடையாளப்படுத்த முற்பட்ட வேளை, அவர்களைப் பிடித்துக் கட்டிப் போட்ட ஆயுததாரிகள் பண மூடைகளை ஏற்கனவே தயாராக வைத்திருந்த வாகனங்களில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

விடயம் உடனடியாக குருநாகல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கொள்ளையர்களைத் துரத்திச் சென்றுள்ளனர். அதன் போது எட்டரை கோடி ரூபா பணத்துடன் நால்வரை பொலிஸார் மடக்கிப் பிடித்து விட்டனர். எனினும் இருவர் ஒன்றரை கோடி ரூபாவுடன் தப்பிச் சென்றுவிட்டனர். அதில் ஒருவரே அம்பலாங்கொடையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வேண்டாம் பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு அறிவுறுத்தல்

housemaids.jpgசட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சிக்க வேண்டாமென பொது மக்களிடம் அரசும் பொலிஸ் தலைமையகமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  கடந்த காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற நபர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் தற்காலிக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந் நபர்களின் ஒரு பகுதியினர் அவுஸ்திரேலியா அதிகாரியினால் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந் நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் மக்களுக்கு பொய் உத்தரவாதங்களை வழங்கி அவர்களை ஏமாற்றி இவ்வாறாக சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஊக்கமளிக்கின்றனர். இவ்வாறான வஞ்சக நபர்களிடம் அவர்களின் வார்த்தைகளினால் ஏமாறுபவர்கள் பெரும் பணத்தொகையினை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதுடன், தமது வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.

எனவே இதன் பின்னராவது சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என அரசாங்கமும் பாதுகாப்பு பிரிவினரும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் மழை – களுகங்கை நீர் மட்டம் உயர்வு

rain2.jpgமேல் மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் நேற்று கடும் மழை பெய்ததாக காலநிலை அவதான நிலையம் அறிவித்தது. அதன்படி, கொழும்பில் ஓரளவு மழை பெய்துள்ளது. களுத்துறை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடிய மழை வீழ்ச்சி ஹங்வெல்லயில் பதிவாகியுள்ளது. (63.3 மி. மீ.) அதேவேளை லபுகலவில் 60.6 மி. மீ., கலட்டுவாவயில் 49 மி. மீ., மத்துகமவில் 31.6 மி. மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் மீண்டும் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக இம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தோட்டங்களில் பால் சேகரிக்கும் பணி, சீவல் தொழில் என்பன முற்றாகவே ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். களுகங்கையின் நீர் மட்டமும் கூடியுள்ளன.

டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறவேண்டும் – டாக்டர் ஷாலினி

dengu_1.gif“எமது நாட்டில் தற்போது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ள டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகி அதற்கான ஆலோசனையைப் பெறவேண்டும். காய்ச்சல், தொண்டை நோ, தலைவலி, வயிற்றுவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் டெங்கு நோய்க்கானவையாகவும் இருக்கலாம்’ என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் ஷாலினி அறிவுரை வழங்கினார்.

கொழும்பு சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மேல் கொழும்பு தரம்2 பாடசாலைகளுக்கான விஞ்ஞான தின விழாவில் உரையாற்றும் போதே அவர் இந்த ஆலோசனையைத் தெரிவித்தார். விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பாரியார் திருமதி காமினி விதாரணவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் ஷாலினி தொடர்ந்து உரையாற்றுகையில்;

“தற்போது எமது நாட்டில் டெங்கு நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதும் எம்மை கதிகலங்க வைக்கிறது. ஏடிஸ் எஹிப்டிக் என்னும் பெண் நுளம்பினால் பரவும் இந்த நோய் ஒரு வைரஸ் நோயாகையால் இதனை மருந்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. சிகிச்சை பயனளிக்காத நிலைமையையே காண முடிகிறது.

