May

May

இந்திய அரசுடன் பேச்சுநடத்த தீர்மானம்

இந்திய மீனவர்கள் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த கடற்றொழில் மீன்பிடி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய கடல் எல்லைக்குச் செல்லும் மீன்வர்கள் இந்திய படையினரால் கைதாவது அடிக்கடி இடம்பெறுவதால் இது தொடர்பில் நிரந்தர தீர்வு காண உள்ளதாக மீன்பிடி அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இது தவிர இந்திய இலங்கை கடல் எல்லையை அறியக்கூடிய தன்னியக்க சமிக்ஞை முறையொன்றை அறிமுகப்படுத்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சட்ட விரோதமாக இந்திய கடல் எல்லைக்கு செல்வதை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இந்தியா செல்ல உள்ளதாகவும் அவர் கூறினார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் நூறு (100) பேருக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

ஆடை இயந்திர தொழிற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் இந்த நூறு பேரும் எதிர்வரும் 31ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் அபரல்ஸ் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களிலிருந்து ஆடை இயந்திர துறையில் பயிற்சி பெற்ற நூறு பேர் இதற்காக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருபவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பின்னர் தனியார் துறையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். தற்போது வழங்கப்பட வுள்ள தொழில் வாய்ப்பு தொடர்பாக குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 ஆயிரம் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். – புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க

கைது செய்யப்பட்டுள்ள 11 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சுமார் 8 ஆயிரம் பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இவர்களுக்கு தொழில் பயிற்சிகள், தகவல் தொழிலநுட்பக் கல்வி, ஆங்கில மொழி அறிவு, ஆகியவற்றைப் போதித்து கொடுத்துள்ளதாகவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் இப் பதினோராயிரம் புலி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவாயிரம் பேர் வரையிலானோர் தீவிரமான புலிகள் எனவும், எனையோர் விரைவில் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் 20 ‘சோடிகளுக்கு’ எதிர்வரும் யூன் மாதம் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கிடையே வாய்மொழி உறுதிப்பாடு மட்டும் இருந்ததாகவும், சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் அவர்களில் அநேகமானோர் திருமணம் செய்து கொள்ள விரும்பவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல் நடத்துமாறு யாழ். அரச அதிபர் பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல் நடத்துவதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக செயற்படுமாறு பொலிஸாரிடம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே.கணேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ். சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி டி சில்வா, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவ ஆகியோரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது யாழ்.அரச அதிபர் பொலிஸாருக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சகலரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல்,தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்துவது, வயது குறைந்தவர்கள் வாகனம் செலுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து விதிகளை சகல சாரதிகளும் ஒரே மாதிரியாக பின்பற்றும் வகையில் பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும். யாழ்.நகர வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளை யாழ்.மாநகரசபையுடன் கலந்துரையாடி அமுல் படுத்தப்படவேண்டும். யாழ மாவட்டத்திலுள்ள சட்டவிரோத மது பாவனையைத் தடுத்து, அதற்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு எட்டு மணி வரையாவது வீதிப் போக்கு வரத்துக் கடமைகளில் பொலிஸார் ஈடுபட வேண்டும். – இவ்வாறு சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபரிடம் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, தற்போது யாழ்.மாவட்டத்தில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகளில் அதிகளவான பொலிஸார் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது.  கடந்த சில காலமாக யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வந்த கடத்தல் மற்றும், குற்றச் செயல்களும் அண்மைய சில தினங்களாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீளக்குடியமர்த்தப்பட்டோரை தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று சந்திப்பர் – வன்னிப் பயணம் குறித்து நாளை விரிவான அறிக்கை

sa.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் பகுதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை சென்று பார்வையிடவுள்ளது.12 எம்.பி.க்கள் கொண்ட குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மல்லாவி, புதுவெட்டுவான், ஐயன்குளம், துணுக்காய் ஆகிய இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்தனர்.

அங்கு மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் துன்ப, துயரங்களையும் தேவைகள், குறைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக யாழ்.மாவட்ட எம்.பி.மாவைசேனாதிராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.

