செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களுக்குள் செல்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறையாக முன்அனுமதி பெறாததன் காரணமாகவே அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
“நிவாரணக் கிராமங்களுக்குள் செல் வதற்கென ஒரு நடைமுறையிருக்கிறது. அதன்படி, பாதுகாப்புத் தரப்பில் அனுமதி பெற்றால் எவ்வித சிரமமுமின்றி முகாமுக்குள் உட்செல்லமுடியும்” எனவும் இராணுவ பேச்சாளர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன்அனுமதியை பெற்றுக்கொள்வார்களாயின் அவர்கள் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான அனுமதியை வழங்குவதில் வேறு எவ்வித பிரச்சினைகளும் இல்லையெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
‘அவர்கள் மீண்டும் உரிய முறையில் விண்ணப்பித்தால் நிவாரணக் கிராமங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்கிறார் இராணுவப் பேச்சாளர். கூட்டமைப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் அங்கிருந்து ஒட்டுசுட்டான், தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கும் சென்றனர். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குச் சென்றிருந்த இவர்கள், அங்கே மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களை பார்வையிடு வதற்காக சென்றிருந்தபோது நிவாரணக் கிராமத்துக்குள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அது தொடர்பாக இராணுவப் பேச்சாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன் அனுமதி பெறாமை மாத்திரமே இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணமென குறிப்பிட்ட இராணுவப் பேச் சாளர், இவர்களது வருகை குறித்து ஏற்கனவே அமைச்சுக்கு அறிவித்திருப்பார்களாயின் இதில் எவ்வித சிக் கல்களும் எழுந்திருக்காது எனவும் தெரிவித்தார்.
Ranjan
என்னா சார் இது. ஜோக் அடிக்கறீங்களா?