இந்த நோயில் சாதாரண டெங்கு  வகை தலைவலி, பசியின்மை, உடல் வலி, காய்ச்சல் என்பவற்றை விளைவித்தாலும் பெரும்பாலும் மூன்று நாட்களில் குணமாகிவிடும் சாத்தியம் உண்டு. ஆனால், குருதிக் காய்ச்சல் டெங்கு பேராபத்தை விளைவிக்கும் நோயாகும். அநேகமாக 15 வயதுக்குட்பட்ட சிறார்களையே அது பாதிக்கின்றது.

நோய் முற்றிய பின்பு வைத்தியரை நாடுவதில் எவ்வித பயனுமில்லை. உடல் சோர்வு அதிகரித்து, இரத்த அழுத்தம் குறைந்து போகும் அறிகுறி தென்பட்டால் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, நோய் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த நோயைப் பரப்பும் நுளம்பை முதலில் ஒழித்துக் கட்டவேண்டும்.

குறைந்தது 5 மில்லி லீற்றர் நீர் எங்காவது தேங்கி இருந்தால் கூட இந்த நுளம்பு இனவிருத்தி செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எனவே உங்கள் வீட்டுச் சுற்றுப்புறச் சூழலில் நீர்தேங்கியிருந்தால் அதை உடனடியாகச் சுத்தப்படுத்துங்கள். சகலரதும் ஒத்துழைப்பு இருந்தாலே இந்த நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.

ஊடகவியலாளர் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 100 மில். வழங்க அரசு இணக்கம் -மாற்றுத் திட்டமொன்றை அமுல்படுத்த அமைச்சு தீர்மானம்

ஊடகவியலாளர் களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைத்து மாற்று திட்டமொன்றை அமுல்படுத்த மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. மேற்படி ஓய்வூதிய திட்டத்துக்கு அரசின் ஒருங்கிணைந்த நிதியினூடாக 100 மில்லியன் ரூபா வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

ஊடக அமைச்சும், சமூக சேவைகள் சமூக நல அமைச்சும் இணைந்து மேற்படி ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டமொன்றை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. ஆனால் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்தாமல் ஒதுங்கியுள்ளனர். இதனால் இந்தத் திட்டம் ஒழுங்காக செயற்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக மாற்று யோசனைகள் பெற்று புதிய திட்டமொன்றை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு தமது யோசனைகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்புமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரப்பட்டுள்ளது.

அரசியலில் ஒரு பொது ஊடகம் ……. சாராயம்: – ரி கொன்ஸ்ரன்ரைன்

Alchocol_Labelபல நூறு ஆண்டுகளாக உலக ராஜதந்திர அரசியலில் இரண்டு விடயங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு அடிமையாகி மண்கவ்வியவர்கள் பலர். பெரியார் ஈ வே ராமசாமி ஊடாக அண்ணாத்துரையைத் தொட்டு நம்ம ஜோன் மேஜர் வரைக்கும் ‘பொம்பிளைப் பிரச்சினை’. சேர்ச்சில் தொடக்கம் சந்திரிக்கா ஊடாக விஜயகாந்த் வரைக்கும் ‘தண்ணிப் பிரச்சினை’.

தமிழ்நாட்டில் கறுத்தக் கண்ணாடி அரசியல்வாதிகள் வலம்வருவதற்கு இரண்டு காரணம் கூறப்படுகிறது. முதலாவது இவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அவதானிக்க முடியாது. மற்றையது சம்பந்தப்பட்டவரின் கண்ணின் நிறத்தை அல்லது நிதானத்தை யாரும் கணிப்பிட முடியாது.

அண்மையில் 90 வயதை அடைந்த உலகப் பிரசித்திபெற்ற நெல்சன் மண்டேலாவைப் பற்றி அவருடைய நெருங்கிய நண்பர்கள் கருத்துத் தெரிவித்தபோது… அழகிய பெண்கள் மீது மண்டேலாவிற்கு இருந்த கவர்ச்சியைப் பற்றி பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். “What ever he did in his life Nelson Mondela always had an eye for a good looking women”.