முறையாக முன் அனுமதி பெறாததனாலேயே கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு – பிரசாத் சமரசிங்க

prasad.jpgசெட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களுக்குள் செல்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறையாக முன்அனுமதி பெறாததன் காரணமாகவே அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

“நிவாரணக் கிராமங்களுக்குள் செல் வதற்கென ஒரு நடைமுறையிருக்கிறது. அதன்படி, பாதுகாப்புத் தரப்பில் அனுமதி பெற்றால் எவ்வித சிரமமுமின்றி முகாமுக்குள் உட்செல்லமுடியும்” எனவும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன்அனுமதியை பெற்றுக்கொள்வார்களாயின் அவர்கள் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான அனுமதியை வழங்குவதில் வேறு எவ்வித பிரச்சினைகளும் இல்லையெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

‘அவர்கள் மீண்டும் உரிய முறையில் விண்ணப்பித்தால் நிவாரணக் கிராமங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்கிறார் இராணுவப் பேச்சாளர். கூட்டமைப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் அங்கிருந்து ஒட்டுசுட்டான், தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கும் சென்றனர். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குச் சென்றிருந்த இவர்கள், அங்கே மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களை பார்வையிடு வதற்காக சென்றிருந்தபோது நிவாரணக் கிராமத்துக்குள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அது தொடர்பாக இராணுவப் பேச்சாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன் அனுமதி பெறாமை மாத்திரமே இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணமென குறிப்பிட்ட இராணுவப் பேச் சாளர், இவர்களது வருகை குறித்து ஏற்கனவே அமைச்சுக்கு அறிவித்திருப்பார்களாயின் இதில் எவ்வித சிக் கல்களும் எழுந்திருக்காது எனவும் தெரிவித்தார்.

இடி, மழையுடன் கூடிய காலநிலை தொடரும் – 60 கி. மீ. வேகத்தில் காற்றும் வீசும்

lightning.jpgநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வ துடன் இடியுடன் கடும் காற்றும் வீசக் கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

குறிப்பாக மேல் மாகாணம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக் கிடை மழை பெய்யுமெனவும் மாலையில் மத்திய, ஊவா மாகாணங்களில் கடும் மழை பெய்யுமெனவும் மேற்படி நிலையத் தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசுவதுடன் சிலவேளைகளில் 60 கிலோ மீற்றர் கடல் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவித்த அவர், கடற்றொழிலில் ஈடுபடுவோர் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியமெனவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் சூறாவளி இடம்பெற வாய்ப்புகளில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் – 1000 மாணவருக்கு துவிச்சக்கர வண்டிகள்

வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் கல்மடு மற்றும் கனகராயன் குளம் பகுதிகளிலுள்ள 570 வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை பெற் றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலேயே இம்மின் வசதி பெற்றுக்கொடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். அதன்படி, கல்மடுவிலுள்ள 320 வீடுகளுக்கும் கனகராயன் குளத்திலுள்ள 250 வீடுகளுக்கும் இலவசமாக சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை வழங்க சீட் நிறு வனம் முன்வந்துள்ளது.

இதேவேளை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு வவுனியா விலுள்ள ஆயிரம் பாடசாலை மாணவர்களு க்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டிருப் பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார். அடுத்த வாரமளவில் பாலமோட்டை பகுதியில் 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிதறிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு; அமெரிக்க நிபுணர் குழு மங்களூர் விரைவு

b-box.jpgஇந்தியா வின் கர்நாடக மாநிலத்தில் மங்களூர் விமான நிலையத்திற்கு அருகில் வெடித்துச் சிதறிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் முன்பகுதி சிதைந்து கிடந்த இடத்தில் புதையுண்ட நிலையில் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய உண்மையை கண்டறிய முடியுமென நம்பப்படுகிறது. கறுப்புப் பெட்டி தற்போது மும்பாய்க்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதேவேளை விமான விபத்து குறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குன ரகம் தனி விசாரணை நடத்துகிறது. இந்த குழு அமெரிக்க நிபுணர் குழுவின் உதவி களையும் நாடியுள்ளது.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கழகத்தின் நிபுணர்கள் இந்தியா வர உள்ளனர். விமானப் பாதுகாப்பு விசாரணை அதிகாரி ஜியோ கேசர் தலைமையில் இந்தக் குழுவினர் வருகின்றனர். அவர்களுடன் விபத்துக் குள்ளான விமானத்தைத் தயாரித்த போயிங் விமான நிறுவன நிபுணர்களும் மங்களூர் வருகின்றனர்.

