ஜேர்மனி இனவாதத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது: “லோரன்ஸ்க்கு நீதி வேண்டும்” இனவெறி ஜேர்மன் பொலிஸார் சுட்டதில் கறுப்பின இளைஞன் பலி !
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான ஏப்பிரல் 20 ஆம் திகதி ஓல்டன்பேர்க் நகர மையத்தில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை சமாளிக்க அழைக்கப்பட்ட ஜேர்மன் அவசர உதவிப் பொலிஸார் சுட்டதில் கறுப்பின இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட இளைஞன் லோரன்ஸ் 21 வயதானவர். அவர் அந்நகரத்தில் நன்கு அறியப்பட்ட கூடைப்பந்து வீரர் என்று கூறப்படுகிறது .
சம்பவம் நடந்த அன்று லோரன்ஸ் பொலிஸாரிடமிருந்து தப்பியோடியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்த பிறிதொரு பொலிஸ் குழு லோரன்ஸ்சை எதிர்கொண்டுள்ளது. அப்போது அவர் கத்தியை வைத்து பொலிஸாரை மிரட்டியதாகவும் எரிச்சலூட்டக் கூடிய கண்ணீர்ப் புகையை தெளித்ததாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
27 வயதான வெள்ளையின ஜேர்மன் பொலிஸ் அதிகாரி லோரன்ஸ்சை நோக்கி ஐந்து முறை சுட்டுள்ளார். லோரன்ஸின் மேல் உடல், இடுப்பு மற்றும் தலை மீது சூடு விழுந்துள்ளது. இந்த துப்பாக்ச்சி சூடு லோன்ரஸின் பின்பகுதியிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயமடைந்த லோரன்ஸ் சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
லோரன்ஸிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக ஜேர்மன் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகிறது. அதேநேரம் லோரன்ஸ் கத்தியை வைத்து பொலிஸாரை மிரட்டியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. பொலிஸாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத போது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியில்லை. அப்படியிருக்க பின்னால் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை சட்டவிரோதமானது. இது இனவெறித் தாக்குதல் என ஜேர்மனி வாழ் புலம்பெயர் மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
லோரன்ஸ் சூட்டுக் கொல்லப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் சீருடைகளில் கமராக்கள் அணிந்திருந்துள்ளார்கள். ஆனால் பொலிஸாரின் நடவடிக்கையில் ஈடுபட்ட சமயம் கமராக்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. பொதுவாகவே பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்த எத்தனிக்கும் போது சீருடையில் பொருத்தப்பட்டிருக்கின்ற தானியங்கி கமராக்கள் பதிவு செய்யத் தொடங்கிவிடும். ஆனால் லோரன்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சமயம் கமராக்கள் வேலை செய்யவில்லை.
கறுப்பின இளைஞரான லோரன்ஸ் மீதான தாக்குதல் இனவெறித் தாக்குதல் என கண்டிக்கும் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் “ லோரன்ஸ்க்கு நீதிவேண்டும்“ என்ற பேரணியை நடத்தியுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை கோருகின்றனர். சமீபகாலங்களில் ஹாசாவில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி ஜேர்மனியில் நடக்கின்ற பேரணிகளில் ஜேர்மன் பொலிஸார் அத்துமீறி வருகின்றனர் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அனுமதி பெற்று நடக்கின்ற ஆர்ப்பாட்ட பேரணிகளில் பங்குபற்றும் முக்காடு அணிந்த பெண்கள் மீது ஜேர்மன் பொலிஸாரால் இனவாதத்தோடு தாக்கும் வீடியோப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
2020 ஆண்டு ஜோர்ஜ் புளோயிட் (George Floyd) என்ற கறுப்பினத்தவர் மினிசோட்டா வெள்ளையின பொலிஸாரின் இனவெறித்தாக்குதலில் கொல்லப்பட்டமையத் தொடர்ந்து எழுந்த நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் குறிப்பிடத்தக்கன. அமெரிக்காவைப் பொறுத்தவரை கறுப்பினத்தவர்களை கிரிமினல் குற்றவாளிகளாக சித்தரிக்கும் அல்லது அவ்வாறான கிரிமினல் குற்றவாளிகள் கொடுமையான இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றமை வழமையானவையாகும்.
இந்தநிலமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2013 ஆண்டு தொடங்கப்பட்ட “#பிளைக் லைவ்ஸ் மற்றர்#”( Black lives matters) இயக்கம் தொடர்ந்து போராடி வருகின்றது.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்பிரல் 25 ஒல்டன்பேர்க்கில் ஆயிரக்கணக்கானோர் கூடி லோரன்ஸ்க்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர். ஜேர்மனியைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக வெளிநாட்டவர்கள் மற்றும் ஜேர்மனி குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி இனவாத அரசியல் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. அநியாயமான முறையில் லோரன்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டமையும் இப்பின்னணிகளிலேயே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.