சர்வதேச ராஜதந்திர அரசியல் ஒருபுறம் இருக்க நம்மட லோக்கல் விஷயத்திற்கு வருவோம். போர்க்காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணம் ஸ்ரீலங்காவின் மதுபான வியாபாரத்தில் முன்னிலையில் இருந்திருக்கின்றது. இவ் மதுபான வியாபாரம் சட்டரீதியாக இடம்பெறாத காரணத்தினால் இதுகுறித்த புள்ளிவிபரங்கள் கணிப்பீடுகள் ஒன்றும் வெளியாகவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மதுபான வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட்ட இருபெரும் சிங்கள வியாபாரிகளின் கருத்தே இங்கு மூல காரணிகளாக மேற்கோள் காட்டப்படுகிறது. இவ்விரு சிங்கள வியாபார முதலாளிகளும் பல சொத்துக்களுக்கு அதிபதிகள். கொழும்பின் பிரபல வீதியில் மாளிகை போன்ற வீடுகளும் வெளிநாடுகளில் பல சொத்துக்களும் வைத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அரசு உட்பட சந்திரிகா அரசிற்கும் பணஉதவிகள் புரிந்தனர். இரண்டு முக்கிய கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் ஒரே நேரத்தில் பல லட்சக் கணக்கான பணத்தை வாரி வழங்கியவர்கள். யார் பதவிக்கு வந்தாலும் நாம் எப்போதும் வெல்லும் கட்சிதான் என்ற அரசியல் தத்துவார்த்தத்தை பின்பற்றுபவர்கள். இவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான வியாபாரத்தை தொடக்கி வைத்ததே சந்திரிக்கா அரசின் உயர் அதிகாரிகள் என்று தெரிவிக்கின்றார்கள். விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்தபின் இதே வியாபாரத்தை தாம் கிழக்கிலும் தொடர்ந்துள்ளார்கள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் கிழக்கு மாகாண பிரிவின் பின் முஸ்லிம் பெயருடன் கூடிய ஒரு முக்கிய நபரும் தமது மதுபான வியாபாரத்தில் முக்கிய தொடர்பாளராக இருந்துள்ளதாக கூறுகிறார்கள்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் தமது வியாபாரத்தில் மிகுந்த மந்த நிலைமை தொடங்கியதாக கூறும் இவர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மிக உயர்வாக மதிக்கிறார்கள். பண கொடுக்கல் வாங்கல்களில் விடுதலைப் புலிகளைப்போல் நேர்மையானவர்கள். ஒருவரும் இல்லை என பற்றுச் சான்றிதழ்கூட கொடுக்கிறார்கள். தங்களின் மதுபான பௌசர்கள் சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மிகவும் பவுத்திரமாக திருப்பி கையளிக்கப்படும். சம்பவங்களை பெருமையாக விபரிக்கின்றனர்.