நாளை செவ்வாய்க்கிழமை அவர்கள் மங்களூர் வந்து சேருவார்கள். இந்திய நிபுணர்களுடன் சேர்ந்து அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். இதன் பின்பே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும்.

மங்களூர் விமான விபத்து: 128 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மங்களூரில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியானவர் களில் 128 பேரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக எயர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து எயர் இந்திய நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுடன் எயர் இந்தியா நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக ஆலோசனை மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் எயர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

மங்களூர் விமான நிலையத்தில், ஓடு பாதையின் தொடக்கத்தில் தரை இறக்காமல், சற்றுத் தள்ளி இறங்கியதால் விபத்து நேரிட்டதாக விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.

துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு வந்த ஏயார் இந்தியா விமானம், தரை இறங்கிய போது விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானம், அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பு ஆகும். அது கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி முதல் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

மங்களூர் விமான நிலைய ஓடுபாதையின் நீளம் 2,450 மீட்டர். ஓடு பாதையின் முடிவில் உள்ள பாதுகாப்பு பகுதி 90 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் வி. பி. அகர்வால் புதுடில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மலை உச்சியில் அமைந்துள்ள மங்களூர் விமான நிலையத்தில் தினமும் 32 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இறக்கப்பட்டு வருகின்றன.

அங்குள்ள ஓடுபாதைகளில் எந்தக் குறைபாடும் இல்லை. அவற்றை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்த பிறகே போக்குவரத்துக்கு அனுமதித்தனர். விபத்துக்குள்ளான விமானம், நல்ல முறையில் இருந்தது. அதன் தரை இறங்கும் என்ஜின்கள் சிறப்பாக இயங்கி வந்தன. அதன் விமானிகள், விமானம் மங்களூரை அடைவதற்கு 10 கி.மீ. இருக்கும் போதே விமானத்தின் வருகை பற்றி விமான கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவித்தனர். விமான நிலையத்துக்கு 4 கி.மீ. தொலைவில் விமானம் வந்தபோது, அது தரை இறங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.

அப்போது, காற்று எதுவும் வீசவில்லை. மழையும் பெய்யவில்லை. 6 கி.மீ. தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வெளிச்சம் இருந்தது. விமானம் தரை இறங்க இந்த வெளிச்சம் போதுமானது. அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. விமானிகளும் பிரச்சினை எதுவும் இருப்பதாக அபயக்குரல் கொடுக்கவில்லை.

ஆனால், விமானத்தின் சக்கரம், ஓடுபாதையின் தொடக்க முனையில் கால் பதிக்காமல் சற்றுத் தள்ளி கால் பதித்ததால் ஓடுபாதையை தாண்டியும் விமானம் ஓடி பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இவ்வாறு வி. பி. அகர்வால் கூறினார்.

மங்களூர் விமான நிலைய இயக்குநர் பீட்டர் ஆபிரகாம் கூறியதாவது, பொதுவாக, ஓடுபாதையின் எல்லைக்கு சற்று முன்பே விமானம் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த விமானம், எல்லையைத் தாண்டி ஓடியுள்ளது.  அதன் உதிரிப்பாகங்கள் சிதறியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும் போது, விமானி தனது கணிப்பில் தவறு செய்திருக்கலாம் அல்லது விமானத்தின் பிரேக்கில் கோளாறு இருந்திருக்கலாம். இது பற்றி விசாரணைக்குப் பிறகே தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்கள் மில்ரோய், றிசாட், முரளி இன்று வவுனியா விஜயம்

மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணான்டோ, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதிவூதீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்கின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரை யாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் உள்ள சகல திணைக்கள உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக அவர்களுடைய பழைய இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்னமும் எஞ்சியுள்ள மக்களையும் விரைவில் அனுப்பிவைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்யவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்டத்தில் உள்ள சகல திணைக்கள தலைவர்களையும் அமைச்சர்கள் இன்று முதன்முறையாகச் சந்திக்கவுள்ளனர்.