“எமது நாட்டில் தற்போது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ள டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகி அதற்கான ஆலோசனையைப் பெறவேண்டும். காய்ச்சல், தொண்டை நோ, தலைவலி, வயிற்றுவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் டெங்கு நோய்க்கானவையாகவும் இருக்கலாம்’ என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் ஷாலினி அறிவுரை வழங்கினார்.
கொழும்பு சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மேல் கொழும்பு தரம்2 பாடசாலைகளுக்கான விஞ்ஞான தின விழாவில் உரையாற்றும் போதே அவர் இந்த ஆலோசனையைத் தெரிவித்தார். விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பாரியார் திருமதி காமினி விதாரணவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் ஷாலினி தொடர்ந்து உரையாற்றுகையில்;
“தற்போது எமது நாட்டில் டெங்கு நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதும் எம்மை கதிகலங்க வைக்கிறது. ஏடிஸ் எஹிப்டிக் என்னும் பெண் நுளம்பினால் பரவும் இந்த நோய் ஒரு வைரஸ் நோயாகையால் இதனை மருந்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. சிகிச்சை பயனளிக்காத நிலைமையையே காண முடிகிறது.
இந்த நோயில் சாதாரண டெங்கு வகை தலைவலி, பசியின்மை, உடல் வலி, காய்ச்சல் என்பவற்றை விளைவித்தாலும் பெரும்பாலும் மூன்று நாட்களில் குணமாகிவிடும் சாத்தியம் உண்டு. ஆனால், குருதிக் காய்ச்சல் டெங்கு பேராபத்தை விளைவிக்கும் நோயாகும். அநேகமாக 15 வயதுக்குட்பட்ட சிறார்களையே அது பாதிக்கின்றது.
நோய் முற்றிய பின்பு வைத்தியரை நாடுவதில் எவ்வித பயனுமில்லை. உடல் சோர்வு அதிகரித்து, இரத்த அழுத்தம் குறைந்து போகும் அறிகுறி தென்பட்டால் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, நோய் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த நோயைப் பரப்பும் நுளம்பை முதலில் ஒழித்துக் கட்டவேண்டும்.
குறைந்தது 5 மில்லி லீற்றர் நீர் எங்காவது தேங்கி இருந்தால் கூட இந்த நுளம்பு இனவிருத்தி செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எனவே உங்கள் வீட்டுச் சுற்றுப்புறச் சூழலில் நீர்தேங்கியிருந்தால் அதை உடனடியாகச் சுத்தப்படுத்துங்கள். சகலரதும் ஒத்துழைப்பு இருந்தாலே இந்த நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.