வாழைச்சேனையிலும் அம்பாறையிலும் வவுனியாவிலும் கொள்வரவாகிய மதுபானங்களுக்காக London Tooting பகுதியிலுள்ள கடையொன்றில் பணம் கைமாறப்பட்டுள்ளது. ஜந்து பவுண் நோட்டில் உள்ள இலக்கம் குறிப்பிடப்பட்டு அந்த ஜந்து பவுணை இங்கு Tooting இல் கையளிக்கப்படும் பட்சத்தில் பல ஆயிரக் கணக்கான பவுண்கள் கைமாறப்பட்டுள்ளன. வருபவரை அடையாளப்படுத்துவதற்காக கையளிக்கப்படும் ஜந்து பவுண் நோட்டை ஏற்கும் லண்டன் கடைக்காரர் அந்த ஜந்து பவுணிற்கு சமனான ஜந்து பவுண் குத்திகளை கொடுக்கும் கண்ணியவராம்.
இவர்களின் கணிப்பின்படி போர்க்காலங்களில் ஸ்ரீலங்காவின் அனைத்து மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு மாகாணத்தின் மதுபான வியாபாரம் அதிகளவில் இருந்திருக்கின்றது. சிங்கள பிரதேசங்களில் மதுபான வியாபாரத்தில் ஈடுபடும்போது இவர்கள் பலவிதமான இடையூறுகளையும் செலவுகளையும் ஈடுகொடுக்க வேண்டியிருக்கின்றது. பல தனிப்பட்டவர்களையும் பல திணைக்களங்களையும் தாஜாபண்ண வேண்டியிருந்தது. அதற்கும் மேலாக வரி செலுத்த வேண்டும். ஆக மொத்தமாக 295 ரூபாய்க்கு விற்பனையாகும் 750 ml சாராயத்திற்கு 200 ரூபாய் வரை செலவாகிறது. இதே மதுபானத்தை இவர்கள் வடக்கு மாகாணத்திற்கு விற்கும்போது 100 ரூபாய்தான் செலவாகிறது. மிகுதி அனைத்தும் நயம். அதுமட்டுமல்லாமல் பணம் பவுண்ஸில் லண்டனில் சுளையாகக் கொடுக்கப் படுகின்றது. அதிலும் குறிப்பாக வரி இல்லை. ஒரு இழுபறியோ தாமதமோ இல்லை.

போரில் இடம்பெற்ற உயிரிழப்பு மற்றும் ஏனைய அனர்த்தங்களுடன் இவ்வாறான சமுதாய குளறுபடிகளும் மௌனமாக கூட்டாக வளர்ந்துள்ளன. இதன் தாக்கங்களை சமுதாயம் வளரும் காலங்களில்தான் முகம்கொள்ளப் போகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மொக்குத்தனமான போராட்டம் முள்ளிவாய்க்காலில் கோரத்தனமாக முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. அதன் விளைவுகளை நாம் தொடர்ந்தும் சந்திக்கத்தான் போகின்றோம்.

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை; பலத்த காற்று

rain2.jpgநாட்டின் பல பாகங்களிலும் இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்ததுடன் பல இடங்களில் பலத்த காற்றும் வீசியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் மத்திய மலை நாட்டின் சில பிரதேசங்களிலும் இன்று மழை பெய்துள்ளதுடன் காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைக்காலத்தில் காற்றும் வீசத் தொடங்கியுள்ளதால் நாட்டின் காலநிலையில் கடந்த புதன்கிழமை இரவு முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வளி மண்டலவியல் திணைக்களம், இந்நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டின் காரையோரப்பகுதிளிலும் மத்திய மலை நாட்டின் சில இடங்களிலும் கடும் காற்று வீசலாம் என எச்சரித்துள்ளது.

வடமாகாண ஆளுநர் இன்று பதவியேற்பு

chandrasiri.jpgவடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.  இலங்கை இராணுவத்தின் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்திரசிறி பின்னர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் விவகாரத்தைக் கையாளுவதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் அவர் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இதுவரை வடக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்துவந்த டிக்ஷன் தேலபண்டார மாலைதீவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரட்டைக் குழந்தைகள் திடீர் வாந்தி ஏற்பட்டு மரணம்

சிலாபம், அக்கரையான் தொட்டுவ பகுதியைச் சேர்ந்த 1 1/2 வயதுடைய இரட்டைக் குழந்தைகள் திடீரென ஏற்பட்ட வாந்தி காரணமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை சிலாபம் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றுள்ளது. இக்குழந்தைகளுக்கு திடீரென வீட்டில் வாந்தி ஏற்பட்டதால் பெற்றோர் இருவரையும் சிலாபம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சையளிக்கப்பட்டு வரும்போது காலை 10 மணிக்கு ஒரு குழந்தையும் பிற்பகல் ஒரு மணிக்கு மற்றக் குழந்தையும் மரணமடைந்தன.

இவர்களின் மரணத்திற்குரிய காரணத்தை தம்மால் அறிய முடியாதிருப்பதால் கொழும்புக்கு சடலங்களை அனுப்பி அறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாபம் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.